Wednesday, September 23, 2015

அத், 33 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் updated evryday

வசிகரப் பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
அத்தியாயம் 33
காலண்டர் நாள் தாள்கள் மேலெழும்பிப் பறக்கின்றன அகாடின் வாத்தியம் போல.
மாலை போட்ட அப்பா படம். மினுக்கும் சீரியல் பல்ப். காலை எட்டரை மணி. ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். டிபன் பாக்ஸை எடுத்து வருகிறாள் திலகா. “பேசாமல் பழைய ஞாபகங்களை யெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு மைனஸ் 1 போகாமல் சமத்தா வேலைக்குப் போங்க. சரியா?“ என்கிறாள் திலகா.
“அத்தான் சின்னக்கனி கதை… அக்கா சொன்னா. சூப்பர்.“ தலையைத் துவட்டிக் கொண்டபடி வெளியே வருகிறான் சிகாமணி. “அவனால உதவி எதுவும் வேண்டான்னு சொன்னீங்க இல்லியா? கண்டிப்பா அவன் உதவி உங்களுக்குத் தேவைப்படும் பாருங்க.“
“அவன் வாங்க வேண்டிய அடியைத் தான் நான் வாங்கிக் கிட்டேன்…“
“இங்க பாருங்க. இந்த விளையாட்டை இத்தோட நிறுத்திக்கலாம். எனக்கு இதுல ஒரு சுவாரஸ்யமும் இல்லை. கவலைதான் வருது.“
“ஆனால் தெய்வத்தைக் காணாமல் சின்னக்கனி தேடுவானே…“ என சிரிக்கிறான் சிகாமணி. “அவன் தந்த செய்ன் எங்க அத்தான்?“
“கழுத்துலதான் கெடக்கு…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“கம்னு இருடா. சும்மாவே ஆடுமாம். கொட்டடிச்சா விடுமான்னு பழமொழி. அவரை நீ வேற உசுப்பேத்தி விடறே… இந்தக் கதையெல்லாம் வேணாம்… அத்தோட…“ என சிரிக்கிறாள் திலகா.
“என்ன சிரிப்பு?“ என்கிறான் ராமசாமி. “வர வர நீயும் என்னை மாதிரி ஆரம்பிச்சிட்டியா?“
“இன்னிக்கு என்ன தேதி?“
“ஏன்?“
“சொல்லுங்க…“
“செப்டம்பர் 23.“
“இன்னிக்கு, அதாவது ரெண்டு வருடம் முன்பு, என்ன நடந்தது?“
“என்ன?“ என்றவன் பரபரப்பாகிறான். ’‘ஐயோ செப்டம்பர் 23. இன்னிக்கு தான் எங்க பாங்க்ல ரெண்டு பேர் புகுந்து லூட் அடிச்சது. ROBBERY.“
“ஆமாம்.“ என தலையாட்டுகிறாள் திலகா. “அதனாலதான் சொல்றேன். இன்னிக்கு நீங்க மைனஸ் 1 போகக் கூடாது சொல்லிட்டேன்“ என்கிறாள்  திலகா.
