Monday, August 31, 2015

நாவல் அத்தியாயம் 11

திரைப்பட வியூகத்தில் வளரும் நாவல்
அத்தியாயம் 11

வ சி க ர ப் 
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
ஷுட்டிங் ஸ்பாட். பேய்ப்படம் ஒன்று எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தி இருள் சூழும் நேரம். சிகாமணி முதல் நாள் வேலைக்கு வந்திருக்கிறான். தயாரிப்பாளர் தவிர வேறு யாரும் தெரிந்த முகம் இல்லை. மனம் நிறைய மகிழ்ச்சி. “வணக்கம் சார்,“ என்கிறான் தயாரிப்பாளரிடம். தலையாட்டுகிறார்.
“இந்தப் படத்தின் கதை என்ன சார்?“
“பேய்ப்படம் தம்பி.“
“செலவு மிச்சம் சார்.“
“ஏன்?“
“கதாநாயகிக்கு மேக் அப்பே போட வேண்டாம்.“
தயாரிப்பாளர் முகம் மாறுகிறது. “ஜோக் சார்“‘ என்கிறான் சுதாரித்து. தலையாட்டுகிறார். பக்கத்தில் கதாநாயகிக்கு மேக் அப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவளைப் பார்க்கிறான். “கதாநாயகிக்கு மேக் அப் வேணாம். பேய்க்குதான் தேவை“ என சிரிக்கிறான். அவள் அதை ரசிக்கவில்லை.
“என்ன சொன்னாலும் இவங்க சிரிக்க மாட்டாங்களா?“
“அவங்களுக்குத் தமிழே தெரியாதுய்யா…
“இவங்க கதநாயகியா பேயா?“ என அங்கிருந்த மற்றொரு உதவி இயக்குநரிடம் விசாரிக்கிறான். “கொஞ்ச நேரம் பேசாமல் இருய்யா…“ என்கிறான் அவன்.
படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. கதாநாயகி வீடு செட்.
ஸ்டார்ட். கேமெரா. ரோலிங். ஆக்ஷன்…
ஜன்னல் கதவு படபடக்கிறது. வெளியே இருந்து ஒரு ராட்சச விசிறி சுழல ஆரம்பிக்கிறது. ஊய்யென்று காற்று. ஜல் ஜல் என்று சலங்கை ஒலி கேட்கிறது. ஜன்னல் வழியே ஒரு வெள்ளைத் துணி அசைவதைப்போல பேய்… அடுத்த காட்சி. கதாநாயகி பயத்துடன் ஜன்னலைப் பார்க்கிறாள். காமெரா மெல்ல அவளை நோக்கி வருகிறது.
“கட் கட்“ என்று சிகாமணி கத்துகிறான். சட்டென விளக்குகள் எரிகின்றன. “என்னாச்சி?“ என இயக்குநர் திரும்பிப் பார்க்கிறார். கதாநாயகி “நல்லா பண்ணினேன். இப்ப அடுத்த டேக் போணும் போல“ என முணுமுணுக்கிறாள்.
“ஜல் ஜல்னு சலங்கை ஒலி போட்டீங்களே?“
“ஆமாம்.“
“பேய்க்குக் கால் கிடையாதே? சலங்கையை எப்படிக் கட்டிக்கும் சார்?“

