Friday, August 28, 2015

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல் - அத்தியாயம் 8

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்
வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 8
ழகான மாலை நேரம். முன்னால் கோகுலை நிறுத்திக் கொண்டு பின்னால் மனைவியை ஏற்றிக்கொண்டு ராமசாமி. “யப்பா, இன்னிக்காவது உங்களுக்கு எங்களை வெளியே கூட்டிட்டுப் போகணும்னு தோணிச்சே“ என முதுகு பின்னே திலகாவன் உற்சாகக் குரல்.
“GAS தீர்ந்து போச்சின்னே. சரி. வெளில சாப்பிடலாம்னு கிளம்பினோம்… வேற வழி? உனக்குப் பசிக்கலைன்னாலும் எனக்குப் பசிக்குமே. இவனுக்குப் பசிக்குமே…“
“ஆசையாக் கூட்டிட்டுப் போறீங்களாக்கும்னு சந்தோஷப் பட்டேன். அதுக்கும் வேட்டு வெச்சிட்டீங்க…“
“ஆசையாத் தான் கூட்டிட்டுப் போறேன். எனக்கு மாத்திரம் ஆசை இருக்காதா என்ன? எத்தன்னாள் உன் சாப்பாட்டையே சாப்பிடறது…“
அப்படியே அவன் இடுப்பில் நறுக்கென அவள் கிள்ளுகிறாள். “ஏய் வண்டிய எங்காவது விட்றப் போறேண்டி…“ என அவன் நெளிகிறான்.
ஹோட்டலில் ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து உட்கார்கிறார்கள். நாலுபேர் உட்காரும் மேசை. “எங்க உன் தம்பி?“
“அவன் நேரா ரெஸ்ட்டாரன்ட்டுக்கு வரேன்னுட்டான். எதோ இங்கிலீஷ் பட டிவிடி வாங்கணும்னு போனான்..“
சிகாமணியை அலைபேசியில் அழைக்கப் போகிறான். அதற்குள் அவனே வந்துவிட்டான். “ஹாய் அத்தான்…“
“உனக்காகத்தான் காத்திருக்கோம். வாடா. எல்லா வெளிநாட்டுப் படமும் பார்க்கறே. பாத்திட்டு, அத்தான், ஒரு கதை. இதுவரை இன்டஸ்ட்ரியே பார்க்காததுன்னு என்கிட்ட சவடால் வேற.“
“எல்லாப் படமும் பார்ப்பேன். பார்த்துவிட்டு அது மாதிரி இல்லாமல் நான் யோசிக்கிறேன் அத்தான்.“
“பேனா குடுங்கன்னு கேட்டான் ஒருத்தன். இது எழுதாதுங்கன்னான் அடுத்தவன். பரவால்ல குடுங்க. காது குடையத்தான் கேட்டேன்னானம் முதல் ஆள். அந்த மாதிரிப் பேசறே நீ… என்ன பல்டி அடிச்சாலும், சினிமாவுக்குன்னு ஒரு இருபது முப்பது வகை இருக்குடா. அதைத் தாண்டி கதை சொல்லவே முடியாது. எப்பிடி க்ரைம்னா பொண்ணு, இல்லாட்டி பொருள், இதைத் தாண்டி குற்றங்கள் எதுவுமே நடக்காதோ, அது மாதிரி.“
“அப்பிடிப் பார்த்தா, மனுச ஆசாபாசங்களைத் தாண்டி வாழ்க்கை இல்லை. சினிமாவும் இல்லை அததான். ஆனாலும் இன்னும் வாழ்க்கைல அறிஞ்சிக்க எவ்வளவோ இருக்கே. அதானே வாழ்க்கையை இன்னும் சுவாரஸ்யமாக்குது.“
“இன்னும் திலகாவைப் பத்தியே எனக்கு முழுசாத் தெரியாது…“
திலகா முறைக்கிறாள். ”எப்பிடியும் என் பக்கமா பந்தைத் திருப்பி விடாமல் இவருக்குப் பொழுது போகாதுடா.“
“இல்ல. என்னைப் பத்தியும் உனக்குத் தெரியாத ஆயிரம் விஷயம் இருக்குன்னு சொல்ல வர்றேன்.“
சர்வர் வருகிறான். “கோகுல் உனக்கு என்ன வேணுமோ கேளு.“
கோகுல் யோசிக்கிறான். சிகாமணி சிரிப்புடன் எடுத்துக் கொடுக்கிறான். “எது உனக்கு ரொம்பப் பிடிக்கும்?“
“பஞ்சு மிட்டாய்“ என்கிறான் கோகுல். எல்லாரும் சிரிக்கிறார்கள். “அதெல்லாம் ஹோட்டல்ல கிடைக்காதுடா. பூரி சாப்பிடறியா?“
“எனக்குப் பஞ்சு மிட்டாய்தான் வேணும்…“
“அவன்ட்ட கேட்டது தப்பாப் போச்சு. ஏய் நீ பூரி சாப்பிடு. வெளில போயி உனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கித் தரேன்… உனக்கு என்ன வேணும்டி?“
“நெய் ரோஸ்ட். அப்பறம் ஃபலூடா.“
“அதுல டான்னு வந்தா இவளுக்குப் பிடிக்குது“ என்கிறான் ராமசாமி. “ஃபலூடாடான்னு சொல்லாம விட்டாளே…“
“உனக்கு என்னடா வேணும்?“
“போண்டா“ என்கிறான் சிகாமணி.
