U p d a t e d e v e r y d a y
வசிகரப்
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
அத்தியாயம் 32
SONG NO 5
இளமைத் திருவிழா. WHY
SHOULD BOYS HAVE ALL THE FUN? மகா. ஸ்கூட்டி பெப். தாவி வந்து ஏறிக் கொள்கிறாள்.
பின்னால் கூட அமரும் ஸ்ரீநிவாஸ். நாடு நகரமெங்கும் உற்சாக உலா. ஒரே சமயம் நாலு விதமான
உடைகளில் அவனும் அவளும் போகிறாப் போல கலகலப்பான இளமைக் காட்சிகள்.
ஒரு வீதியில் அவளை ரமேஷ் பார்த்துக்
கையாட்டுகிறான். ஜவுளிக்கடை ஒன்றில் மேனேஜர் கிருஷ்ணராஜ் அவர்களைச் சிரிப்புடன் எதிர்கொள்கிறார்.
அவர் வெளியே வர அவர்கள் உள்ளே போகிறார்கள். இன்னொரு தியேட்டர் காம்ப்ளெக்சில் ராமசாமியும்
திலகாவும் அவர்களைச் சந்திக்கிறார்கள்.
வாகனத்தில் போகிறார்கள். அவளது துப்பட்டா
பறந்து பறந்து காற்றில் எழும்பி அவனை வருடி மூடுகிறது. அவளது கூந்தல் பின்னால் பிரிந்து
கிடக்கிறது. தலை நிறையப் பூக்கள். பூக்களை விலக்கி கூந்தல் வாசனை பிடிக்கிறான் ஸ்ரீநிவாஸ்.
பாடலின் இடையே அடிக்கடி இடம் பெறும்
வாக்கியம். WHY SHOULD BOYS HAVE ALL THE FUN…
ஒரு பூங்காவில் அவள் வீசிய தொப்பி
அவன் தலையில் வந்து உட்கார்கிறது. அவனது குளிர் கண்ணாடியை அவள் எடுத்து மாட்டிக் கொள்கிறாள்.
அவனும் அவளும். குளியல் அறை ஷவர். சட்டென ஷவரைத் திறக்கிறாள் மகா. மேலே யிருந்து தண்ணீருக்கு
பதிலாக பூக்கள் அவர்கள் மேல் சொரிகின்றன. முழுசுமான இருட்டு வெளி. மகா நடந்து போகிறாள்.
அந்தப் பகுதியே வெளிச்சமாகிறது. ஒரு மேசை. ஒரே ஒரு நாற்காலி. அதில் ஸ்ரீநிவாஸ் உட்கார்ந்திருக்கிறான்.
மகா வருகிறாள். கிடுகிடுவென்று ஓடிப்போய் ஒரு நாற்காலி எடுத்து வந்து போட்டு அவளைக்
கைகாட்டி உட்கார், என்கிறான். பிறகு அவன் தன் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறான்.
மகா வந்து காலி நாற்காலியில் அமராமல் அவன் மடி மேல் அமர்கிறாள். இருவரும் ஐஸ் கிரீம்
சாப்பிடுகிறார்கள். அவன் ருசி அத்தனைக்கு இல்லியே என்று பாவனை காட்டுகிறான். சட்டென
அவள் தன் ஐஸ் கிரீமை அவனிடம் தருகிறாள். அதை ஒரு ஸ்பூன் எடுத்து சுவைத்து கண்ணை அகல
விரிக்கிறான்.
ஐஸ் கிரீம் ஒட்டி உதடு பூரா அவனுக்கு ஈஷி யிருக்கிறது. துடைக்க அவளிடம் கைக்குட்டை கேட்கிறான். அவள் கிட்டே வந்து நாவினால் அவன் உதட்டைத் துடைக்கிறாள். அவள் உதடுகள் சுத்தமாகவே இருக்கின்றன. “உனக்கும் நான் துடைக்கவா?“ என்கிறான். வெட்கிச் சிரிக்கிறாள் மகா.
