Thursday, September 24, 2015

அத். 34 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

Updated everyday
*
வசிகரப் பொய்கள்
அ த் தி யா ய ம் - 34
ராமசாமி கிளம்புகிறான். திலகா அவனுடன் எதுவும் பேசவில்லை. இரவு பூராவும் அவள் அழுதிருக்கிறாள் என்று முகத்தில் தெரிகிறது. சிகாமணி அக்காவிடம் வருகிறான். “நாம என்ன சொன்னாலும் அத்தான் பதிலே பேச மாட்டேங்கறாரே அக்கா…“ அவள் பேசாமல் அவன்கூடப் பேச விருப்பம் இல்லாத மாதிரி எழுந்து போகிறாள். சிகாமணி பின்னாடியே போகிறான். ராமசாமி தலை வாரிக் கொண்டிருக்கிறான். “நாம சொன்னாலும் அவர் நினைச்சதைத் தான் செய்கிறார்“ என்கிறான் சிகாமணி. ராமசாமி பௌடர் போட்டுக் கொள்கிறான்.
அக்கா அழுகையூடே பேசுகிறாள். “இப்பிடிப் படுத்தினால் என்ன பண்றது? சின்னக் குழந்தையா இருந்தால் நாலு அடி போடலாம். இப்ப… நாம தான் நம்ம தலைல அடிச்சிக்க வேண்டியிருக்கு.“ ராமசாமி அவர்களைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.
“இந்த அசட்டுச் சிரிப்புக்கு என்ன அர்த்தம் அத்தான்?“
“அவர் அசடுன்னு அர்த்தம்“ என்கிறாள் திலகா.
“நேத்தி நானே போயிட்டு படாத பாடு பட்டுட்டு வந்திருக்கறேன். இவ வீட்ல பேசாமல் கதவைச் சாத்திக்கிட்டு உம்மாச்சி காப்பாத்துன்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்திருக்கா. இதுக்கு இந்த அலட்டல் தேவையா?“
“அப்பிடிச் சொல்லாதீங்க அத்தான். உங்களை யாரு மைனஸ் 1 போகச் சொன்னா?“
“உங்களுக்குப் புரியாது…“
“இப்ப பழைய காலத்துக்குப் போயி எதைச் சாதிச்சீங்க?“
ராமசாமி சிகாமணியைப் பார்க்கிறான்.
“எங்களுக்குக் கொஞ்சம் அதைப் புரிய வைங்க“ என்கிறான் சிகாமணி விடாமல். ராமசாமி உடம்பில் ஒரு விரைப்பு தெரிகிறது. “பாருடா… இத்தனை தூரம் நான் புலம்பறேன். எதாவது இவருக்கு மனசில் இறங்குதா பாரு. எதோ மேல மழை பேய்ஞ்சாப் போல…“
“எருமை மாட்டு மேல…‘ என்கிறான் சிகாமணி.
“டேய்“ என்கிறான் ராமசாமி. “உங்களை இல்ல அத்தான். எருமை மாட்டைச் சொன்னேன். அதுவும் வெளியே இப்ப வெயில் தானே அடிக்கிறது…“ என அவன் பக்கம் வருகிறான். “ஏன் அத்தான் இப்பிடி வீணா நேத்தி வேற போயி ரெண்டாவது வாட்டி மாட்டிக் கிட்டீங்க…“
“அதுல நிறையக் கணக்கு இருக்குடா சிகாமணி.“
“நீங்க கணக்குல வீக் ஆச்சே.“
“ஆமாம். அது மத்த நாள் எதையும் விட நேத்தி ஸ்பஷ்டமாத் தெரிஞ்சது..“
“டிபன் ரெடி…“ திலகா வந்து ணங்கென்று மேசையில் தட்டை வைத்து விட்டுப் போகிறாள். “நேத்தி ராத்திரி பூரா லைட்டைப் போட்டுக்கிட்டு எதையோ குடாய்ஞ்சிக்கிட்டே இருந்தார்… என்னன்னு கேட்டால் சொல்லவே இல்லை. என்னன்னு கேளுடா.“
“என்ன அத்தான் அது?“
“ஏன் அவள் கேட்க மாட்டாளாமா?“ என்கிறான் ராமசாமி. அப்புறம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. சட்டென மலர்கிறான். “நேத்து… தேடினேனே… கிடைச்சிட்டது.“
“என்ன அது?“ என்று சிகாமணி கேட்கிறான். திலகா திரும்பிப் பார்க்கிறாள்.
