Monday, August 24, 2015

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் - அத்தியாயம் 4


வசிகரப் 
பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்


அத்தியாயம் 4
வாடிக்கையாளர் ஒருவர் ராமசாமியிடம் “டிராஃப்ட் ரெடியா சார்?“ என்று கேட்கிறார். “இதோ அஞ்சி நிமிஷம். தந்திர்றேன்…“
வந்து அவர் டிராஃப்ட்டைப் பெற்றுக் கொண்டு போகிறார். திடீரென்று ஞாபகம் வந்தாப் போல நெற்றியில் தட்டியபடி அவரைக் கூப்பிடுகிறான். “சார் ஒரு நிமிஷம்… அந்த டிராஃப்டைக் குடுங்க.“
“என்னடா கையெழுத்து போட விட்டுட்டியா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“இல்லை. தேதி தப்பாயிட்டது…“
ரமேஷ் சிரிக்கிறான். “தேதி இல்ல. வருஷம். சரிதானா? ரெண்டு வருஷத்துக்கு அப்பறமா தேதி போட்டுட்டே. இல்லியா? மருந்துக்குதான் இப்பிடி எக்ஸ்பிரி டேட்  ரெண்டு வருஷம் தள்ளிப் போடுவாங்க!“
“நாம அப்பிடிப் போட்டால் டிராஃப்ட் இப்பவே காலாவதி ஆயிரும் “ என்றபடி அவன் வேறு டிராஃப்ட் தயாரித்துக் கொடுக்கிறான்.
“சரியாயிட்டதுன்னியே.“
“என்னது?“
“வருஷக் குழப்பம்.“
“சரி ஆயிரும்.“ ராமசாமி புன்னகை செய்கிறான்.
“இது எந்த வருஷம்?“
“விளையாடாதே. நான் அடுத்த டிராஃப்ட் எழுதணும்“ என்கிறான் ராமசாமி.
டோக்கன் நம்பரைச் சொல்கிறது டெல்லரின் ஒலிபெருக்கி. வங்கி அலுவல்கள் மும்முரமாய் நடக்கின்றன. சுவரில் காந்தியின் போதனை. கஸ்டமர் இஸ் ஆல்வேஸ் ரைட். சலானை பிராசஸ் பண்ணிப் பண்ணி பக்கத்தில் இருக்கும் ட்ரேயில் போடுகிறார் மேலாளர்.
“இன்னிக்கு என்ன சாமி அமைதியா இருக்கு? மௌன விரதமா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“அவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வருது, இன்னும் ஒண்ணு ரெண்டு மாசத்துலன்னு வதந்தி அடிபடுது. அதான் இவரே அடிப்பட்டாப் போல ஆயிட்டாரு. மூடு அவ்ட்டு.“
“நம்மளை யெல்லாம் மூணே வருஷத்தில் பெட்டியைத் தூக்கச் சொல்றாங்க. அதிக பட்சம் ஆறு வருஷம். இவர் பாத்தியா? சென்னைக்குள்ளியே நாலு ரவுண்டு வண்டி ஓட்டிட்டாரு. சாமர்த்தியம் தான்.“
அப்போது ரமேஷின் மேசையில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது. பேசிவிட்டு அவன் “ராதிகா, உங்களுக்குத் தான் அழைப்பு“ என்று போனை ஒரு லெட்ஜர் மேல் வைக்கிறான் ரமேஷ். ராதிகா வந்து போனை எடுத்துப் பேசுகிறாள். ராமசாமிக்கு முதுகு காட்டியபடி அவள் பேசுகிறாள். அதைப் பார்த்துப் புன்னகை செய்து கொள்கிறான் ராமசாமி.
“இப்ப பார் வேடிக்கையை…“ என ரமேஷிடம் மெல்லச் சொல்கிறான் ராமசாமி. அவள் பேசி முடிக்கிறாள். ராமசாமி பக்கம் திரும்புகிறாள்.
“என்ன ராதிகா பெர்மிஷனா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்? நான் இன்னும் மேனேஜர் அறைக்குப் போகவே இல்லியே?“ என ராதிகா ஆச்சர்யப் படுகிறாள்.
