Wednesday, September 30, 2015

அத். 40 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

updated everyday
வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 40
மெடிகல் ஷாப். கிருஷ்ணன் கையில் டாக்டர் சீட்டு. அதை வாங்கிப் பார்க்கிறான் கடைக்காரன். “இது தூக்க மாத்திரை ஆச்சே…‘‘ என்கிறான். “ஆமாம்“ என்கிறான் கிருஷ்ணன்.
“யாருக்கு?“
“அப்பாவுக்கு…“
“எவ்வளவு வேணும்?“
“எவ்வளவு வேணாலும் குடுங்க…“
“கரெக்டாச் சொல்லுய்யா… இதை டாக்டர் சீட்டு இல்லாமல் தரவே கூடாது…“
“ஏன்?“
“இதை எக்குத் தப்பா அதிகமா போட்டுக்கிட்டா இந்தத் தூக்க மாத்திரை ஆளையே தூக்கற மாத்திரையா ஆயிரும்.“
“வெரி குட்.“
“என்ன வெரிகுட்?“
“இல்ல. அத்தனை பவர்ஃபுல்லான்னு கேட்டேன்…“
“எத்தனை மாத்திரை?“
“டாக்டர் எவ்வளவு எழுதியிருக்கார்?“
“ஒரு மாசத்துக்கு..“
“அப்ப ஒரு மாசத்துக்குக் குடுங்க.“
கடைக்காரன் மாத்திரை எடுக்க உள்ளே போகிறான். “தூக்கம் வராதவங்க இதைப் போட்டுக்கிட்டால் தூக்கம் வரும்.“
“தூக்கம் வர்றவங்க இதைப் போட்டுக்கிட்டால்?“
“ஒரேடியாத் தூங்கிற வேண்டிதான்…“ என கடைக்காரன் சிரிக்கிறான்.
“எக்ஸ்பிரி டேட் பார்த்து எடுங்க…“
“மருந்துக்குன்னா சொல்றேன். போட்டுக்கற ஆளுக்குன்னா எனக்குத் தெரியாது…“
“மாத்திரையை மொத்தமா போட்டுக்கிட்டால் அதுதான் அவருக்கு எக்ஸ்பிரி டேட்…“ என்கிறான் கிருஷ்ணன்.
“என்னய்யா சொல்றே நீ? வந்ததில் இருந்து விவகாரமாப் பேசறே…“
“இல்ல. ஒண்ணில்ல.“
“வயசாளிகள், சில நோயாளிகள்… மனக் குழப்பம் இருக்கற பட்சம், தூக்கம் வராத பட்சம் தேவைப்பட்டால் மாத்திரை போட்டுக்கலாம்… அவ்வளவுதான். பாத்து ஜாக்கிரதையா பயன்படுத்தணும்…. யாருக்குன்னு சொன்னே?“
“அதான் சீட்டுல போட்டிருக்கே…“
“வேங்கடசுப்ரமணியன்.“
“எங்க அப்பாதான்…“
மருந்தை வாங்கிக் கொண்டு வீடு வருகிறான் கிருஷ்ணன். தெருவில் இருந்து வீட்டுக்குள் நுழையுமுன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்கிறான். பின் ஆவேசமாய்க் கதவைச் சாத்துகிறான். எதிர்வீட்டுக்காரி, தாம்புக் கயிறு தந்தவள் வெளியே எட்டிப் பார்க்கிறாள்.
உள்ளே போய் கதவின் தாள் போடுகிறான். மேசையில் அந்த மாத்திரைக் குப்பியை வைக்கிறான். போய்த் தண்ணீர் எடுத்து வருகிறான். தண்ணீர் தம்ளரை மேசையில் வைக்கிறான். மேசை அருகே நாற்காலியில் உட்கார்கிறான். மணி பார்க்கிறான். “சாவப் போற நேரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப்போறே….“ என்று சொல்லிக் கொள்கிறான். திரும்ப கதவுப் பக்கம் போகிறான். இரண்டாவது தாள் போடுகிறான். வந்து நாற்காலியில் அமர்கிறான். மாத்திரை பாட்டிலை உடைக்கிறான். அதில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து மேசையில் வைக்கிறான். பின் ஆவேசம் வந்தாப் போல கடகடவென்று கையில் நிறைய மாத்திரைகளைக் கொட்டிக் கொள்கிறான். அதில் ஒன்று இரண்டு தரையில் விழுகிறது. குனிந்து அந்த மாத்திரைகளையும் எடுத்து மேசையில் வைக்கிறான். தம்ளர் தண்ணீரைப் பார்க்கிறான். போய் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து வருகிறான். உட்கார்ந்தவன் திரும்ப எழுந்து கொள்கிறான். அரை கேன் தண்ணீர் இருக்கிறது ஸ்டூலில். அப்படியே கேனையே கொண்டு வந்து மேசையில் மாத்திரைகளுக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்கிறான்.
அப்போது வாசல் கதவு தட்டப்படுகிறது. “யாரு?“ என்கிறான். பதில் இல்லை. “நான் முக்கிய வேலையா இருக்கேன்… அப்பறமா வந்து கதவைத் திறக்கிறேன்…“ என்கிறான். “அப்பறமான்னா எப்ப? செத்த அப்பறமா?“ என தானே கேட்டுக் கொள்கிறான். திரும்ப கதவு தட்டப் படுகிறது. “போயிட்டு அப்பறமா வாங்க…“ என்கிறான். “அப்பறம்னா எப்ப?“ என சத்தமாய்த் தனக்குள்ளேயே கேட்டுக்கொள்கிறான்…
ச்சே… ஒரு மனுசன் இந்த உலகத்தில் நிம்மதியா சாக முடியுதா?... என அலுத்துக் கொண்டே வந்து கதவின் முதல் தாள் திறக்கிறான். இரண்டாவது தாள் திறக்கிறான். கதவைத் திறக்கிறான். வெளியே யாரும் இல்லை. வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து பார்க்கிறான்…
எதிர் வீட்டுப் பெண் “என்ன தம்பி? யாரைத் தேடறே?“ என்று கேட்கிறாள்.
“இங்க யாரும் வந்தாங்களா?“
“ஏன்? யாரும் வரணுமா?“ என்று அவள் திரும்பிக் கேட்கிறாள்.
அவன் அவளையே பார்க்கிறான். “GAS  காரன் வரணும்னு காத்திருக்கியா தம்பி?“ என்கிறாள் அவள்.
அவன் பதில் சொல்லாமல் திரும்ப உள்ளே வருகிறான். ச்சே, பிரமை… என்று சொல்லிக் கொள்கிறான். திரும்ப ஒரு தாள் போட்டு விட்டு வந்து மேசையில் உட்கார்கிறான். ஒரு பெருமூச்சு எடுக்கிறான். அழுகை வருகிறாப் போல முகம் மாறுகிறது. “யாரும் வர மாட்டாங்கடா…“ என உரக்கச் சொல்கிறான். “வந்தாலும் நான் கதவைத் திறக்க மாட்டேன்…“ என்று கத்துகிறான். விறுவிறுவென்று போய் இரண்டாவது தாள் போடுகிறான். வந்து மேசையில் உட்கார்கிறான். மாத்திரைகளைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி அழுகிறான். திரும்ப ஆவேசம் வந்தாப் போல பாட்டில் மாத்திரை அனைத்தையும் அப்படியே மேசையில் கவிழ்த்துகிறான். பிறகு தலையாட்டி மறுத்தபடியே கொஞ்சம் மாத்திரைகளை எடுத்து திரும்ப பாட்டிலில் போடுகிறான்.
மணி பார்க்கிறான். “என்னடா மணி பார்க்கறே? முகூர்த்த நேரம் தவறிப் போறா மாதிரிதான்…“ என்று தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான். “அவளுக்கும் எனக்கும் கல்யாண முகூர்த்தம் இல்லை. கல்யாணம் நடக்கப் போவது இல்லை. அது தான் தவறிட்டது. ஆகவே…“ என்றவன் அவசர அவசரமாக பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்க்கிறான். உரக்க வாசிக்கிறான். “அன்பான தினத்தந்தி ஆசிரியர் அவர்களுக்கு… என் படத்தை கலரில் போடவும்.“
வெரி குட், என்று சொல்லிக் கொள்கிறான். மாத்திரையைப் பார்த்துக் கொண்டபடியே தம்ளர் தண்ணியை எடுத்து மட மடவென்று குடிக்கிறான். “ஐயோ மாத்திரை சாப்பிடாமலேயே தண்ணியை மட்டும் குடிச்சிட்டேன்…“ என்கிறான்.
கதவு தட்டப் படுகிறது. பிறகு மௌனம். சே பிரமை… என்று சொல்லிக் கொள்கிறான். திரும்ப தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொள்கிறான். திரும்ப கதவு தட்டப் படுகிறது. “யாரது?“ என்கிறான். “நாந்தான்“ என்கிறது குரல்.
“நாந்தான்னா?“ என்கிறான். அவனுக்குத் தெரிகிறது. அது ராமசாமியின் குரல்.