“அது சஸ்பென்ஸ். அதைக் கடைசியில் உடைக்கிறேன்… சிகாமணி நீயும் சாப்பிட வர்றியா?“
“கொஞ்சம் போகட்டும் அத்தான். இப்ப என்ன அவசரம் எனக்கு…“
“சிகாமணி நீயும் என் கூட வரே…‘ என்கிறான் ராமசாமி.
“எங்க அத்தான்?“
“கமிஷனர் ஆபிசுக்கு.“
“போலிசுக்கா?“ என சீரியசாகிறாள் திலகா. “இவன் எதுக்கு?“
“நீங்க எதுக்கு?“ என்று அவனைக் கேட்கிறான் சிகாமணி.
“நேத்தி என்கொயரி நடந்தது இல்லே? அதோட எக்ஸ்டென்ஷன்…“
“இவனையும் கடந்த காலத்துக்கு அழைச்சிட்டுப் போகப் போறீங்களா?“ என்கிறாள் திலகா. “அது எப்படி முடியும்?“ என்கிறான் ராமசாமி.
“பின்னே? ரெண்டு வருஷம் முந்திய என்கொயரிக்கு இப்ப எதுக்கு போலிசுக்குப் போகணும்?“
“திலகா… இவனுக்கும் தோசையைப் போடு..“ என்கிறான் ராமசாமி. “வா கண்ணா. வந்து உட்காரு.“ புன்னகை செய்கிறான். “உங்க அத்தான் பயந்த சுபாவம் தான். ஆனால் முட்டாள் அல்ல. கேட்டியா?“
“வாசல்ல எழுதிப் போடலாம். QUOTABLE QUOTE. வர வர கூத்தடிக்க ஆரம்பிச்சிட்டாரு இவரு.“
“நேத்தி நான் ஒரு கணக்குப் போட்டேன்…“
“அது சரி அத்தான். நேத்தி உங்களால அந்த ROBBERY யைத் தடுக்க முடிஞ்சதா?“
“நான் முயற்சி பண்ணினேன்.“
“முடிஞ்சதா?“
ராமசாமி சிகாமணியைப் பார்க்கிறான்.
“முடியாது. நான்தான் சொன்னேனே. கடந்த கால நிகழ்வை மாத்த முடியாது.“
“ஆனால் ஒரு விஷயம் சிகாமணி… நான் என்ன நினைச்சேன்னு சொல்லிர்றேன்.“
“எதாவது குண்டக்க மண்டக்க நினைச்சீங்க. “ என்கிறாள் திலகா. “பொறுமையாக் கேளுடி‘‘ என்கிறான் ராமசாமி.
“சொல்லுங்க அத்தான்.“
“அந்த சின்னக்கனி…“
“தெய்வம்னுட்டானாம். அதுல இவருக்கு ஒரு இது. என்னிக்கு அவன் உங்களைக் கல்லைத் தூக்கி அடிக்கப் போறானோ?“
“இரு அக்கா. சொல்லுங்க. அவர் என்ன சொல்றாருன்னு பாப்பம்…“
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி… அவன் என் வாழ்க்கையில இருந்தானா?“
“இல்லை.“
“இப்ப நான் போனப்ப… அவன் எப்பிடி வந்து சேர்ந்தான்?“
“அதான் பேசினோமே அத்தான். அது வேற ஒரு தொடர் நிகழ்வில போயி… நீங்க இந்தக் கண்ணியை விட்டு வெளியேறி… அந்தக் கண்ணியில சேர்ந்துட்டீங்க…“
“இவனும் ஆரம்பிச்சிட்டானே“ என்கிறாள் திலகா.