ஐஸ் கிரீம் ஒட்டி உதடு பூரா அவனுக்கு ஈஷி யிருக்கிறது. துடைக்க அவளிடம் கைக்குட்டை கேட்கிறான். அவள் கிட்டே வந்து நாவினால் அவன் உதட்டைத் துடைக்கிறாள். அவள் உதடுகள் சுத்தமாகவே இருக்கின்றன. “உனக்கும் நான் துடைக்கவா?“ என்கிறான். வெட்கிச் சிரிக்கிறாள் மகா.
மகாவும் ஸ்ரீநிவாசும் அந்த மரத்தடி
சோசியம் பார்க்கிறார்கள். அவன் என்னவோ சொல்கிறான். அவள் முகம் ஜிவு ஜிவு என்று கோபம்
பொலிகிறது. சட்டென எழுந்து கொள்கிறாள். ஸ்ரீநிவாஸ் அவளை சமாதானப் படுத்த அவள் பின்னால்
ஓடுகிறான்.
•
தினசரி காலண்டரின் நாள்கள் மேலெழும்பி
அகாடின் வாத்தியம் போல பறக்கின்றன.
மகாவுக்கு அருகில் ராதிகாவின் இருக்கை
காலியாக இருக்கிறது. ரமேஷ் பக்கமாகத் திரும்பி மகா “ராது ஞாபகமாகவே இருக்கு எனக்கு…
கல்யாணம் ஆன ஜோரில் இவ்வளவு சீக்கிரம் அவளுக்கு வேலை மாற்றல் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல
ரமேஷ்“ என்கிறாள். “அவளுக்கு எங்கே நம்ம ஞாபகம் இருக்கப் போறது. வீட்டுக்காரரைப் பத்தி
யோசிக்கவே 24 மணி பத்தாது இப்ப…“ என சிரிக்கிறான் ரமேஷ்.
ராமசாமி எதோ ஃபைலை எடுத்துக் கொண்டு
வருகிறான். “என்னாச்சி ராமு? எதும் டேலி ஆகல்லியா?“
“ஒரு இடத்தில் மூணு போட்டு நானே எட்டுன்னு
கூட்டும் போது ஆயிட்டது. மேனஜேர் கத்தாறரு…“ சோகமாகச் சிரிக்கிறான். “அது உன் ஜாதக
விசேஷம்டா கூடவே வரும்“ என்கிறான் ரமேஷ். “கால்குலேட்டர்ல கூட்டலாம். அப்ப கூட கையெழுத்தைப்
பார்த்துக் கூட்டணும்னு பிரச்னை இருக்கு. பேசாமல் கம்பியூட்டர்லியே பார்த்து கம்பியூட்டர்
கால்குலேட்டர் பயன் படுததேன்டா?“
“நல்ல யோசனை தான். சட்னு கைல இருக்கிற
கால்குலேட்டரை எடுக்கதான் வருது“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“என்ன மகா… ஒரே உற்சாகம் போல இருக்கு.
ஸ்கூட்டி பெப் கிட்ட கேட்டால் கதை கதையாச் சொல்லுது.“
“அவள் ஸ்கூட்டி பெப் வாங்கினதே அதுக்கு
தானே?“
“அப்படியா?“ என மகா சிரிக்கிறாள்.
“ஸ்ரீநிவாஸ் இப்பல்லாம் பைக் ஓட்டறதையே
விட்டுட்டான்…“
“ஏன்?“
“அதுல இடம் நிறைய இருக்கு…“
“அப்டின்னா?“
“இதுல இன்னும் நெருக்கமாப் போகலாம்
இல்லே?“ என்கிறான் ராமசாமி.
மகா வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறாள்.
“ஸ்ரீநிவாஸ் இஸ் QUITE NAUGHTY.“ என்கிறாள். “எங்க பாத்தீங்க சார்?“
“ஐஸ் கிரீம் பார்லர்ல, பார்க்ல. ரெஸ்ட்டாரண்ட்ல.
ஜவுளிக்கடைல… எங்க பார்க்கல்ல? எல்லா இடத்திலயும் பச்சை ஸ்கூட்டி பெப் தான்…“
“நல்ல கதையா இருக்கே? நாட்ல எத்தனையோ பேர் கிட்ட… இதே
கலர்ல வண்டி இருக்கக் கூடாதா?“ என்று புன்னகை செய்கிறாள்.
“அதுல வாசகம். WHY SHOULD BOYS
HAVE ALL THE FUN. அது இருக்கே. உன்னைத் தவிர யாரு இப்படிச் சொல்லுவா?“ என்கிறான் ராமசாமி.
“இது ஆண்களின் உலகம். ஒரு பொண்ணு
சந்தோஷமா இருந்தாலே அதுக்கு நாங்க தான் காரணம்னு வந்துருவாங்க…“ என போலியான கோபத்துடன்
வம்புக்கு வருகிறாள் மகா.
“ஆண்கள் சந்தோஷமா இருந்தால் அதுக்கு
ஒரு பொண்ணு தான் காரணம்னு நாங்க சொல்லணுமாக்கும்?“ என இடைப் புகுகிறான் ரமேஷ்.
“அவரவர் சந்தோஷத்துக்கு அவரவரே காரணம்.
நாம சந்தோஷமா உணரணும் முதல்ல. அப்ப… கூட இருக்கறவங்க தங்களையும் சந்தோஷமா உணர்வாங்க.
ரைட்?“ என்கிறாள் மகா.
“மகா இஸ் ஆல்வேஸ் ரைட்…“ என்கிறான்
ரமேஷ்.
மகா வெட்கத்துடன் தலையை சிலுப்பியபடி
எதற்கோ எழுந்து போகிறாள். “என்ன இப்ப உனக்கு எதுவும் சொல்லணும்னு தோணல்லியா?“ என்று
அவனை வம்புக்கு இழுக்கிறான் ரமேஷ்.
“ஏன் தோணாமல்?“ என்கிறான் ராமசாமி.
“உனக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு இல்லே?“
“நோ நோ. உன்னை சங்கடப் படுத்தறேனா?“
“அதெல்லாம் இல்லை. கேட்கலாம். நான்
பதில் சொன்னால் உனக்குக் குழப்பம்தான் அதிகம் ஆகுது இல்லியா?“
“இல்ல. முன்ன ஒரு தடவை… இந்த நாள்
எனக்கு அப்பிடியே மனசில வருதுன்னு டக் டக்குனு எடுத்து விட்டே… அப்பறம் அப்படி நாம
பேசிக்கல.“
“ஏன் நான் நிம்மதியா இருக்கறது பிடிக்கல்லியா?“
“மூடு சரியில்லையாடா. நான் எது சொன்னாலும் சட்னு இப்ப சீரியசா
ஆயிர்றியே… சரி. வேற ஏதாவது சொல்லுடா.“
“ஹா ஹா…“ என சிரிக்கிறான் ராமசாமி.
“என்னடா சொல்லிட்டுச் சிரி“ என ரமேஷ் புன்னகை செய்கிறான்.
“சின்னக்கனின்னு ஒருத்தன். சைதாப்பேட்டைப்
பக்கம் தாதா போல இருக்கு… அவனோட அன்னிக்கு ஒரே கூத்து.“
“அடிக்கடி அவனை வாழ்த்தி போஸ்டர்
எல்லாங் கூட நான் பார்த்திருக்கேன். உனக்கு எப்பிடி அவன் பழக்கமானான்?“
“அது அதைவிடப் பெரிய கூத்து… நான்
அன்னிக்கு பீச்சுக்குப் போனப்ப…“ என்றவன் மகா வருவதைப் பார்த்து விட்டு “அப்பறம் பேசலாம்“
என்கிறான்.
மகா வந்து ஒரு பேப்பரை அச்சிட்டு
எடுத்துக் கொண்டு போகிறாள். “பார் இப்ப மகாவுக்கு ஃபோன் வரும்“ என்கிறான் ராமசாமி.
“ஃபோனா?“
“அவள் கல்யாண நிச்சயதார்த்தம் பத்தி…“
“ஓகோ.“
“ஸ்ரீநிவாசோட அப்பா அம்மா லண்டன்ல
இருக்காங்க. அவங்க கல்யாணம்னு நேரடியா வந்திர்றோம். அதுக்கு முன்னால அவனோட சித்தப்பாகிட்ட
சொல்லி நிச்சயதார்த்தம் ஒரு நல்ல நாள்ல பண்ணிறலாம்னு பேசுவாங்க.“
“அவங்க பொண்ணைப் பார்க்க பேச வேண்டாமா
என்ன?“
“அட ரமேஷ். நீ எந்தக் காலத்தில் இருக்கே?
இப்ப ஸ்கைப் இருக்கு. இப்படியே முகத்தைப் பார்த்துப் பேசிக்கலாம். ஸ்கைப்லயே, ஃபேஸ்புக்லயே
லவ் பண்ண ஆரம்பிச்சாச்சி…“
“பிள்ளை எப்பிடிப் பெத்துப்பாங்க?
ஸ்கைப்லயேவா?“ என்கிறான் ரமேஷ்.
“இது கொஞ்சம் ஓவர். நம்ம கதையப் பேசுடா.“
“இல்ல இவனே. மகா கல்யாணத்துக்கு இப்ப
என்ன அவ்வளவு அவசரம்?“
“ஸ்ரீநிவாசஸ் அவசரப் படறானோ? இல்ல
சித்தப்பாவே இவங்க ஒண்ணா படு போடு போடறாங்கன்னு நிச்சயம் பண்ணிறலாம்னு எடுத்துச் சொன்னாரோ
தெரியலடா…“ என்று சிரிக்கிறான்.
“SO THIS IS WHAT YOU GUESS.
RIGHT?’’ என்கிறான்.
“ஆல்வேஸ் ரைட்“ என்கிறான் ராமசாமி.
மகா வருகிறாள். முகம் மலர்ந்து கிடக்கிறது.
“என்ன மகா? போகும்போது மொட்டாப் போன. வரும் போது பூவா வர்றே?“ என்று சிரிக்கிறான்.
“அப்படியா? நான் எப்பவும் போலத்தானே
இருக்கிறேன்?“ என்கிறாள் போலியான பாவனையுடன்.
“ஆகா. ராதிகா கல்யாணம் நடக்கிற போதே
உன் பார்வை யெல்லாம் ஸ்ரீநிவாஸ் மேலதான்…“
“அதாவது, நீயும் கல்யாணத்துல என்னியே
தான் நோட்டம் பாத்திட்டிருந்திருக்கே. இல்லியா?“ என மகா ரமேஷைப் பார்த்துச் சிரிக்கிறாள். “ராது கல்யாணத்தை ரமேஷும் நீங்களும் எப்பிடி எடுத்துச் செஞ்சி குடுத்தீங்க. வெரி குட்...“ என்று பாராட்டுகிறாள்.
“உன் கல்யாணம் எப்ப மகா?“ என்று கேட்கிறான்
ரமேஷ்.
“இப்பதான் அப்பா ஃபோன் பண்ணினார்.“
ரமேஷ் ஜாடையாய் ராமசாமியைப் பார்க்கிறான்.
ராமசாமி சிரிக்கிறான். “என்ன விசேஷம் மகா?“
“எனக்கு கல்யாணத்தை நிச்சயம் பண்ணிறலாம்னு
அவங்களுக்கு ஒரு இது…“
“அப்ப…“ மகாவைக் காட்டிப் பேசுகிறான்
ரமேஷ். “இவங்களுக்கு ஒரு இது இல்லியா?“
குப்பென்று அவளுக்கு ஒரு வெட்கம்
முகத்தில் தாவுகிறது.
“இவங்க என்ன சொல்றாங்க?“
“அவங்க என்ன சொல்றாங்கன்னா….“ என
மகா ஆரம்பிக்க, ரமேஷ் விடவில்லை. “அவங்க இல்லை. இவங்க, இவங்க…“ என மகாவைக் காட்டுகிறான்.
“எனக்கு என்ன, தாலி ரெடின்னால் கழுத்தை
நீட்டிற வேண்டிதான்.“
“எப்ப நிச்சயதார்த்தம் மகா?“ என்கிறான்
ராமசாமி.
“உனக்கே தெரியுமேடா?“ என்கிறான் ரமேஷ்.
“என்னது?“ என்கிறாள் மகா. “அவருக்கு
எப்படித் தெரியும்?“ என்கிறாள். “எனக்கே இப்பதான் தெரியும்.“
“மிஸ்டர் முக்காலம் அவன். அவனுக்கு
எல்லாமே தெரியும்…“
“அப்பிடியா?“ என முகம் மலர்கிறாள்.