“நான் ராமசாமி. உன் கிருஷ்ணா கபே ஃப்ரென்ட்…“
“அதை என் சார் ஞாபகப் படுத்தறீங்க?“
“என்ன பண்ணிட்டிருக்கே கிருஷ்ணா? கதவை வேற தாள் போட்டுக்கிட்டிருக்கே…“
“ரெட்டைத் தாழ்ப்பாள்.“
“எந்த விபரீத முடிவும் எடுக்கல்லியே…“
“அது எப்பிடி சார்? நான் தற்கொலைன்னு ஆரம்பிச்சால் நீங்க சரியா வந்திர்றீங்க?“
“நான் ஊருக்கெல்லாம் ராமசாமி உனக்குதான் கிருஷ்ணசாமி.“
“விட்டுருங்க சார் என்னை. எனக்குத் தேவை கீதை அல்ல. கிருஷ்ணவேணி.“
“அட அவசரப் படாதே கிருஷ்ணா…“
“நான் நிறையத் தரம் அவசரப் பட்டுட்டேன் சார். ஒண்ணும் நடக்கல்ல. இனியும் நீங்க என்னை அடக்கி வைக்க முடியாது…“
“ஐயோ கிருஷ்ணா… சொன்னால் கேளு.“
கடகடவென்று பாட்டில் தண்ணீர் குடிக்கிறான். பிறகு தலையில் அடித்துக் கொள்கிறான். “ச்சே திரும்பவும் மாத்திரை சாப்பிட விட்டுட்டது…“
“கதவைத் திற கிருஷ்ணா…“
“இல்ல சார். அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு வெறுத்திட்டது சார். போதும் சார். இனிமேல் இந்த உலகத்தில், அவள் இல்லாத உலகத்தில் எனக்கு வாழவே பிடிக்கல்லை சார். எனக்கு இந்த உலகத்தில் எதுவுமே வேணாம் சார்…“
“கிருஷ்ணா கபே காபி?“
“அட அது ஒரு மேட்டரா சார். நான் மாத்திரை வாங்கிட்டு வரும்போதே காபி சாப்பிட்டுட்டுதான் சார் வந்தேன்…“
“மாத்திரையா?“
“தூக்க மாத்திரை…“
“ஐயோ கிருஷ்ணா என்ன காரியம் பண்ணிட்டே…“
“இன்னும் பண்ண ஆரம்பிக்கலை சார்…“
“வேணாம் கிருஷ்ணா…“
“அவள் என்னை வேணான்னுட்டாளே சார்.“
“அவ சொல்ல மாட்டாள் கிருஷ்ணா.“
“இப்பிடித்தான் என்னை ஏமாத்தறீங்க. அவ என்னடான்னா என்னை எப்பவுமே தூக்கி யெறிஞ்சி பேசறா. மதிக்கவே மாட்டேங்கறா… எனக்கு… வேற வழி இல்லை சார். என்னை விட்டுருங்க சார்…“
“கதவைத் திற கிருஷ்ணா…“
“மாட்டேன்.“
“அவசரப் படாதே கிருஷ்ணா…“
மாத்திரைகளைக் கையில் எடுக்கப் போனவன் முன் குனிந்தாப் போல வளைகிறான். “ஓவரா தண்ணி குடிச்சிட்டேன் போல…“ என்கிறான்.
கதவுக்குப் பின்புறம் இருந்து இப்போது ஒரு பெண் குரல் கேட்கிறது. “கிருஷ்ணா?“
அவனுக்கு ஆச்சர்யம். “யாரு?“
ஒரு நிமிடம் மௌனம். “யாரு?“ என அதட்டுகிறான் கிருஷ்ணன். பிறகு அந்தப் பெண் குரல் பேசுகிறது. “நாந்தான்…“
“நாந்தான்னா?“
தயக்கமாய் அந்தக் குரல். “கிருஷ்ணவேணி…“
அவன் முகம் ஆச்சர்யத்தால் வீங்குகிறது. பிறகு முகம் மாறுகிறது. “சார்? பொம்பளைக் குரல்ல பேசறீங்களா?“
“இல்ல கிருஷ்ணா…“
கதவுக்கு மறுபுறம் கிருஷ்ணவேணியும் ராமசாமியும் நின்றிருக்கிறார்கள். கிருஷ்ணவேணி பதறி யிருக்கிறாள். “நான் சொன்னேனே? நீ நம்பினியா? அவன் பண்றதெல்லாம் வேஷம் நடிப்புன்னு சொன்னே… இப்ப பாத்தியா? நிசம்மாவே…“
“ஆமா சார்…“ என்கிறாள் கிருஷ்ணவேணி. “பாவம் சார் அவர்“ என்கிறாள். “கிருஷ்ணா?“ என அவளே முன்னால் போய் கதவைத் தட்டுகிறாள்.
“சார்… நீங்கதான் பொம்பளைக் குரல்ல பேசறீங்க…“ என்கிறான் கிருஷ்ணன். “என்னை ஏமாத்த முடியாது…“
“நானும் சாரும் வந்திருக்கோம் கிருஷ்ணா?“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“இப்ப பார் ரெண்டு பேரும் பேசறோம்…“ என்கிறான் ராமசாமி. “கிருஷ்ணா…“ என ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
உள்ளே யிருந்து சத்தமே இல்லை. பயந்து போகிறார்கள். “கதையை முடிச்சிக்கிட்டானோ படுபாவி…“ என மெல்ல முணுமுணுக்கிறான் ராமசாமி. “ஐயோ“ என அழுகை வருகிறது அவளுக்கு. திரும்ப ரெண்டு பேரும் ஒரே குரலில் “கிருஷ்ணா…“ என கத்துகிறார்கள்.
உள்ளே பாத்ரூமில் தணணீர் சிதறும் சத்தம் கேட்கிறது.
“என்ன சத்தம் இது?“ என்கிறாள் கிருஷ்ணவேணி. “பாத்ரூம்ல சத்தம் கேட்கிறாப்ல இருக்கே?“ என்கிறான் ராமசாமி.
“கதவைத் திற கிருஷ்ணா…“
“மாட்டேன்…“
“எந்த அவசர முடிவுக்கும் வந்திராதே கிருஷ்ணா…“ என்கிறாள் கிருஷ்ணவேணி. அதற்கும் பதில் இல்லை. “உன் பேர் கிருஷ்ணன். என் பேர் கிருஷ்ணவேணி… என்ன பொருத்தம். இல்லியா கிருஷ்ணா…“ என்கிறாள். அதற்கும் பதில் இல்லை. திரும்ப பாத்ரூம் சத்தம்.
“அவன் இங்க இல்லை. பாத்ரூம்ல இருக்கிறான்…“ என்கிறான் ராமசாமி.
“கதவைத் திறக்காமல்  இப்பிடிப் படுத்தறாரே சார்… நான் என்ன பண்ணட்டும்?“ என தலையில் கை வைக்கிறாள். அழுகிறாள். “அவர் எம் மேல இவ்வளவு பிரியம் வெச்சிருப்பார்னு நான் நம்பவே இல்லை சார்…“
சட்டென திரும்ப கதவை ஓங்கித் தட்டுகிறாள். “கிருஷ்ணா… ஐ லவ் யூ கிருஷ்ணா… வெளியே வா… அவசரப் படாதே…“
“நான் அவசரப் பட்டுத்தான் ஆக வேண்டியிருக்கு. இங்க நிலைமை அப்பிடி…“ என்று உள்ளே யிருந்து கிருஷ்ணன் சொல்கிறான்.
“என்ன சொல்றே கிருஷ்ணா?“
“நான பாத்ரூம்ல இருக்கேன்…“
“என்ன பண்றே கிருஷ்ணா?“
“தண்ணி கொஞ்சம் ஜாஸ்தி குடிச்சிட்டேன். அதான்… “
வெளியே ராமசாமி சிரிக்கிறான். அவனையே பார்த்தபடி நிற்கும் கிருஷ்ணவேணி சிரிக்கிறாள். “ஒன் பாத்ரூம் முட்டிக்கிடடது போல…“ என்கிறான் ராமசாமி. “நாம வராம இருந்தாலும் இப்படி அவன் எழுந்து போயிருப்பான் போல…“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
கதவு திறக்கிறது. “வேணி…“ என வருகிறான் கிருஷ்ணன்.
“என்ன காரியம் பண்ணப் போயிட்டே கிருஷ்ணா?“
“அதை அடக்க முடியாது வேணி…“ என சிரிக்கிறான். “அதான் வந்திட்டேனே வேணி…“ என அவளை அணைத்துக் கொள்கிறான்.
“எங்க வந்தே… பயமுறத்திட்டே கிருஷ்ணா… “ என்கிறான் ராமசாமி. “கிருஷ்ணவேணி கிடைக்காத ஆத்திரம் சார் முனனால…“ என்கிறான் கிருஷ்ணன்.
“அப்பறம்?“ என சிரிக்கிறான் ராமசாமி.
கிருஷ்ணவேணி ராமசாமி பக்கம் திரும்புகிறாள். “சார் நீங்க சொன்னப்ப நான் இவர் இத்தனை தீவிரமா என்னைக் காதலிப்பார்னு நம்பல சார்…“
“இப்ப?“
“அதான் நேர்லியே பாத்திட்டேனே…“ என வெட்கப் படுகிறாள். உள்ளே அவன் தற்கொலைக்கு முயற்சி பண்ணிய அறைக்குள் போகிறார்கள். “எதுக்கு இவ்வளவு தண்ணி கிருஷ்ணா?“ என தண்ணீர் கேனைக் காட்டுகிறான் ராமசாமி.