“எப்பிடிடி? ஒரு சேதி, அதும் கொள்ளை நடக்கப் போகுதுன்னு முன்னாடியே தெரியுது நமக்கு. இதை அப்பிடியே விட்டுர்றதா? முடியுமா அது?“
“போன தடவை அவங்க உங்களைப் பிடிச்சிக் கட்டிப் போட்டாங்க. போலிஸ் வந்து அவுத்து விட்டாங்க உங்களை. ஞாபகம் இருக்கு இல்லே?“
“பாவம் செக்யூரிட்டிக்கு தான் தலைல அடி. அவனையும் தூணில் கட்டியிருந்தாங்க…“
“ஆமாம்.“
“அதை வேற அனுபவிக்கணுமா இன்னொரு வாட்டி?“
“நடந்தால், அதே தான் நடக்கும்… சரியா. என் உயிருக்கு ஆபத்து இல்லை. தெரியுதா? அப்பக் கூட நான் இதைத் தடுக்க முயற்சி பண்ணாட்டி எப்பிடி?“
“கடந்த காலத்தை மாத்த முடியுமா அத்தான்?“
“நீ என்னடா சொல்றே?“
“அந்த பிளஸ் டூ பொண்ணு… தற்கொலை பண்ணிக்கிட்டாள் இல்லியா? நீங்க கூட காப்பாத்த ஓடினீங்க. உங்களால அதைத் தடுக்க முடிஞ்சதா?“
“அதுக்கு?“
“வேணாம். சொன்னால் கேளுங்க…“ என்ற திலகாவை “கேட்க மாட்டேன். இன்னிக்கு… ஹா ஹா“ என்கிறான் ராமசாமி. “அந்த டைரிய எடுடி.“
“மாட்டேன்.“
“என்னடி புரியாமல் பேசறே நீ…“ ராமசாமி சத்தமாய்க் கத்துகிறான். கோபத்தில் அவன் உடம்பு நடுங்குகிறது. “கண்ணுக்கு எதிரே நடக்கப் போற விஷயத்தை அப்பிடியே விட்டுருன்னா எப்பிடி முடியும்? கொண்டு வா அதை…“
“நான்தான் சொல்றேனே. அப்பறம் என்ன? அதுல என்ன பார்க்கப் போறீங்க?“
“எதையோ பார்க்கிறேன்… கொண்டா அதை.“
அவள் எடுத்து வருகிறாள். பரபரவென்று செப்டம்பர் 23 தேதியிட்ட பக்கத்தைப் பார்க்கிறான். உரக்க வாசிக்கிறான். “இன்று காலை 11 23 மணிக்கு வங்கியில் கொள்ளையர்கள் இருவர்…“ டைரியை விசிறியடிக்கிறான். “விட மாட்டேன்.“
“எனக்கு பயமா இருக்குங்க.“
“எனக்கும் பயமா தான் இருக்கு. ஆனால்…“ ராமசாமி கிளம்புகிறான். “நானே இந்த முறை இதை முறியடிக்கிறேன்.“ விறுவிறுவென்று போய் அப்பா படத்தின் முன் நிற்கிறான். கண் மூடி வணங்குகிறான்.
“ரெண்டு வருஷம் முன்னாடி போனால் அவரையே பார்க்க முடியாதா?“ என சிரிக்கிறான் சிகாமணி.
“இல்ல. அவர் காலத்துக்குப் பிறகு தான் இது நடந்தது…“
“அத்தான். இது விஷப் பரிட்சை.“
“ஆமாம்.“
“கடந்த காலத்தை மாற்ற நினைக்காதீங்க.“
“சரி.“
“அது முடியாது…“ என்கிறான் சிகாமணி.
“ரொம்ப சரி“ என்கிறான் ராமசாமி.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? நீங்க வர்ற வரைக்கும்… என் கதி என்ன?“ என்கிற திலகாவை உதறுகிறான். சட்டென வெளியே பாய்ந்து கதவைப் படாரென்று சாத்துகிறான்.
“சே நான் ஒரு மடச்சி. சும்மா கிடந்த சங்கை ஊதினதே நான்தான்.“ திலகா அந்த டைரியை சுக்கு நூறாகக் கிழிக்கிறாள். அப்படியே ஆத்திரமாய் அதில் ஒரு நெருப்புக் குச்சியைக் கொளுத்திப் போடுகிறாள். பற்றி எரிகிறது டைரி.