“அப்பா பத்தி சேதி வந்து, அநத் ஃபோன் காலை நீங்க எடுக்கணும். அதைத் தவிர்க்க நினைச்சீங்க. அப்ப வேற ஒரு கண்ணி புதுசா உருவாயிட்டது. இல்லியா?“
“ALTERNATE REALITY.“
“ஒரு ரியாலிடியே இங்க டண் டணக்கா. இதுல இன்னொண்ணா?“
“அதேதான். இப்ப இந்த எபிசோட்ல சின்னக்கனியை நான் முடிச்சுப் போட்டுப் பார்த்தேன். ஆபிஸ்ல நடக்கப் போற இந்த ROBBERY. இது ரமேஷைத் தவிர யாருக்குமே தெரியாது. சின்னக்கனி, அவன் கூட மணி. அவர்களை தெருவில் தயாரா வெச்சிருந்தேன். நானும் ரமேஷும் ஆபிசுல பதுங்கி யிருக்கலாம். அவங்க ரெண்டு பேர் தான். நாங்க நாலு பேர். அவங்களுக்கு நாங்க காத்திருக்கறது தெரியாது. சமாளிச்சிறலாம்னு ஒரு கணக்கு…“
“புதுசா சின்னக்கனி வந்ததால, ஒருவேளை உங்களால இதை முறியடிக்க முடியும்னு பாத்தீங்களா?“
“அதே தான்…“ என்கிறான் ராமசாமி.
“நல்லவேளை அத்தான். அவங்க வந்த ஜோரில் சி சி டி வி காமெராவை அடிச்சி நொறுக்கிட்டாங்க. இல்லாட்டி என்னாயிருக்கும்?“
“என்ன?“ என்கிறான் ராமசாமி.
“நீங்க இங்க உள்ள யிருந்து சின்னக்கனிக்கு கை காட்டறது அது இதுன்னு எல்லாம் அதுல பதிவாயிருக்கும். ஆக இந்தக் கொள்ளையில உங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு  விசாரணை ஆரம்பிச்சிருப்பாங்க.“
“ஐயோ“ என்கிறான் ராமசாமி.
“அவன் வேற தாதா ஆச்சே. ரொம்ப பலமா முடிச்சு போட்டுருவாஙுக.“
“ஏற்கனவே அந்தத் திருட்டுப் பசங்க கட்டிப் போட்டதே இன்னும் வரி வரியா இருக்குடா‘‘ என்கிறான் ராமசாமி.
“என்ன ஆச்சி? நீங்க எதிர்பார்த்த நேரத்தில் ஏன் அந்தக் கொள்ளை நடக்கல்ல?“
“அதுவா…“ என வெட்கத்துடன் சிரிக்கிறான் ராமசாமி. “எதாவது தப்பு பண்ணினால் கரெக்டா இப்பிடித்தான் அவர் சிரிப்பார்“ என்கிறாள் திலகா.
“கொள்ளை எத்தனை மணிக்குன்னு சொல்லிட்டுப் போனேன்?“
“11 23.“
“எத்தனை மணிக்கு நடந்தது தெரியுமா?“
“சொல்லுங்க.“
“11 28.“
“ஆகா. உங்க கையெழுத்து உங்களையே காலை வாரிட்டதா?“
“அதைத்தான் கணக்குல வீக்னு சொன்னீங்களா அத்தான்.“
“உங்க அஜாக்கிரதைனால அத்தனை முயற்சியுமே பாழாயிட்டது…“ என்கிறாள் திலகா.
“நல்லவேளை…“ என சிரிக்கிறான் சிகாமணி. “நீ என்ன சொல்லப் போறே?“ என்று திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “தேதியை 28க்கு பதிலா 23ன்னு நீங்க பாத்திருந்தீங்கன்னா?...“
“தேதி அது மனப்பாடமா எனக்கே ஞாபகம் இருக்குடா சாம்பிராணி…“ என்கிறான் ராபமசாமி ஆத்திரமாய்.
“இருந்து என்ன?“ என நக்கல் அடிக்கிறான் சிகாமணி. “மொத்தத்தில் இந்த முயற்சியே தோல்வி.“
“இல்லை“ என்கிறான் ராமசாமி.
“இல்லையா?“
“தோல்வில ஒரு வெற்றி…“ என்கிறான் ராமசாமி புன்னகையுடன். “ஒரு விஞ்ஞானி கிட்ட கேட்டாங்க. 200 சோதனை செஞ்சிட்டீங்க. இன்னும் ரிசல்ட் வரல்ல. இப்ப உங்க சோதனை எல்லாம் பிரயோசனப்படாத தோல்வி தானேன்னு கேட்டாங்க.“
“தோல்விதான்“ என்கிறான் சிகாமணி.