“அட யாராவது கட்டி விட்டுட்டுப் போறாங்க“

“அதில்லை சார். அதுக்குக் காலே இல்லியே? சலங்கையை எங்க கட்டிக்கும்?“
இயக்குநர் தலையில் அடித்துக் கொள்கிறார். “அட அது எஃபெக்ட்டுக்குய்யா. அப்பதான் காட்சில திகிலைக் கிளப்ப முடியும்…“
“சலங்கை கட்டிய பேய் தரையில் நடக்காமல், ஜன்னல் வழியே உள்ள வருதே சார்… அதுவும் சரியான்னு… ஒரு சந்தேகம் சார்.“
“எடுக்கறதே பேய்ப் படம். அதுல லாஜிக் வேறயா?“ என்கிறார் இயக்குநர்.
“நம்ப முடியாத கதையைக் கூட நம்பறா மாதிரிச் சொல்லணும். அதானே சார் சினிமா.“
“யார் இந்தாளை உள்ள விட்டது?“ என அவர் தயாரிப்பாரைக் கேட்கிறார்.
“நான் பேய். எனனை யாரும் உள்ளே விட வேண்டியது இல்லை…“ என்றபடி கதாநாயகியைப் பார்ககிறான். “எனக்குப் பேயைப் பார்த்துக் கூட பயமா இல்லை. இவங்களைப் பார்த்துதான் பயமா இருக்கு…“ என வெளியேறுகிறான்.
வங்கி. மேனேஜர் ராமகிருஷ்ணன். நிகழ்காலம். “இருப்பேன். இருப்பேன். எப்ப வரீங்க? கண்டிப்பா இருப்பேன். சார். நீங்க டெபாசிட் பண்ண வரேன்றீங்க. நீங்கதான் சார் எங்களுக்குக் கடவுள்… வாங்க வாங்க“ என்றபடி தொலைபேசியை வைக்கிறார்.
ராமசாமியை அழைக்கிறார். “என்ன சார்?“ என்றபடியே உள்ளே வருகிறான்.
“ஒரு உபகாரம். ஆஃப் கோர்ஸ் நாட் அஃபிசியல்…“ என்கிறார்.
“சொல்லுங்க சார். அதைப் பத்தி என்ன?
“என் பையன். எட்டாங் கிளாஸ். ஒரு பிராஜக்ட்.“
“படம் கிடம் வரையணுமா சார்?“
“புரிஞ்சிக்கிட்டே தேங்க் யூ.“
“நான் வரைவேன்னு யார் சார் சொன்னா?“
“உன் ஒய்ஃபும் என் ஒய்ஃபும் கோவில்ல சந்திச்சிப் பேசிக் கிட்டபோது உன் ஒய்ஃப் தான் சொல்லிப் பெருமைப் பட்டுக்கிட்டா போலருக்கு…“
“எல்லாருக்கும் ஹீரோ ஆன அந்த ஆஞ்சநேயர் எனக்கு வில்லனா ஆயிட்டாரே…“ என் சிரிக்கிறான் ராமசாமி. “செஞ்சி தர்றேன் சார்.“
உள்ளே ரமேஷும் ராமசாமியும் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பியூன் கிளியரிங் செக்குகளை டிராப் பாக்சில் இருந்து எடுத்து ஒரு ட்ரேயில் போட்டு ஒரு கம்பியூட்டர் பக்கம் எடுத்து வைத்துவிட்டுப் போகிறான்.
மதிய இடைவேளை. அவரவர் உணவு டப்பாக்களைப் பிரிக்கிறார்கள். “உங்க அப்பாவுக்கு எப்பிடி இருக்கு ரமேஷ்?“
“எழுந்து நடக்கவே இப்பவெல்லாம் முடியல. யாராவது கூட உதவிக்கு வேண்டியிருக்கு. பாத்ரூம் வரை போகக் கூட என் தோளைப் பிடிச்சிக்கிட்டே போயிட்டு வராரு…“
“ச். பாவம்.“
“என்ன உதவின்னாலும் நான் வர்ற வரை காத்திட்டிருக்காரு. அண்ணன் கிட்ட கேட்க மாட்டாரு.“
“உங்க அண்ணன்… எப்ப அவர் சாகப் போறார்னு எதிர்பாத்திட்டிருக்கானா?“
“அவன் அப்பா இருக்கிற அறைப் பக்கமே வர்றது இல்லை. எனக்கென்னமோ அப்பா இருக்கற போதே இந்த வீடடை விலை பேசி வித்திறலாம்னு அவன் என்னவோ பிளான்ல இருக்கிறாப் போல இருக்குடா.“
“நீ தான் உஷாரா இருக்கணும். அப்பாவை அவன் கட்டாயப் படுத்தி மிரட்டிக் கூட எதையாவது செய்திருவான்… அவனே அவருக்குப் பாதி வியாதிடா. என்னைக்கேட்டால் அவனை நம்பி அவரைத் தனியா விட்டுட்டு நீ ஆபிஸ் வர்றதே கூட ரிஸ்க்தான்.“
“நான் என்ன பண்ணட்டும் சொல்லு. அண்ணனை எதிர்த்துப் பேசிப் பழக்கமே கிடையாது எனக்கு…“ என்றவன், “என் கதையை விடுறா. அதுக்கு முடிவே கிடையாது. உன் கதை பேசு. இப்ப எப்பிடி இருக்கு?“
“எது?“
“என்னன்னு நீதான் சொல்லணும். அடிக்கடி லீவு போடறே. எங்க போறே எங்க வர்றேன்னு தெரியல. உன் மனைவிக்குக் கூடத் தெரியாது இல்லியா?“
ராமசாமி புன்னகை செய்கிறான். “முந்தா நேத்து ஒரு வழியா அவ கிட்ட மாட்டிக்கிட்டேன். அவள் பாங்க்குக்கு போன் பண்ணியிருக்கிறாள். நம்ம மேனேஜர் தான் எடுத்தார் போல…“
“ஓகோ.“
“வேலைக்கே வரல்லன்னு சொல்லிட்டார்.“
“மாட்டினியா?“
“பெரிசா ஒண்ணும் மாட்டல. நேத்து ரொம்ப உடம்ப அசத்திட்டது. நான் காலை ஒன்பது மணி வரை அடிச்சிப் போட்டாப் போல தூங்கியிருக்கேன். இவளே எனக்கு லீவு சொல்லிட்டா.“
“ஆமாம். அந்த போனை நான் தான் எடுத்தேன். சரிடா. லீவு போட்டுட்டு என்ன பண்றே? எங்க போறே? சின்ன வீடு எதும் செட் அப் பண்ணிட்டியா?“ என்று சிரிக்கிறான்.
“சொல்லவா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “லீவு போட்டுட்டு எங்க போறேன்னு தானே கேட்டே இங்க தான் வரேன்.“
“இங்க தான்னா?“
“இங்க. நம்ம ஆபிசுக்கு…“
“அப்ப எப்பிடி லீவுன்றே?“
“அதான் கூத்துன்றது.“
“வந்து என்ன பண்றே?“
“வேலை பார்க்கிறேன்…“
“வேலையா?‘ என்ன வேலை?“
“இதே வேலை. டிராஃப்ட் எழுதறது. எட்செட்ரா.“
“உன்கூட இதுதான் சங்கடம். நீ பேச ஆரம்பிச்சால் உண்மையாப் பேசிறியா டூப் விடறியான்னே தெரிய மாட்டேங்குது.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “நான் உண்மை பேசினால் யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. நான் பேசற உண்மைதான் குழப்பமா இருக்கு எல்லாருக்கும். அதுனால, என் சஸ்பென்ஸ் என் கூடவே இருக்கட்டும். சரியா?“
