Saturday, January 30, 2016

நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீசிய நாவல்
பார்வை 
தொலைத்தவர்கள்

யோசே சரமாகோ
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
(முன்கதை
நகரத்தில் பார்வை இழப்பு ஒரு தொற்று போல் எங்கும் கொட்டம் அடித்துப் பரவுகிறிது. சில வாரங்களில் நகரம் முழுதுமே குருடர்களாக நிரம்பி விட்டார்கள். முதற் கட்டமாக இப்படி நோயாளிகளை தனியே ஒரு முகாமில் அகதிகளாகத் தனியே பராமரிப்பது நடக்கிறது. அவர்கள் அந்த வளாகத்தில். ஒரு தீவிபத்தில் இருந்து தப்பித்து வெளியேறி அந்தக் கூட்டத்தில் ஒரு நபரின் வீட்டை அடைகிறார்கள். உடைகளும் காலணிகளும் உடம்பும் மகா அழுக்கும், பிசுக்குமாய் அடைகிறார்கள். கீழ்ப்பகுதி அந்த வீட்டில் இரவில் நடக்கிறது.)
*
வைகறைப் பொழுதில் மழை ஆரம்பித்தது. காற்றின் எழுச்சியில் சன்னல்கள் படபடத்தன. ஒரே சமயம் ஆயிரக்கணக்கான சவுக்குகள் சொடுக்கப் பட்டன. டாக்டரின் மனைவி விழித்துக் கொண்டாள். கண்ணைத் திறந்து, என்ன மழை, என முணுமுணுத்தபடி திரும்ப மூடி... அறையில் இருட்டு இன்னும் கருமைவிலகி விடவில்லை. இன்னுங் கொஞ்ச நேரம் தூங்கலாம். ஒரு நிமிஷம் கூட ஆகியிருக்காது. விலுக்கென உலுக்கியது அந்த ஞாபகம், நமக்கு ஒரு வேலை இருக்கே?
      எழுந்து உட்கார்ந்தாள். என்ன வேலை என்பது கூட சட்டென மூளையில் தட்டவில்லை. ஆனால் மழை அவளை எழுந்துகொள்ளச் சொன்னது. என்ன வேணும் அதற்கு? ஏன் என்னை அது எழுப்புகிறது? கணவனை உசுப்பிவிடாத கவனத்துடன் படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். விருந்தினர் அறையைக் கடந்தாள். ஒரு நிமிடம் நின்று எல்லாரும் சோபாக்களில், உறங்குகிறார்களா என்று கவனித்தாள். பிறகு வராந்தாவில் சமையல் அறை வரை வந்தாள். காற்றின் ஒதுக்கத்தில் இந்தப் பகுதியில் தான் மழை அதிக வேகமாய்ச் சுழன்றாடியது. தன் இரவுகவுனின் கை மறைத்த பகுதியால் கண்ணாடியைத் துடைத்தபடி வெளியே பார்த்தாள்.
      மொத்த வானமே ஒரேமேகம் போல இருட்டித் திரண்டிருந்தது. கன மழை. தாரை தாரையாய் இறங்கிக் கொண்டிருந்தது. தாழ்வாரத் தரையில் அவர்கள் அவிழ்த்துப் போட்ட அழுக்கு உடைகள். பிளாஸ்டிக் பையில் காலணிகளும் சுத்தம் செய்யப்படக் காத்திருந்தன. ஆ துவைத்தல். சட்டென உறக்கம் தூரப் போனது. இது... இதைத்தான் செய்ய நினைத்திருந்தேன்!
      தாழ்வாரக் கதவைத் திறந்த ஜோரில், ஓரடி கூட வைத்திருக்க மாட்டாள், உச்சி முதல் பாதம் வரை நனைந்து போனாள். அட அருவியால்ல கொட்டுது. இந்த மழைத் தண்ணியை வீணா விட்டுர்றதா. கிடுகிடுவென்று சமையல் அறைக்கு வந்து, முடிந்த வரை சத்தம் தவிர்த்தாள், அண்டான் குண்டான் சட்டி சாமான் எல்லாத்தையும் கொண்டு வந்து தண்ணீர் பிடித்தாள்.
      சொர்க்கத்தில் இருந்து வர்ஷிக்கும் மழை. வானமே பொத்துக்கிட்டு ஊத்துகிறாப் போல. காற்று வேறு மழையைத் தலைகலைத்துக் கோதினாப் போல. மகா மழை. நகரத்தின் அத்தனை கூரைகளையும் இரைச்சலாய்ப் பெரிய வாரியலால் பெருக்கித் தூர்க்கும் மழை. நிறைந்த பாத்திரங்களை வெளி கைப்பிடிப் பக்கமாக வைத்துக் கொண்டாள். துணி அலசவும் காலணிகளைக் கழுவவும் பயன்படும். மழை விடாமல் அடிக்கட்டும், என முணுமுணுத்துக் கொண்டாள். சமையல் அறைக்குத் திரும்பவும் போய் சோப்பு. சவுக்காரக் கட்டிகள். சுரண்டிக் கொடுக்கும் பிரஷ்ஷுகள். சிறிய அளவில் பயன்பட்டால் கூட இருக்கட்டும். சுத்தப்படுத்த என்னென்ன பிரயோசனப் படுமோ தேடினாள். அந்த ஒட்டுமொத்த அழுக்குக் கசம், ஆன்மாவின் கும்மிருட்டு அது, எல்லாவற்றையும் துடைத்தெறிவது சவால் தான். ஆத்மா என்ன, தேகத்தின்... என்று மாற்றிச் சொல்லிக் கொண்டாள். எதுன்னா என்ன? எல்லாம் ஒண்ணுதான்.
து கண்டடைந்த தரிசனம் என்ற அளவில், ஒரு சமாதானம் போலவும், சொன்னதற்கும் யோசித்ததற்கும் பரிவர்த்தனைச் சிக்கல் எதுவும் வேணாம், என்று நினைத்தாப் போல அவள்... இரவுகவுனைக் கழற்றினாள். மேலே தெறித்துச் சிதறும் மழை. சில சமயம் அணைப்பு. சில அறைகளும். கவ்வலும் கடிகளும். துணிகளைத் துவைத்தவண்ணம் தன்னையும் அப்படியே கழுவிக் கொண்டாள். அவளைச் சுற்றியும் ஆவேசமாய்ப் பெய்யும் மழையின் சப்த தாண்டவம்.
      இப்போது அவள் தனியே இல்லை என்பதையே அவள் கவனிக்கவில்லை. பால்கனிக் கதவருகே அந்தக் கருப்புக் கண்ணாடிப் பெண். கூட முதல் குருடனின் பெண்டாட்டி. அவர்களை எந்த சக்தி, உள்ளுணர்வு, அறிவு விழிப்பு, உள் குரல் எழுப்பியதோ தெரியாது. எப்படி அவர்கள் இங்கே வரை தானே வந்தார்களோ அதுவும் ஆச்சர்யமே. இந்நேரம் அந்த விளக்க விளக்கெண்ணெய் வேணாம். யூகம் நீங்கதான் பண்ணிக்கோங்களேன்?
      டாக்டரின் மனைவி அவர்களைப் பார்த்தாள். வாங்க, நீங்களும் உதவி செய்யலாம். நாங்க எப்பிடி... எங்களுக்குப் பார்க்க முடியாதே... என்றாள் முதல் குருடனின் மனைவி. அதப்பத்தி என்ன, கருப்புக் கண்ணாடிப் பெண் சொன்னாள். என்ன முடியுமோ செஞ்சி குடுப்போம். கடைசியா நான் ஒருதரம் துவைச்சி அலசிப் போட்டுர்றேன், என்றாள் டாக்டரின் மனைவி. சீக்கிரம் வேலையப் பார்க்கலாம். வாங்க. இங்க நாம ஒருபெண், ரெண்டுகண்ணும் ஆறுகரமுமா இருக்கம்!
      ஒருவேளை எதிர்க் கட்டடங்களில் திறக்கப்படாத சன்னல்களுக்கு அப்பால் சில குருடர்கள், ஆண்கள், பெண்கள், இந்த மழையிசையைக் கேட்டுவிட்டு நெற்றி பதித்து சன்னல்கண்ணாடிகளை மூச்சால் வருடியபடி, வானத்தின் கொடையான மழையை கடைசியாக எப்ப கண்டு கேட்டு அனுபவித்தோம்... என நினைவு கூர்கிறார்களாய் இருக்கும். என்றாலும் அவர்களுக்கு இங்கே மூணு பெண்கள் பிறந்த மேனியாய், என்ன பைத்தாரத் தனம், இது கிறுக்குத்தனம் அல்லாமல் வேறு என்ன, இந்த வேளைகெட்ட வேளையில் கொட்டும் மழையில் நாலு பேர் வெளியே யிருந்து பார்க்கிற அளவில் வெளிமுற்றத்தில், துணியில்லாமல் துணிவோடு துணி துவைக்கிறார்களாமா? அவ்வளவு ஏன், யார் பார்ப்பாங்க, என்கிற அலட்சியம் கூட இல்லை, என்ன மழை, என்னமா கொட்டி முழக்குது, கடவுளே, இதுல போயி இப்பிடிக் காரியம் பண்றதா?
      மழை நீர் அவர்களின் மார்பு நடுப் பள்ளத்தில் எப்படி விழுந்து புரண்டு ஓடுகிறது. தொடையிடுக்குப் பூனை மயிர்களை அளைந்து தழைந்து நுழைந்து குகைக்குள் காணாமல் போகிறது. தொடைகளை நனைத்து பளபளவென்று கீழ் இறங்கும் மழை. அவர்கள் அதைக் கொக்கரித்துக் கொண்டாடுகிறார்கள். நம்ம தான் அதை தப்பு லொட்டு லொசுக்கு என்கிறோமா? நகரத்தின் ஆக அழகான மகத்தான காட்சி தானா இது? ஊரில் தண்ணீர் இல்லை ஐயா. பொட்டுத் தண்ணீர் கிடையாது. எவ்வளவு கொட்டுகிறது இதோ. அதை இவர்கள் எப்படி அனுபவிக்கிறார்கள்! மழை. அதை ரசிக்காதது பிழை.