“ஒரு மாத்திரை கூட சாப்பிடலை சார்…“ என்கிறான் கிருஷ்ணன். “எப்பிடியும் சார் வந்திருவீங்கன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்…“
“அப்ப என்னை எதிர்பார்க்கலியா கிருஷ்ணா?“ என்று கோபமாய்க் கேட்கிறாள்  வேணி.
“இல்ல வேணி. அவர் வர்றார்னா, ஒவ்வொரு வாட்டியும் அவர் உன்னை அழைச்சிக்கிட்டு வர்ற மாதிரியே இருக்கும். எனக்கு…“ என்கிறான். “அப்பறம் தான் ஏமாத்தமா இருக்கும்…“
“அப்ப கிருஷ்ணா…இனி தற்கொலை… கிற்கொலைன்னு உளராமல் இருப்பியா?“
“தற்கொலையை விட்டுட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டேன் சார்“ என்கிறான் கிருஷ்ணன்.
“வெரி குட்.“
“எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டீங்களே சார்“ என நெகிழ்கிறாள் கிருஷ்ணவேணி.
“சாரை நமஸ்காரம் பண்ணுடி…“ என்கிறான் கிருஷ்ணன்.
“இருக்கட்டும் இருக்கட்டும்…“ என நெளிகிறான் ராமசாமி. “சண்டை சச்சரவு இல்லாமல் ஒத்துமையா இருங்க…“
அப்போது வாசலில் சரசரப்பு கேட்கிறது. “அப்ப வர்றார்…“ என்கிறான் கிருஷ்ணன்.
குரல் மாத்திரம் கேட்கிறது. “கிருஷ்ணா?“
“இருக்கேன்ப்பா…“
“என்ன பண்ணிட்டிருக்கே?“
“லவ் பண்ணிட்டிருக்கேம்ப்பா…“
“அதையாவது ஒழுங்காப் பண்ணு…“
அவர்கள் மூணு பேருமே சிரிக்கிறார்கள்.
* * *
*
தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk 5 chapters please visit
vasikarapoikalplus.blogspot.com



Tuesday, September 29, 2015

அத். 39 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் updated everyday

வ சி க ர ப் 
பொ ய் க ள்

அத்தியயாயம் 39

ராமசாமி ஆஸ்பத்திரியை அடைந்த போது அவனுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
வரவேற்பில் ஒரு பெண். மருத்துவ உடையில் அல்லாமல் பருத்திப் புடவையில் இருந்தாள். புன்னகையுடன் அவனை வரவேற்றாள். “ரமேஷ்னு… இப்ப ஒரு ரெண்டுமணி நேரம் முன்னாடி யாரும் அட்மிட் ஆனாங்களா…“
“ஐ சி யூ வில்…“ என அவள் புன்னகை மாறாமல் பேசினாள். “ஆனால் நோயாளி தவிர வேற யாரும் உள்ளே அனுமதி இல்லியே…“
“அவங்க கூட வந்தவங்க?“
“ஐ சி யூ வராந்தாவில் காத்திருக்கலாம்… பாருங்கள்“ என்றாள் அதே புன்னகையுடன்.
முதல் மாடிக்கு படியேறினான். தூரத்திலேயே தினகரன், ரமேஷின் அண்ணாவை அடையாளம் காண முடிந்தது. இவனைப் பார்த்ததும் வேக வேகமாக வந்தான் அவன். குடிக்காத நிதானத்துடன் அவன் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. என் மேல் இவனுக்குக் கோபம் இருக்கும்… சரியான நேரத்தில் அட்வகேட்டை அழைத்து வந்தது நான்தானே, என்று நினைத்துக் கொண்டான் ராமசாமி.
“வா ராமு… நீ வந்தப்பறம் தான் எனக்கு மூச்சே வருது“ என இயல்பாய் தினகரன் வந்து ராமசாமியின் கையைப் பிடித்துக் கொண்டான். ஆச்சர்யமாய் இருந்தது ராமசாமிக்கு. “என்னாச்சி அண்ணா?“ என்று கேட்டான். தினகரன் பக்கத்தில் அவன் பெண் கீதா. கவலையான விழிகள். தலையை மாத்திரம் ஆட்டினாள்.
“திடீர்னு நெஞ்சு வலின்னான். கையைத் தூக்க முடியாதபடி திண்டாடினான். அப்படியே பேசிக்கிட்டே சோபாவில் உட்கார்ந்தான். அதுவும் முடியாமல் படுத்திட்டான்.“
“ஐயோ.“
“கீதாதான் பாத்தது. ரொம்ப பயந்திட்டாள் பாவம்…“
ராமசாமி கீதாவைப் பார்த்தபடியே தினகரனுக்குத் தலையாட்டுகிறான். “டாக்டர் என்ன சொல்றாரு?“
“எதேதோ அவங்களுக்குள்ள பேசிக்கறாங்க. ஃபோன் பண்ணியிருக்கு. பத்து மணிக்கு பெரிய டாக்டர் வருவார் போலருக்கு…“
“இப்ப என்ன பண்றாங்க?“
“ஈ சி ஜி ஓடிட்டிருக்கு. இதயத் துடிப்புல சிரமம் இருக்கறா மாதிரி தான் தெரியுது. மூச்சு விட கொஞ்சம் சிரமப் படறான். ஆக்சிஜன் மாஸ்க் போட்டிருக்கு…“
“அதை வெச்சி பயந்துக்க வேணாம்… சரியா?“ என கீதாவைப் பார்த்தபடியே தினகரனிடம் சொல்கிறான் ராமசாமி. “ஐ சி யூ இது. அவசர சிகிச்சைன்னு இதெல்லாம் செய்யறது தான். என்ன பிரச்னைன்னு பெரிய டாக்டர் வந்தால் தான் நம்மகிட்டவே சொல்வாங்க…“ என்கிறான். “ஒருவேளை பிரச்னை என்னன்னு அவங்களுக்குத் தெரியாதா இருக்கும். தெரிஞ்சாலுங் கூட அதைப் பெரிய டாக்டர் வந்து உறுதிப் படுத்தணும்னு இருப்பாங்க… சரி. கீதா, இங்க பார்… நீ இப்பிடி அதைரியமா இருக்கக் கூடாது. சின்ன பொண்ணுதானே நீ… இதெல்லாம் சேர்ந்து தான் வாழ்க்கை…“
“சித்தப்பான்னா அவளுக்கு உசிர் ஆச்சே“ என்கிறான் தினகரன். “நான் ஒருத்தன்… என் ஆசை, என் திமிர்னு ஒரு ஆட்டம் ஆடிட்டேன். அவன் வந்து வீட்டுப் பொறுப்பைக் கையில் எடுத்துக்கிட்டான்… அவனாலதான் இப்ப பொண்ணு படிப்புல மனசை ஒழுங்கா செலவு பண்ணறா. இப்ப நல்ல மார்க்கு வாங்கறா. என் பொண்ணுன்னு கேவலமா அவளைப் பாத்தவங்க, இப்ப அவள் அப்பான்னு என்னை மரியாதையாப் பேச ஆரம்பிக்கறாங்க. அவ்வளவுக்கு ரமேஷ்…. அவனோட பாசம் எங்களைக் கட்டிப் போட்டுட்டது…“ தினகரன் கண்ணைத் துடைத்துக் கொள்கிறான்.
“அண்ணா… இருக்கட்டும். அது ஒரு நேரம்…. அழிக்கணும்னு உங்களுக்கு ஒரு சுயநலம். வேகம். இப்ப… குழந்தை வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப் படத் தெரியுது. அதுவே நல்ல விஷயம்…“
ஆமாம், என்கிறாப் போல தலையாட்டுகிறான் தினகரன். “என் மேலே கூட உங்களுக்குக் கோபம் இருக்கும்…“ என சிரிக்கிறான் ராமசாமி.
“இருந்தது…“ என்கிறான் தினகரன். “இப்ப இல்லை“ என அவனைப் பார்க்கிறான். “நான் அப்படியே இருந்தால் எனக்குப் பிறகு இதுங்களை யார் பார்க்கறது?“
“உங்களுக்குப் பிறகுன்னு நீங்க யோசிச்சதே இல்லியே…“ என சிரிக்கிறான் ராமசாமி. “சரி. அதை விடுங்க. இப்ப ரமேஷ் நல்லபடியா எழுந்து வரட்டும். அதை கவனிக்கலாம்.“
“எல்லாம் நல்லா ஆயிட்டு வருதுன்னு நினைச்சேன் அப்பா…“ என்கிறான் தினகரன். “திடுதிப்னு இவன் இப்படி அடிபட்ட பறவை மாதிரி விழுவான்னு நான் கண்டேனா… எனக்கு என்ன தெரியும்? வீட்டை அவன் பாத்துக் கிட்டான். நான் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்…“
“கீதா, எதும் சாப்பிட்டியா?“ என அவள் பக்கம் திரும்புகிறான் ராமசாமி. “ஆச்சி அன்க்கிள்…“ என்கிறாள் கீதா. “சரியாயிரும்… கவலைப்படாதே…“ என அவளைக் கிட்டே அழைக்கிறான். தினகரனின் மனைவி மருந்து மாத்திரை என வாங்கப் போயிருந்தவள் வருகிறாள். “வாங்க… எப்பிடி ஒரு இடி… வந்திட்டதே பாத்தீங்களா?“ என்கிறாள் கண் கலக்கத்துடன்.
“பெரிய டாக்டர் வரட்டும். பார்க்கலாம்…“ என்கிறான் ராமசாமி. “செலவு பத்தி கவலை வேண்டாம். அவன் கிட்டவே மெடி கிளெய்ம் பாலிசி இருக்கும். பாங்க் வேற உதவி செய்யும்… அதுனால கவலைப் பட வேண்டாம்.“
“சரி“ என்கிறாள் தினகரனின் மனைவி. “எங்களுக்கு என்ன தெரியும். நீங்க கூடவே இருக்கணும்…“
“இருக்கேம்மா.“
“தேங்ஸ்“ என்கிறான் தினகரன். “ரமேஷுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி மேல ரொம்ப ப்ரீதி உண்டு. அவர் அவனைக் கை விட மாட்டார்“ என்றவன், கண் கலங்க ராமசாமி கையைப் பிடித்துக் கொள்கிறான். “அந்த ஏழுமலையான் மேல சத்தியம். இவன் பழையபடி எழுந்து வந்தால் போதும். நான் குடிக்கறதையே விட்டுர்றேன் ராமு…“
“ஆகா“ என்கிறான் ராமசாமி. அவன் கையை அழுத்தி. “இதைக் கேட்டாலே ரமேஷ்… எழுந்து உட்கார்ந்திருவான்.“
ஐ சி யூ சன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்க்கிறான். உள்ளே மூணாவது படுக்கையில் எல் போல அரை மடிப்பாய்க் உட்கார்ந்து கிடக்கிறான் ரமேஷ். முகத்தில் ஆக்சிஜன் முகமூடி. ஆனால் கண் திறந்திருக்கிறது. ஊசி வழியே மருந்து செலுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கிருந்தே இவனை எப்படிப் பார்த்தான் தெரியவில்லை. கையை லேசாகத் தூக்கினாப் போலிருக்கிறது. ஒரு நர்ஸ் அவன் பக்கம் ஓடி வருகிறாள். பிறகு ஐ சி யூ வாயில் கதவின் சன்னலைப் பார்க்கிறாள். உடனே அந்த வாயிலைத் திறந்து வெளியே வருகிறாள். “அவர் இப்ப முழிச்சிக்கிட்டார் சார். கவலைப் பட வேண்டாம். ஆனால் யாரும் இப்பிடி எட்டிப் பார்க்க வேணாம். அவர் ரொம்ப தன்னை சிரமப் படுத்திக்குவார்…“
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீதா சன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு கையாட்டுகிறாள். உள்ளே படுக்கையில் ரமேஷ் தலையாட்டுகிறான். கீதா முகம் மலர்கிறது. ‘அம்மா?“ என அவளையும் பார்க்கக் கூப்பிடுகிறாள். நர்ஸ் கோபித்துக் கொள்கிறாள். “அப்பறம் எலலாரையும் கீழ அனுப்பிருவேன்…“ என்கிறாள். “சித்தபபாவையுமா?“ என்கிறாள் கீதா. அவள் உற்சாகத்துக்கு வந்துவிட்டாப் போலத்தான் இருக்கிறது.
“ஆனால் கீதா… பெரிய டாக்டர் வரட்டும். என்ன சொல்றார்னு பார்க்கலாம்…“ என அவளை அழைத்துப் போகிறான் ராமசாமி. “எதுவும் கூல் டிரிங்ஸ் மாதிரி குடிக்கறியா?“
“வேணாம் அன்க்கிள்…“
“ரொம்ப டென்ஷன் ஆயிட்டியே…“
“நான்தான் அன்க்கிள் சித்தப்பா வரும் போது வீட்டில் இருந்தேன்…“
பெரிய டாக்டர் வருகிறார். பரபரப்புடன் கூடவே ஒரு நர்ஸ். தினகரன் அவர் கூடவே  உள்ளே போக முயல்கிறான். நர்ஸ் அவனை அங்கேயே நிற்க வைக்கிறாள்.
“சித்தப்பாவுக்கு சரியா ஆயிரும் அன்க்கிள்…“ என்கிறாள் கீதா.
ராமசாமி புன்னகை செய்கிறான். “வித்தியாசமான பொண்ணு அம்மா நீ.“
“ஏன் அன்க்கிள்?“
“திடீர்னு டென்ஷன் ஆயிர்றே. அப்பறம் ரொம்ப ஃப்ரீயா ஆயிர்றே… ரெண்டுமே ஆபத்து.“
“என்ன அன்க்கிள் சொல்றீங்க?“
“ரமேஷ் எப்பிடி இருக்கிறான்னு பெரிய டாக்டர் சொல்லட்டும்… தெரியுதா?“ என்கிறான் ராமசாமி.
டாக்டர் தினகரனைக் கூப்பிட்டு “மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம்னு தோணுது. இப்போதைக்குத் தூங்கறார். செடேடிவ் தந்திருக்கோம். எதோ ஒரு வால்வ் கொஞ்சம் பலவீனம் ஆனாலும் இப்பிடி ஆகறதுதான்… எதுக்கும் நாளைக்கு சோதனைல்லாம்  பார்ப்பம். அப்பறமா முடிவு பண்ணலாம்.“
“இப்ப எப்ப்டி இருக்கான் டாக்டர்…“ என்கிறான் தினகரன்.
“ஹி இஸ் ஓ.கே. சில பேர் வலியைக் கூட தாங்கிக்குவாங்க. வலிக்குதுன்னு சொல்ல மாட்டாங்க. நாளைக்கு டெஸ்ட் ரிசல்ட் பாத்துட்டு மீதி பேசலாம்…“
நர்ஸ் வந்து, “யாருமே இருக்கத் தேவை இல்லை. எதும் அவசரம்னால் நாங்களே ஃபோன் பண்ணுவோம். எல்லாரும் வீட்டுக்குப் போங்க“ என்கிறாள்.
“இல்ல. நான் இருக்கேன்“ என்கிறான் தினகரன். “வாசல் ரிசப்ஷன்ல இருந்துக்குவேன். மணி பத்தரை ஆவுது. இவங்க ரெண்டு பேரையும் எப்பிடி வீட்டுக்கு அனுப்பறது… தெரியல்ல.“
“நாங்களும் இருக்கோம்ப்பா…“
“வேணாம் வேணாம். ஒரு ஆட்டோ பிடிக்கலாம். ஸ்கூட்டர்ல நான் பின்னாடியே போறேன். இவங்களை வீடு வரை விட்டுட்டு அப்பிடியே நான் என் வீட்டுக்குப் போறேன்…“
அவர்கள் கிளம்புகிறார்கள். தினகரன் திரும்ப அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். “ராமு… நீ கூடவே இருக்கணும்.“
“ஆகட்டும் அண்ணா“ என்று அந்தக் கையை அழுத்துகிறான் ராமசாமி.
காலை பதினோரு மணிக்கு ராமசாமி திரும்ப ஆஸ்பத்திரி வருகிறான். “நேத்திக்கே ரெண்டு வாட்டி வலி அதிகம் ஆயிட்டதுன்னு சொல்றாங்க… அவசர அவசரமா டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்கு ராமு…“ என்கிறான் தினகரன். அவன் உடம்பு நடுங்குகிறது. “அடாடா தைரியமே இல்லியே உங்களுக்கு?“ என்கிறான் ராமசாமி. “கீதா வரல்லியா?“
“அவங்களை வர வேண்டாம்னு சொல்லிட்டேன்… அவளுக்குப் பரிட்சை. என்ன முடியுதோ எழுதிட்டு வான்னு சொல்லியிருக்கேன்…“
“இவனோட டெஸ்ட் ரிசல்ட் வந்திட்டதா?“
தலையாட்டுகிறான் தினகரன். “என்ன சொல்றாங்க?“ என்கிறான் ராமசாமி. “உங்க முகத்தைப் பார்த்தாலே விஷயம் பெரிசா இருக்கும் போலுக்கே அண்ணா?“ என்கிறான்.
“உடனே ஆபரேஷன் பண்ணணுன்றாங்க…“
“ஓகோ…“
“ஒரு வால்வ் உடனே மாத்திட்டா நல்லதுன்றாங்க…“
“எந்த வால்வ்?“
“இடது பக்க கீழ் வால்வு.“
“சரி. பண்ணிறலாம்… இந்த மாதிரி அவசர கேசை இந்த ஆஸ்பத்திரியில் எடுத்து உடனே செய்வாங்க. என்ன செலவு கொஞ்சம் அதிகம் எடுக்கும். ஆனால் பாங்க் பாத்துக்கும்…“ என்கிறான் ராமசாமி.
“சாயந்தரமே பண்ணிருவாங்க போலுக்கு… பெய்ன் கில்லர் கொடுத்து அவனைத் தூங்க வெச்சிருக்காங்க…“ என்றவன் சட்டென பொட்டலம் உடைந்தாப் போல அழ ஆரம்பிக்கிறான். “எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராமு.“
அதற்குள் திலகாவும் சிகாமணியும் அங்கே வருகிறார்கள். தினகரன் அவர்களைப் பார்த்துத் தலையாட்டுகிறான். சிகாமணி அங்கே வந்து “கவலைப் படாதீங்கோ சார். அண்ணாவுக்கு ஒண்ணும் ஆகாது“ என்கிறான்.
“அவன் என் அண்ணன் இல்லை. தம்பி“ என்கிறான் தினகரன்.
“எனக்கு அண்ணன்னு சொன்னேன்…“ என்கிறான் சிகாமணி.
நர்ஸ் வெளியே வருகிறாள். ராமசாமி அவளிடம் போகிறான். “என்ன சிஸ்டர்?“
“இவ வீட்டுக்காரர் இங்க வந்து படுத்தாலும் இவளை சிஸ்டர்னு தான் கூப்பிடணுமா?“ என தினகரனிடம் கேட்கிறான் சிகாமணி. “நான் அடங்கிட்டேன்டா. இல்லாட்டி உன்னை ஒரு வழி பண்ணிருவேன்…“ என்கிறான் தினகரன்.
“சாயந்தரம் தியேட்டர் ஃப்ரியா இருக்கு எதிர்பாராமல்…“ என்று ராமசாமியிடம் சொல்கிறாள் நர்ஸ்.
“என்ன படம் அத்தான்?“
“வசிகரப் பொய்கள்…“ என்கிறான் ராமசாமி. “நீங்க சொல்லுங்க…“ என்கிறான் நர்சிடம்.
“வேறொரு பேஷன்ட்டுக்குப் பண்ண வேண்டிய ஆபரேஷன் தள்ளிப் போயிருக்கு…“
“அவருக்குப் பண்ண வேண்டியதை இவருக்குப் பண்ணிறாதீங்க…“ என்கிறான் சிகாமணி.
“ஓகோ…“ என்கிறான் ராமசாமி. “இவன் அதிர்ஷ்டம் அது“ என்கிறான் ராமசாமி.
“அது அந்த ஆள் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். யார் கண்டா?“ என்கிறான் சிகாமணி.
“விஷயம் என்னன்னால்… அவரோட ரத்தம் A 2 B பாசிடிவ். அந்த ரத்தம் இங்க எந்த ரத்த வங்கிலயுமே கிடைக்கல்ல…“
“A 2 B . அப்டின்னா அடையார் ஆனந்த பவன் ஆச்சே…“ என்கிறான் சிகாமணி.
“BE SERIOUS“ என்கிறான் ராமசாமி. “B SERIOUS னு ரத்த வகை இல்லை அத்தான். A 2 B POSITIVE தான் இருக்கு. அவங்க கேட்டாங்க…“
“ம். ஆபரேஷன் சமயத்தில் ரத்தம் தேவைப்படும்… தேடித் தேடிப் பார்த்தும் டோனர்ஸ் கிடைக்கல்ல…“
“இப்ப மணி என்ன?“
“பன்னெண்டு இருபது.“
“ஏண்டி உன் ரத்தம் என்ன வகை? தெரியுமா?“ என திலகாவைக் கேட்கிறான் ராமசாமி.
“B POSITIVE“ என்கிறாள் திலகா.
“SHE IS ALWAYS POSITIVE“ என்கிறான் சிகாமணி. “உன் ரத்தம் என்ன வகைடா?“
“B NEGATIVE.“
“நினைச்சேன்“ என்கிறான் ராமசாமி. “இப்ப என்ன பண்றது சிஸ்டர்?“
“எப்பிடியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணணும்…“
அதற்குள் கீதா வருகிறாள். கூட அவள் அம்மா. “என்ன அன்க்கிள், சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரங் குடுக்கலைன்ற கதை மாதிரி…“
“சாமி இருக்கையில், பூசாரி கிட்ட ஏன் வரங் கேட்டே நீ?“ என்கிறான் சிகாமணி.
“ஆபரேஷன் தியேட்டர் ரெடின்றாங்க. ரத்தம் கிடைககலையாமே…“
“நம்ம தெரிஞ்சவங்க யார் கிட்டயும்  A 2 B பாசிடிவ் ரத்தம் இல்லை…“
கீதா முகம் மாறுகிறது. “சித்தப்பா வலியில் கஷ்டப் படாறார்னு சொன்னாங்க அன்க்கிள்…“ என அழுகிறாள். எதோ சொல்ல வந்தவன் சிகாமணி அப்படியே நிறுத்திக் கொள்கிறான்.
“இப்ப என்ன பண்றது அன்க்கிள்…“
“பார்க்கலாம்…“
“அவரை ஐ சி யூ வில் வெச்சிருக்காங்க அன்க்கிள். அதுனால அங்க எது நடந்தாலும் எதுவுமே நமக்குத் தெரியாது. கடைசிலதான் நமக்குச் சொல்லுவாங்க.“
தினகரன் வருகிறான். “தெரிஞ்ச அத்தனை பேர் கிட்டயும் சொல்லிட்டேன்.. ரத்தம் கிடைக்கல்லியே…“ என்கிறான் கவலையாய். “பயப்படாதீங்க“ என அவன் தோளைத் தொடுகிறான் ராமசாமி.
“அதானே கவலையாய் இருக்கு… சாயந்தரம் ஆபரேஷன்… இப்பவே மணி… ஒண்ணாகப் போவுது…“
நர்ஸ் வெளியே வருகிறாள். “என்ன ரத்தம் கிடைக்க எதும் வழி இருக்கா?“ என்று கேட்கிறான் ராமசாமி அவளிடம். அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். “இது மாதிரி ஆனதே கிடையாது. போன வாரங் கூட, எங்க கிட்டியே  A 2 B இருந்தது. ஒரு பஸ் விபத்து வந்தது. ஜி ஹெச் லேர்ந்து கேட்டு விட்டாங்களா…“
“இப்ப என்ன பண்றது அன்க்கிள்…“
சட்டென எழுந்து கொள்கிறான் ராமசாமி. “பார்க்கலாம்… இதோ வரேன்…“ என பரபரப்புடன் கிளம்புகிறான் ராமசாமி. “எங்க போறீங்க?“ என்று கேட்கிறாள் திலகா. அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் பரபரப்புடன் போகிறான் ராமசாமி.
ஸகூட்டரை தன் வீட்டுக்கு வந்து நிறுத்துகிறான் ராமசாமி. பாய்ந்து லிஃப்ட்டுக்கு ஓடுகிறான். அதன் அருகே யாரும் இல்லை. உளளே போய்க் கதவைச் சாத்துகிறான். லிஃப்ட் மைனஸ் 1 காட்டுகிறது. சாமியைக் கும்பிட்டுக் கொள்கிறான். மணி பார்த்துக் கொள்கிறான். வெளியே இருட்டில் ஓடுகிறான். வங்கிக்கு ஒரு ஃபோன் அடிக்கிறான். அலுவலகம். ரமேஷின் மேசையில் தொலைபேசி அடிக்கிறது. “ரமேஷ்…  நான் ராமசாமி… உடனே நீ அகர்வால் பிளட் பாங்க்குக்கு வா…“
“ஏய் இர்றா. எங்கருந்து பேசறே?“
“அதெல்லாம் அப்பறம்… விஷயம் சிரியஸ்…“
“யார் சீரியஸ்?“
“நீதான்…“
“என்னடா உளர்றே?“
“உன் ரத்தம் A 2 B பாசிடிவ் தானே?“
“உனக்கு எப்பிடித் தெரியும்?“
“கிளம்பி வா. அவசரம். அகர்வால் ரத்த வங்கி. நுங்கம்பாக்கம். தெரியும் இல்லே?“
“தெரியும்…“
அகர்வால் ரத்த வங்கியில் ரமேஷ் ரத்தம் தருகிறான். பின் எழுந்து கொண்டபடியே “யாருக்குடா?“ என்கிறான். “உனக்குதாண்டா“ என்கிறான் ராமசாமி. “என்னடா உளர்றே…“
“வழக்கம்போல…“ என அங்கேயிருந்து பரபரப்புடன் வெளியேறுகிறான். அவனை அதிர்ச்சியுடன் பார்க்கிறான் ரமேஷ்.
ராமசாமி மாடிப்படி ஏறி வரும் போதே நர்ஸ் ஆச்சர்யத்துடன் அவனிடம் அவனைப் பார்க்க கீதா ஓடி வருகிறாள். “கவலைப்படாதே கீதா… ரத்தம் ஏற்பாடு பண்ணியாச்சி… ஆபரேஷன் சக்சஸ்ஃபுல்லா நடக்கும்… எனிறு புன்னனகை செய்கிறான்.
அபதபடி அவனைக் கட்டிக் கொள்கிறாள் கீதா.
“எப்பிடிக் கிடைச்சது அன்க்கிள்…“
“அடையார் ஆனந்த பவன்ல வாங்கினீங்களா அத்தான்?“ என்கிறான் சிகாமணி.
“இவன் ஒருத்தன்…“ என்று ஆசுவாசமாய் அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்கிறான் ராமசாமி. மணி பார்க்கிறான் நாலு. “இவ்ளோ நேரம் பக் பக்னு உட்கார்ந்திருந்தேன் அன்க்கிள்…“
“அதான் கிளைமக்சுக்கு அழகு“ என்கிறான் சிகாமணி.
“ஆபரேஷன் இன்னிக்கு இருக்குமான்னு ஆயிட்டது எங்களுக்கு…“
“இருக்கும்“ என்கிறான் சிகாமணி.
“சித்தப்பா நல்லபடியா தேறி வருவார். கவலைப்படாதே“ என்று அவள் தலையை வருடிக் கொடுக்கிறான். தினகரன் வாய்விட்டு அவர்களைப் பார்த்து நெஞ்சில் கை வைத்துச் சிரிக்கிறான். “முழுசும் முடியட்டும்“ என்கிறான் ராமசாமி. “சரியான சமயத்தில் நாம அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திட்டோம். சரியான சமயத்தில் சரியான ட்ருட்மென்ட் குடுக்கறோம்… கவலைப் பட வேண்டாம்.“
திலகா அவனிடம் வருகிறாள். அவளைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறான் ராமசாமி.
“என்னத்தான் லிஃப்ட் வேணுமா?“ என்கிறான் சிகாமணி.


தொ ட ர் கி றே ன்
91 97899 87842
for bulk 5 chapters please visit

vasikarapoikalplus.blogspot.com

Monday, September 28, 2015

அத்,. 38 updated everyday திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 38
“அத்தான் சுத்தமா அவருக்கு ஞாபகமே இல்லை…“ என்று உதட்டைப் பிதுக்குகிறான் சிகாமணி.
“இப்ப பார்… இதோ பார்…“ ராமசாமி சட்டென்று தன் கழுத்தில் கிடக்கும் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்துக் காட்டுகிறான். “இது உன்னிது தானே? உங்கது தானே? இதாவது ஞாபகம் இருக்கா? ..குங்களா?“ ராமசாமி புன்னகையுடன் சின்னக்கனியைப் பார்க்கிறான்.
சின்னக்கனியின் முகம் ஆச்சர்யத்தில் விரிகிறது. “ஆகா அவருக்கு ஞாபகம் வந்திட்டது… நீங்க உட்காருங்க அத்தான்“ என்கிறான் சிகாமணி உற்சாகமாய். “ஹோ ஹோ“ என்று சிரிக்கிறான் சின்னக்கனி. அர்த்தம் புரியாமல் அவன் கூடவே சேர்ந்து ராமசாமியும் சிகாமணியும் சிரிக்கிறார்கள். “பொதுவா நாங்கதான்டா எங்க திறமையைக் காட்ட இந்த மாதிரி, கூடப் பேசிட்டிருக்கறவங்க கிட்டியே திருடிக் காட்டுவோம்… இந்தாளு… பாரு. பார்க்க அப்பாவி மாதிரி இருக்கான். என்னென்ன வேலையெல்லாம் காட்டறான்… இது என் சங்கிலிதான். எப்பிடித் திருடினே இதை என்கிட்ட யிருந்து?“
“ஐயோ நானா, திருடினேனா? ஈஸ்வரா? இது நீ… நீங்கதானே எனக்குக் குடுத்தீங்க…“‘
“நானா?“
“ஆமாம்.“
உனக்கா?“
“நிசந்தான் சின்னக்கனி.“
“பிறந்த நாள் பரிசா?“
ராமசாமி முழிக்கிறான்.
“இவங்க எல்லாரும் வாழ்க்கைல கஷ்டப் பட்டவங்க. போலிசுலயும் ஜெயில்லயும் அடி வாங்கித் துவண்டு கெடக்கறாங்க. நல்லவனா வாழ நினைச்சாலும் இவங்களை இந்த சமுதாயம் நல்லவங்களா ஒத்துக்கறது இல்லை. இவங்களை நல்லவங்களா நம்பறதும் இல்லை. நல்லவங்களா வாழ விடறதும் இல்லை. இவங்களுக்கு நான் உதவி செய்யிறேன்…“
“இந்த டயலாக் நல்லா இருக்கு அத்தான்…“
“உனக்கு? நல்லா கொழுகொழுன்னு சீமைப் பன்னி மாதிரி இருக்கே. உனக்கு எதுக்கு நான்? அதும் தங்கச் சங்கிலி?“
“இந்த உவமை கூட நல்லாதான் இருக்கு…“
“நீ சும்மா இர்றா. சின்னக்கனி. இங்க பார்… பாருங்க. அன்னிக்கு ரெண்டு வருஷம் முந்தி…“
“ஆரம்பிச்சிட்டாண்டா…“
“உனக்கு பதிலா நான் அடி வாங்கினேன்னு…. அது எனக்கே தெரியாது. நீதான் என்கிட்ட விவரம் சொன்னது.“
சின்னக்கனி காதைக் கிட்டே கொண்டு வந்து காட்டுகிறான்.
“என்ன கனி?“
“பூ. பூ இருந்தா வெச்சி விடு…“
“இங்க வரை உன்னைத் தேடி இந்த ராத்திரி நேரத்தில் நாங்க ஏன் வந்து மாட்டிக்கறோம்? உன்னை எனக்கு எப்பிடித் தெரியும்? உன் உதவி ஆள் மணி… அவனை எனக்கு எப்பிடித் தெரியும்? ரெண்டு வருஷம் முந்தி  மெரினா பீச்ல… உனக்கு… அந்த மாதிரி ஒரு கை கலப்பு… அது நடந்தது எனக்கு எப்படித் தெரியும்?“
“இது எல்லாம் நான் கேட்க வேண்டிய கேள்விகள்…“ என உடலைக் குலுக்கிக் கொண்டு சிரிக்கிறான் சின்னக்கனி. அவனைப் பார்த்து பரபரப்பாகிறான் மணி.
சின்னக்கனியின் கிட்டே வருகிறான் மணி. “அண்ணே?“ என்கிறான் கிசுகிசுப்பாய்.
“என்னடா? நீ என்ன சொல்லப் போறே?“
“உங்க கழுத்து…“
“என் கழுத்துக்கு என்னடா? தலைக்குக் கீழே இருக்கு அது பாட்டுக்கு…“
“இல்லண்ணே…“
“என்ன நொள்ளண்ணே…“
“சங்கிலி.“
“சங்கிலியா?“
“உங்க சங்கிலி உங்க கழுத்திலயே கெடக்கு அண்ணே…“
“என்னடா சொல்றே?“ என்று தன் கழுத்தைப் பார்க்கிறான் சின்னக்கனி. “ஏ ஆமாண்டா…“
“கதையில் நல்ல டிவிஸ்ட்“ என்கிறான் சிகாமணி.
“பரவால்ல அவனை ஒரு அறை விடுங்க. அவன் என் கூட வந்தாளு தான். இருந்தாலும் இவன் லொள்ளு தாங்க முடியல்ல…“
“அப்பிடிச் சொல்லாதீங்க அத்தான். இது வசிகரப் பொய்களா, நாயகன் பார்ட் ட்டூவா? எனக்கே குழப்பம்.“
“ஏற்கனவே இருக்கற குழப்பம் போதும்டா…“ என்றபடி ராமசாமி சின்னக்கனியைப் பார்க்கிறான்.
சின்னக்கனி தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றுகிறான். “இதான் என்னோடது… அப்ப அது?“
“இதுவும் உன்னோடது தான் கனி“ என்று புன்னகை செய்கிறான் ராமசாமி.
“என்னடா சொல்றான் இவன்?“ என்கிறான் சின்னக்கனி.
“அதைக் கழட்டுடா…“ என்கிறான் மணி.
“எனக்கு வேணாம்… உன் கிட்டியே இருக்கட்டும்.“ என கழற்றித் தருகிறான். “ரெண்டுமே தங்கம் தான்“ என்கிறான் சின்னக்கனி.
“அண்ணன் பார்த்த ஜோரில் தங்கமா கவரிங்கான்னு சொல்லிருவாரு…“ என்கிறான் மணி.
“நானும் சொல்வேன்…“ என்கிறான் ராமசாமி.
“எப்பிடி?“
“நான் பேங்க்ல அடகு வைக்க நகை வாங்குவேன்…“
சின்னக்கனியின் கண்கள் விரிகின்றன. “ரெண்டுமே ஒரே மாதிரி. அச்சு அசல்…“
“எது அசல், எது நகல்?“ என்கிறான் மணி.
“ரெண்டுமே அசல்“ என்கிறான் ராமசாமி.
“அத்தான் எனக்கு விஷயம் புரிஞ்சிட்டது…“ என்கிறான் சிகாமணி.
“உன்கிட்ட அப்பறம் பேசறேன்…“ என்கிறான் ராமசாமி.
“இவங்களை என்ன செய்யலாம்?“ என்று மணியிடம் கேட்கிறான் சின்னக்கனி. “பார்க்க அவங்க ஒண்ணும் பொய் கிய் சொல்ற மாதிரியும் இல்லை…“ என்கிறான் மணி.
“கரெக்ட்டு“ என்கிறான் சிகாமணி.
“உன்னைக் கேட்டேனா?“ என்கிறான் சின்னக்கனி. பிறகு மணியிடம் திரும்பி, “இவங்களை நம்ப முடியல்ல. இருந்தாலும் இதுல என்னவோ இடிக்குது… உண்மையாவும் சில விஷயங்கள் பேசறான்… நான்தான் தண்ணியைக் கிண்ணியைப் போட்டுட்டு…“ என யோசிக்கிறான்.
“ஆனால் ரெண்டு செய்ன் இருக்கே?“
“இப்ப தண்ணி போட்டிருந்தால் ஒண்ணு ரெண்டாய்த் தெரியும்…“ என்கிறான் சிகாமணி.
“சரி. வந்த வரை லாபம்… இது எனக்கு ராசியான சங்கிலிடா…“
“ஆமாம்“ என்கிறான் ராமசாமி. “உன்னைக் கேட்டேனா?“ என்று சீறுகிறான் சின்னக்கனி.
“சீமைப்பன்னி... ஹி ஹி“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“இல்ல. இதுமாதிரி ஒரு வசனம் நீ சொல்லுவே சின்னக்கனி…“
“வசனமா?“
“ஆமாம்…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி.
“என்ன வசனம்? சொல்லு சொல்லு சொல்லு…“
“இந்தச் சங்கிலியை மாட்டிக்கிட்டதுலயிருந்து….“ என நிறுத்துகிறான் ராமசாமி. சின்னக்கனி அவனையே ஆச்சர்யமாய்ப் பார்க்கிறான். “நான் மாட்டிக்கிட்டதே இல்லை“ என முடிக்கிறான் ராமசாமி.
“அட ஆமடா…“
ராமசாமி நம்பிக்கையுடன் அவனைப் பார்க்கிறான்.
“இதுவும் நான் ரெண்டு வருஷம் முந்தி சொன்னதா?“
“பின்னே? எனக்கு எப்பிடித் தெரியும்?“
“இதெல்லாம் நம்பறா மாதிரி…“
“இருக்கு அண்ணே. என்னவோ தூக்கத்தில் இருந்து எந்திரிச்சி வந்து பேசறா மாதிரி இந்தாளு டக்கு டக்குனு எடுத்து வைக்கறான்.“
“உன் சங்கிலியை உன் கிட்டயே தந்துட்டேன்… இப்ப உனக்கு ரெண்டு சங்கிலி…“
“அபேஸ் அடிக்காமலேயே…“ என்று சிரிக்கிறான்.
“இனிமேலும் கதையை வளத்த வேணாம்… இன்னிக்கு என்னோட பிறந்த நாள்… இன்னிக்கு நான் கத்தி எடுக்க மாட்டேன்.“
“ஆகா. அத்தான் வீட்ல பேரயி இந்த வசனத்தைக் குறிச்சிக்கணும்…“
“நீ படுத்தற பாடுக்கு நானே கத்தி எடுப்பேன்…“ என்கிறான் ராமசாமி.
“இவங்களை விட்டுறலாம்… இனி இவங்க வேவு பார்ககவோ, எதுக்குமே…  இந்தப் பக்கம் வரக் கூடாது.“
“சண்முகா டாக்கிஸ்ல படம் பார்க்கக் கூட வர மாட்டோம்…“ என்கிறான் ராமசாமி.
“ஆனாலும் எனக்கு உன்னாண்ட நிறைய சந்தேகம் இருக்கு…“
“இருக்கணுமே…“ என்கிறான் சிகாமணி.
“எங்க ஆளுங்க உன்னை எப்பவும் தொடர்ந்து வாச் பண்ணிக்கிட்டே இருப்பாங்க…“
ராமசாமி தலையாட்டுகிறான். “உன்னைப் பத்தி எனக்குத் தகவல் வந்திட்டே இருக்கும்… இதுவரை நீங்க என்னைப் பத்தி என்னென்ன தகவல்லாம் சொன்னீங்க. இனி நாங்க புட்டு வைக்கிறோம்…“
“புட்டு ஏன் வைக்கறீங்க? உங்க பொண்ணு வயசுக்கு வந்திட்டாளா?“ என்கிறான சிகாமணி.
“உன் பேர் என்ன சொன்னே?“
“சீமைப்பன்னி.“
“நான் சொல்லவே இல்லியே. நீங்க கேட்கவே இல்லியே?“
“சொல்லு சொல்லு.“
“ராமசாமி.“
“இவன்?“
“சிகாமணி. வருங்கால திரைப்பட இயக்குநர்… அது விஷயமாத்தான்…“ என அசடு வழிகிறான். “உங்களைப் பார்க்க வந்தோம்.“
“என்னை எதுக்குடா பாக்க வந்தே? நான் என்ன படமா எடுக்கப் போறேன்…“
“படமா.. கதையே நீங்கதான்…“ என சிரிக்கிறான் சிகாமணி.
“பாரு. உன் ரெண்டு வருஷத்துக் கதையை நான் தோண்டி எடுக்கறேன்…“ என்கிறான் சின்னக்கனி.
“இப்ப… நாங்க கிளம்பலாமா?“
“விடுங்க அவங்களை….“ என்கிறான் சின்னக்கனி.
“அந்தச் சங்கிலி… நல்ல ராசி. ஆனால் உனக்குதான் சின்னக்கனி…“
“ஏன்?“
“அது எங்கிட்ட வந்ததா? நான் மாட்டிக்கிட்டேன்… உங்கிட்ட…“ சின்னக்கனி சிரிக்கிறான். “அது உன்கிட்டியே இருக்கட்டும்…“ என்கிறான் ராமசாமி.
“வேற எந்த நாளைக்கு என்னாண்ட வந்திருந்தாலும் நீங்க இப்பிடி உசிரோட போயிருக்க முடியாது…“
“இனிமே வந்தால் உன் பிறந்த நாளைக்கு தான் வரணும் நாங்க…“ என்கிறான் சிகாமணி.
“வழி விடுங்க…“ என சின்னக்கனி அந்தச் சங்கிலியைப் பார்த்தபடி சொல்கிறான். கும்பல் விலக அவர்கள் போகிறார்கள். வழியில் அந்த நடனப் பெண் உட்கார்ந்திருக்கிறாள். சிகாமணி அவளைத் தாண்டிப் போகையில் “உன் பேர் என்ன?“ என்று கேட்கிறான். “மனோன்மணி“ என்கிறாள் அவள். “ரொம்ப முக்கியம்… வாடா“ என அவனை இழுத்துப் போகிறான் ராமசாமி.
அவன் போனதும் சின்னக்கனி “என்னடா இவனுகளைப் புரிஞ்சிக்கவே முடியல்லியே?“ என்கிறான் மணியிடம். “உங்க சங்கிலி மேட்டருண்ணே… அதுதான் பெரிய குழப்பம். மத்தது எல்லாம் வாய் வார்த்தை… அள்ளி விடறது. தெரிஞ்சிக்கிட்டு வந்து சவடால் பேசறது… ஆனால் சங்கிலி?“ என்கிறான் மணி. “அச்சு அசல். அதேதான்… இதுல எதோ பெரிய கதை இருக்கு மணி… பொறந்த நாள் அன்னிக்கு இப்பிடி எல்லாம் நடக்குதே?“
அப்போது அவர்களில் படித்த ஒருவன் “அண்ணே… இதைப் பாத்தீங்களா?“ என வருகிறான். அவன் கையில் செய்தித்தாள். தினத்தந்தி.
“என்னடா?“
“இந்த ஆள் ஒரு வங்கியில் வேலை செய்யறாரு.“
“அதான் அவரே சொன்னாரே. பேர் என்ன போட்டிருக்குது?“
“ராமசாமி. போட்டோவே போட்டிருக்கு அண்ணே.“
மணியைப் பார்த்துத் தலையாட்டுகிறான். “பரவால்ல. பொய் ஒண்ணும் சொல்லல்ல… படி அதை.“
“ரெண்டு வருஷம் முந்தி அவங்க வங்கில ஒரு கொள்ளை. அதை இப்பதான் கண்டுபிடிச்சிருக்காங்க. இவரே திருடங்களைப் பிடிச்சிக் குடுத்திருக்காரு.“
“அங்கயும் ரெண்டு வருஷமா?“ என யோசிக்கிறான் சின்னக்கனி. ‘நீ என்ன சொல்றே மணி?“
“செய்திகளை முந்தித் தருது தினத்தந்தின்னு போடுவாங்க. நமக்கு செய்தி தாமதமா வந்திட்டது அண்ணே...“ என்று சிரிக்கறின்.
“இப்ப என்ன பண்ணலாம் சொல்லு...“ என்கிறான் சின்னக்கனி.
“எப்பிடியும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிக்கிட்டா நல்லது“ என்கிறான் மணி. “ஆனால் அண்ணே அவன் நம்மளை வேவு பார்க்க வந்திருக்க மாட்டான்…“
“அது எனக்கே தெரியும்“ என்கிறான் சின்னக்கனி. “வேவு பார்க்க வந்திருக்கிறவன் நம்ம முன்னால வந்து இப்பிடி பெப்பேன்னு நிக்க மாட்டான்…“ என்று சிரிக்கிறான். “அதனால தான் அவனை இப்ப விட்டேன்…“ என்கிறான். “அவனாக் கூட வர்லடா. கூட ஒரு கிறுக்குப் பயல் வந்தான் பாரு.. அவன்தான் என்னமோ சினிமான்றான். கதைன்றான்.. அவன்தான் இவனை இழுத்துக்கிட்டு வந்திருக்கான்.“
“ஆமாண்ணே….“ என்கிறான் மணி. “உன்னையும் தெரியும்ன்றானே மணி?“ என்கிறான் சின்னக்கனி. “பாப்பம் பாப்பம்…“ என்று சிரிக்கிறான் மணி.
“அன்னிக்கு… பீச்ல… உங்களுக்கு ஞாபகம் இருக்குதா அண்ணே?“
“ஆமாமா. அந்த நாள்… ஞாபகம் இருக்கு. அப்போ… நமக்கே தெரிஞ்சிட்டது… இடம் சரி இல்லை. நம்மைச் சுத்தி ஒரு வியூகம் வகுக்கறாங்கன்னு தெரிஞ்சிட்டது. நானும் நீயும் மட்டும் தான் அப்ப. அவங்க எத்தனை பேர்னு தெரியல்ல… சட்னு சுதாரிச்சி நான் அரிவாளை உருவிக்கிட்டேன்… கண்ணுல தட்டுப்பட்ட ஒருத்தனைப் பார்க்க நான் ஓடினேன். அந்தக் கும்பல் நாலா பக்கமும் சிதறிப் போச்சு இல்ல… பீச்சே அல்லோல கல்லோமாயிட்டது…“
“ஆனால் அவங்க யாருன்னே தெரியல்லியே அண்ணே… இது நாள் வரை…“ என்கிறான் மணி. “அப்படியப்பிடியே… நாம சுதாரிச்சது தெரிஞ்சதும் வாபஸ் ஆயிட்டாங்களே…“
“ஆமாம்“ என்கிறான் சின்னக்கனி.
“இவன் என்னன்னா, நீங்க வாங்க வேண்டிய அடியை அவன் வாங்கிக் கிட்டேன்றான். அதுக்கு நீங்களே தங்கச் சங்கிலி போட்டீங்கன்றான்…“
“இதுல ஒண்ணு பாரு மணி… நானா போடாமல் இது எப்பிடி அவன் கைக்குப் போச்சு?“
“அதாண்ணே…“
“என்னை யாராவது தொட முடியுமா?“
“உங்க நிழலே கூட உங்களை விட்டுத் தள்ளிதான் நிக்கும் அண்ணே…“
“சரி. ரொம்ப சீன் போடாதே. இதுல எது உண்மை?“
“இப்ப உங்க கையில ரெண்டு தங்கச் சங்கிலி. இதுதான் உண்மை….“ என்று சிரிக்கிறான் மணி.
ராமசாமி வீடு. இரவு. மொட்டை மாடி. “அட போடா பைததியக்காரா… உன்னால தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடி வர வேண்டியதாப் போச்சு… உங்க அக்கா கிட்ட எதுவும் சொல்ல வேணாம்…“
“சொன்னால் என்னை வெளிய அனுப்பிருவா…“ என்கிறான் சிகாமணி.
“இதெல்லாம் நமக்குத் தேவையாடா?“ என பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. “சரி… அவனுக்கு நம்மை ஞாபகமே இல்லியேடா?“
“அதான் நான் சொன்னேனே அத்தான்… எனக்குப் புரிஞ்சிட்டதுன்னு சொன்னேன் இல்லியா?“
“என்ன அது?“
“அந்த சின்னக்கனி… அவன் உங்க வாழ்க்கையில் ரெண்டு வருஷம் முந்தைய வாழ்க்கையில் உண்டா?“
“இல்லையே.“
“இப்ப… நீங்க பழைய காலத்துக்குப் போனபோது அவன் வந்து சேர்றான்…“
“ஆமாம்.“
“அதும் எப்ப?“
“சொல்லு.“
“வழக்கமான நியதிப்படி நடந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. உங்க அப்பா பத்தி வர்ற போனை நீங்க தவிர்த்து விட்டு பீச் போறீங்க… அப்ப இந்த மாதிரி நடக்குது.“
“அதான் ALTERNATE REALITY. சொல்லிட்டியே.“
“இது?“ என்கிறான் சிகாமணி சிரிப்புடன். “இது REALITY அத்தான்.“
“இந்தச் சின்னக்கனி ரெண்டு வருஷம் முந்தி உங்களைப் பார்த்ததே கிடையாது. பார்த்திருக்கானா?“
“இல்லை.“
“அப்ப?“ என்கிறான் சிகாமணி. “அப்ப அவனுக்கு நம்மளை எப்பிடிப் புரியும்?“
“ஓகோ“ என்கிறான் ராமசாமி.
“உண்மையில் அந்த மெரினா பீச் சம்பவம்… உங்களுக்கு நடந்த மாதிரி, ரெண்டு வருஷம் முன்னாடி நடந்திருக்காது…“
“அதாவது REALITY ல வேற மாதிரி நடந்திருக்கலாம்… அப்படித்தானே?“
“அதேதான்.“
“அது நமக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.“
“இல்லவே இல்லை.“
“அதான் குழப்பம். அதுனால தான் அவன் கழுத்தில் ஒரு சங்கிலி, அது REALITY  உங்க கிட்ட இருந்ததே அது எங்க வந்தது… ALTERNATE REALITY ல வந்தது. சரியா?“
“ரெண்டு வருஷம் முந்தி நடந்த விஷயம் திரும்ப எனக்கு நடந்தால் கூட அவங்களை நிகழ் காலத்தில் பார்க்கிற போது கச்சிதமா ஞாபகம் இருக்கறது சாத்தியமே இல்லை. கல்யாண நாள்… நான் இவளை வந்து வெளியில் கூட்டிட்டுப் போனேன். அவளுக்கு இப்ப அதைப் பத்திக் கேட்டால்… ஒரளவு ஞாபகம் இருக்கும். என் அளவு கச்சிதமா அவளால ஞாபகப் படுத்திக்க முடியாது…“ என்கிறான் ராமசாமி.
“பாயின்ட்“ என்கிறான் சிகாமணி.
“வேண்டாத வம்புல நாம மாட்டிக்கிட்டோம்டா“ என்கிறான் ராமசாமி.
“அத்தான்… அஹ்“ என சிரிக்கிறான் சிகாமணி. “என்னடா?“ என்று திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “உங்களை…“ சிரிக்கிறான். “சீமைப் பன்னின்னான் பாருங்க…“ அடக்க முடியாமல் சிரிக்கிறான். “நல்லாதான் சொன்னான்…“
“உன்னால அதையெல்லாம் நான் வாங்கிக் கட்டிக்கிட்டேன்.“
“தப்பிச்சி வந்தாச்சி. அப்பறம் என்ன?“
“தப்பிச்சிட்டதா நீ நினைக்கிறே. இது இத்தோட விடுமா தெரியல்லியே…“ என்கிறான் ராமசாமி.
அப்போது திலகா மாடியேறி வருகிறாள். “சாப்பிட வரீங்களா? ரசம் சூடா வெச்சிருக்கேன்…“ என்கிறாள். அத்தோடு பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்.
அப்போது ராமசாமியின் அலைபேசியில் அழைப்பு வருகிறது. பேசியது ரமேஷின் அண்ணன் பெண். சட்டென அவள் குரல் அடையாளம் தெரியவில்லை. “என்னம்மா கீதா?“ என்கிறான். “எதுவும் அவசரமா?“
“ஆமா அங்க்கிள்…“ என அழுகிறாள் கீதா. ‘சித்தப்பாவுக்கு…“
“யாரு ரமேஷுக்கா?“
“என்ன தெரியல… திடீர்னு நெஞ்சு வலின்னு…“
“என்னம்மா சொல்றே?“
“அப்பாதான் ஒரு ஆம்புலன்ஸ் வெச்சி…“
“ஆம்புலன்சா?“
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அன்க்கிள்…“
“பயப்படாதேம்மா. இந்த நேரம் தான் நாம பதறாமல் வேலை செய்யணும்…“
“எந்த ஆஸ்பத்திரி?“
“ஜி கே எம்.“
“நான வரேன்… கவலைப் படாதே.“ என்று அலைபேசியை வைக்கிறான்.
“சீக்கிரம் சோத்தைப் போடு… நான் அவசரமா ஜி கே எம் வரை போகணும்…“
“என்னாச்சி?“ என்கிறாள் திலகா.
“ரமேஷ்… திடீர்னு நெஞ்சு வலின்னானாம்… என்னன்னு தெரியல. ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்…“
“ச். என்ன திடீர்னு?“
“நெஞ்சு வலி லெட்டர் போட்டுக் கிட்டெல்லாம் வராதுடி…“ என்கிறான். ரசத்தை அப்படியே கையில் வாங்கி உறிஞ்சுகிறான். “ரசமான ரசம்“ என்கிறான். “அனுபவிக்க நேரம் இல்லை…“
“பாவங்க ரமேஷ்“ என்கிறாள் திலகா. “நானும் வரட்டா?“
“நான் முதல்ல போய்ப் பாத்திட்டு வரேன். அப்பறமா நாம ரெண்டு பேருமாப் போகலாம்…“
அப்படியே வெளியே ஓடுகிறான். லிஃப்ட்டை அழுத்துகிறான். அது மைனஸ் 1 காட்டுகிறது. அதை மறுத்து ஜீரோ அழுத்துகிறான். நிகழ்காலம். கீழே வந்து ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். வெளியே இருட்டிக் கிடக்கிறது. சிவப்பு பின்விளக்குடன் ஸ்கூட்டர் அந்த இருளைக் கிழித்துப் போகிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk 5 chapters please visit
vasikarapoikalplus.blogspot.com