பகல் மணி பதினொன்று. திலகா சிகாமணியை பயத்துடன் பார்க்கிறாள். “இப்ப என்ன பண்றதுடா?“
“ஆஞ்சநேய ஸ்தோத்திரம் சொல்லு அக்கா. போன வாட்டி உன் பக்தியால தான் அவரையே மீட்டுட்டு வந்தே.“
“நீ கிண்டல் பண்றியா, நிசம்மாச் சொல்றியான்னே தெரியலடா…“ என்கிறாள் திலகா. “நான் ஏன்… பேசாம இருந்திருக்கலாம். அவருக்கு ஞாபகப் படுத்தி விட்டுட்டேன்.“
“பழைய காலத்துக்கு அவரைப் போக வேண்டாம்னு தடுக்கலாம்னு பாத்தே நீ அக்கா.“
“ஆமாம்.“
“ஆதுவே வினையாயிட்டது.“
ராமசாமியை மொபைலில் தொடர்பு கொள்ளப் பார்க்கிறாள். தொடர்பு எல்லைக்கு வெளியே என்கிறது ஒலிப்பதிவு. “அவரு எப்பவாவது தாண்டா தொடர்பு எல்லைக்கு உள்ளே வர்றாரு…“ என்கிறாள். பின்னால் மணி 11 15 காட்டுகிறது. வங்கியின் லேண்ட் லைன் எண்ணுக்குப் பேசப் பார்க்கிறாள். ரமேஷ் தான் எடுக்கிறான். “எஸ்? நேஷனல்?“
“மிஸ்டர் ராமசாமி கூடப் பேசணுமே.“
“அவர் வேலைக்கு வர்லங்க. நீங்க?“
“வர்லியா?“ அவளுக்கு மூச்சே அடைக்கிறாப் போலிருக்கிறது. “ஹலோ…?“ என்று தொலைபேசியில் ரமேஷ் பேசுவது கேட்கிறது. தொலைபேசி அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறது. மணி 11 18 காட்டுகிறது.
“எத்தனை மணிக்குக் கொள்ளை நடக்குதுன்னு சொன்னார்டா?“
“11 23ன்னாருக்கா… எனக்கு பயமா இருக்கு அக்கா“ என்கிறான் சிகாமணி. மணி 11 20 காட்டுகிறது.
வங்கி. ராமசாமி தனக்குள் சிரித்துக் கொள்கிறான். வங்கி கடிகாரத்தைப் பார்க்கிறான். மணி 11 21. எழுந்து வாசல் கதவுப் பக்கம் போகிறான். கூட இந்தப் பக்கம் ரமேஷ் எழுந்து கொள்கிறான். வேலை கிடக்கிறது. அதை அலட்சித்து அவன் எழுந்து கொண்டது வாடிக்கயைளர்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. “என்ன சார்?“ என்று கேட்கிறான் செக்யூரிட்டி. “ஒண்ணும் இல்லப்பா…“ என்கிறான் ராமசாமி. கதவுக்கு இந்தப் பக்கம் ராமசாமி. அந்தப் பக்கம் ரமேஷ். ரமேஷைப் பார்த்துத் தலையாட்டுகிறான் ராமசாமி. மணி பார்த்துக் கொள்கிறான்.
ராமசாமி மனசில் காட்சி. இரண்டு ரௌடிகள். முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டபடி உள்ளே பாய்ந்து நுழைகிறார்கள். வாசலில் இருக்கும் செக்யூரிட்டியை ஒரே அடி மண்டையில் போடுகிறாரகள். அப்படியே அங்கே இருந்த தூணோடு இறுக்கமாய்க் கட்டுகிறான் ஒருத்தன். அடுத்தவன் நேரே உள்ளே வந்து சி சி டி வி கேமெராக்கள் இருக்கும் இடங்களை சரியாகப் பார்த்துச் சுடுகிறான். உள்ளே பாய்ந்து வருகிறார்கள். அசைய வேண்டாம்… அசைய நினைச்சாலும் சுடப் படுவீர்கள். உங்க உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. எல்லாரும் அங்கங்கேயே அப்படியப்படியே… ஜன கன மன பாட்டுக்கு நிப்பீங்களே… அப்பிடி நில்லுங்க…
எல்லாரும் அப்படியே நிற்கிறார்கள்.