      முற்றத்தின் தரையில் இருந்து சோப்பு நுரை வேறு கிளம்பி வழிகிறது. அத்தோடு புரள ஆசையைத் தூண்டுகிறது அது. நுரைத்த உற்சாகக் குமிழிகள். வழுக்கியபடி அது முடிவே யில்லாமல் நகர்கிறது. சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட கலப்படம் அற்ற தண்ணீர். அதுவும் இந்த ஊரில்! இந்த சமயத்தில்! ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்.
      ஹா. நம்மைக் கடவுள் மாத்திரம் கவனித்துக் கொண்டிருக்கிறார். முதல் குருடனின் பெண்டாட்டி சொன்னாள். எத்தனை ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கையாய் இது அமைந்திருக்கிறது. இன்னமும் கடவுளுக்குக் கண் இருக்கிறதான அவளது நம்பிக்கை! வேடிக்கை. இருந்த உன்மத்தத்துக்கு டாக்டரின் மனைவி கவித்துவமாகவே பதில் சொன்னாள். கடவுள் கூடப் பார்க்க இயலாது. வானம் அப்படி மூடிக் கிடக்கிறது. ஹா ஹா நான் தான் உங்களைப் பார்க்கிறேன்! நாம திறந்து கிடக்கிறோம்.
      நான் பார்க்கக் கண்றாவியா இருக்கேனா? கருப்புக் கண்ணாடிப் பெண் கேள்வி போட்டாள். நீ கொஞ்சம் ஒல்லியா அழுக்கா இருக்கே, அவ்ளதான். ஆனால¢ உனக்கு என்ன குறை? உன்னை அழகில்லைன்னு சொல்லவே முடியாது. நான்? முதல் குருடனின் பெண்டாட்டிக்குத் தன்னைப் பற்றிய அழகுக்கவலை வந்திருந்தது இப்போது! நீங்களும் அழுக்காவும், மெலிந்தும் தான் காணறீங்க, அத்தனை அம்சம்னு இல்லைன்னாலும், என்னை விட நீங்க அழகு, என்றாள் டாக்டரின் மனைவி.
      நீங்க அழகு, என்று டாக்டரின் மனைவியைப் பற்றி கருப்புக் கண்ணாடிப் பெண். ஹா ஹா உனக்கு எப்படித் தெரியும்? நீ என்னைப் பார்த்ததே கிடையாது... என நகைக்கிறாள் டாக்டரின் மனைவி. உங்களை நான் ரெண்டு தரம் கனவில் பார்த்திருக்கிறேன். கனவிலா? என்னையா? எப்ப? ரெண்டாவது வாட்டி, நேற்று இரவு. வீட்டைப் பற்றிய கனவு வந்திருக்கிறது. நீ ஓரளவு பாதுகாப்பா இருக்கிறதா அமைதி ஆயிட்டு வரதா அதுக்கு அர்த்தம். நாம பட்ட இத்தனை பாடுகளுக்கு அப்புறமா இப்படி ஒரு அலை ஓய்ந்த நிலை சகஜமான விஷயம் தான். உன் கனவில் நாந்தான் இல்லம். என்னைப் பற்றி யோசனைக்கு உனக்கு என்னைப் பற்றிய அழகான முகம் கற்பனையில உருவாகி யிருக்கிறது... என் முகம் உன் கற்பிதம். அதை அழகாப் படைச்சிக் கிட்டது நல்ல விஷயம்!
      நீங்க அழகுன்னு தான் எனக்கும் இருக்கு. ஆனால் நான் கனவு கினவு எல்லாம் காணல்ல. ஆகா. அதன் தாத்பர்யம் என்னன்றீங்க? அழகற்ற மனுசாளைப் பத்தி அழகா தோணுவதற்கு, கண் பார்வை இல்லாம இருக்கணும் போலருக்கே! ஏன், நீங்க ஒண்ணும் குரூபி இல்லை. அதில்லை. வயசுன்னு ஒண்ணு இருக்கில்லே? உங்க வயசு என்ன? கருப்புக் கண்ணாடிப் பெண் கேட்டாள். ஐம்பதை நோக்கி... எங்க அம்மா வயசு. அவ... என்ன அவ?... அவங்க இந்த வயசிலும் அழகுதான்றியா? ஒரு காலத்தில் அவள் அப்சரசா இருந்தாள். நீங்க எப்பத்தையும் விட இப்ப மகா அழகி, என்றாள் முதல் குருடனின் பெண்டாட்டி.
      அதாக்கும் வார்த்தைகளின் சமாச்சாரம். உங்களை அவை சுலபமா வழுக்கிவிட்டுரும். மேல மேல வார்த்தை கோபுரமாகி ஆளையே அமுக்கிரும். அதுபாட்டுக்கு பட்டமாய் காற்றில் திசை தெரியாமல் திரியும். பாராட்டுன்றதே பட்டம் தர்றது தானே. ஒரு வார்த்தை அல்லது ஒரு பெயர். மூணு நாலுன்னு எடுப்பு எடுத்தால், இன்னொண்ணை இழுத்துக் கிட்டு நடனமாடும். தனித் தனியே எளிய வார்த்தைகள் கூட்டுச் சேர்ந்து கும்மாளம் போட ஆரம்பிச்சிரும். செல்லப் பெயர். துணைக்கு வினைச்சொல் வினையெச்சம் பெயரெச்சம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், பண்புத் தொகை, உருபும் பயனும் உடன்தொக்க தொகை, ஆகுபெயர், அன்மொழித் தொகை, உவமை, உருவகம், நிரல்நிறை. மிகைநவிற்சி. இல்பொருள், தற்குறிப்பேற்றம், பொருள்கோள், வியங்கோள், இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர்...  என எக்கச் சக்கமா கிளைத்துப் பெருகும் வார்த்தைகள். ஒருபொருட் பன்மொழி., தேகத்தில் இருந்து கண்களில் இருந்து பீறிட்டு குபீரிட்டு பெருக்கெடுத்து மேலே மேலே பரவசமாய் உயர்ந்தெழும். உடம்பே சிலிர்க்கும் அதன் சொரிவில். தாள முடியாத அளவில், அவை வேறொரு பரிமாணமும் எடுக்கக் கூடும். உடைத்து விரித்து எழும் சொற்கள் அல்லாமல், கவசம் போல உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளவும் அவை, சொற்கள்... பயன்படும்!
      டாக்டரின் பெண்டாட்டிக்கு நரம்புகள் எஃகு போல். என்றாலும் சில இதமான, புகழ் வார்த்தைகளில், அது செல்ல விளியோ, வினையெச்ச பெயரெச்ச பண்பு சார் விளித்தலோ... இலக்கண முடிச்சுகள் அவை... சரக்குக்கு மேலே உறையில் அச்சடிக்கும் லேபிள்கள். இதோ இந்த இரு நாரிமணிகள். இன்னும் பிறர். எத்தனை பெயர்கள். அவர்களும் அழுகிறார்கள். அந்த இருவரும் இந்த மாதரசியை வாரித் தழுவிக் கொள்கிறார்கள். வார்த்தைக்காரி அல்ல, வாக்கியக்காரி அவள்.
 மூன்று மெல்லியலார், வார்ஷிக்கிறது மழை. இப்படியான ஆசிர்வதிக்கப்பட்ட கணங்கள் அப்படியே ரொம்ப நேரம் நீடிக்காது தான். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த முப்பெருந் தேவியர் இங்கே தான் இருக்கிறார்கள். உடம்பே ஜில்லிட்டு விட்டது, கருப்புக் கண்ணாடிப் பெண் சொன்னாள். துணிகளை முடிந்த அளவுக்கு வெளுக்கச் செய்து விட்டார்கள். காலணிகள் பளீரென்று ஆகி யிருந்தன. இப்ப அவர்கள் குளிக்க ஆரம்பிக்க வேண்டும். தலையை விரித்து அலசிக் கொண்டபடி ஒருத்தர் முதுகை ஒருத்தர் தேய்த்து விட்டார்கள். தோட்டத்தில் கண்ணாமூச்சி ரே ரே, என ஆடுகிற சின்னப் பெண்களின் உற்சாகமும் கீச்சென்ற சிரிப்பும்!
      விடிந்தது. உலகத்தின் தோள்ப் பக்கம் இருந்து சூரியனின் முதல் ரச்மி. மேகத்துக்குள் ஒளிந்து கொள்ளுமுன் ஒரு எட்டு எட்டிப் பார்க்கிறாப் போல. மழையின் ஆக்ரோஷம் முன்னைப் போல இல்லை. வெறிக்க ஆரம்பித்திருந்தது. வண்ணாத்திப் (பூச்சிப்) பெண்கள் சமையல் அறைக்குப் போகிறார்கள். துவாலைகளால் உடம்பை துடைத்து உலர்த்திக் கொள்கிறார்கள். குளியல் அறையில் இருந்து டாக்டரின் மனைவி துண்டுகள் எடுத்து வந்து தந்திருந்தாள். அவர்கள் சருமமே சோப் மணத்துக் கிடந்தது. அதான் சாமி வாழ்க்கை. வேட்டை என்றால், நாய் இல்லியா, பூனை, இருக்கறதைப் பயன்படுத்து. தேய்த்த தேய்ப்பில் கண் சிமிட்டும் நேரத்திற்குள் முழு சோப்வுக்கட்டி, கரைந்தே விட்டது!