“உன் சஸ்பென்ஸ் நாசமாப் போக…“ என்கிறான் ரமேஷ். “சரி. நீ லீவு போட்டுட்டு இங்கியே வரே, வந்து வேலை பாக்கறே…“
“ஆமாம்.“
“அப்ப நான்?“
“நீ லீவு போடாமலேயே இங்க வேலைக்கு வரே. வேலை பாக்கறே…“
“ஆனால் நான் உன்னை பார்க்கறதே இல்லியா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி. “நாமளே புரிய வைக்கிறதை விட, அவங்களே புரிஞ்சிக்க வாய்ப்பு தரலாம். அதான் இப்பத்திய என் பாலிசி…“ என்றவன், “அவ்ளதான். வேற வழி இல்லை.“ ராமசாமி எழுந்து கொண்டு கை கழுவுகிறான்.
“என் மனைவி லேசா என்னை நம்ப ஆரம்பிச்சிட்டதாத் தெரியுது…“
அப்போது அவன் அலைபேசியில் அழைப்பு. திலகா தான். “இப்பதான் சொன்னேன். அதுக்குள்ள அவளுக்கு மூக்கு வேர்த்திட்டது போல. நான் வேலைக்கு வந்திருக்கேனான்னு சந்தேகமா?“ என சிரிக்கிறான். “என்ன திலக்?“
“உங்க தங்கை வந்திருக்கா.“
“மாதுரியா? குடு குடு…“
“தங்கைன்னா துடிக்குதோ?“ என்று திலகாவின் குரல். பிறகு சிறிது மௌனம். “அண்ணா?“ என்று மாதுரி.
“எப்பிடி இருக்கே மாது?“
“நல்லா இருக்கேண்ணா. நீ எப்பிடி இருக்கே?“
“ஜஸ்ட் புல்லிங் ஆன்…  உன் வீட்டுக்காரர் எப்பிடி இருக்கிறார்? குட்டி… எப்பிடி இருக்கு?“
“அவளுக்குதான் லேசா ஜுரம். சளிக்கட்டு போல இருக்கு. அப்பறம் அண்ணா? அவளுக்குதான் பேபி ஃபுட் இப்ப படு டிமாண்டா இருக்கு. எங்கயுமே கிடைக்கல்ல…“
“என்ன பேபி ஃபுட் குடுக்கறே?“
“ஃபேரக்ஸ் வெஜிடபிள்.“
“நான் இங்க கேட்டுப் பார்க்கறேன்…‘ சாய்ந்தரமா வாங்கிண்டு வரேன். இருப்பே இல்லியா?“
“இருப்பேன். இருப்பேன். நீ எக்ஸ்ட்ரா வேலை அது இதுன்னு தாமதம் ஆக்கிறாதே? அதுக்குதான் நான் வந்திருக்கேன்னு தகவல் சொன்னேன்…“
“சரி. சரி“ என அழைப்பைத் துண்டிக்கிறான்.
மாலை அலுவலகம் விட்டு வந்ததும் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கடை கடையாக விசாரிக்கிறான்.
“வாங்க சார் வாங்க வாங்க…“ என அழைக்கிறான் ஒரு கடைக்காரன். “நம்ம கடையில இல்லாத ஐட்டமே இல்லை சார்.“
“ரொம்ப சந்தோஷம். ஃபேரக்ஸ் வெஜிடபிள்.“
“அடடா“ என்கிறான் கடைக்காரன். “இப்ப பேபி ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாமே டிமாண்டு சார்…“
“எப்ப வரும்?“
“தெரியல சார். ஆர்டர் குடுத்திருக்கோம். நாலு நாள் ஆச்சி. இன்னும் வரல்ல. எங்கயுமே கிடைக்கல்லியே. இல்லாட்டி நாங்க கஸ்டமரை விட மாட்டோம். நாங்களே பையனை அனுப்பி வாங்கிக் கைல குடுத்துருவோம். வேற எதாவது வேணுமா சார்?“
“இல்ல வேணாம்…“ என்றபடி வெளியே வருகிறான்.
இரவு. அலுப்புடன் வீடு திரும்புகிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருக்கிறான். “அண்ணா வந்தாச்சி“ என உள்ளே யிருந்து குரல். “வந்து சிரிப்புடன் கதவைத் திறக்கிறாள் மாதுரி. “எப்பிடி இருக்கே அண்ணா? சிக்கிரம் வந்துருவேன்னு பார்த்தேன்… எட்டு மணி ஆயிட்டதே?“
“ஹா“ என்றபடி உள்ளே வருதல். “உனக்காகத்தான் அலைஞ்சிட்டு வரேன். எங்கயுமே கிடைக்கல்ல.“
“என்ன?“
“பேபி ஃபுட்.“
“எங்கிட்டயும் ஸ்டாக் தீரப் போறது. இன்னும் ஒருநாள் வரும் அவ்ளதான்.“
திலகா “காபி?“ என்கிறாள். பிறகு அவளே மாதுரியிடம் “இவர் காபிக்கு மாத்திரம் எப்பவும் நோ சொல்றதே இல்லை“ என புன்னகை செய்கிறாள்.
சட்டென பிரகாசமாகி எழுந்து கொள்கிறான் ராமசாமி. “நோ“ என்கிறான்.
“என்ன நோ?“
“காபிக்கு நோ.…“ என விறுவிறுவென்று வெளியேறுகிறான். “என்னாச்சி?“
“டின்னோட வர்றேன்…“ என வெளியே போகிறான்.
“அட எங்க போறான் இப்போ? காலைல பாத்துக்கக் கூடாதா?“ என்கிறாள் மாதுரி.
லிஃப்ட். மைனஸ் 1 காட்டுகிறது. வெளியே வந்து விறுவிறுவென்று நடக்கிறான்., முன்பு விசாரித்த அதே கடை.
“வாங்க வாங்க“ என்கிறான் கடைக்காரன். வேறு உடை. “நம்மட்ட இல்லாத ஐட்டமே இல்லை சார்“ என புன்னகை செய்கிறான். “பையா சாரை கவனி?“
“என்ன வேணும் சார்?“ என ஒரு பையன் அவன் பக்கமாக வந்து நிற்கிறான்.
“ஃபேரக்ஸ் வெ4டபிள்.“
“எத்தனை வேணும் சார்?“
“ரெண்டு.“
வீடு. உற்சாகமாக “இந்தா“ என தங்கையிடம் நீட்டுகிறான். அவள் ஆச்சர்யத்துடன் வாங்கிக் கொள்கிறாள். “நானும் அண்ணியும் தேடாத கடை இல்லை. ஏறி இறங்காத இடம் இல்லை. உனக்கு மாத்திரம் எப்பிடி கிடைச்சது?“
“நீங்க எந்தக் கடையில் கேட்டீங்க?“
“நீங்க எந்தக் கடையில வாங்கினீங்க?“ என்று கேட்டாள் திலகா.
“பால்ராஜ் ஸ்டோர்ஸ்.“
“நாங்க அங்கயும் கேட்டோமே…“ எனறாள் மாதுரி. “ஒருவேளை அண்ணா பாங்க் அது இதுன்னு மஸ்கா பண்ணி வாங்கிட்டு வந்துட்டானா?“
சிரிக்கிறான் ராமசாமி. மாதுரி டின்னைத் தலைகீழாகக் கவிழ்த்துப் பிடித்து எக்ஸ்பிரி டேட் பார்க்கிறாள். “எக்ஸ்பிரி டேட். நானே பாத்துதான் வாங்கினேன்“ என்கிறான் ராமசாமி.
‘மாதுரி மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை நகர்த்தி விட்டு எழுந்து உள்ளே போகிறாள். “எப்பிடிங்க?“ என்று கேட்கிறாள் திலகா. “எனக்கு என்ன தோணுதுன்னால்…“
“அதே தான்“ என்கிறான் ராமசாமி.
“ஆனால்…“ என்கிறாள் திலகா. சிரிக்கிறார்கள்.
·       

