வசிகரப் பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்
•
அத்தியாயம் 6
•
ராமசாமி அலுவலகத்துக்குக் கிளம்பும்போது
லிஃப்ட்டில் ஏற்கனவே பக்கத்து வீட்டு கணபதி இருக்கிறார். “வாங்க வாங்க“ என அவர் அவனை
உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே புகுந்து ராமசாமி பொத்தான்களைப் பார்க்கிறான். சமத்தாய்
அது, பூஜ்யம் முதல் எட்டு வரை காட்டுகிறது.
“எங்க ஆபிசுக்கா?“
“இன்னும் கேட்கல்லியேன்னு நினைச்சேன்…“
என்றபடி அவன் லிஃப்ட் பொத்தான்களையே பார்க்கிறான்.
“என்ன பார்க்கறீங்க?“
“அதிசய லிஃப்ட் சார் இது…“
“ஏன்?“
“எனக்கு மட்டும்….“ என்றவன் நிறுத்தி,
“ஒண்ணில்ல“ என்கிறான்.
“உங்களுக்கு மட்டும்னா ஒண்ணு. எனக்கும்
சேர்த்துன்னா ஒண்ணில்ல… ரெண்டு“ என்கிறார் கணபதி. கீழே தரைத் தளம் வருகிறார்கள். “எங்க
கிளம்பிட்டீங்க கணபதி சார்?“
“கோவில் வரைக்கும் போறேன். சனிக்கிழமைக்கு
சனிக்கிழமை சனிஸ்வரனுக்கு எண்ணெய்க்கிழி போடுவேன்.“
“இன்னிக்கு சனியா? வர வர கிழமையே
ஞாபகத்தில் இல்லைன்னு ஆயிட்டது என் நிலைமை.“
“இன்னிக்கு உங்களுக்கு அரை நாள் தானே?“
“ஆமாம். என்ன பிரார்த்தனை?“
சட்டென கணபதி கண் கலங்குகிறார்.
“தெரியாமல் கேட்டுட்டேன்…“ என அவர் கையைப் பிடித்துக் கொள்கிறான். “பரவால்ல. என் பொண்ணு காணாமல் போன நாள்லேர்ந்து
யாரோ சொன்னாங்கன்னு நான் சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையானால் எண்ணெய்க்கிழி போடறதுன்னு
செஞ்சிட்டு வரேன்…“
“அப்படிச் செஞ்சால் பொண்ணு திரும்பக்
கிடைப்பாள்னு சொன்னாங்களா?“
“ஆமாம்.“
“எத்தனை வருஷமா கோவிலுக்குப் போயிட்டு
வரீங்க?“
“மூணு வருஷமா.“
“அட பாவமே.“
“கடவுள் இன்னும் கண் திறக்கல்ல…“
“மூடல்லன்னு சொல்லுங்க.“
“ஏன்?“
“ஏன்?“
“சனிஸ்வரன் கண் திறந்தால் நல்லது
இல்லை. திறந்த கண்ணை அவர் மூடிக்கொண்டால் நல்லது…“ என்றபடி ஸ்கூட்டரை ஸ்டாண்டில் இருந்து
எடுத்து உதைக்கிறான். “அடி உதவறா மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான். இந்த ஸ்கூட்டரும்
அப்படித்தான். உதைச்சாதான் கிளம்புது சார்…“
கணபதி சிரித்தபடி டாடா காட்டுகிறார்.
•
அலுவலகத்தில் ரமேஷ் அவனைப் பார்த்ததும்
ஓடி வருகிறான். “ஏண்டா நாலு நாளா வேலைக்கு வரல்ல?“
“அப்பிடியா?“
“என்ன நொப்படியா? நான் உன்னைத் தேடி
வீட்டுக்கு வரலாமான்னு பார்த்தேன். உன் மொபைல் வேற….“
“தொடர்பு எல்லைக்கு வெளியேன்னு வந்ததா?“
“லீவு கூடச் சொல்லாமல் விட்டுட்டியேடா?“
“அது ஒரு பெரிய கதை… ராமாயணம். அப்பறமாச்
சொல்றேன்…“
“ராமாயணம் எனக்குத் தெரிஞ்ச கதை தான்.“
“அப்ப மகா பாரதம்…“ என்றபடி மேனேஜர்
அறை பார்க்கப் போகிறான்.
உள்ளேபோய் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து
இடுகிறான். மேனேஜர் அறையில் தற்போதைய மேனேஜர். கே. ராமகிருஷ்ணன் என பெயர்ப் பலகை இருக்கிறது.
“வாய்யா மாப்ளை… லீவு எடுத்தால் சொல்றது கூட இல்லையா?“
“பல் வலி சார்.“
“உன் ஒய்ஃப்ட்டச் சொல்லி அவளை லீவு
சொல்லச் சொல்லி யிருக்கலாமில்லே?“
“அவளுக்கு தான் சார் பல் வலி. நான்,
கூட இருந்தேன்“ என்று வெளியே போகிறான் ராமசாமி.
“நாலு நாள் வேலை பாக்கி நிக்குது
உனக்கு“ என்கிறான் ரமேஷ். “அதெல்லாம் கடகடன்னு முடிச்சிருவேன். கவலைப் படாதே.“
“நாலு நாள்ல உன்கிட்ட என்னவோ மாற்றம்
தெரியுதேடா?“
“என்ன மாற்றம்?“
“உற்சாகமாய் இருக்கே. உன் வயசில்
ரெண்டு வருஷம் குறைஞ்சாப் போல…“
“ஹா ஹா. தெரியுதா? தெரியுதா?“ என
அவன் தோளைத் தட்டுகிறான் ராமசாமி. “நான் நினைச்சால் எனக்கு ரெண்டு வயசு குறைஞ்சிரும்…“
“சவடால் சிங்காரம்.“ அவனை ரமேஷ் கேலி
செய்கிறான். “பேசிக்கிட்டே டிராஃப்ட்ல ரெண்டு வருஷம் முந்திய தேதி போட்றாதே, அப்பனே
சுப்பராயா?“
“நல்ல வேளை. ஞாபகப் படுத்தினே. நான்
அப்பபடித்தான் போட இருந்தேன்,“ என டிராஃப்ட் எழுதுகிறான் ராமசாமி.
வேலை மும்முரப் படுகிறது. தன் முன்னால்
யாரோ நிற்பதைப் போல பொறி தட்டுகிறது. நிமிர்ந்து பார்க்கிறான் ராமசாமி. அந்த லோன் பார்ட்டி.
ஏற்கனவே இரண்டு வருடம் முன்னால் பார்த்தவன்.
“மேனேஜரைப் பார்க்கணும்.“
“என்ன விஷயம்?“
“ஒரு லோன் விஷயமா…“
“நேத்து கூட வந்திருந்தீங்க போலுக்கே?“
“நான் ரெண்டு வருஷமா அலையிறேன் சார்.“
“தெரியும்.“
“போய்ப் பாக்கலாமா சார்?“
“பாருங்க.“
“நல்ல மூடுல இருக்காரா சார்?“
“அதையும் போயி நீங்களே பாருங்க…“
என கையால் உள்ளே காட்டி அனுப்பி வைக்கிறான். அவர் உள்ளே போகிறார்.
•
டீக்கடையில் ரமேஷும் ராமசாமியும்
டீ அருந்துகிறார்கள். எதிரே மெக்கானிக் ஷெட். ரமணி வணக்கம் சொல்கிறான். “வண்டி சரியாப்
போகுதா சார்?“ தலையாட்டுகிறான் ராமசாமி. டீ கிளாஸை உயர்த்தி அவனுக்கு டீ வேணுமா, என்று
கேட்கிறான் ஜாடையாய். வேணாம் சார், என ஜாடையிலேயே மறுக்கிறான் ரமணி.
“உங்க அப்பாவுக்கு உடம்புக்கு எப்பிடி
இருக்கு ரமேஷ்?“
“கஷ்டப்படறாரு. எழுந்து நடமாடவே சிரமப்படறாரு.
வயசாயிட்டது. உதவிக்கு யாரையாவது வைக்கலாம்னா கூட அண்ணன் விட மாட்டேங்கறான். அவனுக்கு
அப்படியே அப்பா பணத்தைச் சுருட்டிறணும்னு ஒரு இது…“
“ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதிரி.“
“உன்னைப் பார்க்கற வரை, எனக்கு அண்ணனே
இல்லியேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன்.“
“உன்னைப் பார்த்தப்போ உனக்கு அண்ணன்
இல்லியேன்னு நான் சந்தோஷப் பட்டேன்.“
“உன் அப்பா இறந்துட்டார்னா இந்த சொத்தையே
அவன் அமுக்கிக்கிட்டு உன்னை வெளிய போகச் சொல்வான்னு தோணுதுடா.“
“அதான் எனக்கும் பயமா இருக்கு. ஆனால்
இது பூரா அப்பாவின் சொந்த சம்பாத்தியம். அப்பாவைப் பாத்துக்க அவனால முடியாது. அவரோட
சொத்து மாத்திரம் வேணும் அவனுக்கு.“
“சரி. என் கதை தீராத கதை. விட்டுத் தள்ளு“ என்கிறான்
ரமேஷ்.
“இந்த இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது.
ஞாபகம் இருக்கா உனக்-கு ரமேஷ்?“
“அதன் அடியில ஒரு கை ரேகை சோசியன்
கூட உட்கார்ந்திருப்பான். ஞாபகம் இருக்கு. அதுக்கு என்ன?“
“இல்ல. உனக்கு ஞாபகம் இருக்கான்னு
கேட்டேன்.“
“அவன் ஒருநாள் உனக்கு ஒரு பலன் சொன்னான்.
அது சரியா பலிச்சதுன்னு சொன்னே நீ…“
“என்ன சொன்னான்? எனக்கு தீயில கண்டம்னு
சொன்னான் ஒருநாள். அதுதான் ஞாபகம் இருக்கு. வேற என்ன சொன்னான்?“
“மரத்தை வெட்டிட்டாங்க. அவனும் காலி
பண்ணிப் போயிட்டான்… அவன் கதை நமக்கு என்னத்துக்கு? நீ ஏண்டா நாலு நாளா அப்க்ஸ்கேன்ட்
ஆயிட்டே? என்னாச்சி உனக்கு?“
“சஸ்பன்ஸ்“ என்கிறான் ராமசாமி.
“உன் சஸ்பென்ஸ் நாசமாப் போக. ரெண்டு
வருஷமா இதே சோலி உனக்கு. எதாவது சொல்லி என்னைக் குழப்புவே. அப்பறம் அதையெல்லாம் மறந்துரு.
சாரி. டே இட் ஈசி-ன்னுவே.“
“இதையும் டேக் இட் ஈசி.
“எதையும்?“
“ஒருவேளை நாளைக்குக் கூட நான் மட்டம்
போடலாம்…“
“ஏன்?“
“சஸ்பென்ஸ்.“
“ஆரம்பிச்சிட்டாண்டா…“
“ஆனா ஒண்ணு. நான் லீவுன்னா, தயவு
செஞ்சி என் வீட்டுக்கு மாத்திரம் போன் பண்றதோ, நேர்ல வந்து விசாரிக்கறதோ, செய்யாதே.
சரியா?“
“ஏன்?... சஸ்பென்ஸ்- அதானே?“
“அதேதான்.“
•
அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள்.
மணி 3,00. மேனேஜர் கூப்பிடுகிறார். அவனிடம் ஒரு கவரைத் தருகிறார். “இதுல ஒரு கையெழுத்து
போடு.“ ஒரு லெட்ஜரைக் காட்டுகிறார்.
“என்ன சார்?“
“உன் சம்பளம்.“
“சம்பளமா?“
“என்?“
“நான் நேத்தே வாங்கிட்டேனே சார்.“
“நேத்தி நீ வேலைக்கே வர்லியேப்பா?“
“ஆமா சார். நான் வேலைக்கு வரல்ல சார்…“
“என்னாச்சி உனக்கு?“
“பல் வலி சார்.“
“உன் மனைவிக்குத் தான் பல் வலின்னே?“
“ஆமா சார். நான் கூட இருந்தேனா. எனக்கும்
வந்திட்டது.“
“பல் வலி தொத்து வியாதியா என்ன? நான்
கேள்விப்பட்டதே இல்லை.“
“நானும் கேள்விப்பட்டது இல்லை சார்.
அது திடீர்னு சம்பளம்னு கூப்பிட்டுக் குடுத்தீங்களா… அதான்.“
“அதுனால பல் வலி கூட வருமா?... சம்பளப்
பணம் கவர்ல போட்டு மாசாமாசம் குடுக்கறது தானே?“
“இந்த மாசம் ஸ்பெஷல் சார்.“
“உனக்கு என்னவோ ஆயிட்டது. எண்ணிக்கோ.“
“எவ்வளவு இருந்தாலும் எக்ஸ்ட்ரா தான்
சார். திலக், உன் கடனை அடைச்சிட்டேன்“ என்கிறான் உற்சாகமாய்.
“யார் திலக்?“
“என் பொண்டாட்டி. திலகா சார்.“
“அவகிட்டியே கடன் வாங்கினியா?“
“சஸ்பென்ஸ்“ என்றபடி உற்சாகமாக வெளியே
போகிறான்.
•
நடையில் துள்ளலுடன் ராமசாமி தன் இருக்கைக்குத்
திரும்புகிறான். ரமேஷ் அவனைப் பார்க்கிறான். “ரொம்ப உற்சாகமா இருக்கியேடா.“
‘சம்பள கவரில் இருந்து ரெண்டாயிரம்
வெளியே எடுக்கிறான். “இது அவளுக்கு. கடன்.“ மீதியை கீழ்ப் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான்.
“இது? இனி இதுமாதிரி சம்பளக் குறைவு வந்தால் போட்டு இட்டுக்கட்ட… சரிதானே?“
“சரியில்லை.“
“என்ன சரி இல்லை?“
“நீ செய்யறது… கேட்டால், என்ன சொல்லப்
போறே?“
“சஸ்பென்ஸ். அதேதான்“ என்கிறான் ராமசாமி.
வெளியே போய் ஸ்கூட்டரை உதைத்த உதையில் உற்சாகம் தெரிகிறது.
•
மொட்டை மாடி. சிகாமணியும் அவனும்
காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். “ஒரு கதை சொல்லவா சிகாமணி?“ என ஆரம்பிக்கிறான்
ராமசாமி.
“அத்தான். வழக்கமா நாந்தான் உங்களுக்குக்
கதை சொல்லுவேன்… இன்னிக்கு நீங்களா ஆரம்பிக்கறீங்க?“
“நீ நம்புவியா நம்ப மாட்டியான்னே
தெரியல்லியே இந்தக் கதையை…“
“நம்ப முடியாத கதை ஒண்ணை வெச்சிக்கிட்டு
அதை நம்பறாப்ல சொல்லணும் அத்தான். அதான் சினிமா.“
“அப்பிடியா?“
“நாளைக்கு ஒரு கம்பெனில வரச் சொலலி
யிருக்காங்க. அதுக்கு இபபிடி ஒரு கதை தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்.“
“அந்த… கோமால ஒரு அப்பா, அந்தக் கதை
என்னாச்சி?“
“அது பாதி வரை யோசிச்சி வெச்சிருக்கேன்.
இது வேற கம்பெனி. வேற மாதிரியா எதிர்பார்க்கறாங்க… நம்ம சரத்குமார்னாலும் தயாரா இருக்கணும்.
கமல்னாலும் தயாரா இருக்கணும். இல்லியா அத்தான்?“
“ஒரு ஃபான்டசி கதைடா.“
“ஃபான்டசியா?“
“ஆமாம். நடக்கவே நடக்காதுன்னு நினைக்கறது
எல்லாம் சில சமயம் நம்ம வாழ்க்கைலயே நடந்துருது. ஆச்சர்யமான விஷயம், இல்லியா?“
“அப்படியெல்லாம் நடந்தாதான் அது சுவாரஸ்யம்
இல்லியா அத்தான். சரி. நீங்க என்ன யோசிச்சீங்க?“
“ஒருத்தன்… எதிர்பாராமல் அவன் இறந்தகாலத்துக்குப்
போக முடியுது…“
“அதெப்பிடி முடியும்?“
“அதான் கதைடா. ஒரு நதி. அதைத் தாண்டி
இராத்திரி இருட்டில் போகிறான். திடீர்னு அவன் வேற உலகத்துக்குப் போயிர்றான்…னு சொல்றாமாதிரி…
இவன் வேற காலத்துக்குப் போயிர்றான்.““
“இது எனக்கு எப்படி சாத்தியம்னு தெரியல்ல.
ஆனால் இதில் இன்டர்வல் பிளாக் சட்னு சொல்லிருவேன் அத்தான்…“
“என்ன அது?“
“அவன் திரும்பி நிகழ் காலத்துக்கு
வர முடியாமல் அந்தக் காலத்தில போயி மாட்டிக்கறான். அதான் அத்தான் இடைவேளை. ஜனங்க எல்லாம்
அவசர அவசரமா ஒண்ணுக்குப் போயிட்டு திரும்ப உள்ள வருவாங்க…“
“நீ வேற பயமுறுத்தாதே. எனக்கே பயத்தில்
ஒண்ணுக்கு வரும் போலருக்கு. வா கீழே போகலாம்“ என்கிறான் ராமசாமி.
தொடர்கிறேன்
91 97899 87842
No comments:
Post a Comment