Friday, October 2, 2015

அத். 42 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

updated everyday

வ சி க ர ப்  பொ ய் க ள்

அத்தியாயம் 42

லுவலகம் முடிந்து வீட்டைப் பார்க்க ராமசாமி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அந்த மரத்தடி சோசியனைத் தாண்டிப் போகையில் அவன் புன்னகை செய்கிறான்.
“வணக்கம் சார்…“
ராமசாமி தலையாட்டுகிறான். “என்கிட்ட இத்தனை பேர் கை ரேகை பார்த்திருக்காங்க சார்… அந்தக் காலத்தில் ரஜினி கமல் இவங்களுக்கெல்லாம் பலன் சொல்லியிருக்கேன்…“
“அதனால தான் அவங்க முன்னுக்கு வந்தாங்களா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“அது அப்பிடி இல்லை சார்… அவங்க முன்னுக்கு வந்திருவாங்கன்னு ரேகைல தெரியும் இல்லியா?“ என்கிறான் சோசியக்காரன்.
“எதிர்காலத்தைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்ய ஐயா?“ என்கிறான் ராமசாமி.
“அதென்ன அப்பிடிச் சொல்லிட்டீங்க… ராசி பலன் தெரிஞ்சிக்கறது வேஸ்ட்ன்றீங்களா?“
“தெரியல…“
“நிச்சயமா வேஸ்ட் இல்லை சார்.“
“விதின்னு ஒண்ணு இருக்கா இல்லியா?“
“இருக்குது.“
“விதியை மாத்த முடியுமா முடியாதா?“
“முடியும். அதே சமயம் முடியாது…“
“எதாவது ஒண்ணு சொல்லுங்க சார்…“ என்று ராமசாமி சிரிக்கிறான்.
“ஜோசியம்லாம்… எப்பிடித் தெரியுங்களா? நடக்கப் போறதை அது சொல்லும் போது… அதில் இருந்து அந்தக் காரியத்தை எப்படிச் செய்யணும், அந்தத் துன்பத்தை எப்படிச் சமாளிக்கணும்…. அப்பிடி அதுபத்தி ஒரு முன் தயாரிப்பா நாம இருக்கலாம். இல்லீங்களா?“
“எப்பிடி?“
“அதாவது… விதியை மாத்த முடியாது சார்… நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறேன். இன்னிக்கு மழை வரும். இது விதி. நாம அதை மாத்த முடியுமா?“
“முடியாது.“
“ஆனால் மழை வரும்னு தெரிஞ்சால்? நாம என்ன செய்யலாம்? குடை எடுத்திட்டுப் போலாமே? நனையாமல் வீடு திரும்பலாமே? இல்லிங்களா?“
“சோசியமும் வெதர் ரிப்போர்ட்டும் ஒண்ணுன்றீங்க?“
சோசியக்காரன் புன்னகை செய்கிறான்.
“தினப்படி பார்க்கிறோம்… உங்ககூட பேசல்லியேன்னு இன்னிக்கு நின்னேன்….“
“ரொம்ப சந்தோஷம்…“ என்கிறான் சோசியக்காரன். “உங்க மேனேஜர்… அவருக்குப் புரோமோஷன் வருது… அவர் கையைப் பார்த்துச் சொன்னேன்…“
“அவரா? இஙக வந்தாரா?“ என்கிறான் ராமசாமி ஆச்சர்யத்துடன்.
“நான் உங்க பாங்க்குக்கு வந்திருந்தேன் சார்…“
“மதிய நேரத்திலயா?“
“ஆமாம்.“
“மனசாற புரோமொஷன் வருதுன்னு சொன்னால்… அவருக்கு சந்தோஷம் தான்“ என்று சிரிக்கிறான்.
“அவருக்கு புரோமோஷனும் பதவி இட மாற்றமும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள வருதா இல்லியா பாருங்க…“
“வருது வருது. அது எங்களுக்கே தெரியும்…“ என்கிறான் ராமசாமி. “சோசியக்காரங்களைப் பத்தி ஒண்ணு சொல்லுவாங்க…“
“என்ன அது?“ என்று புன்னகை செய்கிறான் சோசியக்காரன்.
“யாரைப் பார்த்தாலும் நீங்க 90 வயசு வரை வாழ்வீங்கன்னு பெரிய வார்த்தையாப் போட்டுருவாங்க. அவன் 70 வயசு வரை வாழ்ந்தாலும் கூட சோசியம் சொன்னது சரின்னு சந்தோஷமா எப்ப சோசியனைப் பார்த்தாலும் கையில இருக்கிற பணத்தைக் குடுப்பான்…“
சோசியன் சிரிக்கிறான். “சொன்ன வயசுக்கு முன்னமேயே அவன் செத்துட்டான்னு வெய்ங்க..“ என தொடர்கிறான் ராமசாமி. “அவன் தான் இல்லியே. நீ சொன்னது தப்புன்னு வந்து கேட்கவா முடியும்?“
“சார் அப்படி யெல்லாம் இல்லை. நான் சொன்னால் துல்லியமா இருக்கும். ஒருநாள் கையை என்னாண்ட நீங்க காட்டணும்… மேனேஜரைப் பார்க்க வந்தேனே… அது போல உங்களுக்கும்… ஒரு மதியம் வரேன்… பாத்திறலாம்…“
“எனக்கே என் எதிர் காலம் தெரியும்…“
“என்ன தெரியும் சொல்லுங்க. அதுக்கு மேல நான் சொல்றேன்… சரிதானா?“ என்கிறான் சோசியக்காரன்.
அவன் பதில் சொல்லாமல் சிரித்தபடி தாண்டிப் போகிறான்.
ராமசாமி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். திடீரென்று அவன் போகும் வழியில் “தெய்வமே…“ என்று மரத்தில் இருந்து குதிக்கிறான் சின்னக்கனி. சட்டென பயந்து பின்வாங்குகிறான் ராமசாமி. “என்னய்யா தெய்வத்தையே பயமுறுத்தறியே…“ என்கிறான். “என் பேர் ராமசாமி. நீ மரத்தில் இருந்து குதிக்கறதுக்கும் அதுக்கும்… உன் பக்தி… சரியாத்தான் இருக்கு“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“என்ன சொல்றீங்க?“
“அதுவா? ஒரு ஜோக்.“
“ஜோக்கா? இருக்கட்டும் இருக்கட்டும்“ என்றவன் வயிறு குலுங்கச் சிரிக்கிறான்.
“ஜோக் சொல்லும்போது சிரிக்க மாட்டேங்கறே. சொன்னது ஜோக் அப்டின்னு சொன்னால் அதற்கு அப்பறமாச் சிரிக்கறே…“

“இது ஜோக்கா சார்?“

“ஏன் சிரிக்கப் போறியா?“
“என்ன சார்… உன்னைத் தேடித் தேடிப் பார்க்கிறேன்… எங்க, நீ கண்ணுல…  தட்டுப்படறதே இல்லை.“
“கண்ணுல ‘தட்டு‘ பட்டால்… காயம் பட்டுரும் கனி“ என்கிறான் ராமசாமி. “என்னது?“ என்று கேட்டவன் தானே புரிந்து கொண்டாப் போல, “ஜோக்கு. இல்லியா? சரி சரி…“ என்றபடி குலுங்கிச் சிரிக்கிறான். “சார் ரொம்ப தமாசு சார் நீ.“
“என்ன வேணும் சின்னக்கனி… ஏன் என் பின்னால சுத்தி வர்றே?“
“என்ன சார் அப்பிடிச் சொல்லிட்டே? நான் நாய் சார். நன்றியுள்ள உன் வீட்டு நாய்… “
“எனக்கு நாய் வளர்க்கவே பிடிக்காது கனி…“
சின்னக்கனி புரியாமல் பார்க்கிறான். சிரிக்கவில்லை. “கவலைப்படாதே சார். உனக்கு என்ன வேணும்? என்ன உதவி வேணும்? இந்த நாய் கிட்ட சொல்லு…“ விரலைச் சுண்டுகிறான்.
“நாய் கிட்ட சொல்ல நாங்கதான் விரலைச் சுண்டுவோம்…“
சின்னக்கனி சிரிக்கவில்லை. “வால் இருந்தா ஆட்டுவேன். நான் மனுசன். விரலைச் சுண்டறேன்… என்ன உபகாரம் எதுன்னாலும் கேளு… இதோ கொண்டு வந்து உன் கால்ல சமர்ப்பிக்கிறேன்…“
“ஏன்? கையில குடுக்கக் கூடாதா?“
“என்னது? ஓ…“ என குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறான். “சார் தமாசுக்கார ஆளு…“
“பாரு சார்.. இப்பதான்… ஒரு வாரம் முன்னாடி…“
“தெரியும் கனி.“
“தெரியுமா?“
“தெரியும்“ என புன்னகை செய்கிறான். “உனக்குப் பொறந்த நாள் வந்ததா?“
“சார்… பெரிய ஆளு சார் நீ. எப்பிடி சார் உனக்குத் தெரியும்?“
“அதான் உன் சிஷ்யப் பிள்ளைங்க போஸ்டர்… அது இதுன்னு…“
“அட ஆமா சார். சொன்னால் அவங்க கேட்கறது இல்லை…“ என வெட்கமாய் உடலை நெளிக்கிறான். “அதான் சார்… உன்னைக் கூப்பிடலாம்னு… தேடினேன்.“
“நான் எதுக்கு?“
“என்ன சார் அப்பிடிச் சொல்லிட்டே… யார் நீ?“
“அடிக்கடி கேட்காதே. எனக்கே குழம்பிருது.“ ராமசாமி புன்னகை செய்கிறான். “நான் வந்திருந்தேன் சின்னக்கனி…“
“என்னது?“
“ஆமாம். கனி. உன் பொறந்த நாளுக்கு… நான்… வந்திருந்தேன்.“
“ஹோ ஹோ…“ என குலுங்கிச் சிரிக்கிறான் சின்னக்கனி. “இது… தமாசுதான் சார். நல்ல பகிடி இது.“
“வந்து நான் பட்ட பாடு…“
“என்னாச்சி?“
“அதை விடு கனி…“
“ஏன் சார்? வர்ற வழியில உன்னை, என் ஆளுன்னு தெரியாமல்… கை வெச்ட்டானா எவனாவது?“
“நீதான்.“
“என்ன சார் சொல்றே?“
“அதை விடு சின்னக்கனி.“
“இது ஜோக்கா சார்? என்னாண்ட வந்து கஷ்டப் பட்டேன்றா மாதிரி… என்னா வார்த்தை சார் அது… நெஞ்சு அடைக்குது சார்.“
“சரி. சரி. அதான் விட்டுருன்னு சொன்னேனே சின்னக்கனி…“

“அதெப்பிடி சார்...“ நெஞ்சைக் காட்டுகிறான். “எனக்கு நெஞ்சை அடைக்குது சார்.“

“அப்ப டாக்டர் கிட்டே போ.“
“நான் உன்னைப் பார்க்கல்லியே சார்…“
“அதை விடு சின்னக்கனி.“
“எப்பிடி சார் விடறது? என்னை ஒரு மனுசன்னு மதிச்சி நீ இம்மாம் பெரிய மனுசன் பார்க்க வந்திருக்கே. அது எனக்கே தெரியல்ல…“ என்கிறான்.
“அன்னிக்கு ராத்திரியாயிட்டது இல்லியா? அதான்…“
“ராத்திரி தான் சார் எங்களுக்குக் கண்ணு நல்லாத் தெரியும். தெரியணும்… கேட்டியா? சரி… சார் வந்திருக்கே. நான் உன்னை கவனிக்கல்லன்றே… எம்மாம் பெரிய தப்பு அது...“ என்றவன் குலுங்குகிறான் சிரிப்பில். 

“என்ன சிரிக்கறே?“

“நீ அப்ப சொன்ன ஜோக்கு. இப்பதான் புரிஞ்சது.“
“இல்ல சின்னக்கனி. உன்கிட்டச் சொல்லாமல் நானா வந்தேனே? அதான் தப்பு.“
“என்னா சார் தப்பு. என்னைப் பார்க்க வரணும்னு உனக்குத் தோணிச்சே சார்? அது இல்லியா பெரிய விஷயம்? நான் ஒரு மடையன்… நம்ம ஆளுங்க கிட்ட சார் ஒருக்கால் வருவார்டா. கவனிச்சிக்கங்கன்னு சொல்லியிருக்கணும்…“
“அவங்க வேற விதமா என்னை கவனிச்சிட்டாங்க.“
“என்ன சார் சொல்றே?“
“சரி. கனி… நான் கிளம்பறேன்…“
“இரு சார்.“
“என்ன?“
“இன்னிக்கு சாரை நான் கவனிக்காமல் அனுப்ப முடியுமா?“
“‘என்ன பண்ணப் போறே“ என்று சிரிக்கிறான்
”ஆட்டோ…“ என்று கூப்பிடுகிறான் கைதட்டி. “அண்ணே நீங்களா?“ என ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. “வா சார். ஏறு சார்…“
“எங்க?“ என்கிறான் ராமசாமி குழப்பமாய். “வா சார். அன்னிக்கு… என் பொறந்த நாள் அன்னிக்கு நான் உன்னைப் பார்க்கல. இன்னிக்கு… இப்ப… பாத்திட்டேனே?“
“அதுக்கு?“
“பாரு சார் தமாசை…“
“என்ன தமாசு கனி?“
“ஏறு சார்… வண்டில.“
“ஐயோ என்ன கனி? கனி?“ என்று அவன்  மறுப்பதற்குள் வம்படியாய் அவனை ஆட்டோவுக்குள் ஏற்றிக் கொள்கிறான் சின்னக்கனி. ஆட்டோ விர்ர்ரென்று கிளம்புகிறது.
ஆட்டோ ஓடிக் கொண்டிருக்கிறது.
“ஐயோ நான் இப்பதான் சாப்பிட்டேன்…“ என்று மறுக்கப் பார்க்கிறான் ராமசாமி. “சரி. சாப்பாடு வேண்டாம்.“
“தண்ணி கிண்ணி…எந்தப் பழக்கமும் கிடையாது எனக்கு…“
“அதுவும் வேண்டாம்…“ என்று புன்னகை செய்கிறான் சின்னக்கனி.
“பின்ன என்ன? என்னை விட்டுரு… நான் வீட்டுக்குப் போகணும்…“
“ஆ தினசரி தான் வீட்டுக்குப் போறே…“
“என்ன சொல்றே?“
“இன்னிக்கு ஒரு நாளைக்கு…“
“ஒரு நாளைக்கு?“
“ஒரு மாறுதலுக்கு…“
“மாறுதலுக்கு?... என்ன கனி?“
“பாரு சார் தமாசை… ஆட்டோ. நிறுத்து நிறுத்து.“
இறங்குகிறார்கள்.
ஒரு சின்ன வீடு அது. “இது யார் வீடு சின்னக்கனி?“
“நம்ம வீடுதான் சார்.“
“உன் வீடு இன்னும் பெரிசா இருக்கும்னு பார்த்தேன்…“
“இது சின்ன வீடு… உள்ள வா சார்…“
“இல்ல. இன்னொரு நாளைக்கு…“
“இன்னொரு நாளைக்கும் வா சார். எத்தனை தபா வேணா வரலாம். வரணும்…“
“என்னப்பா நீ. புதிர் போடறே…“ என்றபடியே உள்ளே போகிறான் ராமசாமி.
உள்ளே அந்தப் பெண் இருக்கிறாள். மனோன்மணி. “வாங்க…“ என்று வணக்கம் வைக்கிறாள்.
பதறிப் போகிறான் ராமசாமி. “வணக்கம் எனக்கா இவருக்கா?“
“அவருக்குதான்“ என்கிறான் சின்னக்கனி. அவள் தலையாட்டுகிறாள்.
“என்ன கனி இதெல்லாம்?“ என திரும்புகிறான் ராமாசமி. அதற்குள் சட்டென சின்னக்கனி வெளியே போகிறான். கதவு வெளியே தாளிடப் படுகிறது.
தட் தட் என்று கதவைத் தட்டுகிறான் ராமசாமி. “நம்மாளு அவரு… ந்ல்லா கவனிச்சிக்கோ…“ என்று வெளியே இருந்து சின்னக்கனியின் குரல்.
“அதைத் தனியா நீங்க வேற சொல்லணுமா?“
“ஐயோ…“ என்று நடுங்குகிறது அவனுக்கு. “என்ன இதெல்லாம்?“
“அட தெரியாத மாதிரிதான்…“ என்று இப்படியும் அப்படியுமாக அசைகிறாள் மனோன்மணி. கையை மேலே உயர்த்தி சோம்பல் முறிக்கிறாள். “சோம்பல் முறிக்கும் ஆம்பல். ஐயோ…“
“ஆம்பலாவது...“ என சிறுத்துகிறாள். “சாம்பலாவது... ஆம்பளைங்க நல்லாவே நடிக்கிறாங்க…“ என்று கன்னத்தில் கை வைத்துச் சிரிக்கிறாள் மனோன்மணி.
“நான் அப்பிடி ஆள் இல்லை மனோன்மணி…“
“யோவ். நீ படா கில்லாடிய்யா.“
“ஏன்?“
“நான் அப்பிடி ஆள் இல்லன்றே. என் பேரை எப்பிடி நீ தெரிஞ்சி வெச்சிக்கிட்டே?“
“அது…என்னன்னா…“ என அவன் சொல்லும்போதே “ததரீ...னன்னா“  என்று கிட்ட வருகிறாள்.
“அங்கியே நில்லு மனோ…“
“அதுக்குள்ள பேரையே சுருக்கிக் கூப்பிட ஆரம்பிச்சிட்டே…“
“வேணாம் மனோ… மனோன்மணி…“
“என்ன வேணாம்?“ என கிட்டே, இன்னும் கிட்டே வருகிறாள்.
“இப்பிடிச் சொல்ற எத்தனையோ ஆளை நான் பார்த்திருக்கேன்…“ என்கிறாள்.
“நான் பார்த்ததே இல்லை…“
“அதான் வந்திட்டியே. இப்ப பாரு…“
“ஐயோ… என்ன பண்றே?“ என்கிறான் பதட்டமாய். “இதெல்லாம் உனக்குத் தெரியாத சமாச்சாரமாக்கும்?“
“சமாச்சாரம் தெரியும். ஆனால் இதெல்லாம் தெரியாது… இங்க பார் என்ன பண்றே நீ?“
“வா.“
“வேணாம்.“
தரை மீது அவளது துணிகள் அடுத்து அடுத்து என விழுகின்றன. “துணி துவைக்கப் போறியா?“ என்கிறான் ராமசாமி.
“ஆமாம்.“
“சரி.“
“உன்னிதையும் கழட்டிரு…“
“ஐயோ…“
“கழட்டுய்யா…“
“என்ன இது?“
அவனது சட்டை அவளது உடைகள் மேல் விழுகிறது.
வெளியே இருந்து குரல். “மனோன்மணி?“ சின்னக்கனியின் குரல். “பார்ட்டிட எகிறும். விட்றாதே.“

“நான் பாத்துக்கறேன்…“ என்கிறாள் இங்கேயிருந்து.
 சுவரில் ஓரமாய் பயந்து தன்னை, சட்டையில்லாத உடம்பை மறைத்துக் கொண்டு ராமசாமி. “என்னத்ததைப் பாக்கப் போறே?“
“எல்லாத்தையும் தான்…“
“ஐயோ…“ என்கிறான் ராமசாமி.
“விளக்கை அணைச்சிறவா மனோன்மணி…“ என்று வெளியே இருந்து சின்னக்கனியின் குரல்.
“ஐயோ வேணாம்… வ்வே…“ என பாதியில் ராமசாமியின் குரல் உள் வாங்கிக் கொள்கிறது. யாரோ உதட்டைக் கடித்து மூடினாற் போல.
விளக்கு அணைந்து இருள் சூழ்கிறது.

தொ ட ர் கி றே ன்
91 97899 87842
*
for bulk 5 chapters log on to
vasikarapoikalplus.blogspot.com



No comments:

Post a Comment