“அதுக்கு அந்த விஞ்ஞானி பதில் சொன்னார் பாருடா. அது ரொம்ப முக்கியம். “என்னோட இந்த சோதனையை நாளை இன்னொருத்தன் முன்னெடுத்துச் செய்யலாம். அவன் இந்த 200 சோதனைகளையும் விட்டுட்டு 201 வதில் இருந்து ஆரம்பிப்பான். அவனுக்கு இது பயன்படும் – அப்டின்னாராம். உலகத்தில் எதும் வேஸ்ட் கிடையாது சிகாமணி.“
“நானும் வேஸ்ட் இல்லைன்றீங்க?“ என்று சிகாமணி சிரிக்கிறான்.
“என் கதைக்கு வருவோம்… சிகாமணி, ஒராளை ஒரு தடவை பார்த்தால் மறந்துரும். இதுல அவங்களை நான் ரெண்டு வாட்டி பார்த்திருக்கேன்… இன் ஃபாக்ட் மூணு வாட்டி.“
“என்ன சொல்றீங்க?“
“இதுவரை இந்தக் கேசில துப்பு கிடைக்கவே இல்லை போலிசுக்கு.“
“அதுக்கு?“
“என்கிட்ட ஒரு ருசு கிடைச்சிருக்கு.“
“அதைத் தான் நேத்தி ராத்திரி தேடினீங்களா அத்தான்?“
திலகா திரும்பிப் பார்க்கிறாள். “என்ன அது?“ என்கிறாள் திலகா.
“விஷயம் நல்லபடியா முடியட்டும். அப்பறமா சொல்றேன். திரும்ப கணக்கு கிணக்கு தப்பா ஆயிட்டால்?“
“அதை அப்பறமா நாங்க சொல்வோம்… கணக்கும் நீங்களும்னு…“
“வாடா. கிளம்பு“ என்கிறான் ராமசாமி.
“எங்க அத்தான்?“
“கமிஷனரைப் பார்க்கலாம்.“
“ஏங்க ருசுவை அங்க ஒப்படைக்கப் போறீங்களா?“
“ரெண்டு வருஷம் முன்னால நடநத விஷயம். இதுநாள்வரை அதுக்கான ருசு நம்ம கிட்டியே நம்ம வீட்லயே இருந்திருக்குன்றாரே…“. என யோசிக்கிறாள் திலகா.
“அது எனக்கே தெரியாது…‘‘ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“அவ்வளவு அழகா கணக்கு போடறீங்க“ என்கிறாள் திலகா.
“நான் ரெடி அத்தான்…“ என்று வந்து நிற்கிறான் சிகாமணி.
ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது. சிகாமணிக்கு அது என்ன ருசு என்று யோசித்து மாளவில்லை. “என்ன அது? “ என அவன் பின்னால் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி அவனைக் கேட்டுக் கொண்டே வருகிறான். “விடிஞ்சா தெரியும் மாப்பிள்ளை குருடுன்னு பழமொழி. கொஞ்சம் பொறுத்துக்கோ. கமிஷனர் கிட்டக் குடுக்கும் போது நீ பார்க்கத்தானே போறே…“ என்கிறான் ராமசாமி. “நம்ம கதை எப்பிடிப் போகுதுடா?“
“வசிகரப் பொய்கள்…“ என்று சிகாமணி சிரிக்கிறான்.
கமிஷனர் அலுவலகம். நீண்ட வராந்தாக்கள்.
“வாங்க“ என அவனை உள்ளே அழைத்து உட்காரச் சொல்கிறார் கமிஷனர்.
“சார் நான் ராமசாமி. நேஷனல் பேங்க்.“
“ஆமா. ஆமா சார். ரெண்டு வருஷம முன்னாடி… அந்த ROBBERY… ஆளுங்க சிக்கவே இல்லியே சார்.“
“கிடடத்தட்ட சிக்கினா மாதிரி தான் சார்…“ என்கிறான் ராமசாமி மகிழ்ச்சியுடன்.
