எஸ். சங்கரநாராயணன்
வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 9
•
டி.வி.யில் கல்யாணப் பரிசு தங்கவேலு
நகைச்சுவைக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சிகாமணி “அக்கா உன் வாழ்க்கையும் கல்யாணப்
பரிசு கதையாட்டம் ஆயிட்டதே. அதுலயும் தங்கவேலு வேலைக்கே போகாமல் காலைல சாப்பாட்டைக்
கட்டிக்கிட்டு ஒரு பூங்காவுக்குப் போவான். சாய்ந்தரமானால், வேலைக்குப் போயிட்டுவந்தா
மாதிரி ஹாயா உள்ளே வருவான்…“ என்கிறான். “அது மன்னார் அன்ட் கம்பெனி., இது நேஷனல் பேங்க்.
அதான் வித்தியாசம்.“
“அத்தனைக்கு நான் ஏமாளி இல்லடா. வரட்டும்
அவர்“ என கையில் விளக்குமாற்றை எடுக்கிறாள். “ஐயோ அக்கா அவ்வளவு கோபம் வேணாம் உனக்கு…“
எனப் பதறுகிறான் சிகாமணி. “நீ வேற. வீட்டைப் பெருக்கலாம்னு பார்க்கறேன். தள்ளு“ என
அவனை விலக்குகிறாள். தொலைக்காட்சியில் “நீங்க எங்க வேலை பாக்கறீங்க? – மன்னார் அன்ட்
கம்பெனி“ என வசனம் வருகிறது. “அதை முதல்ல அணைடா. இருக்கற கடுப்புல இது வேற…“
“தங்கவேலு நகைச்சுவையில் கடுப்பான
ஒரே ஆள் நீயாத்தான் இருக்கும்“ என அதைப் போய் அணைக்கிறான். அக்கா வீட்டைப் பெருக்க
ஆரம்பிக்கிறாள்.
சட்டென அமைதி சூழ்கிறது. வாசல் கதவை
யாரோ தட்டுகிறார்கள். சிகாமணி அக்காவைப் பார்க்கிறான். “இஸ்திரிக்காரனா இருப்பானோ?“
எனப் பேசிக்கொண்டே அவனே போய்க் கதவைத் திறக்கிறான்.
ராமசாமி உள்ளே வருகிறான். ரொம்ப வருத்தமான
முகம். அலைந்து திரிந்து களைத்த முகம். வந்து அப்படியே சோபாவில் சரிகிறான். கோபமாய்ப்
பேச காத்திருந்த திலகாவுக்குக் கவலையாகி விடுகிறது.
அலுவலகம் போகிற அளவில் அவன் எடுத்துப்
போகிற பையைக் கையில் எடுக்கிறாள். அது கனம் குறையாமல் அப்படியே இருக்கிறது. உள்ளே யிருந்து
டிபன் பாக்ஸைத் திறக்கிறாள். கட்டிக்கொடுத்த சாம்பார் சாதம் அப்படியே இருக்கிறது.
“என்னாச்சிங்க சாப்பிடல்லியா?“
“சாப்பாடு நல்லா இல்லியா?“ என்கிறான்
சிகாமணி.
“நான் இன்னிக்கு வேலைக்கே போகலடி…“
என்கிறான் ராமசாமி.
அவன் ஒத்துக் கொண்டதில் திலகா ஆறுதல்
படுகிறாள். சிகாமணியைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். கண்மூடிக் கிடக்கிற ராமசாமியைப்
பார்த்தபடியே அருகே இருக்கும் சிகாமணியிடம் “அவருக்குப் பொய் சொல்லவே தெரியாதுடா“ என
மெல்லச் சொல்கிறாள். பிறகு ராமசாமியைப் பார்த்து “எங்கயோ அலைஞ்சிட்டு வரீங்க போல…“
என்கிறாள்.
“ஆமாம். ஒரு தற்கொலை. ஆகப் போகுதுன்னு
முன்னாலயே தெரிஞ்சிட்டது எனக்கு… காப்பாத்தலாம்னு வேக வேகமாப் போனேன்… முடியாமல் போயிட்டது..“
“தற்கொலையா?“
என்று ஆச்சர்யமாய்க் கேட்கிறான் சிகாமணி. “தூக்கா, தூக்க மாத்திரையா?“
“அதுவா இப்ப
முக்கியம்?“ என்கிறாள் திலகா. “சூடா தோசை வார்த்துத் தரவா? பாவம் சாப்பிடாமல் வந்திருக்கீங்க…“
என்கிறாள்.
“முதல்ல
காபி.“
அவள் உள்ளே
போகிறாள். சிகாமணியும் அவனும் தனித்து விடப் படுகிறார்கள்.
”அத்தான்.
காலைல நீங்க அந்தப் பேப்பரை பரண்லேர்ந்து எடுத்துப் பாத்தீங்களே, அந்தப் பொண்ணா?“
“ஆமாம்.“
“அது பழைய
பேப்பர் ஆச்சே.“
“ஆமாம்.“
“அவளை இப்ப
போயி எப்பிடி நீங்க காப்பாத்துவீங்க?“
“அதான்…
முடியல்லடா.“
“அது எப்பத்திய
பேப்பர்?“
“ரெண்டு
வருஷம் முந்தின பேப்பர்…“
“ஹா ஹா.
அத்தான் நீங்க என்கிட்ட ஒரு கதையை ஆரம்பிச்சிங்க இல்லே? அதும் மாதிரி இருக்கே…“
“அதேதான்.“
“நல்ல தமாஷ்
அத்தான்.“
“நான் வருத்தமா
இருக்கேன். தமாஷ்ன்றியே சிகாமணி….“
“அது ரெண்டு
வருஷம் முந்தைய கதை. நடந்து முடிந்த கதை. அதைத் திரும்ப இப்ப போஸ்ட்மார்ட்டம் பண்றா
மாதிரி வெளியே கொண்டு வர முடியுமா?“
“அதான் எனக்கே
ஆச்சர்யம்.“
“அப்பன்னா,
நாம அந்தக் காலத்துக்கே போனால் தானே அது முடியும்?“
“நான் போனேன்டா.“
“நல்லாதானே
இருக்கீங்க அத்தான். இது எத்தனை?“ என மூணு விரல்களைக் காட்டுகிறான்.
“நாலு.“
“ஐயோ அத்தான்.
இது மூணு…“
“அது மூணுதான்.
எனக்குத் தெரியும். நான் தெளிவாத்தான் இருக்கேன்.“
திலகா காபியுடன்
வருகிறாள். மெல்ல எழுந்து கொள்கிறான். “நல்லா சூடா இருக்கா?“
“அக்காவும்
சூடாத்தான் இருக்காங்க. உங்க மேல…“
“ஷ்“ என்கிறாள்
சிகாமணியைப் பார்த்து. “மொதல்ல அவர் காபியைக் குடிக்கட்டும்.“
“நீங்க பேசினதெல்லாம்
நான் கேட்டுக் கிட்டிருந்தேங்க.“
“சந்தோஷம்.“
ராமசாமி காபியை உறிஞ்சுகிறான். “சிகாமணி, நான் இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை
மாத்த முயற்சி பண்ணினேன்...“
“முடியல்ல.“
“ஆமாம்.
என்னால அது முடியல்ல. ஆனால் கண் முன்னால அது நடக்கப் போகுதுன்னு நடக்கும் முன்னே தெரியறது
இருக்கில்லையா? அது பயங்கரம்டா. அனுபவிச்சா தான் தெரியும் அந்த வலி.“
“கடந்த காலத்தை
மாத்த முடியாது அத்தான்.“
“ஆனால் முயற்சி
செய்யாமல் எப்பிடி இருக்க முடியும் சிகாமணி? கையைக் கட்டிக்கிட்டு நம்மால ஆகாதுன்னு
இருக்கறதா?“
“என்ன சொல்ல
வரீங்க?“ என்கிறாள் திலகா.
“திலகா,
இப்பிடி பக்கத்தில் உட்காரு…“ என சற்று நகர்ந்து சோபாவில் இடம் அளிக்கிறான். “இதுல
பயப்பட ஒண்ணும் இல்லை. இதை நான் விளக்கவும் முடியாது…“
“பயப்படாதீங்க…
அப்டின்னு நீங்க ஆரம்பிக்கறீங்க பாருங்க. அப்பதான் பயமே வருது.“
“குழம்பிக்கவும்
வேணாம். முதல்ல என்னைப் பேச விடுங்க.“
“அதில்ல
அத்தான்…“
“அவர் பேசட்டும்டா.“
ராமசாமி
கொஞ்சம் மௌனம் சாதிக்கிறான். “நான் உங்க ரெண்டு பேர் கிட்டயுமே இதைச் சொல்ல வந்தேன்.
சந்தர்ப்பம் சரியா அமையல. நீங்களும் காது குடுத்துக் கேட்கத் தயாரா இல்லை.“
“இப்ப சொல்லுங்க“
என்கிறாள் திலகா. சிகாமணியும் தலையாட்டுகிறான்.
என்னால ரெண்டு
வருஷம் முன்னால போக முடியுது…“
“என்ன சொல்றீங்க?“
என்கிறாள் திலகா.
“அவர் பேசட்டும்
அக்கா.“
“காலைல சுத்திப்போடணும்
இவருக்கு…“
“நீங்க நம்ப
மாட்டீங்கன்னு தெரியும்… இதோ“ என சட்டைப் பையில் இருந்து பஸ் டிக்கெட்டை எடுக்கிறான்.
“எனன இது?“
என வாங்கிப் பார்கக்கிறாள். “பஸ் டிக்கெட். நான் பார்த்ததே இல்லைன்றா மாதிரி இதைக்
காட்டறீங்க?“
“அதில்லை.
இப்ப நான் வீட்டுக்குத் திரும்பி வந்த டிக்கெட்.“
“சரி. அதுக்கென்ன?“
“சரியாப்
பாருங்க. அது 04,50 டிக்கெட். இப்ப 50 காசு டினாமினேஷன் இருக்கா?“
“எந்த மடையன்
குடுத்தது இதை. அத்தான், நம்ம பஸ்லயே கள்ள டிக்கெட் ஓடுது போல.“
“ஹா“ என
ஆயாசமாய் மூச்சு விடுகிறான் ராமசாமி. “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்டா.“
“நம்பறா
மாதிரி சொல்லுங்க…“ என்கிறாள் திலகா.
“சரி. நான்
கொஞ்சம் தூங்கறேன்“ என்கிறான் ராமசாமி. சிகாமணி உள்ளே போய் ஒரு தலையணை கொண்டு வருகிறான்.
சோபாவிலேயே அப்படியே உறங்க ஆரம்பிக்கிறான் ராமசாமி.
போய்ப் போர்வை
ஒன்றை எடுத்து வந்து அவனுக்குப் போர்த்தி விடுகிறாள் திலகா.
•
விளக்கை
அணைத்து விட்டு இருவரும் மாடிக்குப் போகிறார்கள். மொட்டை மாடியில் மாலை வெயில். “கோகுல்
வர்ற நேரம் ஆயிட்டதா அக்கா?“
“இன்னும்
அரை மணி இருக்குடா.“ திலகா அவனைப் பார்க்கிறாள். “என்னடா இவர் என்னென்னவோ சொல்றாரு?“
“சினிமான்னா
நல்லா இருக்கும் அக்கா. இது வாழ்க்கை. அவர் சொல்றதை எப்படி ஏத்துக்கறது?“
“என்னவோ
ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். அதை இவர் பேப்பர்ல படிச்சாராம்.
காப்பாத்தப் போனாராம். முடியல்லியாம்… ஒண்ணுக்கும் இன்னொண்ணுக்கும் ஒட்டவே இல்லியே.“
“ஆனால் நிசம்மாவே
வருத்தப்படாறார் அக்கா. என்ன ஆச்சி அத்தானுக்கு?“
“பார்க்கலாம்.
நல்லா அசந்து தூங்கறார். தூங்கி எழுந்தால் சரியாய்ப் போகலாம்.“
“நான் எங்க
இருக்கேன்?...னு எழுந்திருப்பார்ன்றியா அக்கா?“
“இது கடந்த
காலமா, நிகழ் காலமான்னு கேட்டாலும் கேட்பார்.“
“என்கிட்ட
ஒரு கதைன்னு ஆரம்பிச்சார் அக்கா. ஒருத்தரால ரெண்டு வருஷம் முன்னாடி பயணம் செய்ய முடியுதுன்னார்.“
“அந்தப்
பேப்பர் எத்தனை வருஷம் முந்தியது?“
“ரெண்டு
வருஷம்னுதான் அவரே சொல்றார்…“
“டைரியும்,
பேப்பருமா அவரை ஒரு வழி பண்ணுதுன்னு தெரியுதுடா.“
“டிக்கெட்
வேற காட்டறார். அதான் ஆச்சர்யம்.“
“எப்பிடி
ரெண்டு வருஷம் முன்னாடி போகிறார், அது இன்னொரு ஆச்சர்யம்.“
“அவர் நல்லா
பேசறா மாதிரிதான் தோணுது. நமக்கு தான் பைத்தியம் பிடிச்சிருமோன்னு இருக்கு…“
“இப்ப எதுவும்
கேட்காதே அக்கா. காலைல பேசிக்கலாம்…“
“கோகுல்
வந்திறப் போனான். நான் கீழ போயி ஆட்டோ வருதான்னு பாக்கட்டுமா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
தலையாட்டுகிறாள்.
இருவருக்கும் இடையே திடீரென்று கனமாய்க் கவிந்த மௌனம். “பயப்படாதே அக்கா“ என்கிறான்
சிகாமணி.
“அட நாயே,
இதுவரை நான் பயப்படாமல் இருந்தேன். பயப்படாதேன்னு சொல்லியே என்னை பயமுறுத்தறே நீ…“
“அப்படியே
அலட்சியம் பண்ணிறவும் முடியாது அக்கா. அன்னிக்கு என்னாச்சி?“
“என்ன?“
“நான் அன்னிக்கே
உன்கிட்ட சொன்னேன்…“
“அட தெளிவாச்
சொல்லித் தொலை.“
“வெளில வெயில்
காயுது. அத்தான் டைரி பார்த்தார். அப்புறம், மழை பெய்யும்னு குடையை எடுத்திட்டுப் போனார்.“
“குடையைத்
திரும்பக் கொண்டு வந்தாரா?“
“இப்ப அதுவா
முக்கியம்?“
“இல்லடா.
அவருக்கு மறதி ஜாஸ்தி.“
“அவர் பிரச்னை
மறதின்னால், உன் பிரச்னை எதையுமே லேசில விடமாட்டே நீ. மறக்கவே மாட்டே.“
“சரி சொல்லு.“
“வெயில்
அடிக்கும் போது குடை எதுக்கு?“
“வெயில்
ஜாஸ்தின்னு எடுத்திட்டுப் போனால்?“
“மழை வரும்னு
சொல்லி எடுத்திட்டுப் போனால்?“
“இங்க பாரு.
நம்மளா குழப்பிட்டிருக்க வேணாம். அவரா சொல்லுவார்.“
“அவர் சொல்றதுலதான்
இத்தனை குழப்பம் அக்கா.“
“சரி. கோகுல்
வந்திறப் போறான்… நீ கீழ போ.“
சிகாமணி
நின்று திரும்பி, “பயப்படாதேக்கா…“ என்கிறான்.
“அட நாயே.“
“எனக்கு
பயமா இருக்கு அக்கா.“
“எனக்குந்
தாண்டா“என்கிறாள் திலகா.
•
கோகுல் பள்ளி
விட்டு வீட்டுக்குள் வருகிறான். கூடம் விளக்கு அணைக்கப்பட்டு இருட்டிக் கிடக்கிறது.
“என்னம்மா, லைட் எரியல்லியா?“ என்றபடியே கோகுல் சாக்ஸைக் கழற்றுகிறான். உள்ளே வந்து,
“ஐ அப்பா“ என்கிறான். அப்பா சோபாவில் படுத்திருக்கிறார். “ஷ். அப்பாவை எழுப்பாதே…“
என்கிறாள் திலகா. அப்படியே அவனைக் கையைப் பிடித்து உள்ளே சத்தம் இல்லாமல் அழைத்துப்
போகிறாள்.
•
காலை சோபாவிலேயே
கண் விழிக்கிறான் ராமசாமி. கண் திறந்த ஜோரில் குளித்து மங்களமாய் திலகா. தலையில் ஈரத்
துண்டு. “என்ன விசேஷம் இன்னிக்கு?“
“ஒண்ணில்லையே.“
“நேத்திக்கும்
ஒண்ணும் இல்லை. அப்பறம்?“
“இப்ப உடம்பு
தேவலையா?“
“என்ன?“
“நேத்து
ரொம்ப அலுப்பாய் இருந்தீங்க…“
“இப்ப மணி
என்ன?“
“ஒன்பது.“
“அவ்வளவு
ஆயாச்சா?“
“எழுந்துக்க
வேணாம். நானே உங்க ஆபிசுக்கு லீவு சொன்னேன். இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க.“
“மேனேஜர்
என்ன சொன்னார்?“
“பல் வலி
எப்படி இருக்குன்னு என்கிட்ட கேட்டாரு…“ என சிரிக்கிறாள்.
எழுந்து
உட்கார்கிறான். “தலையே ஒரே பாரமா இருந்தது. இப்ப பரவாயில்லை.“
“சரி ஆயிரும்…
எப்பிடி இப்பிடி உங்களுக்குத் தோண ஆரம்பிச்சது?“
“எப்படி?“
“ரெண்டு
வருஷம் முன்னாடி போறா மாதிரி?“
“அதுவா…
அது பொய். அதை நம்பாதே. எனக்கே இப்ப தெளிஞ்சிட்டது.“
“நீங்க தினசரி
டைரி படிக்கறீங்க. பழைய டைரி. திடீரென்று டைரியை விட்டுட்டு பேப்பர் வாசிக்க ஆரம்பிச்சீங்க.
பழைய பேப்பர். அதான் இபபிடி ஆயிட்டதுன்னு நினைக்கிறேன்…“
ராமசாமி
புன்னகை செய்கிறான்.
“அதுனால…“
“அதுனால?“
“உங்க பழைய
டைரி, பேப்பர் எல்லாத்தையும்…“
“என்ன பண்ணினே?“
“எடைக்குப்
போட்டுட்டேன்“ என்கிறாள் திலகா.
பதறிப் போய்
பரணைப் பார்க்கிறான். பரணில் டைரிகள், பழைய நாளிதழ்கள் இருந்த இடம்… காலியாய்க் கிடக்கிறது.
தொடர்கிறேன்
91 97899 87842
No comments:
Post a Comment