மனக் காட்சி கலைகிறது. மணி பார்க்கிறான் ராமசாமி. 11 21. மானேஜர் தன் இருக்கையில் இருந்து அவனையே பார்க்கிறார். “என்னய்யா இங்க வந்து நிக்கறே?“
“ஒண்ணில்ல சார்.“
“யாராவது உன்னைத் தேடி வராங்களா?“
இப்ப தெரியாதுடா என் அருமை. பார் நான் போடற பிளானை… வெளியே எட்டிப் பார்க்கிறான். சின்னக்கனி எதிர் பிளாட்பாரத்தில் தான் தயாராய் இருப்பதாய்த் தலையாட்டி கை காட்டுகிறான். கூட சற்று தள்ளி மணி. இவனும் கை காட்டுகிறான்.
நேரம் ஓடுகிறது. மணி 11 22. உச்சகட்ட பரபரப்புடன் நிற்கிறான் ராமசாமி. செக்யூரிட்டி திரும்பிப் பார்த்து, “ஏன் சார் ஒரு மாதிரியா இருக்கீங்க?“ என்று கேட்கிறான். “ராமசாமி? என்ன ஆச்சி உனக்கு?“ என்று கத்துகிறார் மேனேஜர். மணி 11 22 – 30 விநாடிகள். சின்னக்கனி, தான் தயார் என்கிறாப் போல உறுதி தருகிறான். மணி 11 23.
எதுவும் நடக்கவில்லை. “உன் நடவடிக்கை வரவர புரிய மாட்டேங்குது. என்ன ராமசாமி? இத்தனை கஸ்டமர்ஸ் வெயிட் பண்றாங்க… நீங்க பாட்டுக்கு பொறுப்பே இல்லாமல்…“ என கிருஷ்ணராஜ் திட்டுகிறார். அங்கேயிருந்தே சின்னக்கனி பார்க்கிறான். ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்குகிறான் ராமசாமி. மணி 11 25, “நான் கிளம்பட்டா?“ என ஜாடையாய்க் கேட்கிறான் சின்னக்கனி. சரி, என தலையாட்டி அவனை அனுப்பிவிட்டு சோர்வுடன் திரும்புகிறான் ராமசாமி. மணி 11 26. மகாவே “என்ன சார் ஆச்சி?“ என்று கேட்கிறாள். “எதுவும் ஆகல்ல. அதுதான் பிரச்னை…“ என்கிறான் ராமசாமி. ரமேஷ் “உன்னை நம்பினேனேடா… என் முகத்தில் கரியைப் பூசிட்டே…“ என்றபடி தன் இருக்கைக்குத் திரும்புகிறான். வாசலைப் பார்க்கிறான் ராமசாமி. காலியாய்க் கிடக்கிறது. மணி பார்க்கிறான். 11 27, குனிந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறான். 11 28.