“தெரியும். அதுக்கு மேலயும் தெரியும்.“
“என்ன?“
“உன்னைப் பொண்ணு பாக்க வராங்க. கரெக்டா?“
“நான் ரொம்ப மெல்லமாத் தானே பேசிட்டிருந்தேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?“ என ராதிகா சிரிக்கிறாள்.
“கவலைப்படாதே. இந்தக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிரும். கல்யாணம் எங்க நடக்கும்னு கூட சொல்லவா? எல் கே எஸ் கல்யாண மண்டபம். ஜாம் ஜாம்னு நடக்கப் போகுது. பார்…“
“போங்க சார். இப்பதான் பொண்ணு பாக்க வராங்க. அதுக்குள்ள கல்யாண மண்டபத்தைப் பத்திப் பேசறீங்க?“
ராதிகா வெட்கப்படுவது அழகாக இருக்கிறது. அவனைத் தாண்டி மேனேஜர் அறைக்குப் போகிறாள்.
“கல்யாணம்னு பேச்சு எடுத்தாலே பொண்ணுக ஒரு பூரிப்பா ஆயிர்றாங்க. இல்லே? பாவம். செவ்வாய் தோஷம்னு ரொம்பக் கவலைப்பட்டுக் கிட்டு இருந்தாள். அது சரி. டேய் நீ என்ன அவளை இந்தப் போடு போடறே? விட்டால் அவளுக்கு எத்தனை குழந்தைன்னு கூட சொல்லிருவே போலுக்கே…“ என்று சொல்கிறான் ரமேஷ்.
“தெரியாது. அவதான் டிரான்ஸ்ஃபர் ஆயிப் போயிருவாளே?“ என சிரிக்கிறான் ராமசாமி.
“GOOD GUESS“ என்கிறான் ரமேஷ்.
பியூன் ரத்தினம் வருகிறான். “சார் எப்பிடி சார் அவ்ளோ நம்பிக்கையாச் சொல்றீங்க? உங்களுக்கு சோசியம் தெரியுமா?“
“தெரியும்.“
“எனக்கு எப்ப கல்யாணம்?“
“உனக்கு கல்யாணமே ஆகாது“ என்கிறான் ராமசாமி. ரமேஷ் கடகடவெனச் சிரிககிறான்.
மாலையில் காற்றாட நடந்து வந்து ஒரு கடையில் தேநீர் அருந்துகிறார்கள் ரமேஷும் ராமசாமியும். நேர் எதிரேதான் அந்த சோசியக்காரன் அமர்ந்திருக்கிறான். “இந்த இடத்தில் இப்ப ஒரு மெக்கானிக் ஷெட் இருக்குடா. மரத்தைத்தான், ச், வெட்டிட்டாங்க. எத்தனை பெரிய மரம் இல்லியா?“
“மரத்தை வெட்டிட்டாங்களா? என்ன சொல்றே?“
“வருஷக் குழப்பம்.“
“இன்னும் தீரல்லியா உனக்கு?“
“அப்பப்ப தீரும். அப்பப்ப திரும்ப வந்திரும்.“
ரமேஷ் அவனைக் குழப்பமாய்ப் பார்க்கிறான். தேநீர்க் கடைக்கு ஒரு டூ வீலர் வந்து நிற்கிறது. அதை நிறுத்த வழி விட்டு ஒதுங்குகிறார்கள்.
“ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க“ என்று குரல்.
”நீ கவலைப்படாதே ரமேஷ்“ என்று அவன் தோளில் கை போட்டபடி ராமசாமி சிரிக்கிறான். திரும்ப வங்கியை நோக்கி நடக்கிறார்கள். “உன் பிரச்னை தீரல்ல போலுக்கேடா?“
“அது – நீ சொன்னியே? அதற்கான கேள்வியை நான் நேத்தி உன்கிட்ட கேட்டுட்டேன். பாவம் நீ என்ன பண்ணுவே? அதன் பதிலையும் நானே தான் சொல்லணும். அதை இப்ப புரிஞ்சிக்கிட்டேன்.“
“அப்ப பதில் சொலலு.“
“இப்ப நான் முன்னைவிட தெளிவாயிட்டேன். அதுதான் பதில். உனக்குச் சொல்ற அளவுக்கு தெளிவான பதில் சொல்லணுமானால் கொஞ்ச நாள் போகட்டும்டா. நானே பதில் சொல்வேன் அல்லது நீயே புரிஞ்சிக்குவே.“
“நில்லு இவனே. நேத்தி ராத்திரி… என்னாச்சி?“
“ஒண்ணும் ஆகல்லியே?“
“அப்டின்னால்?“
“அப்டின்னா அப்டிதான்.“
“திரும்ப நீ உன் காலத்துக்குப் போயிட்டியா?“
“திரும்ப வந்ட்டேனே…“ என சிரிக்கிறான் ராமசாமி.