“சொல்லுங்க. என் கல்யாண நாள் உங்களுக்குத் தெரியுமா?“
ராமசாமி எதோ சொல்ல வருமுன், அவளுக்குப்
பின்னால் இருந்து தலையை அசைத்து, இரகசியத்தை உளறி விடாதே, என்பது போல எச்சரிக்கிறான்
ரமேஷ்.
“தெரியும்“ என்கிறான் ராமசாமி.
“ஆகா…“ என்கிறாள் மகா நெஞ்சைப் பிடித்துக்
கொண்டு. “எப்பிடித் தெரியும் உங்களுக்கு?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ். பிறகு
அவள் அறியாமல் வாயைப் பொத்துடா, என்கிறாப் போல ரமேஷ் கெஞ்சுகிறான்.
“ஆமாம். நீங்க ராதிகா கல்யாணம் பத்தி
முன்னாடியே சொன்னதா ராதிகா சொல்லீர்க்கா…“
“எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லாமல்
அவளுக்குத் தூக்கம் வராது…“ என்று ரமேஷ் சிரிக்கிறான்.
“என் கல்யாணம்… எங்க நடக்கும் சார்?“
என அவள் திரும்பவும் கேட்கிறாள். “நல்லா நடக்கும் மகா. நாங்க ரெண்டு பேரும் கூட இருந்து
ஜாம் ஜாம்னு நடத்தி வைப்போம்…“ என்கிறான் ரமேஷ் அவசரமாக.
ராமசாமி தலையாட்டுகிறான். “நிச்சயதார்த்தம்
சேலத்துல இல்லியா? சாதாரணமா பையன் வீட்ல தான் பண்ணுவாங்க. இது சேலத்துல நடக்குது…“
“கரெக்ட் சார்.“ மகா விழிகளை விரித்து
ஆச்சர்யப் படுகிறாள். “உங்க பேச்சை நம்பறேன் சார்… ஆனால்…“
“என்ன ஆனால்?“ என்கிறான் ராமசாமி.
“அந்த சோசியக்காரன்…“ அவள் முகம்
மாறுகிறது.
“அட அவனை நம்பாதே…“ என்கிறான் ரமேஷ்.
“என்னையும் நம்பாதே“ என்கிறான் ராமசாமி.
எழுந்து போகிறான்.
•
ராமசாமியின் அப்பாவின் படம் மாலை
போட்டு. நிகழ் காலம். இரவு. தூங்க முடியாமல் தவிக்கிறான். திலகா நல்ல உறக்கத்தில் இருக்கிறாள்.
அவன் அசைவதைப் பார்த்து அவள் தூக்கம் கலைகிறது.
“என்னங்க? தூக்கம் வரல்லியா?“
“இல்ல தூங்கிட்டு தான் இருக்கேன்.“
“தூங்கிட்டிருந்தால் பேச்சே வராதே…“
என அவனைப் பார்க்கத் திரும்புகிறாள். “கண்டதையும் நினைச்சிக்கிட்டு படுக்க வந்தால்
அதே தூங்க விடாதபடி தொந்தரவு பண்ணும்.“
“மகாவோட நிச்சயதார்த்தம் பத்தி அவள்
அப்பா இன்னிக்குப் பேசினார் அவ கூட.“
“ஆமா அதுக்கென்ன? நம்ம ரெண்டு பேரையுமே
கண்டிப்பா வரணும்னு அவள் கூப்பிட்டாள். நம்ம வீட்டுக்கே வந்தாள். நாம போயிருந்தோமே…“
“ம். நல்ல பொண்ணு. பாவம் அநியாயமா…“
“ஐயோ அது பழைய கதை அப்பா. இப்ப எதுக்கு
அதெல்லாம்…“
“இப்ப வேணாம் திலக். ஆனால் என் மனசில்
COUNT DOWN HAS STARTED. 30 29 28 அப்டி அவளோட நாட்கள், தலை கீழா எண்ணப் பட்டுக்கிட்டே
வருது. அவளோட முடிவு நெருங்கிட்டே வருது இல்லியா?“
“உங்களை யாரு மைனஸ் 1 அழுத்தச் சொன்னா?“
“என் மனசிலயே அவள் நாட்கள் மைனஸ்
ஆயிட்டே வருது…“
அவள் அவன் கன்னத்தை அழுத்திப் பிடிக்கிறாள்.