திடீரென்று வாசலில் பரபரப்பு. ஒரு கார் வந்து சர்ர்ரென்று நிற்கிறது. அதில் இருந்து இரண்டு பேர் குதிக்கிறார்கள். முதலாமவன் பாய்ந்து செய்யூரிட்டி மண்டையில் அடிக்கிறான். அப்படியே அவனை இழுத்து அங்கிருந்த தூணில் கட்டுகிறான். சனங்கள் பதறி சிதறுகிறார்கள். ஏ டி எம் கூட்டம் எடுக்கிறது ஓட்டம். அடுத்தவன் உள்ளே பாய்ந்த ஜோரில் சி சி டி வி கேமெராக்களை இங்கே அங்கே என்று குறி தப்பாமல் சுடுகிறான். ஆ வூ என உள்ளே சனங்கள் அலை மோதுகிறார்கள். அப்படியே கவுண்டரைத் தாண்டி உள்ளே பாய்ந்து அடியில் பதுங்கிக் கொள்கிறார்கள். “எல்லாரும் அங்கங்க அப்பிடியப்பிடியே நில்லுங்க…“ என்று கத்துகிறான் ஒருவன். அடுத்தவன் உள்ளே நுழைகிறான். இருவரும் உயர்த்திப் பிடித்த கைத் துப்பாக்கியுடன். மேனேஜர் கிருஷ்ணராஜ் அறையைப் பார்க்க ஒரு குண்டு சீறுகிறது. “ஃபோன் பண்ற வேலை வேணாம்…“
நடுநடுங்கி அவர் அப்படியே கை தூக்கி நிற்கிறார். “எங்களுக்குத் தேவை பணம். உங்க உயிர் அல்ல… யாரும் தேவை யில்லாமல் உயிரை இழக்காதீங்க… சரியா? கமான் கமான்…“ என கைத்துப்பாக்கியை வல இடமாக ஆட்டியபடியே அந்தக் கூட்டத்தை ஒருசேர ஒதுக்குகிறான். அவர்கள் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டிவிட்டு விடாத தூரத்தில் நின்றபடி அவர்களை அலையென ஒதுக்குகிறான். அப்படியே ஒரு அறைக்குள் அவர்களைத் தள்ளுகிறான் ஒரு திருடன். ரமேஷ். மேனேஜர். மகா. வாடிக்கையாளர்கள்… என ஏறத்தாழ 30 பேர். சிறிய அறைதான். உள்ளே தள்ளி கதவை வெளியே தாள் போடுகிறான் ஒரு திருடன்.
அடுத்தவன் நேரே கேஷ் கவுண்டருக்குள் குதிக்கிறான். கவுண்டரின் உள் இழுப்பறை – கப்போர்டு – பூட்டியிருக்கிறது. ஒரே அடியில் அதை உடைக்கிறான். உள்ளே கத்தை கத்தையாகப் பணம். சிரிக்கிறார்கள்.
“சி சி டி வி இருக்கா?“
“எல்லாத்தையும் நொறுக்கிட்டேன்…“ என்கிறான் ஒருத்தன். மேனஜேர் அறையில் சி சி டி வி புள்ளிகளுடன் அலையோடுகிறது. அவர்கள் முகத்திரையை அகற்றுகிறார்கள். திடீரென சுதாரித்தாப்போல “டேய் இங்க பாரு…“ என லெட்ஜர் பக்கம் படுத்து பம்மிக் கிடக்கும் ராமசாமியை ஒருவன் கண்டு பிடிக்கிறான். திரும்ப முகத்திரையால் மூடிக் கொள்கிறார்கள். அப்படியே காலரைப் பிடித்துத் தூக்குகிறான் ஒருவன். ராமசாமி பெப் பெப்… என குழறுகிறான்.
“தமிழ்ல பேசுறா. என்ன பாஷை பேசறே நீ?“
“பெப் பெப்“ என்கிறான் ராமசாமி மறுபடியும். ஓங்கி அவனை அறைகிறான் ஒருத்தன். அவன் கண்கள் அழுகின்றன. எதுவும் பேசவில்லை ராமசாமி. அப்படியே அங்கேயிருந்த நாற்காலியில் குனிந்து அவனைக் கட்டிப் போடுகிறான் ஒரு திருடன்.
பணத்தை அள்ளி ஒரு மூட்டையாய்க் கட்டி எடுத்துக் கொள்கிறார்கள். திரும்ப ஒரு திருடன் ராமசாமியைப் பார்க்க துப்பாக்கியை நீட்டுகிறான். ராமசாமியின் வாயில் துணி அடைக்கப் பட்டிருக்கிறது. உடம்பே அதிர அவன் துடிக்கிறான்.
ஒரு திருடன் அலைபேசியில் அழைக்கிறான். “வா…“ பாய்ந்து வெளியேறுகிறார்கள். தெருவில் யாருமே இல்லை. திரும்ப எழுந்து கொள்ள முயல்கிறான் செக்யூரிட்டி. அவன் ஒரு உதை விட்டுவிட்டு அவரகள் வந்த காரில் தாவியேறி காணாமல் போகிறார்கள்.
