Saturday, October 3, 2015

அத், 43 - திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

U p d a t e d  e v e r y d a y

வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 43

மேஷ் வீடு. அவனிடம் உடல் நலம் விசாரிக்க வந்திருக்கிறான் ராமசாமி. காபி எடுத்து வருகிறாள் கீதா. “எப்பிடிம்மா படிக்கிறே?“ என்று புன்னகையுடன் காபியை ராமசாமி வாங்கிக் கொள்கிறான். “அவள்தான் கிளாஸ் பர்ஸ்ட்டு“ என்று சந்தோஷமாய்ச் சொல்கிறான் ரமேஷ். படுக்கையில் படுத்திருக்கிறான். பலவீனமான, தெம்பு இல்லாத குரல். அதை வெட்கத்துடன் அங்கிகரித்தபடியே “சர்க்கரை சரியா இருக்கா அன்க்கிள்?“ என்று கேட்கிறாள்  கீதா.
“சேதி இனிப்பா இருக்கே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி. பின் ரமேஷ் பக்கம் திரும்பி “உனக்கு திடீர்னு இப்பிடி ஆனதும் இவதாண்டா ரொம்ப பயந்திட்டா“ என்கிறான். ரமேஷ் அவளைப் பார்த்து கரிசனமான புன்னகை ஒன்றை வீசுகிறான். “நல்லாப் பாத்துக்கறா என்னை…“
“இப்ப எப்பிடி இருக்குடா உனக்கு?“
“I JUST FEEL NORMAL.“ என்கிறான். “டாக்டர்தான் இந்த வாரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. அடுத்த வாரத்துலேர்ந்து வேலைக்குப் போகலாம்னு சொன்னாரு.“
“அப்ப கூட வண்டி எடுக்க வேணாம். ஒரு மாசம் போகட்டும்…“ என்கிறான்  ராமசாமி. அவனுக்குப் பின்னால் சுவரில் ரமேஷின் அப்பாவின் பெரிய படம். அதில் சருகாய்க் காய்ந்த மாலை ஒன்று ஆடிக் கொண்டிருக்கிறது. மினுக்கிக்கொண்டு சிரியல் பல்ப் ஒன்று.
“நான் கிளம்பறேன்…“ என எழுந்து கொள்கிறான் ராமசாமி. வாசல்வரை கூடவே வருகிறாள் கீதா. “வீட்ல அம்மா அப்பா யாருமே இல்லியா?“
“எல்லாருமே வெளியே போயிருக்காங்க. நான் இப்பதான் ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சி வந்தேன். ஏன் அன்க்கிள்… என் காபி நல்லா இல்லியா?“
“NAUGHTY“ என சிரித்தபடி “வெண்ணிற ஆடை மூர்த்தி காபி நல்லா யிருந்தது.“
“என்ன அது? வெண்ணிற ஆடை மூர்த்தி காபி?“
“ப்ரூஊ…“ என நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி போலச் சொல்லிக் காட்டுகிறான் ராமசாமி. கீதா சிரிக்கிறாள். “வரேன்“ என்கிறான் ராமசாமி.
நல்ல மதிய வெயில். ராமசாமி ரமேஷ் வீட்டில் இருந்து கிளம்பி தெருவில் போகிறான். அவன் ஒரு டீக்கடையைத் தாண்டும்போது ரெண்டு பேர், மீசை தாடிக்காரர்கள், அங்கே பென்ச்சில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். அவர்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறது. சற்று தாண்டிப் போய் நின்று தற்செயல் போல திரும்பிப் பார்க்கிறான்.
அவர்கள் இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதறிப் போய் உடனே எழுந்து நிற்கிறார்கள்.
உடனே ஒருவன் பரபரப்பாகி அலைபேசியில் பேசுகிறான். “மாமா… இப்ப வேணாம். நேரம் சரியில்ல. மாட்டிக்கிறாப்ல இருக்கு. எங்க சந்திப்போம்னு நானே இன்னொரு இடம் சொல்றேன்… நான் சொல்றவரை வெயிட் பண்ணு. எங்களைச் சந்திக்க முயற்சி பண்ண வேண்டாம்.“
“ஆகா. மழை விட்டும் தூவானம் விடல்லன்றாப்போல… சின்னக்கனி இன்னும் என்னை வேவு பார்க்கிறானா தெரியல்லியே…“ என்று சொல்லிக் கொள்கிறான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். “நம்மைப் பார்க்காத மாதிரி அவன் பார்த்தான் பாத்தியா சிங்காரம்?“ என்கிறான் ஒருத்தன். “ஐயோ போலிசுக்கே தகவல் சொல்லி ஒரு பெரிய கொள்ளைக்காரனைப் பிடிச்சிக் குடுக்கறான்னால்…  நாம எல்லாம் அவன்கிட்ட ஜுஜுபி. அவன்கிட்ட நாம உஷாரா இருக்கணும் அப்பா“ என்கிறான் அடுத்தவன்.
“இப்ப நாம அவன் பிடிச்சிக் குடுத்து போலிஸ்ல மாட்டினம்னால், பேப்பர்ல நம்ம படம் வருமா, இவன் படம் வருமாடா?“
“அதுவாடா இப்ப முக்கியம்?“ என்கிறான் சிங்காரம். “இப்ப என்ன செய்யலாம் குமார்?“
“தலைவரு என்ன சொல்லியிருக்கார்?“
“ஆமா ஆமா…“
“அவன் மேல ஒரு கண்ணு இருக்கறது எப்பவுமே நல்லது.“
தலையைத் தூக்கிப் பார்க்கிறார்கள். “ஏய் அதுக்குள்ள ஆளு மாயமாயிட்டான்டா…“ என ஆச்சர்யப் படுகிறார்கள். “டேய் சந்தேகமே இல்லை. இவன் சாதாரண ஆள் இல்லை. இவனை விடக் கூடாது“ என்கிறான் சிங்காரம்.
டீ கிளாஸை அப்படியே வைத்து விட்டுக் கிளம்புகிறார்கள். “டீக்காசு?“ என கை நீட்டுகிறான் கடைக்காரன். “கடையை உடைக்காமல் போனமேன்னு சந்தோசப் படுடா“ என்கிறான் குமார். கடைக்காரன் திகைப்பாய்ப் பார்க்க அவள் விறுவிறுவென்று போகிறார்கள்.
நாலு தெரு மூலையில் நின்று தேடுகிறார்கள். நாலு திசையிலும் தேடுகிறார்கள். “பாருடா. பட்டப் பகல். இத்தனை வெளிச்சத்தில் அவன் ஆளு எங்கயோ ஒளிஞ்சிக்கிட்டான். தப்பிச்சிட்டான்டா…“
“பார்ட்டி படா கில்லாடியா இருப்பான் போலுக்கே…“
“தலைவருக்கு ஃபோன் போட்டுச் சொல்லலாமா?“
“ஆமாம். உடனே சொல்லணும் போலத்தான் இருக்கு.“
“டேய் அங்க பாரு…“
ஒரு மரத்துக்குப் பின் ராமசாமி. யாருக்கோ செல் ஃபோனில் பேசுகிறான். “நம்மைப் பத்திதான் யாருக்கோ தகவல் சொல்கிறான் போல இருக்குடா…“
“நாம எத்தனையோ பேரை கண்காணிச்சிருக்கோம். இவன் நம்மளையே மிஞ்சிருவான் போலுக்கேடா…“
“பேசாமல்… எதுக்கும் தலைவர் காதுல தகவலைப் போட்டுறலாம்.“
“அடி அவருக்கு…“
அவர்கள் சின்னக்கனி எண்ணுக்குத் தொடர்பு கொள்கிறார்கள்.
சின்னக்கனி ஒரு வீட்டுக்குள் பதுங்கி யிருக்கிறான். வெளியே ரெண்டு பேர் திண்ணையில் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் அரிவாள்.
அலைபேசி அடிக்கிறது.
“அண்ணே நாந்தான் சிங்காரம்.“
“தெரிது. ஒம்பதுன்னு முடியற நம்பர் உன்னிது தான். போன காரியம் என்னாச்சி?“
“அண்ணே… ஒரு ஆபத்து.“
“என்னடா சொல்றே? நானே ஒரு ஆபத்துன்னு தான் இங்க வந்து கிடக்கேன்…“
“அன்னிக்கு நம்மளை வேவு பார்க்க வந்தான் இல்லே?“
“நம்மளை யாருடா வேவு பார்க்கறது? பாத்திருவானா எவனாவவது?“
“அவன்தாண்ணே. அந்த பேங்க் பார்ட்டி…“
“ஏ அவனா? அவன் டம்மி பீசுடா.“
“இல்லண்ணே.“
“இல்லியா?“
“ஆமண்ணே.“
“ஆமாமா இல்லியா?“
“அவன் சாதா ஆள் இல்லைன்றது… ஆமா அண்ணே.“
“ஐயோ. என்னாச்சி?“ என்றபடியே எழுந்து நின்று, நெகிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொள்கிறான்.
“மரத்துக்குப் பின்னால நின்னு… யாருக்கோ செல்ஃபோன்ல பேசிட்டிருக்கான்…“
“அட ஒண்ணுக்கு வருதுன்னு ஒதுங்கிருப்பான். அது ஒரு மேட்டரா?“
“அப்பிடி இல்ல அண்ணே… அந்த டீக்கடை பக்கமா ஒதுங்கி நாங்க இருந்தமோ…“
“சரக்கு வந்ததா இல்லியாடா?“
“வரல்ல அண்ணே…“
“ஏண்டா?“
“இந்தாளைப் பாத்தமா? அவனுக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னுட்டோம் அண்ணே…“
“அட மடப்பயலே… ஏண்டா அப்பிடிப் பண்ணினே?“
“நாங்க கூட அவன் தாண்டிப் போறதைப் பார்த்து சாதாரணமா நினைச்சோம் அண்ணே.“
“அப்பறம் என்ன?“
“போறாப்ல போயி… தெரியாத மாதிரி… திரும்பி… எங்களை நோட்டம் பார்க்கறான் அண்ணே.“
“அவனா?“
“ஆமா அண்ணே.“
“என்னடா சொல்றே?“
“ஆமா அண்ணே.“
பேசிக் கொண்டே அவர்கள் தெருவில் நோட்டம் பார்த்தபடியே போகிறார்கள். “இப்ப என்ன பண்றது அண்ணே?“ என்றபடி வேறொரு தெருவில் திரும்புகிறார்கள்.
“டேய் எப்பிடியும் சரக்கு நம்ம கைக்கு வந்தாகணும். சாயந்தரம் நாம அதை டெலிவரி குடுக்கணும். தெரியுதா?“
“அப்ப இவனை… விட்டுர்றதா?“
“கவலைப் படாதே… அவன் டம்மி பீசு.“
“பார்த்தால் அப்பிடித் தெரியல அண்ணே.“
“நான் சொல்றேன் இல்லே? அவனை விடு…“
“சரி அண்ணே…“ என அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். சற்று தள்ளி இவர்கள் பின்னால் ராமசாமி வந்து கொண்டிருக்கிறான். ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்துக் கொள்கிறார்கள். இப்போது அந்த ரௌடிகள் பயந்து ஓட்டம் எடுக்கிறார்கள். அவனும் அவர்களைப் பார்த்து விட்டு எதிர்த் திசையில் ஓட்டம் எடுக்கிறான். மூச்சு வாங்குகிறது. நேரே கிருஷ்ணா கபேக்குள் நுழைகிறான்.
அந்த ரௌடிகள் திரும்பிப் பார்க்கிறார்கள். அவனைக் காணவில்லை. “யப்பா, தப்பிச்சோம்டா“ என்கிறான் ஒருத்தன்.
“பயங்கரமான ஆள்டா அவன்… எத்தனை சாமர்த்தியம் பாத்தியா? நாம பைத்தியம் மாதிரி அவனை முன்னால தேடிட்டிருக்கோம். அவன் நம்ம பின்னால வந்திட்டிருக்கான்.“
“அவனுக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை?“
“ஆசைடா. ஆசை. ஆசை யாரை விட்டது?“
“என்ன ஆசை?“
“இப்பிடிப் பிடிச்சிக் குடுத்தால் போலிசுல பணங் கிணங் குடுப்பாங்க.“
“பணம் கிணம் பெரிய சமாச்சாரம் இல்லடா. அவன் பாங்க் காரன்.. பணம் அவனுக்கு முக்கியம் இல்லை.“
“சரி. பேப்பர்ல படம் வருதே? புகழ் வருதே…“
“அது சரி. இப்ப சொன்னியே. அது கரெக்ட்டு.“
திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொள்கிறார்கள்.
பழக்கமான சர்வர் வருகிறான். “என்ன சார் உங்களை ஆளையே காணோம்…“
“என்னை ஆளையே காணோம்னு வேற ஆட்கள் தேடிக்கிட்டு இருக்காங்க“ என்கிறான் ராமசாமி.
“உங்க பார்ட்டி… ரொம்ப குஷியா ஆயிட்டானே சார்? இப்ப ஒரு ஒண்ணேகால் வயசுல பையன் வேற...“ என சர்வர் சிரிக்கிறான்.
“இனி அவன் இப்பிடி தற்கொலை கிற்கொலைன்னு பைத்தாரத்தனம் லாம் பண்ணாது…“ என சிரிக்கிறான்.
“நேத்தி அவங்க ரெண்டு பேருமே வந்திருந்தாங்க சார்…“ சிரிக்கிறான்.

“என்ன சிரிக்கிறே?“

“பையனுக்கும் காபி பழக்கி விட்டுட்டாங்க. நல்லா உறிஞ்சிக் குடிக்கிறான்...“
“அப்பிடியா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “ஒரு காபி கொண்டு வா.“
சர்வர் போகிறான்.
ரௌடிகள பேசிக் கொள்கிறார்கள். “எங்கடா அவன்பார்வை லேர்ந்து நாம தப்பிச்சிட்டமா?“
“அப்பிடிதான் தெரியுது…“
“சரி. இப்ப ‘நம்ம‘ ஆளைப் பார்த்து சரக்கை வாகிக்கலாமா?“
“எதுக்கும் தலைவர் கிட்ட கேட்டுக்கோ.“
கட்டிலில் படுத்திருக்கிறான் சின்னக்கனி.. அலைபேசி ஒலிக்கிறது. பதறிப் போய் தாவி எடுக்கிறான். “அடிக்கடி போன் பண்ணாதீங்கடா… பதறுது இல்லே?“ என்கிறான்.
“எங்களுக்கு ஆபத்து விலகிட்டது அண்ணே.“
“அப்பிடியா?“
“நாங்க சொல்லல? அவன் சாதாரண ஆள் இல்லேன்னு…“
“அட அவன் டம்மி பீசு அப்பா.“
“அது அப்படி இல்ல அண்ணே. நாங்க உங்க கூட பேசிக்கிட்டே வந்தம் பாருங்க. தெருவில் முன்னால அவனைத் தேடிப் போறமா… பார்த்தால்…“
“என்னாச்சி சொல்லித் தொலைங்கடா.“
“அவன்… எங்க பின்னாடி எங்களைப் பார்த்துக்கிட்டே வரான் அண்ணே.“
“ஐயோ.“
“நாங்க டேக்கா கொடுத்திட்டோம்.“
“இப்ப அவன் எங்க?“
“ஆளையே காணம்…“ என ஒருத்தன் சிரிக்கிறான். “நாய்ங்களா, அப்ப மாதிரி உங்க பின்னாடி வரப் போறான்…“ என்று கத்துகிறான் சின்னக்கனி.
“ஒரு நிமிஷம் அண்ணே.“ அலைபேசியை அப்படியே வைத்துக் கொண்டு 360 டிகிரி சுற்றி ராமசாமியைத் தேடுகிறார்கள் இருவரும். பின் சிங்காரம் அலைபேசியில் “இல்லண்ணே…“
“நல்லா பாத்திட்டியா?“
“பாத்தாச்சி அண்ணே…“
“ஹா“ என்று பெருமூச்சு விடுகிறான் சின்னக்கனி. “எனக்கு நேரம் சரி இல்லை. நம்ம கங்காதான் சொல்றான்.. திரும்ப என்னை… ரெண்டு வருஷம்  முன்னாடி காலி பண்ணப் பாத்தாங்க இல்லே? அந்தப் பார்ட்டி தேடறாங்களாம்…“
“யார் சொல்றது அண்ணே?“
“கங்கா.“
“அவன் சொன்னா சரியான தகவலாத்தான் இருக்கும் அண்ணே.“
“நீங்க வேற இவனைப் பத்தி புரளியைக் கிளப்பறீங்க.“
“இப்ப என்ன பண்றது அண்ணே?“
“அவன் இல்லைன்னு நல்லா பாத்துக்கிட்டீங்களா?“
“பாத்துட்டம். அவன் ஆளைக் காணம்.“
“சரி சரக்கு வாங்கிட்டு வந்து சேருங்க.“
“சரி அண்ணே….“ என அலைபேசியை அணைக்கிறான். பிறகு திரும்ப அடுத்த எண்ணைத் தொடர்பு கொள்கிறான். “மாமா?“


சரக்கு பார்ட்டி பொறுமையில்லாமல் காத்திருக்கிறான்.
“ஹ்ரும். எத்தனை நேரம்டா நான் வெயிட் பண்றது?“
“இல்ல மாமா. இங்க ஒரு சிக்கல்… எங்களை ஒருத்தனை வேவு பார்த்தாப் போல தெரிஞ்சது…“
“சரி சரி. இப்ப என்ன?“
“சரக்கு வாங்கிக்கறோம் மாமா.“
“எங்க வரணும்?“
“நீ வர வேணாம் மாமா. நாங்களே வரோம்.“
“எங்க வரீங்க?“
“கிருஷ்ணா கபே வாசல் பக்கமா வர்றோம். சரியா?“
“சீக்கிரம் வாங்க. நான் அந்தப் பக்கம்தான் இருக்கேன்.“
“இதோ பறந்து வந்றோம்.…“
“இப்ப மணி என்ன?“
“ரெண்டே முக்கால்.“
“பத்து நிமிஷத்தில் வாங்க.“
சரக்கு வைத்திருப்பவன் சுற்று முற்றும் பார்த்தபடி கிருஷ்ணா கபே பக்கம் வருகிறான். ராமசாமி காபி சாப்பிட்டு விட்டு வெளியே வருகிறான். சரக்கு வைத்திருக்கும் ரௌடியுடன் லேசாய் இடித்துக் கொள்கிறான்.
தூரத்தில் இருந்து அதை சிங்காரமும் குமாரும் பார்க்கிறார்கள். தூக்கிவாரிப் போடுகிறது அவர்களுக்கு. “ஐயோ… அவன் நமக்கு முன்னாடியே இங்க வந்து சேர்ந்திட்டானே…“
“இப்ப போயி சரக்கு வாங்கறது ஆபத்து குமாரு…“ என்கிறான் சிங்காரம்.
இடித்துக்கொண்டதற்கு “சாரி“ சொல்கிறான் ராமசாமி. “இருக்கட்டுங்க“ என்கிறான் ரௌடி. பிறகு அவனிடம் “மணி என்ன?“ என்று கேட்கிறான்.
““நம்மாளு கிட்ட என்னவோ கேட்கிறாண்டா. அவனும் எதோ பதில் சொல்றாண்டா…“
“வேணாண்டா. ஓடிருவோம்…‘ என அவர்கள் ஓடுகிறார்கள். “குமாரு… எவ்வளவு விவரமான ஆளு அவன் பாத்தியா? நம்ம மொத்த வட்டத்தையுமே வளைச்சிருவான் போலுக்கே…“வழியில் ஒரு கடையில் சோடா குடிக்கிறான் சிங்காரம். அந்தப் பக்கமாக விறுவிறுவென்று வருகிறான் ராமசாமி. சோடாவை அப்படியே வைத்துவிட்டு ஓட்டம் எடுக்கிறார்கள். “காசு?“ என்று கைநீட்டியபடி திகைக்கிறான் கடைக்காரன்.
ராமசாமியும் அப்போது அவர்களைப் பார்த்து விடுகிறான். “நாம எங்க போனாலும் இவங்க பின்னாடியே எப்பிடியாவது வந்திர்றாங்கடா…“ என்றபடி வேறு தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான். கால் போன போக்கு. விறுவிறுவென்று நடை. அவனை ஒரு நாய் துரத்துகிறது. ஓட ஆரபிக்கிறான். சட்டென ஒரு வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதிக்கிறான். நல்ல உயரமான சுவர். நாய்கள் கீழே காத்திருக்கின்றன.
தடதட வென்று கதவைத் தட்டுகிறான். உள்ளே யிருந்து வெளியே வரும் ஆள்… சின்னக்கனி.
அவனைப் பார்த்ததும் சின்னக்கனியும், சின்னக்கனியைப் பார்த்ததும் அவனும் ஒரே சமயத்தில் “நீயா?“ என்கிறார்கள். சின்னக்கனி பாய்ந்து அவனை உள்ளே இழுக்கிறான். சட்டென அவனைத் தள்ளி அவன் கழுத்தில் கால் செருப்பால் மிதிக்கிறான்.