“எனக்கும் ஃபலூடா“ என்கிறான் கோகுல்.
“பெரிய பிரச்னை தீர்ந்து விட்டது. அவன் மனசு மார்றதுக்குள்ள கொண்டு வாப்பா. எங்க ரெண்டு பேருக்கும், என்னடா போண்டா சொல்லிறலாமா?“
சிகாமணி தலையாட்டுகையில், அவனுக்குப் பின்புறமாக தூரத்தில் ஒரு குறுந்தாடிக்காரனைப் பார்க்கிறான் ராமசாமி. அவன் முகம் மாறுகிறது. “இவனை எங்கியோ பார்த்திருக்கேண்டா நான்… எங்க எங்க?“ என நெற்றியில் தட்டிக் கொள்கிறான்.
“வந்த இடத்தில் இவர் இப்பிடித்தான் திடீர்னு இப்படி எதாவது ஏடாகூடம் ஆரம்பிச்சிருவாரு… ஒருநாள் ஒரு பாட்டின் சரணத்தை வெச்சிக்கிட்டு, இதன் பல்லவி என்ன என்னன்னு ஒரே யோசனை. வீடு திரும்பற வரை பேசவே இல்லை.“
சட்டென ராமசாமி கை துடைக்க என்று சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த அந்த டிஷ்யூ காகிதத்தில் அந்த குறுந்தாடிக்காரனை கிடுகிடுவென்று வரைகிறான்.
“அப்பா என்னையும் வரையறியா?“
“உன்னை வீட்டுக்கு வந்தப்பறம் வரையறேண்டா…“
“இவனை எங்க பார்த்திருப்பீங்க அத்தான். மார்க்கெட்ல. கடையில. பீச்ல… உங்க பேங்க்ல?...“
“பேங்க்ல ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வராங்க போறாங்க. அவர் வேலையே அப்பிடி. இதுல யாரை எப்பிடி ஞாபகம் வெச்சிக்க முடியும் அவரால?“ என்கிறாள் திலகா.
பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த குறுந்தாடிக்காரன் வெளியே போகிறான். இங்கிருந்து அவன் வெளியே நிறுத்தி யிருந்த வண்டி எண் தெரிகிறது. ட்டி என் 22 எக்ஸ் 1848. வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பிப் போகிறான் குறுந்தாடிக்காரன். ராமசாமி அந்த வண்டி எண்ணையும் அவன் வரைந்த படத்தில் குறித்துக் கொள்கிறான்.
“அந்த வண்டியையும் எங்கயாவது பாத்திருக்கீங்களா அத்தான்?“ என சிகாமணி கிண்டல். “எங்காவது டிராஃபிக்ல உங்க கூட சண்டை போட்டிருப்பானா?“
“தெரியல. யோசிக்கிறேன். யோசிக்கிறேன்…“
கடகடவென்று சாப்பிடடு முடிக்கிறார்கள். ஃபலூடா வருகிறது. “நீங்க கொஞ்சம் எடுத்துக்கறீங்களா?“ என கேட்கிறாள் திலகா. “நிறையவே எடுத்துக்கறேன்…“ என்கிறான் ராமசாமி. ஒரு ஸ்பூனில் ஃபலூடாவை எடுத்து ராமசாமிக்கு ஊட்டுகிறாள் திலகா. “அம்மா எனக்கும் ஊட்டி விட்டுர்றியா?“ என்று கேட்கிறான் கோகுல். எல்லாரும் சிரிக்கிறார்கள்.