தொடர்கிறேன்

91 97899 87842

Sunday, August 30, 2015

வசிகரப் பொய்கள் - அத்தியாயம் 10

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வ சி க ர ப்
பொ ய் க ள்
எஸ். சங்கரநாராயணன்




அத்தியாயம் 10

கோவில் வளாகம். திலகா மகிழ்ச்சியாக இருக்கிறாள். “இப்படி எதிர்பாராமல் லீவு எடுத்துக்கிட்டீங்கன்னா தான் நாம வெளிய கிளம்பவே முடியுது…“ என்கிறாள்.
“உங்களுக்கு வீட்டில இருக்கிற நல்ல புடவையை எடுத்துக் கட்டிக்கிட்டு நாலு பொண்ணுக முன்னால தலை நிமிர்த்தி வளைய வரணும். அதுக்கு கோவில், பிரார்த்தனைன்னு ஒரு சாக்கு. புருஷன் சபரிமலைக்கு மாலை போட்டு, படு சிரத்தையா விரதம் இருப்பான். அவன் பூஜை பண்ணும்போது கூட நீங்க பட்டுப்புடவை என்ன, தலை நிறையப் பூ என்னன்னு பண்ற அட்டகாசம். அவன் விரதத்தையே கலைச்சிர்றாப்ல பாடு படுத்திர்றீங்க“ என்கிறான் ராமசாமி.
“பரவால்ல. இந்த இடக்குப் பேச்சு பேசினால் நீங்க நார்மலா இருக்கீங்கன்னு அர்த்தம்…“
“கோவணங் கட்டாத ஊரில் கோவணங் கட்டினவன் கோமாளின்னு வசனம். ஊர் எப்பிடியோ அப்பிடிப் போயிறணும். அதுல புதுசா எதும் நடந்தால் வாயை மூடி தன்னளவில் வெச்சிக்கணும். ஆல் இந்தியா ரேடியோ. சென்னை வானொலி நிலையம்னு ஒலிபரப்பு செய்தால் இதான் வினை…“
“இப்ப என்ன சொல்ல வரீங்க?“
“வாழ்க்கைல நமக்குப் புரியாத அநேகப் புதிர்கள் இருக்கு திலக். நாம அறிஞ்ச வாழ்க்கையை ஒரு வகையா புரிய வைக்க தர்க்கம் முயற்சி பண்ணுது. அது நம்பற ஒண்ணை உண்மைன்னு அது முன் வைக்கப் பார்க்கிறது.“
“இன்னிக்கு சிகாமணி, கூட இல்லையாக்கும்…“
“சரி. விடு….“
“சொல்லுங்க சொல்லுங்க.“
“இல்ல. இப்பிடி யோசிச்சிப் பாரு இவளே. உண்மைன்னு நாம நம்பறதையே இன்னொருத்தன் வந்து பொய்னு காட்டிட்டுப் போயிர்றான். அதே போல பொய்னு நாம நினைக்கறதே கூட உண்மையாவும் ஆயிறக் கூடும். எல்லாமே தர்க்கத்திலும், அதை நாம புரிஞ்சிக்கறதிலும் இருக்கு. புரிஞ்சிக்கறதுக்கு முடிவே கிடையாது. எத்தனையோ கோணம்,, எத்தனையோ திசை இருக்கு அதுக்கு.“
“போதும்னா விடவா போறீங்க?“
“உனக்குப் புரியறா மாதிரி ஒரு விஷயம். இப்ப மணி என்ன?“
“மாலை ஆறே முக்கால்.“
“அது சரியா?“
“சரிதான்.“
“அது உண்மையா?“
“உண்மைதான்.“
“ஆனால் பக்கத்து நாட்டிலேயே இப்ப மணி ஆறே முக்கால் கிடையாது. மாறிப் போகுது. இல்லியா?“
திலகா அவனைப் பார்க்கிறாள்.
“இங்க இப்ப இராத்திரி. பூமியின் அந்தப் பக்கம்? இப்ப பகல். இல்லியா?“
“நானே சொல்லிர்றேன். இது நமக்கு மேற்கு. அங்க இருக்கறவனுக்கு? இதுவே கிழக்கு. அதானே?“
“அட என் சமத்துச் சக்கரைக் குட்டி… அதேதான். ஆக உண்மையே இங்க டான்சாடிட்டிருக்கு.“
“அதுக்காக இறந்த காலத்துக்கு நான் போனேன். எதிர்காலத்துக்குப் போனேன்றது…“
“ஏன் முடியாது? நம்ம காலக் கணக்கு, சூரிய ஒளி நம்மை வந்தடையற வேகத்தில் நாம நம்ம கண்ணால பார்க்கிற இந்த உலகத்தின் கணக்கு. அதைவிட வேகமா நாம பயணப் பட்டால், நாம மத்தவங்களுக்கு முந்தியே அதே காலத்துக்குப் போயிற மாட்டமா? அது சாத்தியமா இல்லியா?“
“இந்த அஞசநேயர்… நான் இவரைத் தான் நம்பியிருக்கேன்.“
“எதுக்கு?“
“உங்களுக்கு சீக்கிரம் குணம் ஆகணும்னு…“
“வடை மாலை சாத்தப் போறியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“தர்க்கத்தை வெச்சே தர்க்கத்தைக் கேலி செய்யற உதாரணங்களும் உண்டு“ என்கிறாள் திலகா.
“அப்பிடியா?“
“ஓ எஸ். கடவுள் யாருமே தாண்ட முடியாத ஒரு சுவரைக் கட்டுவாரான்னு கேட்பார்கள்.“
“ஓகோ. அதுல என்ன?“
“அவர் சர்வ வல்லமை உள்ளவர் ஆச்சே. கண்டிப்பா கட்டுவார்னு ஒரு பதில் சொல்லலாம் இதுக்கு. உடனே அடுத்த கேள்வி. அப்படின்னா அந்த சர்வ வல்லமை உள்ளவரால அந்தச் சுவரைத் தாண்ட முடியுமா முடியாதா?...ன்னு வரும்.“
“வெரி குட். கோழி முந்தியா முட்டை முந்தியான்றதே பெரிய கேள்வி தானே?“
“அதையெல்லாம் விடடுருவம். நீங்க என்ன செய்யறீங்க. நீங்களும் குழம்பாமல், எங்களையும் குழப்பாமல் இருக்கணும். சரியா?“
“முயற்சி செய்கிறேன். உங்களைக் குழப்பறது இல்லை என் வேலை. உங்களுக்குப் புரிய வைக்க முடியாத பட்சம், அது… அப்படித்தான் எடுத்துக் கொள்ளப் படும்னு எனக்குத் தெரியுது. என்னை நீங்க நம்ப வணோம். என்னைப் பற்றி பயப்படவும் வேணாம். ஏ…. இது எந்தத் தெரு?“
அவர்கள் நிற்கிறார்கள். “ஆஞ்சநேயர் கோவில் வடக்குத் தெரு.“
“இந்தத் தெரு தான்…“
“என்ன?“
“ஒரு பர்ஸ்… எடுத்தேன்.“
“எங்க?“
“ஆபிஸ் விட்டு வர்ற வழியில்… அதில் இந்தத் தெரு முகவரி தான் இருந்தது.“
பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்சை எடுக்கிறான். அதில் ஒரு மூதாட்டியின் படம் இருக்கிறது. முகவரியை வாசிக்கிறான். “கதவு இலக்கம் 21.“
“நான் கூட கேட்கணும்னு இருந்தேன். ஏது இந்தப் பர்சுன்னு… அதுக்குள்ள கலாட்டா ஆயிட்டது.“
“ஒரு கலாட்டாவும் இல்லை. வா.“
கதவு இலக்கம் 21 கண்டுபிடிக்கிறார்கள். கதவைத் தட்டவும் “யாரது?“ என வயதான குரல். “சார்? ஒரு நிமிஷம்…“
“யார் நீங்க?“ என அவர் மீண்டும் கேட்குமுன் இருமல் சத்தம் வருகிறது. மெல்ல நிதானமாய் அவர் வெளியே வருகிறார். “என்ன வேணும்? வீடு வாடகைக்குக் கேட்டு வரீங்களா?“
“இல்லை சார். இந்தப் பர்ஸ்?...“
“பர்சா?“ என்றவர் “உள்ளே வாங்க“ என்றபடி அவர் தள்ளாடி உள்ளே போகிறார். “நான் பர்சே வெச்சிக்கர்றது இல்லை. என் பர்ஸ் ஒரு தடவை தொலைஞ்சி போச்சி…“
“ரெண்டு வருஷம் முந்திதானே?“
திலகா ஆச்சர்யத்துடன் அவனைத் திரும்பிப் பார்ககிறாள். அவன் புன்னகைக்கிறான். அவர் ஆச்சர்யத்துடன் திரும்பி அவனைப் பார்க்கிறார்.
“உனக்கு எப்பிடித் தெரியும்?“
“இதுவா பாருங்க“ என நீட்டுகிறான்.
“ஆகா, இதே தான். தம்பி… இது தொலைஞ்சதில் இருந்து எனக்கு உடம்பே ஷீணமாயிட்டது ஏன் தெரியுமா?“
“அந்தப் படம். அது உங்க மனைவியா?“ என்று கேட்கிறாள் திலகா.
“ஆமாம்மா. ரெண்டு வருஷம் முந்தி அவ என்னைத் தனியா விட்டுப் போயிட்டாள். இறந்து போயிட்டாள். அவ படம்னு என்கிட்ட இருந்தது இந்த ஒரு படம் தான். பர்சில் வெச்சிருந்தேன்… அந்தப் பர்சில் அதிகம் பணம் ஒண்ணும் இல்லை. ஆனால் அதில் அவ படம் இருந்தது. அது காணாமல் போனது தான் எனக்குப் பெரிய விஷயமா இருந்தது…. அது இத்தனை வருஷம் கழிச்சி… அது எப்பிடி தம்பி? உங்க கையில எப்பிடி வந்தது?“
“அதான் சார் எனக்கே ஆச்சர்யம். திரும்ப உங்க மனைவி படத்தோட உங்க கைக்கு வந்தது பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் பார். வா திலக். போகலாம்…“ என வெளியேறுகிறான்.
கூட வருகிறாள் திலகா. “என்னங்க இது?“
“எல்லாம் உன ஆஞ்சநேயர் அருள்தான்…“ என்று புன்னகைக்கிறான்.
“பர்சு?“
“ஆமாம்.“
“மணிரத்தினம் படம் மாதிரி இருக்குங்க டயலாக். இந்தப் பர்சை எப்ப கண்டுபிடிச்சி எடுத்தீங்க?“
“ரெண்டு நாள் முந்தி…“
“அவர் தொலைச்சது ரெண்டு வருஷம் முந்தின்றாரே?“
“அதுவும் சரிதான்.“
“ரெண்டு நாள் ரெண்டு வருஷமாயிட்டதா?“
“எப்பிடி வேணா வெச்சிக்கோ.“
“அப்ப அந்த சுகன்யா? தற்கொலை முயற்சி?“
“அதே அதே. ஆனால் நீ இதையெல்லாம் மறந்துரு இவளே. எனக்கு என்னவோ ஆகுது. நானே அதில் இருந்து தெளிந்து தேறி வருவேன்… கவலைப்படாதே.“
“கவலைப்படாதேன்றீங்க பாருங்க….“
“அப்பதான் கவலையே வருதுன்றியா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “ஒரு வகையில் நீ அந்த டைரியையும் பேப்பர்களையும் எடைக்குப் போட்டதே கூட நல்லதுதான். எனிவே இனிமே நானும் அதைப் புரட்டிப் பார்க்க நினைக்கல்ல.“
“ஏன்?“
“ரெண்டு விஷயம்.“
“என்ன?“
“ஒண்ணு. பழைய காலத்தை நம்மால மாத்த முயற்சி பண்ணியும் முடியவில்லை. அது தெரிஞ்சிட்டது. கடந்த கால சோகங்களை எதுக்கு மனசில் போட்டு அடைச்சிக்கணும். வருத்தப்படணும்…“
“வேரி குட். ரெண்டாவது?“ என்று கேட்டாள் திலகா.
“ம். ரெண்டாவது?“ என யோசிக்கிறான். “ஆ நினைவு வந்திட்டது. ரெண்டாவது. இந்த ரெண்டு வருஷத்தில் முக்கியமான விஷயம் எதும் நடந்திருந்தால் எனக்கே அது ஞாபகத்தில் இருக்கும். அதை நானே மீட்டெடுப்பேன். என்ன ஒரு ரெஃபரன்ஸ்னுதான் நான் டைரியையோ, பேப்பரையோ பார்ப்பேன். அது இல்லாட்டியும் தேவலை…“
“பேப்பரைத் தான் போட்டேன். டைரியை நான் வெச்சிருக்கேன்“ என்றாள் திலகா.
“என்னடி சொல்றே?“
“ஆனால் அதை உங்க கிட்ட தர மாட்டேன்.“
“பின்ன உனக்கு எதுக்கு?“
“நான் தனியே படிச்சிப் பார்க்கலாம்னு வெச்சிருந்தேன். ஆனால்… நீங்க சொன்னா மாதிரி, அது தேவையற்ற வருத்தத்தையோ சஞ்சலத்தையோ தந்தால்? அதுனால அதை நானும் வாசிக்கப் போறது இல்லை…“
“அதை எங்க வெச்சிருக்கேன்னு நானும் கேட்கப் போறது இல்லை…“ என்கிறான் ராமசாமி.
“சரி. இப்பிடி முதல்ல எப்ப நடந்தது?“
“அது ஒரு பத்து நாளுக்குள்ள…“
“முதல் அனுபவம்… அது எப்பிடி இருந்தது உங்களுக்கு?“
“முதல்ல எனக்கே பயமாய் இருந்தது. ஆனால் இதன் அடி முதல் நுனி வரை நான் அலாசிப் பார்க்காமல் விடப் போறது இல்லை…ன்னு எனக்குள்ள பயத்தை நானே தெளிய வெச்சிக்கிட்டேன்.“
“இது எந்த வருஷம்?“
“2016 தான். ஏன்?“
“நீங்க போட்ட போடுல, எனக்கே குழம்புது.“
“உன் ஆஞ்சநேயர் உன்னைக் கைவிட மாட்டார்.“
“சரி“ என பயத்துடன் தலையாட்டுகிறாள்.
“அவர்கிட்ட இருந்த ஒரே படம். திரும்ப அவர்கிட்ட வந்து சேர்ந்தது நல்ல விஷயம் தானே திலகா?“
“அதுவே கனவா நிஜமான்னு இருக்கு எனக்கு.“
தெரு திரும்புகிறார்கள். தூரத்தில் அவர்களது அடுக்ககம். எட்டு மாடிகள். இருளில் அடுக்ககத்தில் விளக்கெரிவது தெரிகிறது.
காலையில் ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். கூடவே வெளியே வருகிறாள் திலகா. “என்ன திலகா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“நான் உங்களை நம்பறேன்“ என்கிறாள்.
“சந்தோஷம்.“
“ஆனால்…“
“ஆனால்னா நம்பலைன்னு அர்த்தம். நம்பாட்டியும் சந்தோஷம் தான். நீங்க இயல்பா இருங்க. அது போதும் எனக்கு. இன ஃபாக்ட்…“
“என்ன?“
“நானே ஒரு நல்ல மன நல மருத்துவரைப் போய்ப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்…“
“அது நல்லது தான். சரி. முக்கியமான கேள்வி…“
“ம்“
“எப்பிடி நீங்க பழைய காலத்துக்கு இங்கேயிருந்து போறீங்க?“
“அப்…ப்பா. இப்பதான் இதை நம்பி, என்கிட்ட இதைக் கேட்கறே. சொன்னால் நீ நம்ப மாட்டே.“
“நம்பறேன்.“
“ஆனால்…“ என அவன் சிரிக்கிறான்.
“ஒரு ஆனாலும் இல்லை.சொல்லுங்க.“
“இங்க வா… கிட்ட வா“ என அழைக்கிறான். “இந்த லிஃப்ட் வழியாதான்…“
“இது வழியாவா“
“ஆனால்…“
“வேணாம். சொல்லுங்க.“
“எனக்கு மாத்திரம் தான் அப்பிடி நடக்குது…“
“எப்பிடி?“
“இங்க வா இவளே… உள்ளே வா.“
திலகா வருகிறாள். “இதுல எததனை தளத்தின் பொத்தான் இருக்கு?“
“பூஜ்யம்ன்றது தரைத்தளம். ஒண்ணு லேர்ந்து எட்டுவரை. ஒன்பது பொத்தான்.“
“வேற யாருக்கும் அப்படித்தான் காட்டுது. எனக்கு மட்டும்… மைனஸ் 1 வந்தது. வருது.“
“இப்ப வர்லியே?“
“வர்ல.“
“ஏன்?“
“நீ கூட இருக்கியே…“
“அதுனால?“
“அதுனால வராது. இதை நானே தற்செயலா கண்டுபிடிச்சேன்…“
“எப்போ? எப்பிடி?“
“பக்கத்து விட்டு கணபதி சார் என்கூட ஒரு நாள் லிஃப்ட்ல வந்தார். அப்ப எனக்கு மைனஸ் 1 காட்டவில்லை.“
“ஆனால்…“
“நீ நம்ப வேணாம் இவளே. எனக்கு வேலக்கு நேரம் ஆச்சி. நான் கிளம்பறேன். நீ கூட வா.“ இருவருமாய்க் கீழே இறங்குகிறார்கள். பூ4யம் வர வெளியே வருகிறார்கள். அவன் போய் ஸ்கூட்டரை எடுக்கிறான்.
“இன்னிக்கு அலவலகத்துக்கு லீவு போடறாப்ல ஆகாதுடி“ என்கிறான்.
“சந்தோஷம்“ என்கிறாள் திலகா. “ஆனால்?“ என சிரித்தபடியே வண்டியைக் கிளப்பிப் போகிறான் ராமசாமி.

தொடர்கிறேன்

91 97899 87842

Saturday, August 29, 2015

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் ? அதிதியாயம் 9

எஸ். சங்கரநாராயணன்
வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 9
டி.வி.யில் கல்யாணப் பரிசு தங்கவேலு நகைச்சுவைக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சிகாமணி “அக்கா உன் வாழ்க்கையும் கல்யாணப் பரிசு கதையாட்டம் ஆயிட்டதே. அதுலயும் தங்கவேலு வேலைக்கே போகாமல் காலைல சாப்பாட்டைக் கட்டிக்கிட்டு ஒரு பூங்காவுக்குப் போவான். சாய்ந்தரமானால், வேலைக்குப் போயிட்டுவந்தா மாதிரி ஹாயா உள்ளே வருவான்…“ என்கிறான். “அது மன்னார் அன்ட் கம்பெனி., இது நேஷனல் பேங்க். அதான் வித்தியாசம்.“
“அத்தனைக்கு நான் ஏமாளி இல்லடா. வரட்டும் அவர்“ என கையில் விளக்குமாற்றை எடுக்கிறாள். “ஐயோ அக்கா அவ்வளவு கோபம் வேணாம் உனக்கு…“ எனப் பதறுகிறான் சிகாமணி. “நீ வேற. வீட்டைப் பெருக்கலாம்னு பார்க்கறேன். தள்ளு“ என அவனை விலக்குகிறாள். தொலைக்காட்சியில் “நீங்க எங்க வேலை பாக்கறீங்க? – மன்னார் அன்ட் கம்பெனி“ என வசனம் வருகிறது. “அதை முதல்ல அணைடா. இருக்கற கடுப்புல இது வேற…“
“தங்கவேலு நகைச்சுவையில் கடுப்பான ஒரே ஆள் நீயாத்தான் இருக்கும்“ என அதைப் போய் அணைக்கிறான். அக்கா வீட்டைப் பெருக்க ஆரம்பிக்கிறாள்.
சட்டென அமைதி சூழ்கிறது. வாசல் கதவை யாரோ தட்டுகிறார்கள். சிகாமணி அக்காவைப் பார்க்கிறான். “இஸ்திரிக்காரனா இருப்பானோ?“ எனப் பேசிக்கொண்டே அவனே போய்க் கதவைத் திறக்கிறான்.
ராமசாமி உள்ளே வருகிறான். ரொம்ப வருத்தமான முகம். அலைந்து திரிந்து களைத்த முகம். வந்து அப்படியே சோபாவில் சரிகிறான். கோபமாய்ப் பேச காத்திருந்த திலகாவுக்குக் கவலையாகி விடுகிறது.
அலுவலகம் போகிற அளவில் அவன் எடுத்துப் போகிற பையைக் கையில் எடுக்கிறாள். அது கனம் குறையாமல் அப்படியே இருக்கிறது. உள்ளே யிருந்து டிபன் பாக்ஸைத் திறக்கிறாள். கட்டிக்கொடுத்த சாம்பார் சாதம் அப்படியே இருக்கிறது.
“என்னாச்சிங்க சாப்பிடல்லியா?“
“சாப்பாடு நல்லா இல்லியா?“ என்கிறான் சிகாமணி.
“நான் இன்னிக்கு வேலைக்கே போகலடி…“ என்கிறான் ராமசாமி.
அவன் ஒத்துக் கொண்டதில் திலகா ஆறுதல் படுகிறாள். சிகாமணியைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். கண்மூடிக் கிடக்கிற ராமசாமியைப் பார்த்தபடியே அருகே இருக்கும் சிகாமணியிடம் “அவருக்குப் பொய் சொல்லவே தெரியாதுடா“ என மெல்லச் சொல்கிறாள். பிறகு ராமசாமியைப் பார்த்து “எங்கயோ அலைஞ்சிட்டு வரீங்க போல…“ என்கிறாள்.
“ஆமாம். ஒரு தற்கொலை. ஆகப் போகுதுன்னு முன்னாலயே தெரிஞ்சிட்டது எனக்கு… காப்பாத்தலாம்னு வேக வேகமாப் போனேன்… முடியாமல் போயிட்டது..“
“தற்கொலையா?“ என்று ஆச்சர்யமாய்க் கேட்கிறான் சிகாமணி. “தூக்கா, தூக்க மாத்திரையா?“
“அதுவா இப்ப முக்கியம்?“ என்கிறாள் திலகா. “சூடா தோசை வார்த்துத் தரவா? பாவம் சாப்பிடாமல் வந்திருக்கீங்க…“ என்கிறாள்.
“முதல்ல காபி.“
அவள் உள்ளே போகிறாள். சிகாமணியும் அவனும் தனித்து விடப் படுகிறார்கள்.
”அத்தான். காலைல நீங்க அந்தப் பேப்பரை பரண்லேர்ந்து எடுத்துப் பாத்தீங்களே, அந்தப் பொண்ணா?“
“ஆமாம்.“
“அது பழைய பேப்பர் ஆச்சே.“
“ஆமாம்.“
“அவளை இப்ப போயி எப்பிடி நீங்க காப்பாத்துவீங்க?“
“அதான்… முடியல்லடா.“
“அது எப்பத்திய பேப்பர்?“
“ரெண்டு வருஷம் முந்தின பேப்பர்…“
“ஹா ஹா. அத்தான் நீங்க என்கிட்ட ஒரு கதையை ஆரம்பிச்சிங்க இல்லே? அதும் மாதிரி இருக்கே…“
“அதேதான்.“
“நல்ல தமாஷ் அத்தான்.“
“நான் வருத்தமா இருக்கேன். தமாஷ்ன்றியே சிகாமணி….“
“அது ரெண்டு வருஷம் முந்தைய கதை. நடந்து முடிந்த கதை. அதைத் திரும்ப இப்ப போஸ்ட்மார்ட்டம் பண்றா மாதிரி வெளியே கொண்டு வர முடியுமா?“
“அதான் எனக்கே ஆச்சர்யம்.“
“அப்பன்னா, நாம அந்தக் காலத்துக்கே போனால் தானே அது முடியும்?“
“நான் போனேன்டா.“
“நல்லாதானே இருக்கீங்க அத்தான். இது எத்தனை?“ என மூணு விரல்களைக் காட்டுகிறான்.
“நாலு.“
“ஐயோ அத்தான். இது மூணு…“
“அது மூணுதான். எனக்குத் தெரியும். நான் தெளிவாத்தான் இருக்கேன்.“
திலகா காபியுடன் வருகிறாள். மெல்ல எழுந்து கொள்கிறான். “நல்லா சூடா இருக்கா?“
“அக்காவும் சூடாத்தான் இருக்காங்க. உங்க மேல…“
“ஷ்“ என்கிறாள் சிகாமணியைப் பார்த்து. “மொதல்ல அவர் காபியைக் குடிக்கட்டும்.“
“நீங்க பேசினதெல்லாம் நான் கேட்டுக் கிட்டிருந்தேங்க.“
“சந்தோஷம்.“ ராமசாமி காபியை உறிஞ்சுகிறான். “சிகாமணி, நான் இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மாத்த முயற்சி பண்ணினேன்...“
“முடியல்ல.“
“ஆமாம். என்னால அது முடியல்ல. ஆனால் கண் முன்னால அது நடக்கப் போகுதுன்னு நடக்கும் முன்னே தெரியறது இருக்கில்லையா? அது பயங்கரம்டா. அனுபவிச்சா தான் தெரியும் அந்த வலி.“
“கடந்த காலத்தை மாத்த முடியாது அத்தான்.“
“ஆனால் முயற்சி செய்யாமல் எப்பிடி இருக்க முடியும் சிகாமணி? கையைக் கட்டிக்கிட்டு நம்மால ஆகாதுன்னு இருக்கறதா?“
“என்ன சொல்ல வரீங்க?“ என்கிறாள் திலகா.
“திலகா, இப்பிடி பக்கத்தில் உட்காரு…“ என சற்று நகர்ந்து சோபாவில் இடம் அளிக்கிறான். “இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. இதை நான் விளக்கவும் முடியாது…“
“பயப்படாதீங்க… அப்டின்னு நீங்க ஆரம்பிக்கறீங்க பாருங்க. அப்பதான் பயமே வருது.“
“குழம்பிக்கவும் வேணாம். முதல்ல என்னைப் பேச விடுங்க.“
“அதில்ல அத்தான்…“
“அவர் பேசட்டும்டா.“
ராமசாமி கொஞ்சம் மௌனம் சாதிக்கிறான். “நான் உங்க ரெண்டு பேர் கிட்டயுமே இதைச் சொல்ல வந்தேன். சந்தர்ப்பம் சரியா அமையல. நீங்களும் காது குடுத்துக் கேட்கத் தயாரா இல்லை.“
“இப்ப சொல்லுங்க“ என்கிறாள் திலகா. சிகாமணியும் தலையாட்டுகிறான்.
என்னால ரெண்டு வருஷம் முன்னால போக முடியுது…“
“என்ன சொல்றீங்க?“ என்கிறாள் திலகா.
“அவர் பேசட்டும் அக்கா.“
“காலைல சுத்திப்போடணும் இவருக்கு…“
“நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்… இதோ“ என சட்டைப் பையில் இருந்து பஸ் டிக்கெட்டை எடுக்கிறான்.
“எனன இது?“ என வாங்கிப் பார்கக்கிறாள். “பஸ் டிக்கெட். நான் பார்த்ததே இல்லைன்றா மாதிரி இதைக் காட்டறீங்க?“
“அதில்லை. இப்ப நான் வீட்டுக்குத் திரும்பி வந்த டிக்கெட்.“
“சரி. அதுக்கென்ன?“
“சரியாப் பாருங்க. அது 04,50 டிக்கெட். இப்ப 50 காசு டினாமினேஷன் இருக்கா?“
“எந்த மடையன் குடுத்தது இதை. அத்தான், நம்ம பஸ்லயே கள்ள டிக்கெட் ஓடுது போல.“
“ஹா“ என ஆயாசமாய் மூச்சு விடுகிறான் ராமசாமி. “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்டா.“
“நம்பறா மாதிரி சொல்லுங்க…“ என்கிறாள் திலகா.
“சரி. நான் கொஞ்சம் தூங்கறேன்“ என்கிறான் ராமசாமி. சிகாமணி உள்ளே போய் ஒரு தலையணை கொண்டு வருகிறான். சோபாவிலேயே அப்படியே உறங்க ஆரம்பிக்கிறான் ராமசாமி.
போய்ப் போர்வை ஒன்றை எடுத்து வந்து அவனுக்குப் போர்த்தி விடுகிறாள் திலகா.
விளக்கை அணைத்து விட்டு இருவரும் மாடிக்குப் போகிறார்கள். மொட்டை மாடியில் மாலை வெயில். “கோகுல் வர்ற நேரம் ஆயிட்டதா அக்கா?“
“இன்னும் அரை மணி இருக்குடா.“ திலகா அவனைப் பார்க்கிறாள். “என்னடா இவர் என்னென்னவோ சொல்றாரு?“
“சினிமான்னா நல்லா இருக்கும் அக்கா. இது வாழ்க்கை. அவர் சொல்றதை எப்படி ஏத்துக்கறது?“
“என்னவோ ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். அதை இவர் பேப்பர்ல படிச்சாராம். காப்பாத்தப் போனாராம். முடியல்லியாம்… ஒண்ணுக்கும் இன்னொண்ணுக்கும் ஒட்டவே இல்லியே.“
“ஆனால் நிசம்மாவே வருத்தப்படாறார் அக்கா. என்ன ஆச்சி அத்தானுக்கு?“
“பார்க்கலாம். நல்லா அசந்து தூங்கறார். தூங்கி எழுந்தால் சரியாய்ப் போகலாம்.“
“நான் எங்க இருக்கேன்?...னு  எழுந்திருப்பார்ன்றியா அக்கா?“
“இது கடந்த காலமா, நிகழ் காலமான்னு கேட்டாலும் கேட்பார்.“