      இந்த வீடு. இதில் என்ன தான் இல்லை? அல்லது இருப்பதை வைத்து திருப்தியும் ஆனந்தமும் அடைந்தார்களோ அவர்கள்? உடைகளுக்குள் புகுந்து கொண்டார்கள் அவர்கள். சொர்க்கபுரியாகத் தெரிந்தது எல்லாம். இரவு உடையில் டாக்டரின் மனைவி சொட்டச் சொட்ட நனைந்திருந்தாள். பூப்போட்ட வேறொரு உடைக்கு அவள் மாறினாள். பல வருடங்களாக அதை அவள் அணியாமல் வைத்திருந்த உடை அது. அந்த உடையில் அவள்தான் அந்த மூணு தேவதைகளில் மகா அழகு எனப் பொலிந்தாள்.
***
storysankar@gmail.com
91 97899 87842

Thursday, October 22, 2015

தேநீர் நேரம்

அட்டை ஓவியம் / ஷ்யாம்
வசிகரப் 
பொய்கள் 2
எஸ். சங்கரநாராயணன்
தேநீர் நேரம்

ன் கதைப் பாணியில் இது தனிப்பட்டது தான்!
என்றாலும் இந்தக் கதைக்கு முன்னோடிகள் இல்லாமல் இல்லை. ரிப் வான் வின்க்கிள் கதை என்ன? அவன் உறங்கி எழுகிறான். உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள். அதுதானே? சாயல் இல்லாமல் குழந்தைகள் பிறந்து விடுமா என்ன? எந்தக் குழந்தையும் உலகத்தின் வகை மாதிரிகளுக்குள்ளே தானே அடங்க முடிகிறது, இல்லையா?
வசிகரப் பொய்கள், என ஒரு சிறுகதை நான் முன்பே எழுதியிருந்தேன். ஒரு சிறுகதைத் தொகுப்பில் அது இடம் பெற்று, அந்த நூலின் தலைப்பாகவும் அது அமைந்து, பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கியப் பரிசும் பெற்றது! இந்நிலையில் இந்த நாவலுக்கும் அதே தலைப்பே எப்படியோ என் மனசில் பெரு நிழலெனக் கவிந்தது. கதையிலும் அந்தத் தலைப்பை அங்கிகரிக்கிறாப்போல வசனங்களையும் இணைத்து கயிறாய் முறுக்கி விட்டேன். பதிப்பாளர் நினைவு படுத்தும் வரை, முன்பு இதே தலைப்பில் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்ததே நினைவில் இல்லை. ஆகவே, பொறுத்தருள்க.
இந்த நூல், வசிகரப் பொய்கள் 2, என அறியப் படுவதாக.
ஒரு நாவலை, திரைப்படம் பார்க்கிற அளவில் வடிவம் அமைத்துக் கொள்ள, சில காட்சிப்படுத்தல்களில் யதார்த்தம் தாண்டி செயல்பட நேர்கிறதை உணர்கிறேன். இதே நாவலில் வங்கியில் சம்பளத்தை உறையில் போட்டு கையில் தருவதான ஒரு சித்தரிப்பை இதற்கு உதாரணப் படுத்தலாம். ஏ டி எம்மில் தானே சம்பளம் எடுத்துக¢ கொள்வார்கள், என்று வாசகர் வாதிட முன்வரவும் கூடும். என்றாலும், திரைப்படத்தில் ஒரு ரசிகருக்கு, ஏ டி எம்மில் எடுக்கும்போது நாம் தர முடிகிற சுவாரஸ்யத்தை விட, நேரில் பெறும்போது, முகத்தில் ஆச்சர்யத்துடன் இரண்டாவது முறை அதே மாதத்துக்குச் சம்பளம் அவன் வாங்குகிறான், என்கிற காட்சி மேலதிகம் ருசிக்கும் என்பது என் துணிபு.
இன்று நேற்று நாளை, நாடு பாராட்டிய நல்ல திரைப்படம். அதன் விவாதத்தில், படத்தின் கதையமர்வில் விவாதிக்கப் பட்ட பல கதைகளில், என் இந்தக் கதையும் ஒன்று. இன்று நேற்று நாளை, வெளிவரட்டும் என நான் காத்திருந்தேன். படம் சிறப்பாக வெளியாகி கவனம் பெற்றது. பிறகு அதன் இயக்குநர் ஆர். ரவிக்குமார் சம்மதித்து பச்சைக்கொடி காட்ட, இதை நான் எழுதிப் பார்க்க உட்கார்ந்தேன். ஆச்சர்யகரமாக எந்தக் கூட்டுவிவாதமும் இல்லாமல் முழு அளவிலும் இதில் நானே சஞ்சரித்து மூழ்கி முத்து எடுத்தேன்.
இந்தக் கதையும் திரைக்கு வந்து, இன்று நேற்று நாளை திரைப்படம் போல சிறப்பு பெற வேண்டும். இது என் அவா.
கதையின் பிற்பகுதி தாதா பாத்திரம் 'சிட்டி லைட்ஸ்' சார்லி சாப்ளினின் பணக்கார சிநேகிதனின் சாயல் கொண்டு அமைகிறது.
இதில் வரும் மகா எனும் பெண் பாத்திரம் பற்றியும் சொல்ல இருக்கிறது. கௌரவக் கொலைகள் என்கிற அம்சத்தைச் சொல்லும் புனைவாக ஒரு கதை எழுத நினைத்திருந்தேன். காதலன், காதலி இருவரும் வேறு வேறு சாதி. காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு. அவளை அவளது உறவினர்கள் கொன்று விடுகிறார்கள். உலகமே இருண்டு போன நிலையில் கால் போன போக்கில் திரிகிறான் காதலன். நதிக்கரைப் பக்கம் ஓர் இரவு நேரம் அவன் தனியே படுத்துக் கிடக்கிறான். அப்போது அவளே, அவனது காதலி, ஆவியாக அவனுடன் திரும்ப வந்து உறவாடி, பழக ஆரம்பிக்கிறாள். பகலில் அவளை அவன் பார்க்க முடியாது. இரவானால், யாருமற்ற பொழுதில், நதிக்கரையில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் அவர்கள் காதல் வளர்ந்தோங்குகிறது.
நாலைந்து ஆண்டுகளாக இப்படி ஒரு கதை எழுத மனசில் வைத்திருந்தேன். அதுதான் வேறு வகை மேகமாக உரு திரண்டு, மகாவாக முளைத்திருக்கிறது. பொய்யோடு வசிகரம் இப்படியாய் இணைந்து கொண்டது!
இந்த நாவலை வழக்கமாக நான் எழுதும் நாவல் வடிவத்தில் அல்லாமல், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைக் கிளர்த்தும் விதத்திலேயே எழுதிப் பார்க்க முன்வந்தேன். இதன் 45 பகுதிகளையும், ஒரு பல்வலி நாள் தவிர, தினசரி நான் எழுதி, என் பிளாக்கில் அரங்கேற்றினேன்.
பத்து இருபது நண்பர்கள் தினசரி என்னுடன் இதை நான் எழுதிய சூட்டோடு கலந்துரையாடினார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தக் கதையின் போக்கு பற்றி, ஒன்லைன், தெரியாது. அவர்கள் நாவல் படரும் விதம் பற்றி, அவற்றின் ஈர்ப்பு பற்றியும், அது கொடிபற்றும் இடங்கள் பற்றிய தங்கள் அனுமானங்களையும் பரிமாறிக் கொண்டார்கள். இதன் சுவாரஸ்ய அம்சம் பற்றியும் அவர்களிடம் நான் கேட்டு ¢கொண்டே வந்தேன். எழுத்தாள நண்பர்கள், பேராசிரியர்கள், கல்லூரி, மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள், திரைப்படத் துறையாளர்கள்...
குறிப்பாக தோழி வர்த்தினி பர்வதா. அவருக்கு இந்த நூல் சமர்ப்பணம்.
திரைப்படம் பார்க்கிற உணர்வைக் கிளர்த்தக் கூடிய நாவல்கள் ஆங்கிலத்தில் வந்து விட்டன. பிற மொழிகளிலும் வரத் துவங்கி விட்டன. தமிழில் இதுவரை இப்படியொரு முயற்சி இல்லை. இதுவே முதலாவது. இனி இதைப் பின்பற்றி யாராவது முயலக் கூடும். அவர்கள் வாழ்க. நல்வாழ்த்துக்கள்.
 •
கதை
திரைக்கதை
வசனம்