அரை மணி நேரம் தாண்டுகிறது. ஊ ஊ என்று கத்துகிறான் ராமசாமி. சததமே எழும்பவில்லை. வாசல் பக்கத் தூணில் செக்யூரிட்டி.. அவனும் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடுகிறான்.. உள் அறையில் அடைபட்ட எல்லாரும் தடதடவென்று கதவைத் தட்டுகிறார்கள். ராமசாமி அப்படியே உட்கார்ந்திருக்கிறான். அவன் கண்கள் அழுகின்றன.
போலிஸ் வருகிறது. செக்யூரிட்டியை முதலில் அவிழ்த்து விடுகிறார்கள். பிறகு ஒரு போலிஸ்காரர் அவனைப் பார்த்ததும் ஓடி வருகிறார். அவன் நாற்காலியைச் சுற்றிலும் சிறு நீர்.. ஈரப்பட்டுக் கிடக்கிறது இடம். அவன் வாய்த் துணியை உருவி யெடுக்கிறார்கள். ஓஓஓ என அவன் கத்துகிறான். வாந்தி யெடுக்கிறாப் போல குத்திப் பிடுங்குகிறது அவனுக்கு. உள் அறையில் அடைபட்டிருந்த அத்தனை பேரும் கதவை இடிக்கிற சத்தம். போய்க் கதவைத் திறக்கிறான். கும்பலாய் வெளியே ஓடி வருகிறார்கள் எல்லாரும். மேனேஜர் அறைக்கு வந்து அவர் தன் இருக்கையில் அமர்கிறார். உடம்பே கசங்கி உடையெல்லாம் உருக் குலைந்து தலையெல்லாம் கலைந்து… சி சி டி வி கேமெராவில் அலைகள் ஓடுகின்றன.
பார்க்க சுமாராய் இருந்த ஒரே நபர் மகாதான். “யாரும் வெளியே போக வேண்டாம். உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தால் தான் திருடர்களை நாங்க பிடிக்க முடியும்….“ என்கிறார் இன்ஸ்பெக்டர்.
கை ரேகை நிபுணர்கள் வருகிறார்கள். கேஷ் கவுண்டர் உடைந்து சிதறிக் கிடக்கிறது. அங்கே ரேகை தேடுகிறார்கள். பேசவே ராமசாமி சிரமப்படுகிறான். “க்கை…“ என்கிறான். “க்கைல…“ என்கிறான்.
“கிளவுஸ் போட்டிருந்தாங்களா?“ என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர்.
“ம். ம்…“ என்கிறான் ராமசாமி. “எல்லாரையும் விட உங்களுக்கு தான் கிட்டத்தில் அவர்கள் பரிச்சயம்…“ என்கிறார் இன்ஸ்பெக்டர். “தெரியாது…“ என்கிறான் ராமசாமி. அப்படியே அயர்ந்து போய் நாற்காலி ஒன்றில் அமர்கிறான். வாடிக்கையாளர்கள். ஆண்கள், பெண்கனள் என்று எல்லாருமே பாத்ரூம் போக விரைகிறார்கள்….
மணி இரவு பத்து. “இன்னும் இவர் வரல்லியேடா?“ என்கிறாள் திலகா கவலையுடன். “அக்கா உனக்கு அந்த நாள் நினைவு இருக்கா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
“இருக்கு. ஏன்?“ என்று கேட்கிறாள் திலகா. “எப்ப வந்தார்?“ என்று திரும்ப அவன் கேட்கிறான். “இப்பதான்… கிட்டத்தட்ட பத்து மணி…“ என்கிறாள் திலகா.,
அப்போது கதவு தட்டப் படுகிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842


for bulk chapters pls visit – 
vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment