Sunday, August 30, 2015

வசிகரப் பொய்கள் - அத்தியாயம் 10

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வ சி க ர ப்
பொ ய் க ள்
எஸ். சங்கரநாராயணன்




அத்தியாயம் 10

கோவில் வளாகம். திலகா மகிழ்ச்சியாக இருக்கிறாள். “இப்படி எதிர்பாராமல் லீவு எடுத்துக்கிட்டீங்கன்னா தான் நாம வெளிய கிளம்பவே முடியுது…“ என்கிறாள்.
“உங்களுக்கு வீட்டில இருக்கிற நல்ல புடவையை எடுத்துக் கட்டிக்கிட்டு நாலு பொண்ணுக முன்னால தலை நிமிர்த்தி வளைய வரணும். அதுக்கு கோவில், பிரார்த்தனைன்னு ஒரு சாக்கு. புருஷன் சபரிமலைக்கு மாலை போட்டு, படு சிரத்தையா விரதம் இருப்பான். அவன் பூஜை பண்ணும்போது கூட நீங்க பட்டுப்புடவை என்ன, தலை நிறையப் பூ என்னன்னு பண்ற அட்டகாசம். அவன் விரதத்தையே கலைச்சிர்றாப்ல பாடு படுத்திர்றீங்க“ என்கிறான் ராமசாமி.
“பரவால்ல. இந்த இடக்குப் பேச்சு பேசினால் நீங்க நார்மலா இருக்கீங்கன்னு அர்த்தம்…“
“கோவணங் கட்டாத ஊரில் கோவணங் கட்டினவன் கோமாளின்னு வசனம். ஊர் எப்பிடியோ அப்பிடிப் போயிறணும். அதுல புதுசா எதும் நடந்தால் வாயை மூடி தன்னளவில் வெச்சிக்கணும். ஆல் இந்தியா ரேடியோ. சென்னை வானொலி நிலையம்னு ஒலிபரப்பு செய்தால் இதான் வினை…“
“இப்ப என்ன சொல்ல வரீங்க?“
“வாழ்க்கைல நமக்குப் புரியாத அநேகப் புதிர்கள் இருக்கு திலக். நாம அறிஞ்ச வாழ்க்கையை ஒரு வகையா புரிய வைக்க தர்க்கம் முயற்சி பண்ணுது. அது நம்பற ஒண்ணை உண்மைன்னு அது முன் வைக்கப் பார்க்கிறது.“
“இன்னிக்கு சிகாமணி, கூட இல்லையாக்கும்…“
“சரி. விடு….“
“சொல்லுங்க சொல்லுங்க.“
“இல்ல. இப்பிடி யோசிச்சிப் பாரு இவளே. உண்மைன்னு நாம நம்பறதையே இன்னொருத்தன் வந்து பொய்னு காட்டிட்டுப் போயிர்றான். அதே போல பொய்னு நாம நினைக்கறதே கூட உண்மையாவும் ஆயிறக் கூடும். எல்லாமே தர்க்கத்திலும், அதை நாம புரிஞ்சிக்கறதிலும் இருக்கு. புரிஞ்சிக்கறதுக்கு முடிவே கிடையாது. எத்தனையோ கோணம்,, எத்தனையோ திசை இருக்கு அதுக்கு.“
“போதும்னா விடவா போறீங்க?“
“உனக்குப் புரியறா மாதிரி ஒரு விஷயம். இப்ப மணி என்ன?“
“மாலை ஆறே முக்கால்.“
“அது சரியா?“
“சரிதான்.“
“அது உண்மையா?“
“உண்மைதான்.“
“ஆனால் பக்கத்து நாட்டிலேயே இப்ப மணி ஆறே முக்கால் கிடையாது. மாறிப் போகுது. இல்லியா?“
திலகா அவனைப் பார்க்கிறாள்.
“இங்க இப்ப இராத்திரி. பூமியின் அந்தப் பக்கம்? இப்ப பகல். இல்லியா?“
“நானே சொல்லிர்றேன். இது நமக்கு மேற்கு. அங்க இருக்கறவனுக்கு? இதுவே கிழக்கு. அதானே?“
“அட என் சமத்துச் சக்கரைக் குட்டி… அதேதான். ஆக உண்மையே இங்க டான்சாடிட்டிருக்கு.“
“அதுக்காக இறந்த காலத்துக்கு நான் போனேன். எதிர்காலத்துக்குப் போனேன்றது…“
“ஏன் முடியாது? நம்ம காலக் கணக்கு, சூரிய ஒளி நம்மை வந்தடையற வேகத்தில் நாம நம்ம கண்ணால பார்க்கிற இந்த உலகத்தின் கணக்கு. அதைவிட வேகமா நாம பயணப் பட்டால், நாம மத்தவங்களுக்கு முந்தியே அதே காலத்துக்குப் போயிற மாட்டமா? அது சாத்தியமா இல்லியா?“
“இந்த அஞசநேயர்… நான் இவரைத் தான் நம்பியிருக்கேன்.“
“எதுக்கு?“
“உங்களுக்கு சீக்கிரம் குணம் ஆகணும்னு…“
“வடை மாலை சாத்தப் போறியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“தர்க்கத்தை வெச்சே தர்க்கத்தைக் கேலி செய்யற உதாரணங்களும் உண்டு“ என்கிறாள் திலகா.
“அப்பிடியா?“
“ஓ எஸ். கடவுள் யாருமே தாண்ட முடியாத ஒரு சுவரைக் கட்டுவாரான்னு கேட்பார்கள்.“
“ஓகோ. அதுல என்ன?“
“அவர் சர்வ வல்லமை உள்ளவர் ஆச்சே. கண்டிப்பா கட்டுவார்னு ஒரு பதில் சொல்லலாம் இதுக்கு. உடனே அடுத்த கேள்வி. அப்படின்னா அந்த சர்வ வல்லமை உள்ளவரால அந்தச் சுவரைத் தாண்ட முடியுமா முடியாதா?...ன்னு வரும்.“
“வெரி குட். கோழி முந்தியா முட்டை முந்தியான்றதே பெரிய கேள்வி தானே?“
“அதையெல்லாம் விடடுருவம். நீங்க என்ன செய்யறீங்க. நீங்களும் குழம்பாமல், எங்களையும் குழப்பாமல் இருக்கணும். சரியா?“
“முயற்சி செய்கிறேன். உங்களைக் குழப்பறது இல்லை என் வேலை. உங்களுக்குப் புரிய வைக்க முடியாத பட்சம், அது… அப்படித்தான் எடுத்துக் கொள்ளப் படும்னு எனக்குத் தெரியுது. என்னை நீங்க நம்ப வணோம். என்னைப் பற்றி பயப்படவும் வேணாம். ஏ…. இது எந்தத் தெரு?“
அவர்கள் நிற்கிறார்கள். “ஆஞ்சநேயர் கோவில் வடக்குத் தெரு.“
“இந்தத் தெரு தான்…“
“என்ன?“
“ஒரு பர்ஸ்… எடுத்தேன்.“
“எங்க?“
“ஆபிஸ் விட்டு வர்ற வழியில்… அதில் இந்தத் தெரு முகவரி தான் இருந்தது.“
பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்சை எடுக்கிறான். அதில் ஒரு மூதாட்டியின் படம் இருக்கிறது. முகவரியை வாசிக்கிறான். “கதவு இலக்கம் 21.“
“நான் கூட கேட்கணும்னு இருந்தேன். ஏது இந்தப் பர்சுன்னு… அதுக்குள்ள கலாட்டா ஆயிட்டது.“
“ஒரு கலாட்டாவும் இல்லை. வா.“
கதவு இலக்கம் 21 கண்டுபிடிக்கிறார்கள். கதவைத் தட்டவும் “யாரது?“ என வயதான குரல். “சார்? ஒரு நிமிஷம்…“
“யார் நீங்க?“ என அவர் மீண்டும் கேட்குமுன் இருமல் சத்தம் வருகிறது. மெல்ல நிதானமாய் அவர் வெளியே வருகிறார். “என்ன வேணும்? வீடு வாடகைக்குக் கேட்டு வரீங்களா?“
“இல்லை சார். இந்தப் பர்ஸ்?...“
“பர்சா?“ என்றவர் “உள்ளே வாங்க“ என்றபடி அவர் தள்ளாடி உள்ளே போகிறார். “நான் பர்சே வெச்சிக்கர்றது இல்லை. என் பர்ஸ் ஒரு தடவை தொலைஞ்சி போச்சி…“
“ரெண்டு வருஷம் முந்திதானே?“
திலகா ஆச்சர்யத்துடன் அவனைத் திரும்பிப் பார்ககிறாள். அவன் புன்னகைக்கிறான். அவர் ஆச்சர்யத்துடன் திரும்பி அவனைப் பார்க்கிறார்.
“உனக்கு எப்பிடித் தெரியும்?“
“இதுவா பாருங்க“ என நீட்டுகிறான்.
“ஆகா, இதே தான். தம்பி… இது தொலைஞ்சதில் இருந்து எனக்கு உடம்பே ஷீணமாயிட்டது ஏன் தெரியுமா?“
“அந்தப் படம். அது உங்க மனைவியா?“ என்று கேட்கிறாள் திலகா.
“ஆமாம்மா. ரெண்டு வருஷம் முந்தி அவ என்னைத் தனியா விட்டுப் போயிட்டாள். இறந்து போயிட்டாள். அவ படம்னு என்கிட்ட இருந்தது இந்த ஒரு படம் தான். பர்சில் வெச்சிருந்தேன்… அந்தப் பர்சில் அதிகம் பணம் ஒண்ணும் இல்லை. ஆனால் அதில் அவ படம் இருந்தது. அது காணாமல் போனது தான் எனக்குப் பெரிய விஷயமா இருந்தது…. அது இத்தனை வருஷம் கழிச்சி… அது எப்பிடி தம்பி? உங்க கையில எப்பிடி வந்தது?“
“அதான் சார் எனக்கே ஆச்சர்யம். திரும்ப உங்க மனைவி படத்தோட உங்க கைக்கு வந்தது பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் பார். வா திலக். போகலாம்…“ என வெளியேறுகிறான்.
கூட வருகிறாள் திலகா. “என்னங்க இது?“
“எல்லாம் உன ஆஞ்சநேயர் அருள்தான்…“ என்று புன்னகைக்கிறான்.
“பர்சு?“
“ஆமாம்.“
“மணிரத்தினம் படம் மாதிரி இருக்குங்க டயலாக். இந்தப் பர்சை எப்ப கண்டுபிடிச்சி எடுத்தீங்க?“
“ரெண்டு நாள் முந்தி…“
“அவர் தொலைச்சது ரெண்டு வருஷம் முந்தின்றாரே?“
“அதுவும் சரிதான்.“
“ரெண்டு நாள் ரெண்டு வருஷமாயிட்டதா?“
“எப்பிடி வேணா வெச்சிக்கோ.“
“அப்ப அந்த சுகன்யா? தற்கொலை முயற்சி?“
“அதே அதே. ஆனால் நீ இதையெல்லாம் மறந்துரு இவளே. எனக்கு என்னவோ ஆகுது. நானே அதில் இருந்து தெளிந்து தேறி வருவேன்… கவலைப்படாதே.“
“கவலைப்படாதேன்றீங்க பாருங்க….“
“அப்பதான் கவலையே வருதுன்றியா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “ஒரு வகையில் நீ அந்த டைரியையும் பேப்பர்களையும் எடைக்குப் போட்டதே கூட நல்லதுதான். எனிவே இனிமே நானும் அதைப் புரட்டிப் பார்க்க நினைக்கல்ல.“
“ஏன்?“
“ரெண்டு விஷயம்.“
“என்ன?“
“ஒண்ணு. பழைய காலத்தை நம்மால மாத்த முயற்சி பண்ணியும் முடியவில்லை. அது தெரிஞ்சிட்டது. கடந்த கால சோகங்களை எதுக்கு மனசில் போட்டு அடைச்சிக்கணும். வருத்தப்படணும்…“
“வேரி குட். ரெண்டாவது?“ என்று கேட்டாள் திலகா.
“ம். ரெண்டாவது?“ என யோசிக்கிறான். “ஆ நினைவு வந்திட்டது. ரெண்டாவது. இந்த ரெண்டு வருஷத்தில் முக்கியமான விஷயம் எதும் நடந்திருந்தால் எனக்கே அது ஞாபகத்தில் இருக்கும். அதை நானே மீட்டெடுப்பேன். என்ன ஒரு ரெஃபரன்ஸ்னுதான் நான் டைரியையோ, பேப்பரையோ பார்ப்பேன். அது இல்லாட்டியும் தேவலை…“
“பேப்பரைத் தான் போட்டேன். டைரியை நான் வெச்சிருக்கேன்“ என்றாள் திலகா.
“என்னடி சொல்றே?“
“ஆனால் அதை உங்க கிட்ட தர மாட்டேன்.“
“பின்ன உனக்கு எதுக்கு?“
“நான் தனியே படிச்சிப் பார்க்கலாம்னு வெச்சிருந்தேன். ஆனால்… நீங்க சொன்னா மாதிரி, அது தேவையற்ற வருத்தத்தையோ சஞ்சலத்தையோ தந்தால்? அதுனால அதை நானும் வாசிக்கப் போறது இல்லை…“
“அதை எங்க வெச்சிருக்கேன்னு நானும் கேட்கப் போறது இல்லை…“ என்கிறான் ராமசாமி.
“சரி. இப்பிடி முதல்ல எப்ப நடந்தது?“
“அது ஒரு பத்து நாளுக்குள்ள…“
“முதல் அனுபவம்… அது எப்பிடி இருந்தது உங்களுக்கு?“
“முதல்ல எனக்கே பயமாய் இருந்தது. ஆனால் இதன் அடி முதல் நுனி வரை நான் அலாசிப் பார்க்காமல் விடப் போறது இல்லை…ன்னு எனக்குள்ள பயத்தை நானே தெளிய வெச்சிக்கிட்டேன்.“
“இது எந்த வருஷம்?“
“2016 தான். ஏன்?“
“நீங்க போட்ட போடுல, எனக்கே குழம்புது.“
“உன் ஆஞ்சநேயர் உன்னைக் கைவிட மாட்டார்.“
“சரி“ என பயத்துடன் தலையாட்டுகிறாள்.
“அவர்கிட்ட இருந்த ஒரே படம். திரும்ப அவர்கிட்ட வந்து சேர்ந்தது நல்ல விஷயம் தானே திலகா?“
“அதுவே கனவா நிஜமான்னு இருக்கு எனக்கு.“
தெரு திரும்புகிறார்கள். தூரத்தில் அவர்களது அடுக்ககம். எட்டு மாடிகள். இருளில் அடுக்ககத்தில் விளக்கெரிவது தெரிகிறது.
காலையில் ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். கூடவே வெளியே வருகிறாள் திலகா. “என்ன திலகா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“நான் உங்களை நம்பறேன்“ என்கிறாள்.
“சந்தோஷம்.“
“ஆனால்…“
“ஆனால்னா நம்பலைன்னு அர்த்தம். நம்பாட்டியும் சந்தோஷம் தான். நீங்க இயல்பா இருங்க. அது போதும் எனக்கு. இன ஃபாக்ட்…“
“என்ன?“
“நானே ஒரு நல்ல மன நல மருத்துவரைப் போய்ப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்…“
“அது நல்லது தான். சரி. முக்கியமான கேள்வி…“
“ம்“
“எப்பிடி நீங்க பழைய காலத்துக்கு இங்கேயிருந்து போறீங்க?“
“அப்…ப்பா. இப்பதான் இதை நம்பி, என்கிட்ட இதைக் கேட்கறே. சொன்னால் நீ நம்ப மாட்டே.“
“நம்பறேன்.“
“ஆனால்…“ என அவன் சிரிக்கிறான்.
“ஒரு ஆனாலும் இல்லை.சொல்லுங்க.“
“இங்க வா… கிட்ட வா“ என அழைக்கிறான். “இந்த லிஃப்ட் வழியாதான்…“
“இது வழியாவா“
“ஆனால்…“
“வேணாம். சொல்லுங்க.“
“எனக்கு மாத்திரம் தான் அப்பிடி நடக்குது…“
“எப்பிடி?“
“இங்க வா இவளே… உள்ளே வா.“
திலகா வருகிறாள். “இதுல எததனை தளத்தின் பொத்தான் இருக்கு?“
“பூஜ்யம்ன்றது தரைத்தளம். ஒண்ணு லேர்ந்து எட்டுவரை. ஒன்பது பொத்தான்.“
“வேற யாருக்கும் அப்படித்தான் காட்டுது. எனக்கு மட்டும்… மைனஸ் 1 வந்தது. வருது.“
“இப்ப வர்லியே?“
“வர்ல.“
“ஏன்?“
“நீ கூட இருக்கியே…“
“அதுனால?“
“அதுனால வராது. இதை நானே தற்செயலா கண்டுபிடிச்சேன்…“
“எப்போ? எப்பிடி?“
“பக்கத்து விட்டு கணபதி சார் என்கூட ஒரு நாள் லிஃப்ட்ல வந்தார். அப்ப எனக்கு மைனஸ் 1 காட்டவில்லை.“
“ஆனால்…“
“நீ நம்ப வேணாம் இவளே. எனக்கு வேலக்கு நேரம் ஆச்சி. நான் கிளம்பறேன். நீ கூட வா.“ இருவருமாய்க் கீழே இறங்குகிறார்கள். பூ4யம் வர வெளியே வருகிறார்கள். அவன் போய் ஸ்கூட்டரை எடுக்கிறான்.
“இன்னிக்கு அலவலகத்துக்கு லீவு போடறாப்ல ஆகாதுடி“ என்கிறான்.
“சந்தோஷம்“ என்கிறாள் திலகா. “ஆனால்?“ என சிரித்தபடியே வண்டியைக் கிளப்பிப் போகிறான் ராமசாமி.

தொடர்கிறேன்

91 97899 87842

No comments:

Post a Comment