“என்னத்தை மிதிச்சியோ…செருப்பை எடு கனி… இநத நாத்தத்தில் நானே செத்திருவேன்…“
“என்ன தைரியம் இருந்தால் நான் பதுங்கி யிருக்கும் இடத்தையே கண்டுபிடிச்சி வருவேடா நீயி?“
“மொதல்ல காலை எடு…“
சின்னக்கனி காலை எடுக்கிறான். “இது யார் வீடு?“
“ஏன்?“
உடலின் தூசியைத் தட்டியபடி எழுந்து நிற்கிறான் ராமசாமி. அங்கே சுவரின் படத்தைப் பார்க்கிறான். அந்தப் படத்தைக் காட்டிக் கேட்கிறான். “இது யார்?“
“கங்கா“ என்கிறான் சின்னக்கனி.
“இங்க எப்பிடி வந்தே?“
“என்னைக் காப்பாத்தி இங்க கொண்டு வநது ஒளிச்சி வெச்சிருக்கான்…“
“யாரு?“
“கங்கா.“
“ஒண்ணு சொல்லட்டா… நான் இங்க வந்தது உனக்கு நல்ல வேளை…“
“ஏன்?“
“அன்னிக்கு உன்னை… ரெண்டு வருஷம் முன்னாடி தாக்க வந்தாங்க ஒரு கும்பல். இல்லியா?“
சின்னக்கனி அவனையே பார்க்கிறான்.
“அப்ப என் மண்டைல அடிச்சவன்… இவன்தான்.“
“என்ன சொல்றே?“
“இப்ப இவன்… தன் ஆட்களைக் கூட்டி வரப் போயிருக்கான். எல்லாருமா இப்ப இங்க வந்து… உன்னைப் போட்டுத் தள்ளப் போறாங்க…“
“ஆகா…“ என அவன் பரபரப்போடு சில எண்களுக்கு அலைபேசியில் தகவல் பரப்புகிறான். “வா“ என அவனையும் வெளியே இழுத்துப் போகிறான்.
கங்கா ஆட்களுடன் வருகிறான். கத்தி அரிவாளுடன் அவர்கள் கங்கா வீட்டுக்குள் பாய்கிறார்கள். “ஆகா…“ என சின்னக்கனி கை கொடுக்கிறான் ராமசாமிக்கு. “பயமா இல்லியா கனி?“
“இப்ப பார்…“ என அவன் ஒரு விசில் அடிக்கவும், அவன் ஆட்கள் திமுதிமுவென்று அந்த வீட்டுக்குள் பாய்கிறார்கள்.
“அவங்க பாத்துக்குவாங்க…“ என சிரிக்கிறான் கனி. “பரவால்ல. உன்னை நம்பறா மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டே…“ என்றபடி தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திரும்ப அவனுக்கு அணிவிக்கிறான். “போயிட்டு வா…“ என்கிறான். “உன்னை நம்பறேன்…“
உள்ளே யிருந்து ஐயோ, என்று சத்தம். “கண்டுக்காதே“ என சிரிக்கிறான் சின்னக்கனி. “உனக்கு என்ன உதவி வேணுமோ கேளு… இப்ப போலாம் நீ“ என்கிறான்.
“இல்ல. நம்ம பையன் ஒருத்தன்.“
“யாரு அந்த காமெடி பீசா?“
“ஆமாம்“ என சிரிக்கிறான் ராமசாமி. “அவன்தான் உன் கூட பழகணும்னு துடிக்கிறான்.“
“எதுக்கு?“
“என்னவோ நாயகன் பார்ட் ட்டூ எடுக்கப் போறானாம்.“
“நாயகனா?“
“கமல்ஹாசன் படம்.“
“நான் கமல் மாதிரி இருக்கேனா?“
“கமல் வேஷம் போட்டால் உன்னை மாதிரி ஆயிருவார்…“
“ஐயோ…“ என இன்னொரு சத்தம். “கண்டுக்காதே“ என்கிறான் சின்னக்கனி. சிரிக்கிறான். “போ. பையனை வரச் சொல்லு…“ என்கிறான் சின்னக்கனி.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
for bulk 5 chaptes pls visit

vasikarapoikalplus.blogspot.com

No comments:

Post a Comment