பரணில் பழைய டைரிகள் நாலைந்து அடுக்கிக் கிடக்கின்றன. கூடவே பழைய நாளிதழ்களும் கட்டிக் கிடக்கின்றன. அலுவலகம் கிளம்புமுன் நாள் காட்டியைப் பார்க்கிறான் ராமசாமி. நிகழ்காலத்தில் சுவரில் காலண்டரில் மே 25. இரண்டு வருடம் முந்தைய டைரியை எடுக்கிறான். அப்போது சிகாமணி அங்கே வருகிறான்.
“அத்தான் அன்னிக்கு நீங்க குடை எடுத்திட்டுப் போனீங்களே?“
“ஆமாம்.“
“உங்க டைரி வாக்குப்படி மழை வந்ததா?“
“வந்தது.“
“எங்க வந்தது? வெயில்தான் படு போடு போட்டது. நான் கூட அன்னிக்குதான் ஒரு சினிமாக் கம்பெனிக்குப் போனேன்…“
“நான் படிச்சது ரெண்டு வருஷம் முந்தைய டைரி.“
“அதுனால?“
“ரெண்டு வருஷம் முந்தி மழை வந்தது.“
“அதுக்கு இப்ப குடை எடுத்திட்டுப் போனா எப்பிடி? ஹா ஹா…“ என சிகாமணி சிரிக்கிறான். “எப்பவோ தொலைச்ச பணத்தை இப்ப போயி தெருவுல தேடிப் பார்க்கிறா மாதிரி…“
“என் டைரி பத்தி உனக்குத் தெரியாது சிகாமணி. அது முக்காலமும் சொல்லும்…“
“சரி. அத்தான். இன்னிக்கு என்ன ராசி பலன்னு டைரி சொல்லுது… பழைய டைரி பாக்கறீங்க. ஏன் பழைய பேப்பர் பார்க்க மாட்டேன்றீங்க?“
“பேப்பரா?“
“அதுல ராசி பலனே வருதே அத்தான்…“
“சிகாமணி நீ ஜீனியஸ்டா.“
“தேங்ஸ் அத்தான்.“
“பேப்பர்ல செய்தி பார்க்கணும்னால், அன்றைய நாளிதழ்ல தேடக் கூடாது. ஒருநாளின் சேதி வேணும்னால் அதுக்கு அடுத்த நாள் பேப்பர் பாக்கணும். இன்றைக்கு என்ன தேதி?“
“மே 25.“
“மே 25 நடந்த விஷயத்தை என்னிக்குப் பேப்பர்ல பார்க்கணும்? மே 26ல். அப்படித்தானேடா?“
பரணில் ஏறி மே 26, இரண்டு வருடம் முந்தைய செய்தித்தாளை எடுக்கிறான். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நாளிதழ்.
“எங்க மாமா பொண்ணு கூட அந்த வருஷம் நல்ல ரேங்க் வாங்கி, பேப்பர்ல படம் வந்தது அத்தான்.“
“வெரி குட்.“
“உங்க படம் என்னிக்கு வரும் அத்தான்…“
“நான் பிளஸ் டூ படிச்சே நாளாச்சிடா. இனிமேல் போட மாட்டாங்க…“
அதில் ஒரு செய்தியைப் பார்க்கிறான். முகம் இறுகுகிறது. சிகாமணி அந்தச் செய்தியை எட்டிப் பார்ககிறான். மதிப்பெண் குறைந்த மாணவி தற்கொலை.
“அடிக்கடி இதுமாதிரி ஆகுது அத்தான்… என்ன எழுந்துட்டீங்க?“
ராமசாமி விறுவிறுவென்று உடை மாற்றிக் கொள்கிறான். அவசர அவசரமாக வெளியே போகிறான்.
“அக்கா அத்தான் ஏன் இத்தனை அவசரமாக வெளியே ஓடுறார்?“
“நீ எதும் ஜோக் அடிச்சியாடா?“ என்று உள்ளிருந்தபடியே கேட்கிறாள் திலகா.
லிஃப்ட். மைனஸ் 1 அழுத்தப் படுகிறது. தெருவில் இறங்கி பரபரப்பாக நடக்கிறான். கையில் நாளிதழ். அவன் போகிற போதே அவன் வாசித்த நாளிதழின் செய்தி மனசில் நிழலாடுகிறது.
மதிப்பெண் குறைந்து பெற்றோர் திட்டியதால் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி சுகன்யா (வயது 17) தற்கொலை செய்துகொண்டார். சென்னை மணிமேகலை நகர் நாலாவது தெருவைச் சேர்ந்த சுகன்யா நேற்று அறைக்குள் போய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு பஸ்சில் அவசரமாக ஏறி, இறங்குதல். விறுவிறுவென்று போகிறான். ஓரிடத்தில் ஒருவரிடம் கேட்கிறான். “இந்த முகவரி எங்க இருக்கு?“ என நாளிதழைக் காட்டுகிறான்.
“இது என்னிக்குப் பேப்பர் தம்பி?“
“நாளைய பேப்பர்…“
“நாளைய பேப்பரா? அது எப்பிடி உங்க கையில?“
“அதெல்லாம் அப்பறம்.. இந்த முகவரி எங்கே?“
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது தம்பி. முகவரியை வாசிங்க…“
“மணிமேகலைநகர் நாலாவது தெரு…“
“இது மணிமேகலை நகர் இல்லங்க. தப்பா வந்திட்டீங்க. நேரா போயி…“
விறுவிறுவென்று போகிறான். அங்கே ஒருத்தரிடம் விசாரிக்கிறான். “இது மணிமேகலை அவின்யூ தம்பி. நகர்னு இங்க எங்க … பக்கத்துல கேளுங்க.“
ஓடுகிறான். ஒருவர் வழியில் அவனை நிறுத்துகிறார். “என்னய்யா?“
“இந்த முகவரி எங்க இருக்கு? கொஞ்சம் வழி சொல்லுங்க.“ அவர் ஒரு காகிதத்தை நீட்டுகிறார். போடாங்- என அவரை உதறி விட்டு மேலும் வேகமாகப் போகிறான். கையில் நாளிதழ். ஒருநிமிடம் நின்று நாளிதழில் வெளிவந்திருக்கிற சுகன்யாவின் படத்தைப் பார்ககிறான். உன்னை சாக விடமாட்டேன்… என கத்துகிறான்.
“இது நாலாவது சந்து சார்.. நாலாவது தெரு… அதோ…“
மூணாவது தெரு தாண்டியதும் திரும்பும்போதே தெரிகிறது. ஐந்தாறு கதவிலக்கங்கள் தள்ளி ஒரு வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஹோவென்று அழுகைச் சத்தம்.
கையில் இருக்கும் நாளிதழைப் பார்க்கிறான். அவனுக்கும் அழுகை வருகிறது.
யாரோ கிட்ட வருகிறார்கள். “நீங்க அவங்களுக்குச் சொந்தக்கார்ருங்களா?“
இல்லை என தலையாட்டுகிறான்.
“பாவம் சார். வயசுப் பொண்ணு. எதோ மார்க்கு குறைஞ்சிட்டது போல.“
“பொண்ணு பேரு சுகன்யா.“
“உங்களுக்கு அவங்களைத் தெரியுமா சார்?“
“தெரியாது.“
“பின்ன எப்பிடி விவரம்லாம் சொல்றீங்க?“
“பேப்பர்ல பார்த்தேன்.“
“அதுக்குள்ள பேப்பர்ல வந்திட்டதா? செய்திகளை முந்தித் தர்றாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். இவ்வளவு முந்தியா?“
அந்த நபர் ராமசாமியின் கையில் இருக்கும் நாளிதழைப் பார்க்கிறார். அந்தப் பக்கமும் அதில் சுகன்யாவின் படமும்.
“இது என்னிக்குப் பேப்பர் சார்?“
அவன் வரும் ஆட்டோவைக் கூப்பிடுகிறான். “நாளைக்குப் பேப்பர்“ என்று கிளம்புகிறான்.
“நாளைக்குப் பேப்பரா? சார். என்ன சொல்றீங்க?“ என அவர் கைநீடடி நிறுத்துமுன் ஆட்டோ போய்விடுகிறது.
வீடு. சிகாமணி தயங்கித் தயங்கி அக்காவிடம் வருகிறான்.
“என்னடா? பணம் வேணுமாக்கும்?“
“இல்லக்கா“ என தயங்குகிறான். “அக்கா அத்தானோட போக்கே வர வர சரி இல்லை. பாத்துக்கோ…“ என்கிறான் சிகாமணி.
“என்னாச்சி?“
“உங்கிட்ட சொல்ல வேணாம்னு பார்த்தேன்.“
“அட சனியனே. அதான் ஆரம்பிச்சிட்டியே. சொல்லித் தொலை…“
“அன்னிக்கு…“
“அன்னிக்குன்னா என்னிக்கு?“
“நாலைஞ்சு நாள் முன்னாடின்னு வெய்யி…“
“சரி சொல்லு.“
“அத்தானைத் தேடி பாங்க்குக்குப் போனேன்…“
“நீ ஏன் அங்க போனே?“
“இப்ப அதுவா முக்கியம்?“
“அதுவும் முக்கியம் தாண்டா…“
“ஒரு நூர் ரூவா கேட்கலாம்னு போனேன். போதுமா?“
“நூர் ரூவா நீ கேட்டது. போதுமான்னு என்னைக் கேட்டால்?“
“அதில்லக்கா. விஷயத்துக்கு வா நீ. அன்னிக்கு பாங்குக்குப் போனேனே… அவர் வேலைக்கே வரலைன்னுட்டாங்க.“
“என்னிக்குடா?“
“நாலைந்து நாள் முன்னாடின்றேனே?“
“வேலைக்கே வரலைன்னாங்களா?“ அட எருமை மாடே எத்தனை முக்கியமான விஷயம். இதை ஏன் முன்னாலயே சொல்லல என்கிட்ட?“
“சாரிக்கா.“
“இப்ப எதுக்கு சொல்றே?“
“அன்னிக்கு என்னடான்னா வெயில் காயுது, குடை எடுத்திட்டுப் போறார். இன்னிக்கு பழைய பேப்பரை எடுத்துக்கிட்டு வெளிய ஓடறார்… என்ன ஏது ஒண்ணும் புரிய மாட்டேங்குது.“
“அவர் வரட்டும் கேட்டுறலாம்“ என்கிறாள் திலகா. கொஞ்சம் அப்படியே யோசிக்கிறாள். “சே நீ பயப்படறா மாதிரில்லாம் பெரிசா ஒண்ணும் இருக்காதுடா“ என்கிறாள். “ஒருவேளை பெரிசா இருக்குமாடா?“ என்கிறாள்.
“கேள்வியும் நீயே கேட்டுக்கறே. பதிலும் நீயும் சொல்லிக்கறே. உடனே சந்தேகத்தையும் கேட்கறே. நல்லா இருந்த ஆளும் உன்கிட்ட பேசினால் குழம்பிருவான் அக்கா.“
“போடா நீ ஒருத்தன்…“ என உள்ளே போகப் போனவள் அங்கே இருந்த தொலைபேசியில் ராமசாமிக்குப் பசே முயல்கிறாள். எண் கிடைக்கவில்லை. “எப்ப பார்த்தாலும் தொடர்பு எல்லைக்கு வேளியேன்னு தான் வருதுடா.“
பிறகு வங்கியின் லென்ட்லைனுக்கே அழைக்கிறாள்.
“ஹலோ… நேஷனல் வங்கியா?“
“எஸ். சொல்லுங்க.“
“மிஸ்டர் ராமசாமியோட பேசணும். நான் அவரோட மிசஸ்.“
“அவர் இன்னிக்கு ஆபிசுக்கே வரலம்மா“ என்கிறார்கள் போனில்.
“தம்பி நான் மோசம் போயிட்டேண்டா“ என அழ ஆரம்பிக்கிறாள் திலகா.
அப்போது வாசல் கதவு தட்டப்படுகிறது. “அவர்தான்… வந்திட்டார்“ என கதவைத் திறக்கிறாள்.
“GAS“ என தோளில் சிலிண்டருடன் ஒரு நபர் நிற்கிறான்.
 * * *
தொடர்கிறேன்
91 97899 87842

storysankar@gmail.com

No comments:

Post a Comment