எஸ். சங்கரநாராயணன்

Monday, October 5, 2015

அத். 45 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 45
காலண்டரில் நாள் தாள்கள் மேலெழும்பிப் பறக்கின்றன… அகாடின் வாத்தியம் விரிகிறதைப் போல.
வங்கி. மாலை நேரம். திடீரென்று “நமஸ்காரம் சார்,“ என்று குரல். ராமசாமி தலையைத் தூக்கிப் பார்க்கிறான். அந்த சோசியக்காரன். ரமேஷிடம் திரும்பி “விடமாட்டேங்கறான் அப்பா என்னை…“ என சிரிக்கிறான். ரமேஷ் “என்னையும் தான்டா…“ என்கிறான். சோசியக்காரன் மேனேஜரைப் பார்க்க உள்ளே போகிறான். “அவருக்கு எதிர்காலத்தைக் கரெக்டாச் சொல்லிட்டானாம். புரோமோஷனும் இட மாற்றமும். என்கிட்ட அதைச் சொல்லி பீத்திக்கறான்“ என்கிறான் ராமசாமி.
“அது பலிச்சிட்டதா இல்லியான்றான். இதெல்லாம், பொறந்தா ஆம்பளை, இல்லாட்டி பொம்பளை – அப்டின்றா மாதிரி யூகம்“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“சோசியம்ன்றது வாக்கு சாமர்த்தியம். அவன் பாட்டுக்கு எட்டு பத்துன்னு பலன் அடுக்குவான். அதுல ஒண்ணு நமக்கு ஒத்து வராப்ல இருக்குமா? அத்தோட நாம அவனை நம்ப ஆரம்பிச்சிருவோம்.“
“சொல்ற முறைதான் சோசியம்னு சொல்வாங்க. ஒரு கதை கேள்விப் பட்டிருக்கியா?“
“சொல்லு.“
“ஒரு ராஜாவுக்கு சோசியம் சொல்ல நிறைய சோசியக்காரர்கள் வந்திருந்தாங்க.“
“ம்.“
“அதுல ஒருத்தன் அவர் கையைப் பார்த்தான். உங்க ராசிப்படி உங்களுக்கு முன்னாடி உங்க உறவுக்காரங்க எல்லாருமே செத்துப் போயிருவாங்க… ன்னானாம். ராஜாவுக்கு அபார கோபம் இவனைப் பிடிச்சி சிறையில் அடைங்க. இப்பிடி மோசமான பலன் சொல்றானேன்னு உத்தரவு போட்டுட்டான்.“
சிரிக்கிறான் ராமசாமி.
“அடுத்த சோசியன். அவன் வந்து கையைப் பார்க்கிறான். முதல் சோசியன் சொன்னது கரெக்ட்டு அப்டின்னு இவனுக்குப் புரிஞ்சிட்டது. பலனும் சொல்லணுமே? என்ன பண்றது? சட்னு ஆரம்பிச்சான்… ஆகா...ன்னான் உங்க உறவு சனம் எல்லார்த்தையும் விட நீங்க அதிக ஆயுசோட இருப்பீங்க மகாராஜா – அப்டின்னு ஒரு போடு போட்டான்.“
“ராஜா நல்லா பரிசு கொடுத்து அனுப்பிச்சார். அப்பிடித்தானே?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“எனக்குக் கூட பலன் சொன்னாண்டா“ என்கிறான் ரமேஷ். “உனக்குமா?“ என ஆச்சர்யமாய்த் திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “எதிர்காலமா?“
“ஆமாம்.“
“என்னன்னு?“
“எனக்கு இதய சம்பந்தமா… வலி மாதிரி எதாவது வருமாம்…“ சிரிக்கிறான் ரமேஷ். ராமசாமி முகம் மாறுகிறது. ரமேஷ் சிரிக்கிறான். “எனக்காவது நெஞ்சு வலியாவது?“
“அப்பிடியா சொன்னான்?“
“என்னடா சீரியசாயிட்டே?“
“உனக்கு நெஞ்சு வலி வரும்டா…“
“என்னடா உளர்றே?“
“அன்னிக்கு உன்கிட்ட அவசரமா நான் BLOOD COLLECT பண்ணிட்டுப் போனேனே…“
“அகர்வால் ரத்த வங்கில… ஆமாம்.“
“அது உனக்கே தாண்டா.“
“அட ஆமடா. அதை நம்பல  என்னை வெச்சி காமெடி பண்றேன்னு நினைச்சேன்.“ ரமேஷ் அவனையே பார்க்கிறான். “இர்றா…“ என அவனை ஒதுக்கிவிட்டு ராமசாமி மேனேஜர் அறைக்குள் போகிறான். “இவனுக்கும் சோசியப் பைத்தியம் பிடிச்சிட்டதா?“ என்கிறான் ரமேஷ்.
மானேஜர் அறையில் காபி அருந்திக் கொண்டிருக்கிறான் சோசியக்காரன். ராமசாமியைப் பார்த்து “என்ன சார் வேலையெல்லாம் முடிஞ்சாச்சா?“ என்று சிரிக்கிறான். “மேனேஜர் ரூம்ல இருந்துக்கிட்டு மேனேஜர் மாதிரியே கேள்வி கேக்கறியேய்யா“ என்கிறான் ராமசாமி. கிருஷ்ணராஜ் புன்னகை செய்கிறார்.
“எனக்கும் கை ரேகை பாக்கறீங்களா?“
“என்ன திடீர்னு?“
“விதி சார்… விதி“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “இப்ப உங்க கிட்ட எனக்கு கை நீட்டணும்னு தோணுதே…“
“விதியைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்றதுன்னீங்களே?“ என்று சிரிக்கிறான் சோசியக்காரன். மேனேஜர் புன்னகையுடன் ராமசாமியைப் பார்க்கிறார்.
“இப்ப மழை வரும்ன்றது விதி. கேட்டீங்களா?“ என்கிறான் ராமசாமி. “மழையை வராமல் மாத்த முடியுமா? முடியாது. ஆனால்… மழை வரும்னு தெரிஞ்சிக்கிட்டால்? குடை எடுத்துக்கிட்டுப் போகலாம் இல்லே? நனையாமல் வீடு திரும்பலாம் இல்லே?“
“நான் சொன்னதை எனக்கே திருப்பிச் சொல்றீங்களா?“ என்கிறான் சோசியக்காரன். “திருநவேலிக்கே அல்வாவா?“
மேனேஜர் சிரிக்கிறார். “டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்… முன்னாள் ஜனாதிபதி தெரியும் இல்லியா? அவர் ஒருமுறை வேடிக்கையாச் சொன்னாரு…“ என்கிறார்.
“சோசியம் பத்தியா?“
“விதி பத்தி.“
“ஓகோ.“
“சீட்டு விளையாடறோம் இல்லியா? இதுல நம்ம கைக்கு எந்த சீட்டு வருது… இது விதி. ஆனால் இந்தச் சீட்டுக்களை வெச்சி இதை அங்க அதை இங்கன்னு மாத்தி அடுக்கி செட்டு சேர்த்து ஜெயிக்கிறோம் இல்லியா. அது மதி…“
“சூப்பர்“ என்கிறான் ராமசாமி. “பாக்கறீங்களா?“ என கையை நீட்டுகிறான் ராமசாமி.
“உங்க விதி. யாரை விட்டது?“ என்று சிரிக்கிறான் சோசியக்காரன். ராமசாமி உள்ளங்கை ரேகைகளை தன் தோள்ப் பையில் இருந்து ஒரு லென்சை எடுத்துப் பார்த்தபடி ஆராய்கிறான். ஆள் காட்டி விரல் மேட்டை அழுத்திக் காட்டுகிறான். “புதன் மேடு நல்லா இருக்கு. நீங்க புத்திசாலி…“
ரமேஷும் ஆர்வப்பட்டு அறைக்குள் வருகிறான். “முதல் பாயின்ட்டே எப்பிடி அடிக்கிறார் பார்…“ என்று ரமேஷ் சிரிக்கிறான்.
“உங்க வாழ்க்கையில் அநேக சம்பவங்கள் நம்ப முடியாத அளவில் புதுசு புதுசா நடக்கும்.“
“ஆமா சார்…“ என்கிறான் ரமேஷ். “அவர் சொல்லல்லியே…“ என்று சிரிக்கிறான் சோசியக்காரன். “ஆமா“ என்கிறான் ராமசாமி.
திடீரென்று அவன் முகம் மாறுகிறது. “சார்…“ என நிறுத்துகிறான் சோசியக்காரன். மூக்கை உறிஞ்சுகிறான். “சார்.. ஆபத்து“ என்கிறான். “இதுக்கு நேரா ரெண்டு வருஷத்தில்… ஹா“ என்கிறான்.
“தீ… தீ எரியுது…“ என்கிறான் சோசியக்காரன் பதட்டமாய். “என்ன சொல்றீங்க?“ என்கிறான் ராமசாமி. அவனுக்குப் பதறுகிறது. “தீ விபத்து சார்… உங்களுக்கு தீயில கண்டம். யாராவது சொன்னாங்களா?“
“சொல்லியிருக்காங்க.“
“ரெண்டு வருஷம். இதே நாள்… உங்க வீட்ல… தீ விபத்து சார்…“
அந்தக் கையை உருவிக் கொண்டு ஓடுகிறான் ராமசாமி. மேனேஜர் பதறி எழுந்து கொள்கிறார். அவன் ஓடுவதை எல்லாரும் கலவரத்துடன் பார்க்கிறார்கள். “இருங்க…“ என்று சோசியக்காரன் திரும்பி ராமசாமியைக் கூப்பிடுகிறான். அங்கே ராமசாமி இல்லை.
ஆட்டோவில் வீடு நோக்கி விரைகிறான் ராமசாமி. தூரத்திலேயே அவனது அடுக்ககம். தீ விபத்து மாதிரி ஜாடையே இல்லை. “பொய் கிய் சொல்லிட்டானா?“ என சத்தமாய்ச் சொல்லிக் கொள்கிறான். “என்ன சார்?“ என்கிறான் ஆட்டோக்காரன். “ஒண்ணில்ல நீ போ…“
வாசல் பக்கம் இறங்கிக் கொள்கிறான். “பொய்யா இருக்குமோ?“ என்று சொலலிக் கொள்கிறான். “ஐயோ… நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இல்லே இருக்கேன்…“
பதறி லிஃப்ட்டுக்கு ஓடுகிறான். எண் ஏழு பொத்தானை அழுத்துகிறான். லிஃப்ட் மேலே ஏற ஆரம்பிக்கிறது. மூக்கை உறிஞ்சி எதும் தீ எரியும் வாசனை எட்டுகிறதா பார்க்கிறான். லிஃப்ட் கதவு திறக்கிறது. ஏழாவது மாடி. பக்கத்து வீடு கணபதி வாசலில் காத்திருக்கிறார். “என்ன சார்… வேலை முடிஞ்சாச்சா?“ என சிரிக்கிறார். அவனுக்கே சந்தேகம். “தப்பா வந்திட்டேனா?“ என்கிறான்.
“என்ன சொல்றீங்க?“ என்கிறார் கணபதி.