“நில்லு இவனே?“
அவன் நிற்கிறான். “என்ன?“
“உன்னை நம்பறதா வேணாமான்னு தெரியல்ல எனக்கு.“
“நம்ப வேணாம். அதான் நல்லது.“
“அதெல்லாம் சரி.  உனக்கு பயமா இல்லியா?“
“முன்ன இருந்தது. இப்ப இல்லை“ என்கிறான் ராமசாமி. அப்படியே திகைத்து நிற்கும் ரமேஷை அணைத்தபடி “வா. போகலாம். நீ ஒரு உதவி செய்யணும் எனக்கு…“
“என்ன?“
“நாம ரெண்டு பேரும் பேசிக்கறோமே… அதை வேற யார்கிட்டயும் நீ பகிர்ந்துக்க வேணாம்.“
“ஏன்?“
“பாவம் அவங்களையும் நாம குழப்ப வேணாம் இல்லியா? ஏன் குழப்பணும்?“
“பாயிண்ட்“ என்றவன் சிரித்து, “நான் படறது பத்தாதா…“ என்கிறான் ரமேஷ். “நீ என்னை மாத்திரம் இப்பிடி குழம்ப விட்டுட்டியே.“
“மறந்துரு எல்லாத்தையும்.“
“பெரிசா இதைப்பத்தி நான் யோசிக்கப் போறது இல்லை. தெளியற போது தெளியட்டும். உனக்கே அப்டித்தான் இருக்கும் பாவம்.“
“தட்ஸ் குட்“ என்கிறான் ராமசாமி. “எனக்கே அப்டிதான் இருக்கு.“
அடிக்கடி அவனையே பார்த்தபடி வேலை செய்யும் ரமேஷ். ராமசாமி சிரித்தபடி தன் மேசையில் செல்ஃபோனை வைக்கிறான். அதைக் கண்ணால் காட்டிச் சிரிக்கிறான். புரியாத புதிர் உன் அனுபவம், என்கிற அளவில் உதட்டைப் பிதுக்குகிறான் ரமேஷ்.
‘இரண்டு பேரும் ஒரே சமயத்தில் என்னவோ பேச வருகிறார்கள். ”நீ சொல்லு“ என்கிறான் ராமசாமி. “இல்ல. நீ என்னவோ சொல்ல வந்தியே?“ என்கிறான் ரமேஷ்.
“என்னை நம்ப ஆரம்பிச்சிருக்கியா?“
“இல்… ஆமா“ என்கிறான். “நம்பறதா வேணாமான்னு குழம்பிக்கிட்டிருக்கிறேன்.“
“உன் செல்போன்ல கால் போகுது. என் போன்ல போக மாட்டேங்குது…“
“அட அதெல்லாம் விஷயம் இல்லை…“ என்கிறான் ரமேஷ். அவன் பக்கமாகத் திரும்பி “அவ கல்யாணம் நடக்கிற மண்டபம் கூட சொன்னியே? அவளை உற்4சாகப் படுத்தலாம்னு சொன்னியா?“ என்று கேட்கிறான்.
“எனக்கு சோசியம் தெரியும்“ என்று ராமசாமி சிரிக்கிறான். “இனிமே எல்லாத்தையும் உன்கிட்ட பகிர்ந்து உன்னைக் குழப்ப மாட்டேன். அவசியப்பட்டதை மாத்திரம் அதுவும் அவசியமானால் மாத்திரம் சொல்றேன் …“
“சரி. என்னை லூசாக்கி விட்றாதே.“
“நாம ரெண்டு பேருக்கு மாத்திரம் தெரிஞ்ச இந்த விஷயம், இதை வேற யார்கிட்டயும் மூச்சு விடக் கூடாது. சரியா?“
“மூச்சு விடாட்டி நான் செத்துருவேனே?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
அலுவலகம் முடிகிற வேளை. “அடடா“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு என்ன நாள்?“
“திங்கள்“ என்கிறான் ரமேஷ்.
“அதில்லைடா. இன்னிக்கு என் மனைவியின் பிறந்த நாள். மறந்தே போயிட்டேன்…“
“அடேடே. அப்பிடியா? எத்தனை முக்கியமான விஷயம். வீட்டுக்குப் போனா உன்னை அவ சும்மா விடுவாளா?“
“சரி. ஒரு புடவை எடுத்துக்கிட்டுப் போலாம். அப்பதான் சமாதானம் ஆகும் அவளுக்கு. நான் கிளம்பறேன்…“ என எழுந்து கொள்கிறான் ராமசாமி.
ரங்கநாதன் தெரு. வியாபார நெரிசல். ஊடு புகுந்து போகிறான். ஒரு ஜவுளிக்கடையில் சேலை வாங்க என நுழைகிறான்.
“என்ன வெரைட்டி பாக்கறீங்க?“
“எது நல்லா இருக்கும்?“
“ஷிபான். கார்டன் சில்க். மைசூர் சில்க். சந்தேரி காட்டன். கோட்டா சாரி. ஆர்கென்சா… நம்ம கடைல எல்லா வெரைட்டியும் இருக்கு.“
“எதுவுமே விக்கலியா?“ என்றவன் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு, “சாரி. ஜோக்“ என்கிறான். “கடைசியா என்ன சொன்னீங்க?“
“ஆர்கென்சா.“
“அதை எடுத்துப் போடுங்க.“
“என்ன ரேன்ஜ்ல பாக்கறீங்க?“
“ஆயிரம் ரூபாய் அளவில்.“
“இதோ“ என்று அவன் முன் புடவைகளைக் குவிக்கிறான் கடைக்காரன். சட்டென சுவாரஸ்யப்பட்டு, ஒரு பெண் அவன் முன்னால் குவிந்திருக்கும் புடவைகளைப் பார்க்கிறாள். “அதெல்லாம் என்ன விலைங்க?“
“நீங்க வேற வெரைட்டி பாத்தீங்களே?“
“இல்லை இது சொல்லிக் குடுங்க.“
“நம்மகிட்ட ஃபிக்சட் பிரைஸ். ஆனால் நாங்களே பத்து பெர்சன்ட் தள்ளுபடி தர்றோம்!“
“குட் ஜோக்“ என்கிறான் ராமசாமி. ‘ஒரு நீலப் புடவையைத் தேர்வு செய்கிறான் ராமசாமி. அதையே அந்தப் பெண் பார்க்கிறாள். சிரித்தபடி வெளியே வருகிறான் ராமசாமி.
வீடு திரும்பும் இரவு. லிஃப்டில் இருந்து வெளியே வருகிறான். பக்கத்து வீட்டு கணபதி கண்ணில் படவில்லை. உள்ளே விளக்கு எரிகிறது. கையில் புடவையைப் பார்த்துக் கொள்கிறான். மகிழ்ச்சியுடன் தன் வீட்டு அழைப்பு மணியை அடிக்கிறான்.
கதவைத் திறக்கிறாள் திலகா. அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. அவள் அவன் வாங்கி வந்திருக்கும் அதே போன்ற புடவையை – நீலப் புடவையை  அணிந்திருக்கிறாள்.
“என்ன ஆச்சர்யமாப் பாக்கறீங்க?“
“புடவை…“
“பரவால்லியே? நீங்க ரெண்டு வருஷம் முன்னால என் பிறந்த நாள்னு எடுத்துக் குடுத்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?“
“ஞாபகம் இல்லாமல் போச்சு“ என அசடு வழிந்தபடியே தன் கையில் இருக்கும் புடவையை முதுகு பின்னால் மறைத்துக் கொள்கிறான்.
“அந்த ஒரு வருஷம்தான் என் பிறந்த நாள்னு உங்களுக்கு ஞாபகம் இருந்தது…“ என சிரிக்கிறாள். அதுவும் ஞாபகம் இல்லை, என தனக்குள் சொல்கிறான். “சேர்ந்து வெளிய போகலாம்னு பார்த்தேன். உங்க மொபைல்…“
“தொடர்பு எல்லைக்கு அப்பால்னு வந்ததா?“
“ம். இன்னிக்கு ஏன் வீட்டுக்கு வர இவ்ளோ லேட்டு?“
அவன் பதில் சொல்லாமல் வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொள்கிறான்.
“ஆபிஸ்ல வேலை சாஸ்தியா?“
“உன்கிட்ட ஒரு சௌகர்யம்டி. கேள்வியும் நீயே கேட்டுப்பே…“ சிரிக்கிறான். “பதிலும் டக்குனு அழகா… நீயே சொல்லிருவே.“
மொட்டை மாடியில் காற்று வாங்க உட்கார்ந்திருக்கிறார்கள் சிகாமணியும் ராமசாமியும். ராமசாமியின் மடியில் குழந்தை கோகுல் தூங்கி விட்டான். திலகா அருகே அமர்ந்திருக்கிறவள் கொட்டாவி விடுகிறாள்.
“அக்கா பாவம் நீங்க வருவீங்க வருவீங்கன்னு காத்திட்டிருந்தாங்க அத்தான்.“
“அவ பொறந்த நாள். மிஸ் ஆயிட்டது. நம்ம கல்யாண நாளைக் கொண்டாடிருவோம் திலக்.“
“உங்களுக்கு ஞாபகம் இருந்தால்…“ என்கிறாள் திலகா. “வாங்க. கீழே போலாம்.“
“நான் இங்கியே படுத்துக்கறேன் அத்தான். காத்து நல்லாருக்கு.“
அவளுக்கு மாத்திரம் கேட்கும்படி, “நல்ல சகுனம்“ என்றபடியே குழந்தையைத் தூக்கிக் கொள்கிறான் ராமசாமி. ‘அவள் சிரிக்கிறாள். பின் சொல்கிறாள். “கோகுலும் தூ‘ங்கியாச்சி…“
“அதுவும் நல்ல சகுனம் தான்“ என்கிறான் ராமசாமி. அவள் கொட்டாவி விடுகிறாள் மீண்டும். “ஏ நீ தூங்கிறப் போறே…“
திலகாவின் சிரிப்பொலி. மாடியில் அவர்கள் இறங்கிப் போவதைப் படுத்தபடி சிகாமணி பார்க்கிறான். அவர்கள் இருவரின் தேகமும் கீழிருந்து மேலாய் மெல்லக் கரைந்து இறங்கி காணாமல் போகிறது.
ராமசாமி வீடு. விளக்கு எரிகிறது. சுவரில் அவன் திலகாவை வரைந்த படம். அதில் உள்ள ஆணியில் அவன் போய்ச் சட்டையை மாட்டுகிறான். பக்கத்து வீட்டில் இன்னும் டிவி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம்.
“திலகா தூங்கிட்டியா?“
“ஆமாம்.“
“நான் இன்னும் தூங்கலடி… எனக்குத் தூக்கம் வரல்ல.“
“ஏன்?“
“தூக்கம் வரல்ல. மூடுதான் வருது.“
“எனக்குத் தூக்கம் வருது.“
“நீ பாட்டுக்குத் தூங்கு.“
““நீங்க தூங்க விடணுமே…“
“அதுசரி. திலகா… ஒரு விஷயம் சொல்லணும் உன்கிட்ட…“
“ம்“
“நான் சொல்லப் போறதை நீ நம்புவியா?“
“நம்பற விஷயமாச் சொல்லுங்க.“
“நீ நம்ப மாட்டே…“
“அப்ப சொல்லாதீங்க.“
“இப்ப?“
“என் தூக்கம் போச்சு…“ என்கிறாள் திலகா. விளக்கு அணைக்கப் படுகிறது.

(தொடர்கிறேன்.)
91 97899 87842




No comments:

Post a Comment