“என்கிட்ட ஒரு கதைன்னு ஆரம்பிச்சார் அக்கா. ஒருத்தரால ரெண்டு வருஷம் முன்னாடி பயணம் செய்ய முடியுதுன்னார்.“
“அந்தப் பேப்பர் எத்தனை வருஷம் முந்தியது?“
“ரெண்டு வருஷம்னுதான் அவரே சொல்றார்…“
“டைரியும், பேப்பருமா அவரை ஒரு வழி பண்ணுதுன்னு தெரியுதுடா.“
“டிக்கெட் வேற காட்டறார். அதான் ஆச்சர்யம்.“
“எப்பிடி ரெண்டு வருஷம் முன்னாடி போகிறார், அது இன்னொரு ஆச்சர்யம்.“
“அவர் நல்லா பேசறா மாதிரிதான் தோணுது. நமக்கு தான் பைத்தியம் பிடிச்சிருமோன்னு இருக்கு…“
“இப்ப எதுவும் கேட்காதே அக்கா. காலைல பேசிக்கலாம்…“
“கோகுல் வந்திறப் போனான். நான் கீழ போயி ஆட்டோ வருதான்னு பாக்கட்டுமா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
தலையாட்டுகிறாள். இருவருக்கும் இடையே திடீரென்று கனமாய்க் கவிந்த மௌனம். “பயப்படாதே அக்கா“ என்கிறான் சிகாமணி.
“அட நாயே, இதுவரை நான் பயப்படாமல் இருந்தேன். பயப்படாதேன்னு சொல்லியே என்னை பயமுறுத்தறே நீ…“
“அப்படியே அலட்சியம் பண்ணிறவும் முடியாது அக்கா. அன்னிக்கு என்னாச்சி?“
“என்ன?“
“நான் அன்னிக்கே உன்கிட்ட சொன்னேன்…“
“அட தெளிவாச் சொல்லித் தொலை.“
“வெளில வெயில் காயுது. அத்தான் டைரி பார்த்தார். அப்புறம், மழை பெய்யும்னு குடையை எடுத்திட்டுப் போனார்.“
“குடையைத் திரும்பக் கொண்டு வந்தாரா?“
“இப்ப அதுவா முக்கியம்?“
“இல்லடா. அவருக்கு மறதி ஜாஸ்தி.“
“அவர் பிரச்னை மறதின்னால், உன் பிரச்னை எதையுமே லேசில விடமாட்டே நீ. மறக்கவே மாட்டே.“
“சரி சொல்லு.“
“வெயில் அடிக்கும் போது குடை எதுக்கு?“
“வெயில் ஜாஸ்தின்னு எடுத்திட்டுப் போனால்?“
“மழை வரும்னு சொல்லி எடுத்திட்டுப் போனால்?“
“இங்க பாரு. நம்மளா குழப்பிட்டிருக்க வேணாம். அவரா சொல்லுவார்.“
“அவர் சொல்றதுலதான் இத்தனை குழப்பம் அக்கா.“
“சரி. கோகுல் வந்திறப் போறான்… நீ கீழ போ.“
சிகாமணி நின்று திரும்பி, “பயப்படாதேக்கா…“ என்கிறான்.
“அட நாயே.“
“எனக்கு பயமா இருக்கு அக்கா.“
“எனக்குந் தாண்டா“என்கிறாள் திலகா.
கோகுல் பள்ளி விட்டு வீட்டுக்குள் வருகிறான். கூடம் விளக்கு அணைக்கப்பட்டு இருட்டிக் கிடக்கிறது. “என்னம்மா, லைட் எரியல்லியா?“ என்றபடியே கோகுல் சாக்ஸைக் கழற்றுகிறான். உள்ளே வந்து, “ஐ அப்பா“ என்கிறான். அப்பா சோபாவில் படுத்திருக்கிறார். “ஷ். அப்பாவை எழுப்பாதே…“ என்கிறாள் திலகா. அப்படியே அவனைக் கையைப் பிடித்து உள்ளே சத்தம் இல்லாமல் அழைத்துப் போகிறாள்.
காலை சோபாவிலேயே கண் விழிக்கிறான் ராமசாமி. கண் திறந்த ஜோரில் குளித்து மங்களமாய் திலகா. தலையில் ஈரத் துண்டு. “என்ன விசேஷம் இன்னிக்கு?“
“ஒண்ணில்லையே.“
“நேத்திக்கும் ஒண்ணும் இல்லை. அப்பறம்?“
“இப்ப உடம்பு தேவலையா?“
“என்ன?“
“நேத்து ரொம்ப அலுப்பாய் இருந்தீங்க…“
“இப்ப மணி என்ன?“
“ஒன்பது.“
“அவ்வளவு ஆயாச்சா?“
“எழுந்துக்க வேணாம். நானே உங்க ஆபிசுக்கு லீவு சொன்னேன். இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க.“
“மேனேஜர் என்ன சொன்னார்?“
“பல் வலி எப்படி இருக்குன்னு என்கிட்ட கேட்டாரு…“ என சிரிக்கிறாள்.
எழுந்து உட்கார்கிறான். “தலையே ஒரே பாரமா இருந்தது. இப்ப பரவாயில்லை.“
“சரி ஆயிரும்… எப்பிடி இப்பிடி உங்களுக்குத் தோண ஆரம்பிச்சது?“
“எப்படி?“
“ரெண்டு வருஷம் முன்னாடி போறா மாதிரி?“
“அதுவா… அது பொய். அதை நம்பாதே. எனக்கே இப்ப தெளிஞ்சிட்டது.“
“நீங்க தினசரி டைரி படிக்கறீங்க. பழைய டைரி. திடீரென்று டைரியை விட்டுட்டு பேப்பர் வாசிக்க ஆரம்பிச்சீங்க. பழைய பேப்பர். அதான் இபபிடி ஆயிட்டதுன்னு நினைக்கிறேன்…“
ராமசாமி புன்னகை செய்கிறான்.
“அதுனால…“
“அதுனால?“
“உங்க பழைய டைரி, பேப்பர் எல்லாத்தையும்…“
“என்ன பண்ணினே?“
“எடைக்குப் போட்டுட்டேன்“ என்கிறாள் திலகா.
பதறிப் போய் பரணைப் பார்க்கிறான். பரணில் டைரிகள், பழைய நாளிதழ்கள் இருந்த இடம்… காலியாய்க் கிடக்கிறது.

தொடர்கிறேன்

91 97899 87842