அப்போது அவன் வீட்டுக்குள் இருந்து பட்டென எதோ வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
வீட்டுக்கு உள்ளே அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. மேலே சுட வைத்த பாத்திரம் நீர் வற்றிப் போய் தகதகவென்று கனலாகி சிவப்பு பொலிகிறது. மெல்ல தீ அதன் GAS குழாயில் பரவுகிறது. தீப்பொறிகள்.
“எதோ சத்தம் கேட்டது இல்லே? எங்க வீட்ல இருந்து…“
“சத்தமா?“ என்கிறார் கணபதி.
“தீ… தீ சார்… குழந்தைகளோட கீழே போங்க சிக்கிரம்…“
“சீக்கிரம் போங்க“ என்று பதறுகிறான் ராமசாமி. அவர்களைப் பலவந்தமாக லிஃப்ட்டுக்குள் அனுப்புகிறான். அப்படியே தடதடவென்று மேல் மாடிக்கு ஓடுகிறான். எட்டாவது மாடி. கதவுகளைத் தட்டுகிறான். கதவைத் திறக்கிறவர்களிடம் “தீ… தீ…“ என்கிறான். நா வரள்கிறது. “எல்லாரும் கீழ போங்க… லிஃப்ட் வழியா கீழ இறங்குங்க. சீக்கிரம் சீக்கிரம்… கரண்ட் கட் பண்ணணும்.“
ஏழாவது மாடி வெளி சன்னல் கதவு சட்டென வெடிக்கிறது. தீயும் புகையுமாய்ப் பரவுகிறது வெளியே. கிழ்த்தளத்தில் இறக்கப் பட்டவர்கள் தலை தூக்கிப் பார்க்கிறாகள். “நிசம்மாதான் சொல்லியிருக்கிறார்.“ நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறார் கணபதி. அவர் பக்கத்தில் ராணி. பயப்படுகிறாள். அவளை அணைத்துக் கொள்கிறார் கணபதி. “நல்லவேளை மேகலா… அம்மாவோட வெளிய போயிருக்கா“ என்கிறாள் ராணி. “உனக்கு… நான் கூட இருக்கேன்…“ என்று அவளுக்கு முத்தம் தருகிறார் கணபதி.
ராமசாமி அப்படியே கீழே ஓடி வருகிறான். செல்ஃபோனில் தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்கிறான். “இங்க… சாந்தி டவர்ஸ். ஏழழவது மாடி. தீ. உடனே வாங்க.“
“எந்த இடம் சார்…“
“விநாயகர் நகர். நாலாவது மெய்ன் ரோடு.“
வெளியே பொழுது இருட்டு கவிய ஆரம்பிக்கிறது. அதற்குள் எதோ டி.வி. சேனலில் இருந்து வண்டி வந்து அங்கே நிற்கிறது. “இன்னும் தீயணைப்பு வண்டியே வரல்ல. இவஙக வந்திட்டாங்க பாரு…“ என்கிறார்கள் யாரோ.
இன்னொரு பந்தாய்ப் புகை ஏழாவது மாடியில் இருந்து வெளியே வருகிறது. நெருப்பு வயர்களுக்குப் பரவி அப்படியே ராமசாமி வீட்டின் ஃப்ரிட்ஜ் படாரென்று வீட்டுக்குள் வெடிக்கிறது.
டிவி நியூஸ் சேனல் வண்டியின் மேகொண்டை விளக்கு பளீரென்று எரிய ஆரம்பிக்கிறது.
அவசர அவசரமாக மாடிப் படிகளுக்கு அடியில் இருக்கும் மெய்ன் போர்டைத் திறக்கிறான். எல்லா மெய்ன் சுவிட்சுகளையும் டக் டக்கென்று அணைக்கிறான். “தீ விபத்துக்குப் பிறகு அது மின்சார வயரில் பத்திக்கிட்டு ஏற்படும் விபத்து தான் பெரிய விபத்து சார்…“ என்கிறான் கணபதியிடம்.
“யூ மே பி ரைட்“ என்கிறார் கணபதி.
இருட்டு அதிகம் ஆகி தெரு விளக்குகள் எரிய ஆரம்பிக்கின்றன. அப்போது சைரனுடன் தீ வண்டிகள் இரண்டு அந்த வளாகத்துக்குள் நுழைகின்றன.
“டிவிக்காரன் வன்ட்டான். இவன் இப்பதான் வரான்…“
“டிவிக்காரனுக்கு தகவல் இவன்தான் சொல்லிருப்பான் போல இருக்கே.“
இபபோது தீயணைப்பு வண்டியின் உச்சி விளக்குகள் வேறு எரிய விடப் படுகின்றன.
“இந்த இடமே வெளிச்சக் காடா ஆயிட்டதேய்யா…“
நிறையப் பேர் வந்து கூட ஆரம்பிக்கிறார்கள். “என்னடா தீ வண்டி நிக்குது?“
“அட தீ வண்டியா… சத்தம் கேட்டு நான் நான் பஞ்சு மிட்டாய்க்காரன்னு நினைச்சேன்.“
ஒரு பெண் பேசாமல் பார்த்தபடி நிற்கிறாள். டிவி காமெரா நாலா பக்கமும் திரும்புகிறது. அவளைப் பார்க்கிறாப் போல அது தெரிந்ததும் அவள் “ஐயோ ஐயோ…“ என்கிறாள். கூட இருக்கிறவள் சிரிக்கறிள். “நல்லா ஆக்ஷன் பண்றேடி நீ.“
சில பேர் ஓடி வருகிறார்கள். இறங்கும் தீயணைப்பு டிரைவரிடம் ஒருவன் “என்ன படம் சார்?“ என்று கேட்கிறான்.
“என்னது?“
“சினிமா ஷுட்டிங் தானே?“ என்கிறான் அவன்.
“யோவ்… போய்யா வன்ட்டான்“ என அவசரமாக கூட்டம் பார்க்க ஓடுகிறான் தீயணைப்பு டிரைவர்.
“இது டி வி சீரியல் போலத்தாண்டா இருக்கு.“
“ராதிகா சீரியலா?“
என்ன சார் ஆச்சி?“ என்று கூட்டத்திடம் வருகிறார் அதிகாரி.
“டேய் இவரை ஒரு சிரியல்ல நான் பாத்திருக்கேன். வில்லனா வருவாரு… வந்து இவரே ஒரு வைக்கப் படப்புக்குத் தீ வெச்சிருவாரு.“
அதிகாரியை நோக்கி ராமசாமி முன்னே வருகிறான். “ஏழாவது மாடி சார். எங்க வீடுதான்…“
அப்போது ஏழாவது மாடியில் இருந்து இன்னொரு புகைப் பந்து வெளியே வருகிறது. “மின்சாரத்தை நானே துண்டிச்சிட்டேன் சார்…“ என்கிறான் ராமசாமி.
“வெரி குட். நல்ல காரியம் பண்ணினீங்க.“
“உள்ள யாராவது கிழடு கட்டை மாட்டியிருக்குமாடா?“
ஒருவன் ராமசாமியைக் காட்டி “அவன்தான் ஹீரோவா?“ என்கிறான்.
“மேக் அப் போடாமல் இருக்கானே…“
“தனுஷைப் போட்டிருக்கலாம்டா.“
“ஃபயர் சரிவிஸ் ஆளா அவன் நடிச்சதே இல்லை.“
“லோ பட்ஜெட் போல…“
ராமசாமி பேசுகிறான். “பின் பக்கமா தண்ணிக் குழாய் மேல வரை போகுது. அது வழியா ஏறலாம் சார்…“
அதிகாரி உத்தரவுகளை இடுகிறார். “ஏய் ஒராளு பின் வழியா மேல ஏறு… சன்னல் உடைஞ்சிருக்கு. அது வழியா உள்ளே நுழைய முடியுமா பாரு. பாத்து… GAS CYLINDER வெடிக்காமல் இருக்கணும்.. கவனம்.“
இன்னொருத்தரை வாசல் வழியா உள்ளே போங்க நீங்க… வீட்டை உடைக்கணும்னால் உடைச்சிக்கலாம்.“
“சாவி இருக்கு சார்…“ என நீட்டுகிறான் ராமசாமி. அவன் வாங்கிக் கொள்கிறான். மேலே மாடிப்படி வழியாக உள்ளே ஓடுகிறான். தீயணைப்பு இயந்திரம் வசம் பார்த்து நின்று கொள்கிறது. அதில் இருந்து சர்ர்ரென்று மேலே ஏறும் ஏணி. அதில் ஒரு நபர் உச்சத்தில் நிற்கிறான். அவன் கையில் நீர்க் குழாய். அவன் ஏணியில் ஏறி மேலே ஸ்வைங்கென்று போவதைப் பார்த்து ராணி கை தட்டுகிறாள்.
“ஏய் அந்த ஆள் ஹீரோ இல்லைடா. அவன் ஹீரோன்னால் அவன்தானே ஏணியில் மேல ஏறணும்?“
“பாயின்ட்.“
டமார் என்று பெரும் சத்தம் ஏழாவது மாடி உள்ளே யிருந்து கேட்கிறது. அதிகாரி ராமசாமியிடம் வருத்தப் படுகிறான். “ச். சிலிண்டர் தான்… அந்த அறைச் சுவரே அப்படியே வெடிச்சிச் சிதறியிருக்கும்…“ என்கிறான். ஏழாவது மாடி சமையல் அறை வெளியே திறந்திருக்கும் ஜன்னல் அப்படியே பிய்ந்து விழுகிறது.
தூரத்தில் இருந்து திலகா பார்க்கிறாள். அவளும் கோகுலும் வந்து கொண்டிருக்கிறார்கள். “என்ன இது? ஓ தீ விபத்துடா…“ என்று கோகுலை இழுத்துக் கொண்டு ஓடி வருகிறாள். ராமசாமி அவளைப் பார்த்து “பயப்படாதே… சரியான சமயத்தில் நான் பாத்திட்டேன்…“ என்று அவளை அணைத்துக் கொள்கிறான்.
“நாந்தாங்க அடுப்புல தண்ணியை வெச்சிட்டு அப்பிடியே கதவைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிட்டேன்.“
“எங்க போனே?“
“ஆட்டோக்காரன் வரல்லன்னுட்டான். திடீர்னு நாலு மணிக்கு ஃபோன் பண்றான். நான் வேற கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு கிளம்பிட்டிருந்தேன். சரின்னு கோகுலை நானே கூட்டிக்கிட்டு…“
“ஆஞ்சநேயர் கோவிலுக்கா?“
“ஆமாம்.“
“லங்கா தகனம்.. இங்கயே பார்க்கறே நீ…“ என சிரித்தவன், அவள் அழுகிறதைப் பார்த்து, “இட்ஸ் ஆல்ரைட். வேணுன்னு பண்ணுவாங்களா… பதறாதே…“ என்கிறான்.
ராணி கோகுலிடம் வந்து நிற்கிறாள். மேலே ஏணியில் ஏறி ஒருவன் ஏழாவது மாடி  சன்னல் வரை போய்க்கொண்டே தண்ணீரைப் பீய்ச்சுவதைக் காட்டுகிறாள்.
“சர்க்கஸ்“ என்கிறான். “எங்க மிஸ் கூட நாங்க போய்ப் பார்த்தோம்“ என்கிறான் கோகுல்.
“வீட்ல தீ விபத்துன்னு உங்களுக்கு எப்பிடித் தெரிஞ்சது?“ என்று அவனைக் கேட்கிறாள் திலகா. “எப்படிப்பா தெரிஞ்சது?“ என்று கேட்கிறான் கோகுல். “எனக்கு உங்க அம்மா பத்தித் தெரியும்டா…“ என்று சிரிக்கிறான் ராமசாமி. கோகுல் சிரிக்கிறான்.
“தீயை அணைச்சி முடிச்சிட்டாங்க போலுக்குடா…“ என்கிறான் கூட்டத்தில் ஒருவன். “இன்னும் ராதிகா வர்லியடா?“ என்கிறான் இன்னொருவன். “கதைப்படி அவதான் உள்ளே மாட்டிக்கிட்டு செத்துட்டாளோ என்னமோ?“
தண்ணீர்க் குழாய் அணைக்கப் படுகிறது. ஏணி மெல்ல தரைக்குச் சுருங்குகிறது.  மாடியில் இருந்து இறங்கி வரும் ஒரு தீயணைப்புத் துறைக்காரன். ஏணியில் இருந்து தண்ணீர் பீய்ச்சி விட்டு இறங்கும் இன்னொருவன். பின் குழாய் வழியே ஏறிப் போனவன். மூவரும் திரும்பி வருகிறார்கள்.
தண்ணீர்க் குழாய் சுருங்கச் சுருங்க அதைப் பாய் போல சுருட்டிக் கொண்டே வரும் ஒருவன்.
அதிகாரி வீட்டுக்குள் நுழைந்தவனிடம் “மேல இவங்க வீட்ல மெயினை ஆஃப் பண்ணிட்டியா?“
“ஆச்சி சார்“ என்கிறான் அவன். “சரி அப்ப மத்த மெய்னை எல்லாம் ரிலீஸ் பண்ணிறலாம்…“
படபடவென்று விளக்குகள் வருகின்றன.
அந்த ஏணிக்காரனிடம் கோகுல். “உங்களுக்கு பயமா இல்லியா அன்க்கிள்? அவ்ள உசரம் ஏணில ஏறிட்டீங்களே?“ என்கிறான். “எனக்கு யானை மேல ஏறவே பயம்.“
அவன் சிரிக்கிறான்.
“வீடுதான்.. சமையல் அ8ற முழுக்க மோசமா இருக்கு…“ என்கிறான் அடுத்தவன்.
“ஐயோ“ என்கிறாள் திலகா.
தீயணைப்புக்காரன் ஒருவன் கையில் ஒரு படம். சுவரில் மாட்டி வைத்திருந்த அவன் அப்பாவின் படம். அதன் கட்டை ஃப்ரேம்கள் பாதி எரிந்து. “ச். அப்பாவுக்குதான் ரெண்டாம் முறை கொள்ளி வெச்சாப்ல ஆயிட்டது..“ என்கிறான ராமசாமி.
“வீடு இப்ப நார்மலா ஆயிட்டது. தீயை அணைச்சிட்டம் சார்“ என்கிறார் அதிகாரி.  “சரியான நேரத்தில் தகவல் தந்தீங்க. அரை மணி முக்கால் மணியில வேலை முடிஞ்சது.. உங்களாலதான்.“
“இதுல கையெழுத்து போடுங்க“ என சில காகிதங்களை நீட்டுகிறார் அதிகாரி. அவன் குனிந்து கையெழுத்து இடுகிறான்.
“சார்… உங்க பெரு?“
ராமசாமி திரும்பிப் பார்க்கிறான்.
“ஏய், நீ தினத்தந்தி தானே?“
“ஆமா சார் போன வாட்டி வந்திருந்தேனே… அந்த BANK ROBBERY MATTER. நீங்கதானே?“
“யோவ் BANK ROBBERY இல்லைய்யா. அதைக் கண்டுபிடிச்ச மேட்டர்.“
“சாரி சார்.“
“நீ பாட்டுக்கு நானே ராபரி பண்ணினா மாதிரிச் சொல்றே?“ என்கிறான் ராமசாமி. “யார் உன்னை இங்க வரவழைச்சது?“
“நான்தான் அத்தான்…“ என பின்னால் இருந்து வருகிறான் சிகாமணி. “எப்படா வந்தே?“
“நான் வரும்போது அதிகாரி உங்க கிட்ட கை கொடுத்திட்டிருந்தார். ஃபுல் மேட்டரும் புரிஞ்சிட்டது. சட்னு இவனுக்கு ஃபோன் போட்டேன்.“
“காலைல வந்துரும் சார்…“ என்கிறான் ரிப்போர்ட்டர்.
அடுக்ககத்தில் வசிக்கிறவர்கள் அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். “சரியான சமயத்தில் வந்து நல்லா சமயோசிதமாக் காரியம் பண்ணினீங்க…“ என்று அவனுக்குக் கை குலுக்குகிறாரகள். ராணி வந்து “அன்க்கிள்“ என்று கை நீட்டுகிறாள். சந்தோஷமாய்க் கை குலுக்குகிறான். திலகா ஒரு வெட்கமான பெருமிதத்துடன் அவனைப் பார்க்கிறாள்.
“இந்தப் புகழ் எல்லாம் திலகாவையே சாரும்“ என்கிறான் ராமசாமி. எல்லாரும் சிரிக்கிறார்கள். ராமசாமி திரும்பி ரிப்போர்ட்டருடன் “எங்க நாலு பேரையும் ஒண்ணா படம் எடுத்துப் போடுவியா?“ என்று கேட்கிறான். “நில்லுங்க…“ என காமெராவை சரி செய்கிறான் ரிப்போர்ட்டர். சிகாமணி. திலகா. ராமசாமி. கோகுல். க்ளிக்… என்கிறது கேமெரா.
“வீடு என்ன லெட்சணத்தில் இருக்கோ“ என்றபடியே உள்ளே நுழைகிறார்கள். உள்ளே மின்சாரம் இல்லை. கணபதி டார்ச்சுடன் கூடவே வருகிறார். அப்பா படம் இருந்த சுவர் கரிந்து கிடக்கிறது. ஃப்ரிட்ஜ் அப்படியே உருமாறித் தெரிகிறது. சமையல் அறையில் சன்னலே இல்லை. சுவர்களில் தரையில் தண்ணீர். ஈரம். “ஐயோ உள்ளே நாம மாட்டியிருந்தோம்னா?“ என்கிறாள் திலகா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “மாட்டியிருந்தாலும் தினத்தந்தியில படம் வந்திருக்கும்“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “அந்த சோசியக்காரன்…“
“யாரு?“ என்கிறாள் திலகா. “உனக்கு அவனைத் தெரியாது…“ என்கிறான். “HE IS SOMEBODY.’’
சோசியனை மரத்தடியில் பார்த்து ஒரு பொன்னாடை போர்த்துகிறான் ராமசாமி. “இருக்கட்டும் சார். ஒரு தீ விபத்து… ஆனால் சமாளிச்சிருவீங்கன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள ஓடிட்டீங்க…“ என்று சிரிக்கிறான்  அவன்.
சிதிலம் அடைந்த சமையல் கூடம்.
மறுபடியும் சீராகிறது.
கூடத்தில் புதிய ஃப்ரிட்ஜ். மேலே அப்பாவின் வேறொரு படம். அதில் மினுக்கும் சிரியல் பல்ப்.
சிகாமணியுடன் பேசிக் கொண்டிருக்கிறான் ராமசாமி. “வாழ்க்கை புதிரானது தான்டா. ALTERNATE REALITY பத்தி எனக்கே அனுபவப் படாமல் நான் நம்பியிருக்கவே மாட்டேன். உனக்கு அனுபவப் படாத அளவில் உன்னாலும் இந்தக் கதையை நம்ப முடியாது சிகாமணி…“ என்கிறான் ராமசாமி.
“அது உண்மைதான் அத்தான். ஒரு பொண்ணு போன ஜென்மத்துப் புருஷன் இவன்தான்னு சரியாச் சொல்லி அவனைத் தேடிப் போய்ப் பார்க்கறான்னு படிக்கிறோம். நிகழ்கால இந்தச் சின்னப் பெண் வாழ்க்கை, போன ஜென்ம வாழ்க்கை, ரெண்டுமே அவள் வாழறாளே?“
“அதை எப்பிடி நம்ம கைக்குள்ள பயன்படுத்தணும்னு… நீங்க சரியா கணக்கு போட்டீங்க அத்தான். அதான் விசேஷம்“ என்கிறான் சிகாமணி.
“புதன் மேடு…“ என்று கையைக் காட்டுகிறான் ராமசாமி. “அறிவாளி“ என்று சிரிக்கிறான். “சின்னக்கனியைப் போய்ப் பார்த்தியா?“
“பார்த்தேன் அத்தான்…“
“நாயகன் பார்ட் ட்டூ. எத்தனை தூரம் வந்திருக்கு?“
“ஓபனிங் சொல்லவா?“
“சொல்லு…“
“நாட்டின் பெரிய தாதா அவன். கோபாவேசமா நடந்து போகிறான். வழியில் ஒரு மரம்… அது மறிச்சி நிற்கிறது அவன் வழியை… ஹ்ரூம்… என உருமுகிறான்…“
“என்ன? வயித்தை வலிக்குதா அவனுக்கு?“
“மரம் பயந்துருது. அப்படியே மடியுது… சட்னு நகர்ந்து தள்ளிப்போய் நிக்குது. வழி விட்டுருது மரம்… ஹா ஹா. எப்பிடி அத்தான்…“
“டேய்… என் கதை… அது உனக்கு சுவாரஸ்யப்படல்லியா?“
“நான் அதை எடுத்தால்…“
“சொல்லு சிகாமணி…“
சிகாமணி சொல்கிறான்.
வசிகரப் பொய்கள் 2
ராமசாமி லிஃப்ட்டுக்குள் போகிறான். லிஃப்ட் பிளஸ் 1. காட்டுகிறது. பிளஸ் 1. ராமசாமி அதிர்ச்சி4 அடைகிறான். அவன் மூளையில் பல்பு எரிகிறது. நட்சத்திரங்கள் சிதறுகின்றன. பயந்தபடியே அவன் பிளஸ் 1 அழுத்துகிறான்.
ஒரு குகை போன்ற வழி. ஆனால் இருட்டாய் இல்லை. இது மகா வெளிச்சமாய் இருக்கிறது. அதைக் கடந்து போகிறான் ராமசாமி.
அலுவலகம். அந்த லோன் பார்ட்டி காத்திருக்கிறான். ஆச்சர்யமாய் இருக்கிறது அவனுக்கு. “என்ன வேணும்…“
“மேனேஜரைப் பார்க்கணும்.“
“என்ன விஷயம்?“
“ஒரு லோன் விஷயமா…“
“நீங்க எத்தனை வருஷமா லோனுக்கு அலையறீங்க?“
“நாலு வருஷமா அலையறேன் சார்…“
வியப்புடன் அருகில் இருக்கும் பியூன் ரத்தினத்திடம் “இது எந்த வருஷம்?“ என்று கேட்கிறான். “2018 சார்….“ என்கிறான் அவன்.
“ஓகோகோ…“ என்கிறான் ராமசாமி. “இது… நான் எதிர்காலத்துக்கு வந்திட்டேன்“ என்கிறான். பின் லோன் பார்ட்டியிடம் திரும்பி “போங்க. போயி மேனேஜரைப் பாருங்க“ என்கிறான்.
பியூன் ரத்தினம் அவன் பக்கம் குனிகிறான். “சார்…“
“என்னய்யா?“
“நீங்கதான் சார் இப்ப மேனேஜர்“ என்கிறான் ரத்தினம்.

மு ழு து ம்

91 97899 87842




Sunday, October 4, 2015

அத். 44 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

Updated everyday

வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 44

க்டோபர் 03 என்று காட்டுகிறது நாட்காட்டி.
வங்கி. மேனஜேர் கிருஷ்ணராஜ் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்காய் இனிப்பு வழங்குகிறார். அவருக்குப் பதவி உயர்வோடு இட மாற்றம் வந்திருக்கிறது.
“என்ன சார்? உங்க பதவி உயர்வு… சேதி கன்ஃபர்ம் ஆயிட்டதா?“
“ஆமாப்பா“ என்றபடி ரமேஷிடம் இனிப்பை நீட்டுகிறார்.
“நல்ல விஷயம் சார்…“ என்று எடுத்துக் கொள்கிறான். “எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் சார்?“
“அது இன்னும் தெரியல்ல… ஆனால் இட மாற்றம் உறுதின்னு சொல்லிட்டாங்க. ஒரு மாசத்துக்கு உள்ள… நான் பையங்க படிப்பு இத்தியாதி ஏற்பாடுகளை யோசிச்சிப் பார்க்கறதுக்குன்னு தகவல் மாத்திரம் சொல்வாங்க… நமக்கு எந்த ஊரானா என்ன?“
“இப்படி பெட்டியைத் தூக்கித் தூக்கியே சாருக்கு ஏழு எட்டு மொழிகள் தெரிஞ்சாச்சி. இல்ல சார்?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
கிருஷ்ணராஜ் புன்னகைக்கிறார். “இதுநாள் வரை உங்க எல்லார் கிட்டேயும் ரொம்ப கண்டிப்பா நான் நடந்துக் கிட்டதா தோணலாம்… அதுக்குப் பலனும் கிடைக்காமல் இல்லை. நம்ம கிளை சிறந்த கிளைன்னு விருது வாங்கியது. ஆனாலும் மனசாறச் சொல்கிறேன். நீங்க எல்லாரும் அதுக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருந்தீங்க. இந்த மாதிரி ஒத்துழைப்பான கம்ப்பானியன்சை நான் சந்திச்சதே இல்லை…‘‘ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
“ஒவ்வொரு இடத்தில் வேலை மாற்றம் வரும் போதும் சார் இப்பிடித்தான் சொல்வீங்கன்னு நினைக்கிறேன்..“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“மகா எங்கே?“ என்று கேட்கிறான் ரமேஷ். “பத்திரிகை வைக்கன்னு ஸ்ரீநிவாஸ் கூட கிளம்பிப் போனாள்… கல்யாணம்னு வந்திட்டாலே எப்பிடி உற்சாகமா ஆயிர்றாங்க இந்தப் பெண்கள்…“ என்றபடியே திரும்பி ராமசாமியைப் பார்க்கிறான்.
அப்போது வாசலில் ஸ்கூட்டி பெப் வந்து நிற்கிறது. மகா மாத்திரம் தனியே வந்து இறங்குகிறாள். சுடிதாரில் ஓரங்களில் ஜரிகை பளபளக்கிறது. தலையை கேரள பாணியில் உலர்த்தி விட்டிருக்கிறாள். கை கால்களில் மருதாணிப் பூச்சு புது மெருகுடன். “இப்பவே அவளுக்குக் கல்யாணக் களை வந்திட்டதுய்யா…“ என்கிறான் ரமேஷ். “அநேகமா நாளை நாளைமறுநாள் லேர்ந்து அவள் லீவு போட்டுருவான்னு தோணுது.“
ராமசாமி மேசைமேல் இனிப்பு அப்படியே கடிக்கப் படாமல் முழுசாய் இருக்கிறது. மகா வந்ததும் ராமசாமி எழுந்து போகிறான். கிருஷ்ணராஜ் இனிப்பை எடுத்துக்கொண்டு மகாவிடம் வருகிறார். ராமசாமி எழுந்து போனதை ரமேஷ் கவனிக்கிறான். அவன் முகம் மாறுகிறது. அவனும் எழுந்து ராமசாமி போன திசையில் வெளியேறுகிறான்.
ராமசாமி உணவு அறையில் முதுகைக் காட்டியபடி. “என்னாச்சிடா?“ என அவன் முதுகைத் தொடுகிறான் ரமேஷ். ராமசாமி முதுகு குலுங்குகிறது. “COUNT DOWN மூடை விட்டு நீ வரணும் இவனே. பழைய காலத்தை நாம மாத்த முடியுமா?“
முடியாது என்கிறதாய் திரும்பிப் பாராமலேயே தலையாட்டுகிறான் ராமசாமி.
“பின்னே?“
“நான் ஒருத்தன்… இந்த வாரம் நான் வேலைக்கு, ‘இங்க‘ வந்திருக்கவே கூடாது.“
“ஏன் வந்தே?“
“அதான் எனக்கும் புரியல…“ என்றவன் சட்டென பிரகாசம் ஆகிறான். “இதுவும் விதியின் ஒரு கூறு தாண்டா. அது எப்பவும் மனுசனுக்கு எதாவது சங்கேதமான சேதி சொல்லிக்கிட்டே தான் இருக்கு. நாம தான் அதை கவனிக்காமல் விட்டுட்டு பின்னாடி வருத்தப் படுகிறோம்.“
“என்ன திடீர்னு?“
“எனக்கே தெரியல.“
“நான் ஏன் இப்பிடி கடந்த காலத்துக்கு வரணும் சொல்லு?“
“உனக்கே தெரியல. எனக்கு எப்பிடித் தெரியும்?“
“வாழ்க்கை அநேக வாய்ப்புகளால் ஆனது. WITHIN ALL PROBABILITIES AND POSSIBILITIES IT IS RUNNING.“
“ஆமாம். NOBODY KNOWS WHAT IS NEXT…“ என எடுத்துக் குடுக்கிறான் ரமேஷ்.
“நாளைக்கு…. அக்டோபர் 4. மாலை சுமார் 4 மணி அளவில்…“ என்கிற போதே ரமேஷ் அவனை கிட்ட வந்து பிடித்துக் கொள்கிறான். அழ வந்தவன் யாரோ வரும் சத்தம் கேட்டு நிறுத்திக் கொள்கிறான். அது மகா. “என்ன சார் ரெண்டு பேரும் இங்க நின்னுக்கிட்டிருக்கீங்க?“
“உன்னைப் பத்தி தான் பேசிட்டிருக்கம்…“ என்கிறான் ரமேஷ். “என்னைப் பத்தியா? என்ன?“ என புருவம் தூக்குகிறாள் மகா. ராமசாமி என்னவோ சொல்ல வருமுன் ரமேஷ், “உன் மாமனார் மாமியார் வந்தாச்சா?“ என்று இடை மறிக்கிறான்.
“நாளைக்கு மூணு மூணரை வாக்கில் வர்றாங்க… ஏர் போர்ட்டுக்குப் போகணும்…“ என்கிறாள் மகா. ராமசாமியின் முதுகு குலுங்குகிறது. அவனை மறைத்தபடி நின்று கொள்கிறான் ரமேஷ்.
“என்ன ராமு சார் பேசவே மாட்டேங்கறார்…“
“அதெல்லாம் இல்ல. எனக்கு… கொஞ்சம் உடம்பு சரியில்ல…“ என்று சமாளிக்கிறான் ராமசாமி.
மகா போகிறாள். “இல்ல ரமேஷ். இனியும் என்னால இங்க தாக்குப் பிடிக்க முடியாது…“ என்கிறான் ராமசாமி. “நான் வெளியே போகிறேன்…“
“பிரச்னையைத் தவிர்க்க முடியாது ராமு. நீதானே சொன்னே…“
“நான் அதுக்கு பயந்து விலகி ஓடறேன்றியா?“
“ஆமாம்“ என அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான் ரமேஷ். “பரவால்ல…“ என பிடியை உருவிக் கொள்கிறான் ராமசாமி. “மேனேஜர் கேட்டால் யாரோ வந்து கூப்பிட்டாங்கன்னு நான் வெளியே போயிருக்கறதாச் சொல்லு…“
“இங்க பார். நான் சொல்றதைக் கேளுடா… இவன் ஒருத்தன் பாதி கனவுலயே பயந்து சாகறான்…“
ராமசாமி போகிறதையே பார்க்கிறான் ரமேஷ்.
சாலை. நடக்க முடியவில்லை அவனால். தள்ளாடுகிறது. அழுகை வருகிறது. அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நிற்கிறான். “என்ன சார்?“ என்று கேட்கிறான் அந்த மரத்தடி சோசியக்காரன். “ஒண்ணில்ல…“ என அவனைக் கைகாட்டி விலக்கிவிட்டுப் போகிறான். கொள்கையில்லாமல் நடந்து போகிறான்.
தெரு இயல்பான போக்குவரத்து நெரிசலோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அவன் மனக் கண்ணில் ஒரு காட்சி. ஒரு கல்யாணப் பத்திரிகை.
மகாலெட்சமி WEDS ஸ்ரீநிவாஸ்.
சர்ரென்று அதன் மேல் இரத்தம் பீய்ச்சி அடிக்கிறது. அப்படியே நிற்கிறான் ராமசாமி. தலையை உதறிக் கொள்கிறான்.
மனசில் இன்னொரு காட்சி. மகா அவனிடம் சிரித்து வெட்கமாய்ப் பேசுதல். அவன் வங்கிக்கு வெளியே வந்து உற்சாகமாய் அவளை வழியனுப்புதல். அவள் ஸ்கூட்டி பெப் எடுத்தல்.
அப்படியே WHY SHOULD BOYS HAVE ALL THE FUN… என்கிற பாடல் காட்சியின் பதிவுகள்.
வாய்விட்டு WHY SHOULD SHE SUFFER ALL THE SIN? – என மனசில் சொல்லிக் கொள்கிறான் ராமசாமி.
சர்ர் சர்ர் என்று பிரேக்குகள் ஒலி. வரிசையாய்க் கார்கள் வாகனங்கள் நிற்கின்றன. யாரோ நாலாவது வரிசையில் இருந்து வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடுகிறான். “யாரோ வயசுப் பொண்ணுப்பா.. ஸ்பாட்ல ஆள் அவ்ட்…“ அந்த நாலாவது வரிசை ஆள் திரும்ப வந்து வாந்தி எடுக்கிறான். ராமசாமி அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். உவ்வே… என முயற்சி செய்கிறான். வாந்தி… வரவில்லை.
அது ஒரு நாற் சந்தி. அவன் மனசில் இன்னொரு காட்சி. விபத்து நடந்த இடம். இந்தப் பக்கம். மகாவின் ஸ்கூட்டி பெப் சப்பளிந்து மோசமாக உரு குலைந்து கிடக்கிறது. சாலையின் மறு ஓரம். அந்த ஐ டென் வண்டி. முகப்பில் பெயர். வித்தியாசமான பெயர். வசிகரன்.
இப்போது சட்டென அவன் சுற்று முற்றும் பார்க்கிறான்.
அந்த சந்திப்பில் வாகனங்கள் நிற்கின்றன.
முதல் வரிசை. நாலைந்து வாகனங்கள் தள்ளி ஒரு வாகனம். உற்றுப் பார்க்கிறான். அது ஒரு ஐ டென். ஆகா. சட்டென சுதாரித்து அதன் முகப்பைப் பார்க்கிறான். அதில்… ஆமாம். சந்தேகமே இல்லை! அந்தப் பெயர்.
வ சி க ர ன்.
“வசிகரா?“ என பைத்தியம் மாதிரி அந்த சந்திப்பில் மற்ற கார்களை மறித்துப் பாய்கிறான் ராமசாமி. அதற்குள் சிக்னல் விழுந்து கார்கள் கிளம்பி விட்டன. க்ரீச். க்ரீச். என வரிசையாய்க் கார்கள் அதிர்ந்து பிரேக் அடிக்கின்றன.
“ஏய்யா சாகறதுக்கு நல்ல நேரம் பார்த்தான்யா இவன்…“ என ஒரு குரல். போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. நாலாவது வரிசையில் இருந்து ஒருவன் ஓடிவருகிறான்.
மாலை ஐந்து மணி. வங்கிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மகா தான் எடுக்கிறாள்.
அவசர ஊர்தி. 108. பீய்ங் பீய்ங் என்று போக்குவரத்தைப் பிளந்து கொண்டு வருகிறது. வாகனங்கள் வழி விடுகின்றன. அடிபட்டுக் கிடக்கும் ராமசாமி. அப்படியே வந்து தூக்குகிறார்கள். “நினைவு இருக்காய்யா?“
“இல்ல. மயக்கமாத் தான் இருக்காரு…“
“தலைல அடி… கொஞ்சம் ரத்தம் போயிருக்கு.“
“தூக்கு.“
சற்று தள்ளி ஒரு கார். சிவப்பு வண்ணம். அவனை விபத்துக்கு உள்ளாக்கிய வாகனம் நிற்கிறது.
வாகனம் பரபரப்புடன் சாலைப் போக்குவரத்தைக் கிழித்தபடி போகிறது. தனியார் ஆஸ்த்திரி ஒன்று. அதன் வாசலில் ஆம்புலன்ஸ் நிற்க சிப்பந்திகள் ஓடி வருகிறார்கள். “நினைவு இருக்கா?“
“இல்ல…“
ஸ்ட்ரெட்சரில்  ராமசாமியை மாற்றுகிறார்கள். அப்படியே விறுவிறுவென்று உள்ளே போகிறது ஸ்ட்ரெட்சர். காத்திருக்கிற நோயாளிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
“என்னாச்சி?“
“இப்ப நின்னு உன் கிட்ட எல்லாம் சொல்லணுமாய்யா?‘ நகருங்க…“ என்றபடி ஸ்ட்ரெட்சரைத் தள்ளிப் போகிறார்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போகிறது ஸ்ட்ரெட்சர். வார்டு கதவுகள் சாத்திக் கொள்கின்றன. குரல்கள்.
“எதும் ஐடி கார்டோ செல்ஃபோனோ இருக்காய்யா?“
“செல்போன்ல டவர் இல்லை சார்.“
“ஐ டி கார்டு எதுவும்…“
ஸ்ட்ரெட்சர் போனபடி இருக்கிறது. “ஒரு பாங்க் ஐடி கார்டு சார்.“
“என்ன பாங்க்?“
“நேஷனல் பாங்க்.“
“அப்ப சரி. இவனை நல்லபடியா அட்டென்ட் பண்ணுவாங்க. எப்பிடியும் இனசூரன்ஸ் வெச்சி4ருப்பான். இல்லாட்டி கூட வங்கி பாத்துக்கும்…“
“வங்கிக்கு போன் போடுய்யா…“
ஐ சி யூ வில் டாக்டர் ராமசாமியை வாங்கிக் கொள்கிறார். அவன் முகத்தில் ரத்தம் வழிந்திருக்கிறது. “தலைல அடி பட்டிருக்கு… கபாலத்தில் விரிசல் இருக்கா பார்க்கணும்“ என்கிறார். வாசலில் எட்டிப் பார்க்கிற நபர்களை “கூட்டம் போடாதீங்க“ என வார்டுபாய் ஒதுக்குகிறான்.
“ஆபரேஷன் தியேட்டருக்கே எடுத்துக்கிட்டுப் போங்க“ என்கிறார் டாக்டர்.
“ஹலோ.. நேஷனல் பாங்க்கா?“ என ஒரு தொலைபேசி அழைப்பின் குரல்.
“எஸ்…“ என ஒரு பெண் குரல் எடுத்துப் பேசுகிறது.
தலையில் முடியைக் கத்தரித்து விடுகிறான் ஒரு உதவியாள். அடிபட்ட இடத்தை சோதிக்கிறார் டாக்டர்
தையல் போடப் படுகிறது.
நேரம் அரை மணி கழிகிறது.
ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறான் ராமசாமி. தலையில் கட்டு.
ஐ சி யூ வுக்கு மாற்றப் படுகிறான்.
பக்கத்து பெட் பேஷன்ட் “என்னாச்சி?“ என நர்சைக் கேட்கிறார். “விபத்து“ என்கிறாள் நர்ஸ். “ஐயோ. எப்பிடி?“ என்கிறார் அவர்.
“தெரியல.“
“நினைவு இருக்கா?“
“மயக்கமாத் தான் கிடந்தாரு.“
“இப்ப நினைவு வந்திட்டதா?“
‘இப்ப செடேடிவ் குடுத்திருக்காங்க. மெல்லதான் நினைவு வரும்…“
“அப்பன்னா?...“ என அவர் மேலே பேசுமுன், “கொஞ்சம் தொணதொணக்காம இருக்கீங்களா?  என்கிறாள் நர்ஸ். பிறகு அவர் வாயை மூடிக் கொள்கிறார்.
ராமசாமி அப்படியே கண்மூடிப் படுத்திருக்கிறான். குளுக்கோஸ் ஏறுகிறது.  அவ்வப்போது வந்து நாடி பார்க்கிறார்கள். அருகே ஈ சி ஜி ஓடுகிறது. ஆக்சிஜன் முகமூடி ஒரு மணி நேரம் வைத்திருக்கிறார்கள். பெரிய டாக்டர் வந்து பார்க்கிறார். அவர் வேணாம், என்பது போல எதோ சொல்கிறார். ஆக்சிஜன் கொடுப்பது எடுக்கப் படுகிறது.
அப்படியே மெல்ல பொழுது சாய்ந்து இருள் சூழ்கிறது.
காலை விடிகிறது. “அந்தாளுக்கு இன்னும் நினைவு வரல்லியே…“ என்கிறார் அடுத்த பெட்காரர். நர்ஸ்  உதட்டைப் பிதுக்குகிறாள். “கடுமையான அடியா?“ என்கிறார் அவர். அவள் காதில் வாங்கிக் கொள்ளாமல் போகிறாள்.
மெல்ல வெளிச்சம் உக்கிரம் ஆகிறது. மாலை மணி 4 என்று காட்டுகிறது ஆஸ்பத்திரி கடிகாரம்.
மெல்ல கண் திறக்கிறான் ராமசாமி. அருகில் யாருமே இல்லை. மெல்ல தலையை அசைக்கப் பார்க்கிறான். தலை கனக்கிறது. தலையில் கட்டு போட்டிருக்கிறது. கையால் தலையைத் தொட்டுப் பார்க்க முயல்கிறான். கையில் குளுக்கோஸ் ஏறுவது தெரிகிறது. குழப்பமாகிறான். மெல்ல கஷ்டப்பட்டு தலையைத் திருப்புகிறான்.
பக்கத்துப் படுக்கை ஆசாமி திரும்பி இவனைப் பார்க்கிறார். “கண்ணைத் திறந்திட்டீங்களா?“
“இல்ல“ என தலையாட்டுகிறான்.
“இப்ப திறந்துக்கிட்டு தானே பேசறீங்க?“ என அவர் முகம் மாறுகிறது.
“பின்ன ஏன்யா கேக்கறே மூதேவி“ என்கிறான் ராமசாமி.
“நர்ஸ்?“ என்று கத்துகிறார் பக்கத்துப் படுக்கை ஆள்.
“யாரைக் கூப்பிடறே?“
“மூதேவியை… ச்சீ நர்சை“ என்கிறான் அவன். நர்ஸ் வருகிறாள்.
“சார் கண்ணைத் திறந்திட்டார்…“
“டி வி நியூஸ்ல சொல்லணுமா?“ என்கிறாள் அவன் பக்கமாக வந்தபடியே.
ராமசாமி அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “மொபைல்ல பேசிட்டிருந்தீங்களா?“
“ஆமாம்.“
“உங்க லவர் கூடவா?“
அவள் சிரிக்கிறாள்.
“எப்பிடி எனக்கு அடி பட்டது?“ என மெல்லக் கேட்கிறான்.
“நீயே அடி பட்டுக்கிட்டு வந்து படுத்துக்கிட்டு.. அவளைக் கேட்கிறியேய்யா?“
“எப்பவுமே.. விபத்துன்னால், அடிபட்ட அந்த நேரம்… அவங்களுக்கு ஞாபகம் இருக்காது“ என்கிறாள் நர்ஸ்.
“தலைல எப்பிடி அடி பட்டது?“ என்று கேட்கிறான் ராமசாமி.
அப்போது ஐ சி யூ சிறு சன்னல் வழியே மகா எட்டிப் பார்க்கிறாள். அவளைப் பார்த்து பலவீனமான புன்னகை ஒன்றை வீசுகிறான் ராமசாமி. அவள் வெளியே யாருக்கோ அவன் கண் விழித்து விட்ட தகவலைச் சொல்கிறாள். திடீரென ஞாபகம் வந்தாப் போல அவன் முகம் கலவரமாய் மாறுகிறது.
மகா திரும்ப எட்டிப் பார்க்கிறாள். அவளை தன் அருகே உள்ளே வரும்படி கண்ணால் அழைக்கிறான் ராமசாமி.
அவள் உள்ளே நுழையப் போகையில் நர்ஸ் தடுக்கிறாள். “அவர்தான் கூப்பிட்டாரு…“ என்கிறாள் மகா. நர்ஸ் அவனைப் பார்க்கிறாள். ராமசாமி நர்சிடம் அவளை அருகே வரச் சொல்லி கண்ணால் கேட்கிறான். “பெரிய டாக்டர் ரவுணட்ஸ் வர நேரம்….“
“ரவுண்ட்ஸ் ன்னால் எப்பிடி? தன்னைத் தானே சுத்திக்கிட்டே வருவாரா டாக்டர்?“ என்கிறான் பக்கத்துப் படுக்கைக் காரன்.
“இவருக்கு நினைவு திரும்பிட்டதுன்னு சொல்லியிருக்கேன். பார்க்க வந்திட்டே இருக்கார்…“ என்கிறாள் நர்ஸ். “ம். சீக்கிரம் பாத்திட்டுப் போங்க…“ என அனுமதி அளிக்கிறாள்.
“தாங்ஸ்“ என மகா உள்ளே வருகிறாள்.. கூட ஸ்ரீநிவாஸ். “ஆகா. ஒரு வழியா கண்ணைத் திறந்தீங்களா?“
“இன்னிக்குத் தேதி என்ன?“
“ஏன்?“
“சொல்லு மகா…“
“அக்டோபர் 04.“
“மணி என்ன?“
“நாலரை.“
“ஆகா…“ என வாய் நிறைய சிரிக்கிறான் ராமசாமி. “இவங்க அப்பா அம்மா வந்தாச்சா?“
“வந்திருப்பாங்க…“
“மகா.. நீ… நீங்க பார்க்கப் போகல்லியா?“
“எப்பிடி அன்க்கிள்… நேத்து இன்னிக்கு… ரெண்டு நாளா நீங்க கண்ணே திறக்கல்ல  உங்களை இந்த நிலைமையில விட்டுப் போக எப்பிடி முடியும்?“
“தேங்ஸ் மகா… நீ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல காரியம் பண்ணினே…“
“ஏன் அன்க்கிள்…“
“HA! ALTERNATE REALITY…“ என்கிறான் ராமசாமி. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறான். “உண்மை பொய்யாகி விட்டது. பொய் வசிகரமாகி விட்டது…“ கண்ணில் நீர் வழியச் சிரிக்கிறான். அவன் கண்ணில் காட்சி விரிகிறது. மகா கழுத்தில் தாலி கட்டுகிறான் ஸ்ரீநிவாஸ். அட்சதைகள், மலர்கள் நாலாபுறமும் தூவப் படுகின்றன.
·       

(அடுத்த பகுதியோடு முடிக்கிறேன்)
91 97899 87842
for bulk 5 chaptes please visit

vasikarapoikalplus.blogspot.com