“இங்க பாருங்க. இது உங்களோட போறது இல்லை. நீங்க வந்து இப்படி நிம்மதி யில்லாமல் அவஸ்தைப்
பட்டீங்கன்னா… அதை நான் பாட்டுக்கு வேடிக்கை பாத்திட்டிருக்க முடியாது.“
அவன் பதில் பேசவில்லை. “பாருங்க.
இனிமே நீங்களா எதாவது ஏடாகூடமாப் பண்ணிட்டு வந்து… என் தூக்கத்தையும் கெடுக்கக் கூடாது.
கேட்டிங்களா?“
“கேட்டேன்.“
“இனிமே எனக்காக… தயவு செய்து… நோ
மைனஸ் 1. சரியா?“
“ஹா ஹா… அதுல சில சுவாரஸ்யங்களும்
நடக்குதே அம்மணி.“
“ராத்திரி பதினோரு மணிக்கு என்ன சிரிப்பு
இது?“
“சிரிக்கறது மணிக்கு மணி வித்தியாசப்
படுமா என்ன?“
“படுங்க. காலைல பேசிக்கலாம்…“
“சின்னக்கனின்னு ஒருத்தன். சைதாப்பேட்டைல
தாதா.“
“சின்னகனியா?“
“காலைல பேசிக்கலாம்…“
“இல்ல. எதோ தாதான்னு என்னவோ சொன்னீங்க?“
“ஆமாம்.“
“அவனுக்கும் உங்களுக்கும் என்ன?“
“நான் அவனோட தெய்வமாம்.“
“அவன்தெய்வம் னால் முனி, ஐயனார் இப்பிடித்தானே
இருக்கும்?“
“கனி அவன் தெய்வம் முனி… நல்லாத்தான்
இருக்கு.“
“தூங்கலாம். விஷயம் சொல்லுங்க…“
“காலையில் காலையில்“ என்கிறான் ராமசாமி.
“இப்ப மனசு தெளிஞ்சிட்டதுடி. அப்பப்ப இதுக்கும் அதுக்குமா இப்பிடி பென்டுலம் ஆடுது.“
“யாரது சின்னக்கனி?“
“என்னோட பக்த கோடிகள்ல ஒருத்தன்…“
“பக்த கேடின்னு சொல்லுங்க.“
“ரைமிங்கா?“ சிரிக்கிறான். “நான்
எதாவது ஜோக் அடிச்சேன்னு வெச்சிக்க. அவனுக்குப் புரியாது. நான் ஜோக்னு சொன்னால், சரின்னு
சொல்லிட்டு சிரிக்கிறான்.
“இதெல்லாம் எப்ப?“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“கருமம் கருமம். உங்களைத் திருத்தேவே
முடியாது“ என்கிறாள் மகா. “திரும்ப அடி வாங்கிட்டு வந்தால் தான் உங்களுக்கு அறிவு வரும்.“
“பாயின்டைப் பிடிச்சிட்டே திலக்.“
“என்ன பாயின்ட். மண்ணாங்கட்டி பாயின்ட்.“
“அன்னிக்கு பீச்ல… அடி வாங்க வேண்டியவன்
அவன். யாரு? சின்னக்கனி.“
“அவன் அடியை நீங்க வாங்கிக் கிட்டீங்களா?“
“அதுனால.. என்னைப் பார்த்து அப்பிடி
உருகறான். நான் அவனுக்கு…“
அப்படியே தலை வரை போர்த்திக் கொண்டு
படுக்கிறாள். “வீட்டையே மாத்திறலாம்னு பார்க்கறேன்…“ என்கிறாள். போர்வைக்குள் இருந்து
குரல் மாத்திரம் கேட்கிறது.
“சொந்த வீடுடி… மாத்த முடியாது.“
சிரிக்கிறான் ராமசாமி.
தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for
bulk chapters please visit
vasikarapoikalplus.blogspot.com
No comments:
Post a Comment