“என்ன சொல்றீங்க?“
தன் கைப் பெட்டியில இருந்து ஒரு காகிதத்தை எடுக்கிறான் ராமசாமி. சாப்பிட்ட பின் துடைக்கிற டிஷ்யூ பேப்பர்.
“டிஷ்யூ பேப்பர். எதுக்கு இது?“
“சார் இந்த ஆளை நான் ஒரு சில மாசம் முன்னால் ஒரு ஹோட்டலில் பார்த்தேன். இவனை எங்கயோ பார்த்திருக்கறதா எனக்கு அப்பவே சந்தேகம் சார். அப்பறம் தான் சட்னு பொறி தட்டியது… என்னைக் கட்டிப் போட்டான் பாருங்க பாங்க்ல… இவன்தான் சார்.“
“கிரேட் கிரேட்…“
“அவன் முகத்தை அத்தனை தூரத்தில் இருந்து வரைஞ்சிருக்கேன் சார். ஆனால் அதைவிட நல்ல விஷயம், முக்கியமான விஷயம்…“
“என்ன?“
“அவன் ஓட்டிட்டு வந்த பைக். அதன் நம்பரையும் இந்தப் படத்தில் குறிச்சி வெச்சிருக்கேன் பாருங்க.“

அதை வாங்கிப் பார்க்கிறார். “பிடி கிட்டும் போலுக்கே...“ என தனக்குள் பேசிக் கொள்கிறார். “TN 22 அண்ணாநகர் RTO“ என்கிறார். 
“எக்சலன்ட்…“ என உடனே எழுந்து கொள்கிறார் கமிஷனர். அறையை விட்டு பரபரப்புடன் வெளியே போகிறார்.
“எக்சலன்ட்…“ என கை கொடுக்கிறான் சிகாமணி.
“ஒரு தடவை பார்த்தபோது ஞாபகம் குறைவாவே இருக்கும்டா. ரெண்டாவது வாட்டி அந்தக் குழந்தையை…“
“யாரை அத்தான்?“
“ராணியை.“
“ஓ பக்கத்து வீட்டு கணபதியோட பொண்ணை…“
“அப்படியே வரைஞ்சேன். அவருக்குக் குழந்தை கிடைச்சாளா இல்லியா?“
“கிரேட் கிரேட்.“
“இப்ப… இவனை மூணு முறை பார்த்திட்டேன். பாங்கல் ரெண்டு வாட்டி.“
“ஹோட்டல்ல… எங்களோட மூணாவது வாட்டி…“
“நேத்தி அந்த ROBBERY யை நான் விட்டிருந்தால் இது நடக்குமா சிகாமணி?“
அவன் பதில் சொல்லுமுன் கமிஷனர் திரும்ப உள்ளே வருகிறார். “என்ன சாப்பிடறீங்க?“ என புன்னகையுடன் கேட்கிறார். “காபி? டீ? வல் டிரிங்1?“
“எல்லாமே“ என்கிறான் சிகாமணி.
“இட்ஸ ஆல்ரைட் சார்… எதுவும் வேணாம்“ என்கிறான் ராமசாமி.
“அந்த வண்டி நம்பர்… அதை டிரேஸ் பண்ணச் சொல்லியாச்சி. TRAFFIC ALERT குடுத்திருக்கம். உள்ளூர்லியே அவன் இருந்தால் ஒரு மணி, ரெண்டு மணி நேரம். இல்லாட்டி கூட இன்னும் நாலைஞ்சி மணி நேரத்தில் ஆள் கிடைச்சிருவான்… முதல்ல அவன் ஆர் சி நம்பர் வெச்சி அட்ரஸ்ல பார்க்க ஆரம்பிச்சி… அதெல்லாம் வேட்டையாடிருவோம். பார்க்கலாம்“ என்று கை கொடுக்கிறார் கமிஷனர். “குற்றவாளியைப் பிடிச்சிருவோம்னு நம்பிக்கை வந்திட்டது மிஸ்டர் ராமசாமி.“
வெளியே வருகிறார்கள். வராந்தாவைத் தாண்டும்போது ஒரு சிறுவன் கூல் டிரிங்ஸ் எடுத்துப் போவதை சிகாமணி பார்க்கிறான். “நமக்கா அத்தான்? நாம வெளிய வந்திட்டோமே?“ என்கிறான். “வாடா…“ என அவனை இழுத்துக் கொண்டு வெளியே வருகிறான் ராமசாமி.
வீடு. திலகாவும் சிகாமணியும் மாத்திரம் இருக்கிறார்கள். கோகுல் வெளியே ராணியுடன் விளையாடும் ஒலிகள் கேட்கின்றன. கடிகாரத்தில் மணி மாலை ஆறரை. “அக்கா… அத்தானை என்ன நினைச்சே….“ என்று ஆரம்பிக்கிறான்  சிகாமணி. “கமிஷனர் அத்தானை ரொம்பப் பாராட்டினார்… இன்னிக்கு தான் அக்கா கமிஷனர் ஆபிசையே நான் பார்க்கிறேன். ரொம்பப் பெரிசு. உள்ள போகவே பயந்து கெடக்கு. டக் டக்னு பூட்ஸ கால் நடக்கிற சத்தமே   எதிரொலியா கேட்குது…“
“கமிஷனர் என்ன சொன்னார்? அதைச் சொல்லுடா…“
“கூல் டிரிங்ஸ் சாப்பிடுங்கன்னார். அத்தான் வேணான்னுட்டார்…“
“ரொம்ப முக்கியம். அந்த PROOF? அதை அத்தான் குடுத்தாரா?“
“குடுத்தார் குடுத்தார். அது நம்ம மூணு பேருக்குமே தெரிஞ்சது தான்…“ என்று சிரிக்கிறான்.
“என்ன அது?“
“அன்னிக்கு நாம வீட்ல GAS தீர்ந்து போயி வெளிய சாப்பிடப் போனோமாஈ“
“அந்த ஹோட்டல் பில்லா?“
“அப்ப ஒரு ஆளைப் பார்த்து அததான் சீரியசானாரா?“
“அவனைப் படம் கூடப் போட்டார்… கோகுல் அதைப் பார்த்துட்டு, என்னையும் வரையறியாப்பான்னு கேட்டான்.“
“அதே தான்.‘ யார் அந்த ஆள் தெரியுமா?“
“யாரு?“
அப்போது தொலைபேசி அடிக்கறிது. “நல்ல சகுனம் போயி எடு அக்கா…“
திலகா பேசுகிறாள். ”ஆமாங்க. ராமசாமி ஐயா வீடுதான். நானா? அவர் மனைவி… சரிங்க. சரிங்க…. வந்ததும் சொல்லிர்றேன்…‘ தேங்ஸ்“ என போனை வைக்கிறாள். முகம் நிறையச் சிரிப்பு.
“அந்த ஆளைப் பிடிச்சிட்டாங்களாம்…“
“எந்த ஆளை?“
“GAS தீர்ந்து போயி… நாம ஹோட்டலுக்குப் போயி…“ என சிரிக்கிறாள் திலகா. “சரி அவனை எதுக்கு இப்ப அவசரமாத் தேடினாங்க?“
“அவன்தான் அக்கா பேங்க்ல கொள்ளையடிக்க வந்த ரெண்டு பேரில் ஒருத்தன்.“
“அடேடே.“
“ரெண்டு வருஷமா மாட்டாத ஆள்  அக்கா. கரெக்டா ரெண்டு வருஷத்தில் மாட்டியிருக்கிறான்…“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“யாரால?“ என நெஞ்சு நிமிர்த்துகிறாள் திலகா.
“ஆகா. என்ன அக்கா அப்பிடியே ரெகார்டைத் திருப்பிப் போடற?“
“ஆமாம். நான்தான் அவருக்கு இன்னிக்கு பாங்க் ROBBERY ன்னு ஞாபகப் படுத்தினேன்.“
“காலைல இது பத்தி கண்ணைக் கசக்கினே அக்கா. இப்ப?…. பல்லை இளிக்கிறே. இதுவே ALTERNATE REALITY போலத்தான் இருக்கு அக்கா.“
‘அதை விடுறா…“ அவனை பாபர்த்து ஆர்வமாய்க் கேட்கிறாள். “காலை பேப்பர்ல வருமாடா?“
“காலைல பேப்பர் வரும். அது தான் தெரியும் அக்கா…“ என்கிறான் சிகாமணி.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk chapters visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment