Sunday, August 23, 2015

ஒரே சமயத்தில் எனக்கு ரெண்டு மனைவி. அதுவும் ஒரே பேர்ல. ஒருத்தி மதுரைல. இன்னொருத்தி இங்க.“ அத்தியாயம் 3 -

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்



அத்தியாயம் 3
நேரே நடந்து கொண்டிருக்கும் ராமசாமி. சட்டென நின்ற இடத்தில் நிற்கிறாப் போலிருக்கிறது. பிறகு அப்படியே பின்நோக்கி நடந்து வருகிறாப் போல அவனுக்குத் தோன்றுகிறது. தலையை உதறிக் கொள்கிறான். உள்ளே யிருந்து மேனேஜரின் குரல். “என்னய்யா, கல்விக்கடன் லிஸ்ட் எடுத்திட்டியா இல்லியா?“
“இதோ பண்ணிர்றேன் சார்…“ மேசையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடிக்கிறான்.
“சீக்கிரம் பண்ணு. அதுக்கு வேற நாள் நட்சத்திரம் பாக்கிறியா?“
ரமேஷ் சிரிக்கிறான் வாயைத் துடைத்துக்கொண்டே அவனைப் பார்த்து. ராமசாமி “என்னடா?“ என்று கேட்கிறான். “நீ ரெண்டு வருஷம் முந்தின வேலையையே இப்பதான் பார்க்கிறே. அது அவருக்குத் தெரியாது. தெரிஞ்சால் உன் நிலைமை என்ன?“
“உனக்குக் கிண்டலா இருக்காடா?“
“சாரி. சாயந்தரம் பேசலாம் இவனே…“ என்கிறான் ரமேஷ்.
வேலை வேலை என்று ராமசாமி பரபரப்பாகிறான். அவன்பின்னே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி சட்டென சுதாரித்தாப் போல முன்னைவிட வேகமாகச் சுழல்கிறது! படபடவென அவன்பின்னே இருக்கும் காலண்டர் தாள்கள் உயர்ந்தெழும்பிப் பறக்கின்றன. டோக்கன் செவன். ட்டூ. த்ரீ.. என காஷ் கவுண்டரில் இருந்து அழைப்பொலி. “ரத்தினம், கிளியரிங் செக் எதும் இருக்கா? பெட்டியில பாரு. நேரம் ஆச்சி. இனி யாரும் போட்டால் நாளைக்குதான்“… என ராதிகாவின் குரல். மானேஜர் அறையில் அவர் பார்க்கிற மாதிரி சிசிடிவி காமெரா. மேனேஜர் யாரோ கிளையன்ட்டிடம் சத்தமாகப் பேசுகிறார். “உங்க OD limit தாண்டிட்டது சார். மினிமம் பேலன்ஸ்சுக்கே இன்னும் ரெண்டு லட்சம் கட்டணும். ஒரு செக் வேற வந்திருக்கு. மூணு லட்சம் அரை மணியில கட்டிறணும் நீங்க. லேட் பேமென்ட்டுன்னால் பெனால்ட்டி வரும். செக்கும் பௌன்ஸ் ஆயிரும். அதுக்கு வேற ஃபைன் போட வேண்டியதா ஆயிரும் இல்ல? அப்பறமா வந்து நீங்க எங்களைக் குறை சொல்லக் கூடாது. Avoid unpleasantness.“
பியூன் ரத்தினம் மேனேஜர் அறைக்குள் வந்து தேநீர் வைத்துவிட்டுப் போகிறான். அது அப்படியே ஆவி யடங்கி ஆறி ஏடு படிகிறது.
மாலை நாலரை மணி. வங்கியே காலியாய்க் கிடக்கிறது. வாசல் ஷட்டர் பாதியளவு சாத்தியிருக்கிறது. ரமேஷ் வேலையை முடித்துவிட்டுக் காத்திருக்கிறான். அவனைப் பார்த்ததும் ராமசாமி அவனும் கூடவே கிளம்புகிறான். செக்யூரிட்டி கதவைத் தூக்கித் திறக்க வெளியே வருகிறார்கள்.
வாசலில் ஏ டி எம். யாரோ அதில் பணம் எடுக்க உள்ளே நுழைகிறார்கள். பரபரப்பாய் இருக்கிறது வெளி உலகம்.
“வேலையின்னா முடிவே இல்லாத வேலைடா நம்ம வேலை. யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். நாம ஓடிட்டே இருக்கணும். போன ஜென்மத்துல குதிரையா பொறந்து பழகியவன் தான் பாங்க் வேலைல சமாளிக்க முடியும். என்ன சொல்றே?“
“ரமேஷ். நீ என் நல்ல நண்பன் தானே?“
“அதுல என்ன சந்தேகம்? வண்டி எடுத்திட்டு வரேன். உன்னை பஸ் ஸ்டாப்ல விட்டுறட்டுமா?“
 “நானும் கூட வரேன்.“ என வாகன ஸ்டாண்டு வரை ராமசாமி போகிறான். “எனக்கு மாத்திரம் இப்பிடி ஆயிட்டதா... என்னன்னே புரியல்லியேடா?“
“என்னது?“
“இன்னிக்கு உண்மையில் தேதி என்ன தெரியுமா?“
“அதான் நாம பேசிட்டமே ராமு. இங்க பாரு. சில சமயம் இப்பிடி, மனசில் வேற எதாவது அழுத்தம் இருந்தால், சின்ன அளவில் குழப்பம் வரும்… மூளை பிளாக் ஆயிரும்.
“எனக்கு மூளைல அப்பிடி பிளாக் ஆயிருக்குன்றியா?“
“நீ வேற. மூளை இருக்குன்றதே சந்தோஷமான விஷயம்டா. நாட்ல எனக்கு எல்லாம் மூளை இருக்குன்றதையே யாரும் நம்ப மாட்டேங்கறான்.““
“என் பிரச்னை என்னன்னால்… நாள், மாதம் அதே தான் இவனே. வருஷம் தான்.“
“இது 2016ன்னு நீ நினைக்கறே.“
“அதான் உண்மை. நிகழ்காலத்தில் இருந்து எப்பிடியோ நான்மாத்திரம் இறந்த காலத்துக்கு வந்திருக்கிறேன்.“
“தப்பு.“
“தப்பா?“
“ஆமாம். இது 2014 தான். நீ சொல்றது உண்மைன்னால்… நீ எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கே. சரியா?“ என்றபடியே வண்டியை உதைத்துக் கிளப்புகிறான். “உட்காரு இவனே.“
அவனையே பார்க்கிறான் ராமசாமி. “ம். உன் கணக்கில் அது சரி.“ என்றபடி ஏறி உட்கார்ந்து கொள்கிறான். வண்டி தெருவில் போகிறது.
“ஒரு விஷயம்டா.“
“சொல்லு.“
“இதோ இந்த மொபைல். நேத்து – அதாவது உன் நாள்கணக்குப் படி நேத்து, என்கிட்ட இருந்ததா? நீயே இந்த மொபைல் புதுசான்னு கேட்டியா இல்லியா?“
“பாயிண்ட்…“ என்கிறான் ரமேஷ்.
“நான் வேணா உனக்கு என் வீட்டில் இருக்கிற ஃபோன் வாங்கின பில்லைக் கூட காட்டுவேன்…“
“ஹா ஹா“ என ரமேஷ் சிரிக்கிறான்.
“ஏண்டா சிரிக்கறே?“
“ஒரு வாதத்துக்கு நீ இப்பிடி வேற காலத்துல வந்து சேர்ந்துக்கிட்டதா வெச்சிக்குவோம்…“
“வாதம் இல்லை. அதான் உண்மை.“
“சரி சரி. அதுதான் உண்மைன்றது தான் உன்னோட வாதம். இப்ப திரும்ப நீ எப்பிடி உன் ‘அந்தக்‘ காலத்துக்குப் போகப் போறே?“
“ஹ்ம். அதுதான் பயம்மா இருக்கு. உண்மையில் நான் இருட்டில் இறக்கி விடப் பட்டதும் என் பயமே அதுதான். எக்கு தப்பா எங்காவது மாட்டிக்கிட்டமான்னு இருந்தது…“ என நிறுத்துகிறான். “இந்நேரம் என் பையன் பள்ளிக்கூடம் விட்டு வந்திருப்பான்.“
“இப்ப அவன் ஒண்ணாங் கிளாஸ் தானே?“
“அவன் மூணாங் கிளாஸ் படிக்கிறான். இப்ப நான் அவனைப் பார்க்கிற போது, அவன் மூணாங் கிளாசா ஒண்ணாங் கிளாசான்னே தெரியாது எனக்கு.“
அவனையே பார்க்கிறான் ரமேஷ். “இப்ப என்ன பண்ணப் போறே?“
“நீ என்னை நம்பறியா இல்லியா?“ ராமசாமி அழுதுவிடுவான் போலிருந்தது. ரமேஷ் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு “சரி. நம்பறேன்“ என்கிறான்.
நான் ஆபிஸ் வந்ததும் இவளுக்கு, திலகாவுக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தேன்.“
“கிடைச்சாளா?“
“கிடைக்கல்ல.“
“என்ன சேதி வந்தது?“
“சில சமயம் டவர் கிடைக்கல்ல. சில சமயம் நாட் ரீச்சபிள்னு பதிவிட்ட குரல் வந்தது.“
“நல்ல விஷயம் ஆச்சே.“ ரமேஷ் சிரிக்கிறான். “மாப்ளே, ஒய்ஃப்ன்ற வார்த்தைக்கே புது அர்த்தம் சொல்றாங்க, தெரியுமா?“
“என்ன?“
“NEWS ன்றதை நார்த் ஈஸ்ட் வெஸ்ட் சௌத்னு பிரிக்கிறா மாதிரி, WIFE ன்னால் ஒரிஸ் இன்வைடட் ஃபார் எவர்ன்றாங்க.“
“குட் ஜோக். சிரிப்புதான் வரல்ல.“
“ஆபரேஷன் சக்சஸ். பேஷன்ட் DIED ன்றாப் போல.“
 ஐம் மோர் சீரியஸ்.“
“மோர் சீரியசும் வேணாம். தயிர் சிரியசும் வேணாம்… மொபைல்ல டிரை பண்ணினே. நாட் ரீச்சபிள். ஆபிஸ் லேன்ட்லைன் போன்ல பேச முயற்சி பண்ணினியா?“
“அது லாயக் படாது.“
“ஏன்?“
“அதுல என் மனைவிகூட, ரெண்டு வருஷம் முன்னாடி தான் பேச முடியும்…“
“அப்பிடியா சொல்றே? நீ முயற்சி பண்ணவே இல்லியேடா.“
“இன்னிக்கே என் மாமனார்கிட்டே யிருந்து போன் வந்தது. இல்லியா?“
“ஆமாம்.“
“அது ரெண்டு வருஷம் முந்தைய கால் தான்டா. இப்ப என் மனைவி வீட்ல இருக்கிறாள். அவதான சாப்பாடு – இப்ப மதியம் நான் சாப்பிட்டேனே, அந்தச் சோத்து மூட்டையை கட்டிக் குடுத்தனுப்பினாள்… ரெண்டு வருஷமாச்சி. சமையல்ல அவள் இன்னும் தேறவே இல்லைடா!“
“அதுவா பிரச்னை இப்ப?“ என்கிறான் ரமேஷ்.
“என் மாமனார் பேசினார் இல்லியா? என்ன பேசினார்? திலகாவை பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல ஏத்தி விடறேன்றார். ஒரே சமயத்தில் எனக்கு ரெண்டு மனைவி. அதுவும் ஒரே பேர்ல. ஒருத்தி மதுரைல. இன்னொருத்தி இங்க.“
“டேய், வேற வேற மனைவியா இருந்திருக்கலாம்ன்றியா?“
“ஒத்தைத் தலைவலி ரெட்டைத் தலைவலியா ஆயிட்ட மாதிரி இருக்கு எனக்கு.“
நீ சொல்றது எனக்குப் புரியல்ல. ஒத்துக்கறேன். நீ என்ன பண்றே… போயி பேசாமல் படுத்து நிம்மதியா, மனசில் எதையும் போட்டுக்காமல் தூங்கு. காலைல விஷயம் உனக்கே தெளிவாயிரும். நாளைக்கு வந்து சொல்லு…“
பஸ் நிறுத்தம். ஓடிப்போய் பஸ் ஏறுகிறான் ராமசாமி.
வீடு நோக்கி வருகிறான். குட்டி வெள்ளைகருப்பு புள்ளியுள்ள நாய் ஒன்று அவனைப் பார்த்துக் குரைக்கிறது. நாய் என்றால் அவனுக்கு பயம். ச்சீ. ச்சீ… எனற்படியே விறுவிறுவென்று நடக்கிறான்.
அந்த சோசியக்காரன் இருந்த இடம் காலியாய் இருக்கிறது. லேசான இருட்டு. “இங்கதான் இப்ப ரமணி மெக்கானிக் கடை போட்டிருக்கிறான்…“ என நினைத்துக் கொள்கிறான். ரமணியின் மெக்கானிக் கடை அப்படியே உருமாறி, மரத்தடியாகி சோசியன் இருந்த இடமாக மாறுகிறதாக நினைத்துக் கொள்கிறான்.
தான் நுழைந்த அந்த சந்தைப் பார்க்கிறான். பிறகு தலையாட்டி மறுத்து வழக்கமாக தான் வீடு திரும்பும் வழியிலேயே போகிறான். தூரத்தில் இருந்தே அவன் வசிக்கும் எட்டு மாடிக் கட்டடம் தெரிகிறது. வாசலுக்கு வந்து மின்தூக்கியை அடைகிறான். லிஃப்ட் சமத்தாக, மைனஸ் 1 காட்டாமல் பூஜ்யம் முதல் எட்டு காட்டி நிற்கிறது. ஆச்சர்யம். ஏழாவது மாடி பொத்தானை அழுத்துகிறான். கையில் மொபைல் வைத்திருக்கிறதைப் பார்க்கிறான். அதில் இதுவரை டவர் இல்லாமல் இருக்கிறது. இப்போது திடீரென்று டவர் கிடைக்கிறது. ஆச்சர்யம்.
ஏழாவது மாடி. வெளியே வருகிறான். “வாங்க. ஆபிஸ் முடிஞ்சதா?“ என்று வரவேற்கிறார் பக்கத்து வீட்டு கணபதி. “ஆ! நிகழ்காலம்தான்“ என அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
“என்ன சொல்றீங்க?“
“ஒண்ணில்ல ஒண்ணில்ல…“ என மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்குள் நுழைகிறான். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதில் நரேந்திரமோடி தலையில் தலைப்பாகை கட்டி என்னவோ இந்தியாவுக்கே பொற்காலம் என் ஆட்சி என்கிறாப் போல தோரணை காட்டிக் கொண்டிருக்கிறார்.
உள் அறைக்குப் போய் சட்டையைக் கழற்றுகிறான் ராமசாமி.
இரவு. சிகாமணி காதில் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ரசனையில் தலை ஆடிக் கொண்டிருக்கிறது. அடுப்பில் இருந்து இட்லியை எடுக்கிறாள் திலகா. கோகுல் “எனக்கு ஒரு படம் வரையணும் அப்பா“ என்று சொல்லிக் கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறான்.
“மூணாங் கிளாஸ்னு பேரு. நீங்க படம் வரைஞ்சி குடுத்துக் காமிச்சிட்டீங்க. அதான் மிஸ் ஆ வூன்னா உங்களுக்குப் படம் வரைய குடுத்து அனுப்பிர்றா…“ திலகா மெலிந்த கரண்டியால் இட்லிகளை எடுத்து தட்டில் போடுகிறாள்.
“அப்பா ராத்திரி வரைஞ்சி வைக்கிறேன்டா. நீ பாடம் படி போ…“ என அதை வாங்கிக் கொள்கிறான். பிறகு டைரியை எடுக்கிறான். எழுத ஆரம்பிக்கிறான்.
இன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் எதுவுமே எனக்கு விளங்கவில்லை. எல்லாமே நம்ப முடியாத விஷயங்கள். யாரும் வாழ்வில் சந்தித்திராத விஷயங்கள். எதிர்பார்க்கவே முடியாத, யூகிக்கவே முடியாத விஷயங்கள்…
எழுதிக் கொண்டே வந்தவன், நிறுத்திவிட்டு யோசிக்கிறான். விரலைச் சுண்டுகிறான். அட ஆமாம், என மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டிக் கொள்கிறான். பரண் மேல் பழைய டைரிகள். சட்டென ஸ்டூல் போட்டு ஏறுகிறான். 2014 டைரியை எடுக்கிறான். கீழே இறங்கி மேசையில் அந்த டைரியைப் பரபரவென்று பக்கங்களை ஓட்டுகிறான். இதே நாள் இரண்டு வருடம் முன்பு எழுதியதைத் தேடுகிறான்.
“என்ன செய்யறீங்க?“ என்று திலகாவின் குரல்.
டைரியில் இவன் இப்போது எழுதிய அதே வரிகள் ஆரம்பிக்கின்றன.
இன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் எதுவுமே எனக்கு விளங்கவில்லை. எல்லாமே நம்ப முடியாத விஷயங்கள். யாரும் வாழ்வில் சந்தித்திராத விஷயங்கள். எதிர்பார்க்கவே முடியாத, யூகிக்கவே முடியாத விஷயங்கள்…
ஆச்சர்யமாய் அதைப் பார்க்கிறான் ராமசாமி.
லிஃப்ட் அவனை வெளியே இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுகிறது. இருளடர்ந்த வெளி. ஹலோ… என ராமசாமி கத்துகிறான். பதில் இல்லை. ஆனால் இப்போது முதல் தடவை மாதிரி அத்தனை கலவரமாய் இல்லை அவனுக்கு. மெல்ல விசில் அடிக்கிறான். எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிச்சைக்காரன் போல, கையை இருளில் துழாவியபடி பாடுகிறான். தர்மம் தலை காக்கும்… உற்சாகமான குரல். ரெண்டு கண்ணுந் தெரியாத கபோதிம்மா. ஐந்நூறு ரூபா தர்மம் பண்ணுங்க.
அப்படியே தூரத்து வெளிச்ச்ம் பார்த்து நடந்து போகிறான். சந்து வருகிறது. வெளியே வந்தால், மரத்தடி சோசியன். அவனைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்.
ஒருநாள் பாருங்க சார். எல்லா சோசியரும் இறந்த காலம் சரியாச் சொல்வாங்க. நான் எதிர்காலத்தையே சொல்லுவேன் சார்…“
“என் எதிர்காலம் எனக்கே தெரியும்…“ புன்னகை செய்தபடி ராமசாமி அலுவலகம் போகிறான்.
நண்பன் ரமேஷ் அவனை எதிர்கொள்கிறான். “இப்ப எப்பிடி இருக்கு உன் பிரச்னை?“
“என்ன பிரச்னை?“
“நேத்து என்னவோ சொன்னே?“
“என்ன சொன்னேன்?“
“வருஷக் குழப்பம், அது இதுன்னு?“
“அதுவா? சாரி. நேத்து உன்னைத் தொந்தரவு பண்ணிட்டேன். இல்லே? இனி பண்ண மாட்டேன்…“
“நேத்து நல்லா தூங்கினியா?“
“சூப்பர்.“
“இப்ப இது 2014 தானே?“
“ஆமாம்.“
“2016 இல்லியே?“
“எவன் சொன்னான்?“ என்கிறான் ராமசாமி. இருவரும் சிரிக்கிறார்கள்.
“நேத்து என்ன நடந்ததுடா உனக்கு?“
ஒண்ணும் நடக்கல்லியே.“
“சரி. அதை விட்டுறலாம்…“ என்கிறான் ரமேஷ்.
“விட்டுறலாம்.“ என்கிறான் ராமசாமி.
உள்ளே யிருந்து மேனேஜரின் குரல். “கல்விக்கடன் லிஸ்ட் எடுத்திட்டியா?“
“ஆச்சி சார். வரேன்“ என்றபடி ரமேஷைப் பார்க்கிறான். “இன்றைய நாள் ஆரம்பித்து விட்டது.“ அவன் மேனேஜர் அறைக்கு ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு போகிறான்.

(தொடர்கிறேன்)

91 97899 87842

No comments:

Post a Comment